பைபிள் வாசகங்கள்:
மே 5 : முதல் வாசகம்
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28
அந்நாள்களில்
அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மே 5 : பதிலுரைப் பாடல்
திபா 145: 10-11. 12-13. 21 (பல்லவி: 10b.11a)
பல்லவி: ஆண்டவரே, உம் மக்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பர்.
அல்லது: அல்லேலூயா.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி
12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி
21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 24: 26, 46
அல்லேலூயா, அல்லேலூயா!
மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
மே 5 : நற்செய்தி வாசகம்
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31b
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------------------------------------------
நற்செய்தி அறிவித்து, இயேசுவின் சீடராக்குங்கள்
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 14: 19-28
திருப்பாடல் 145: 10-11, 12-13, 21 (10b, 11a)
II யோவான் 14: 27-31b
நற்செய்தி அறிவித்து, இயேசுவின் சீடராக்குங்கள்
அறிவியுங்கள்; ஆசி பெறுங்கள்
யூத நெறியின்மீதுகொண்ட மிகுந்த பற்றினால் ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி வந்தவர்களைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர் இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவுக்காகக் கல்லெறிபடுவதையும் துன்பப்படுவதையும் பற்றி வாசிக்கின்றோம்.
பவுல் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கையில், யூதர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல முயற்சி செய்கின்றார்கள். ஆனால், அதையெல்லாம் நினைத்துத் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காத பவுல், மறுநாளே நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார். அதை விடவும் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று அவர் நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்” என்று அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடரிடம் கூறிய முதல் வாழ்த்து அமைதிதான் (யோவா 20: 19-26). இத்தகைய அமைதியை நாம் பெற இயேசுவின் பணியைப் பவுலைப் போன்று தொடரர்ந்து செய்ய வேண்டும். அதே வேளையில், கடவுள் தரும் அமைதியைப் பெற்றுக்கொண்ட பிறகு, இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 145 இல் தாவீது சொல்வது போல, கடவுளின் மாட்சியை அறிவிக்க வேண்டும்.
ஆகவே, நாம் கடவுள் நமக்கு அளித்திருக்கும் அமைதியை, ஆசியை, அன்புச் செய்தியைத் துணிவோடு அறிவிப்போம்; அவரது அன்புச் சீடராய் இருந்து, உலகிற்குச் சான்று பகர்வோம்.
என்னால் ஏன் முடியவில்லை
பங்குப் பணியாளர் ஒருவர் ஒருநாள் காலை வேளையில் காலாற நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒருசிலர் கற்களை மிகவும் அழகாய் வெட்டி, அவற்றைக் கொண்டு, சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து வியந்து போன பங்குப் பணியாளர், “இவர்களைப் போன்று என்னால் ஏன் என்னுடைய போதகப்பணியைச் சிறப்பாகச் செய்து, மக்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
உடனே அவர் அங்கே சாலை அமைத்துக் கொண்டிருந்த பணியாளர்களுள் ஒருவரைப் பார்த்து, தனக்குள் ஏற்பட்ட கேள்வியை அவரிடம் கேட்டார். அப்போது அவர், “நான் சாலை அமைக்கும்போது. எப்படி முழந்தாள் படியிட்டவாறு, கற்களை வெட்டுவதும், அவற்றைப் பதிப்பதையுமாக இருக்கின்றேனோ! அப்படி நீங்களும் போதிப்பதற்கு முன்னதாக சிறிது நேரம் முழந்தாள் படியிட்டு வேண்டுங்கள். அப்போது உங்கள் போதனை பலரது உள்ளங்களையும் ஊடுருவதாக இருக்கும்” என்றார்.
கடவுளின் வார்த்தையைப் போதித்து, பலரையும் சீடராக்க வேண்டுமெனில், முழந்தாள் படியிட்டு வேண்டாவிட்டால், எதுவும் சாத்தியப்படாது. நாம் கடவுளின் வார்த்தையை அறிவித்து, பலரையும் சீடராக்குவும் பணியில், கடவுளிடம் முழந்தாள் படியிட்டு வேண்டுகின்றோமா? சிந்திப்போம்.
ஆண்டவரின் வார்த்தை
“இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு.
தீர்மானங்கள்
1) துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், தூயவரின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்போம்.
2) கடவுள் அருளும் அமைதியைப் பெற, அவரது வழியில் நடப்போம்.
3) ஆண்டவரின் அன்பை உணர்ந்த அதை மற்றவருக்கும் அறிவிப்போம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்