கிருஷ்ணன்

பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
828 views
1 days ago
ஸ்ரீ (969)இளமாமதிக்கு ஓர் அழைப்பு - கோமான் ஶ்ரீ பாலாஜி குழந்தை கண்ணனை தாய் யசோதை சீராட்டி பாராட்டி வளர்த்தாலோ இல்லையோ இங்கே நம் பெரியாழ்வார் அவ்வளவு சீராட்டி குழந்தை கண்ணனின் ஒவ்வொரு அசைவையும் வார்த்தைகளால் வர்ணித்து பாக்களால் இழைத்து, ஆகா முற்பிறவியில் இவர்தான் யசோதை பிராட்டியோ எனும் அளவிற்கு கண்ணனுக்கு பிள்ளைத்தமிழ் பாடியருளியுள்ளார். கண்ணனின் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி போன்ற பிள்ளைத்தமிழ் பருவங்களின் சாயல்கள் பலவற்றை தனது திருமொழியில் பாசுரங்களாக அருளியுள்ளார். அதில் ஒரு பாசுரத்தை பார்ப்போம். தன் முகத்துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்* பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்* என் மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ* நின் முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப்போ. தன் முகத்துச் சுட்டி – தனது திருமுகத்திலே அணிந்துள்ள நெற்றிச் சுட்டியானது, தூங்கத் தூங்க – குழந்தை தவழ்ந்து அசையும் வேகத்தில் அங்கும் இங்கும் ஊசலாடித் தொங்க, தவழ்ந்து போய் – நிலத்தில் முழந்தாளால் ஊர்ந்து சென்று, பொன்முகக் கிண்கிணி – இடுப்பிலோ அல்லது காலிலோ கட்டப்பட்ட பொன்னாலான அழகிய முகப்புடைய கிண்கிணி மணிகள், ஆர்ப்ப – 'கணகண'வென்று பேரொலி எழுப்ப, புழுதி அளைகின்றான் – முற்றத்தில் உள்ள புழுதி மண்ணில் விழுந்து புரண்டு விளையாடுகின்றான். என் மகன் கோவிந்தன் கூத்தினை – என் பிள்ளையான கோவிந்தன் செய்கின்ற இத்தகைய அழகிய லீலைகளை, இள மா மதீ – குளிர்ச்சியான ஒளி வீசும் இளமை பொருந்திய அழகிய சந்திரனே! நின் முகம் கண்ணுள ஆகில் – உன்னுடைய வட்ட வடிவமான முகத்தில் கண்கள் என்று ஏதேனும் இருக்குமானால், நீ இங்கே நோக்கிப் போ – நீ இங்கே வந்து அந்த அழகைக் கண்டு, உன் கண் படைத்த பயனைப் பெற்றுச் செல்வாயாக. குழந்தைக் கண்ணனை தொட்டிலில் இட்டுக் கண்வளரத் தாலாட்டிய யசோதை, இப்போது அவன் தவழ்ந்து விளையாடுவதைக் கண்டு மகிழ்கிறாள். கண்ணன் அங்கும் இங்கும் வேகமாகத் தவழ்ந்து செல்கிறான். அப்படிச் செல்லும்போது, அவனது நெற்றியில் அணிந்திருக்கும் ‘நெற்றிச் சுட்டி' நிலையாக நிற்காமல் அவனது வேகத்திற்கேற்ப ஆடிக்கொண்டே இருக்கிறது. இங்கே 'தூங்கத் தூங்க' என்பது உறக்கத்தைக் குறிக்காமல், ஒரு ஊசல் போலத் தொங்கி ஆடுவதைக் குறிக்கிறது. அப்படி குழந்தை அசைந்து தவழும் போதெல்லாம், அவன் அணிந்துள்ள பொன்னாலான கிண்கிணி மணிகள் ஆரவாரம் செய்கின்றன. ஒருபுறம் சுட்டியின் அசைவு, மறுபுறம் மணிகளின் ஓசை என அந்த மாளிகை முற்றமே இனிய நாதங்களால் களைகட்டுகிறது. அவன் வீட்டின் உள்ளே இருந்தால் வெண்ணெய் திருடி விடுவான் அல்லது இண்டு இடுக்குகளில் புகுந்து ஏதாவது சேட்டை செய்வான் என்பதால், யசோதை அவனைப் பரந்த முற்றத்தில் விளையாட விடுகிறாள். திருமகள் உறையும் திருமார்பைக் கொண்ட அந்தப் பரந்தாமன், இங்கே ஒரு சாதாரணக் குழந்தையைப் போல முற்றத்தில் உள்ள புழுதி மண்ணைத் தன் திருமேனி எங்கும் பூசிக் கொண்டு விளையாடுகிறான். “இளமாமதீ" - இது மிகவும் நுட்பமான கவிதை அழைப்பு. இளமதி — மாலை நேரத்தில் வானில் தோன்றும் இளம் நிலவு மாமதி — வட்டமான, முழுமையான பௌர்ணமி நிலவு இரண்டையும் சேர்த்து இளமாமதி என்று அழைப்பது, இதுவரை இளமையும் முழுமையும் ஒருங்கே உடைய நிலவை அழைப்பதாகும். இந்த அந்தி நேரத்தில், சூரியன் மறையும் வேளையில் நிலவு தோன்றுகிறது, கண்ணன் விளையாடும் நேரமும் இதுவே. "நின் முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப்போ” இது பாசுரத்தின் உச்சக்கட்ட வரி. இதில் பல அர்த்தங்கள் அடங்கியுள்ளன: உனக்கு கண்ணிருந்தால் என் மகனின் இந்த விளையாட்டைக் காண்பாய். காணாமல் இருந்தால் கண்ணிருந்தும் என்ன பயன். நீ கண் படைத்த பயன் பெற வேண்டுமென்றால் வா என்று அன்பின் மொழியில் கட்டளை விடுக்கிறாள் தாய் யசோதை. கண்ணனின் லீலையை விட சிறந்தது வேறென்ன உள்ளது அதனை நீ கண்டு உய்ந்துகொள் என்பது உயர்ந்த பக்தியின் வெளிப்பாடு. யசோதை, சந்திரனை அழைப்பது வெறும் கவித்துவம் மட்டுமல்ல, கண்ணன் என்னும் பரம்பொருளின் லீலையை காண்பதற்கு பிரபஞ்சமே சாட்சியாக வரட்டும் என்ற ஆழ்வாரின் தத்துவம் அதில் உண்டு. #கிருஷ்ணன்