#மருதிருவர்
இன்று 24 .10 .2024 மண்டியிடாத வீரத்திற்கு சொந்தக்காரர்களான மருது பாண்டியர்களின் 223 வது நினைவு நாள்..!
மருது பாண்டியர்கள் :
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அடுத்த முக்குளம் திரு மொக்கா பழனியப்பன் சேர்வை திருமதி ஆனந்தாயி என்கின்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கு 15. 12 .1748 அன்று மகனாகப் பிறந்தார் பெரிய மருது .
ஐந்தாண்டுகள் கழித்து
20 .4 .1753 அன்று சின்ன மருது பிறந்தார் .
அக்காலகட்டத்தில் திரு மொக்க பழனியப்பன் அவர்கள் ராமநாதபுரம் பாளையக்காரர் சேதுபதி சீமையை ஆண்ட முத்து விஜய ரகுநாதரின் படைத் தளபதியாக இருந்தார் .
சிவகங்கை :
அந்த வகையில்தான் மகன்கள் மருது பாண்டியர்களுக்கு வாள் வீச்சு, குதிரை ஏற்றம் என்று போர் பயிற்சியை கற்றுத் தந்து, சிவகங்கையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முத்து வடுகநாதரின் படை வீரர்களாக பின்னர் படை தளபதிகளாக பணியாற்றி வந்தனர். பெரிய மருது போர்க்கலையில் வல்லவராகவும் சின்ன மருது அரசியல் தீர்க்க தரிசியாகவும் இருந்து வந்தனர் .
ஆற்காடு நவாப் :
அக்காலகட்டத்தில் ஆற்காடு நவாப்புக்கு கப்பம் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் .அதை குத்தகைக்கு எடுத்து வரி வசூல் செய்து ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டு மீதியை நவாப்பிற்கு கட்டுவது அல்லது முழு தொகையும் முன் பணமாக கட்டிவிட்டு தங்கள் வசதிக்கு ஏற்ப வரி வசூல் செய்து கொள்ளும் குத்தகை உரிமையை பெற்றுக்கொள்வது அக்காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தது .
கும்பினி படை:
ஆற்காடு நவாப்பிடம் வரி வசூல் செய்யும் உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கும்பினிப் படை பெற்றிருந்தது. இந்த வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை வாக்குவாதம் கைகலப்பு போர் என்றாக மாறியது .
முத்து வடுகநாதர் :
சிவகங்கை ஆண்ட பாளையக்காரர் முத்துவடுக நாதர் முறையாக வரி செலுத்தாததால் சிவகங்கையை அடக்கி வரிவசூல் செய்ய நவாப் மற்றும் ஆங்கிலேயர் படை முற்றுகையிட்டு கடும் தாக்குதல் தொகுத்தனர் .
இடையில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை அரச பிரதானி தாண்டவராயப் பிள்ளை மூலம் தூது அனுப்பினார்கள் .
நம்ப வைத்து கழுத்தறுப்பது போன்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே ஆங்கிலேய கும்பினிப் படை பீரங்கி தாக்குதலைத் தொடங்கி போர் நடந்தது கொண்டு இருந்த போது , காளையர் கோவிலில் காளிஸ்வரரை தரிசிக்க சென்ற முத்து வடுகநாதரையும் அவரின் இளைய மனைவி கெளரி நாச்சியாரையும் ஆங்கிலேய படை வீரர்களால் சுற்றி வளைத்து படுகொலை செய்தனர் .
வேலுநாச்சியார் :
இச்செய்தி அறிந்த ராணி வேலு நாச்சியார் படை தளபதிகள் மருது பாண்டியர்கள், சிவகங்கை அரசபிரதானி தாண்டவராயன் பிள்ளை , மற்றும் சில வீரர்களோடு அரண்மனையை விட்டு வெளியேறி விருப்பாச்சிபுரம் கோபால கப்பல நாயக்கரிடம் தஞ்சமடைந்து ,தங்கள் மண்ணை மீட்க ஆலோசனை செய்து வந்தனர் .
திப்புசுல்தான் :
மைசூரைத் தலைமை இடமாகக் கொண்டு வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானின் படைத்தளபதியாக திண்டுக்கல் கோட்டை தளபதியாக இருந்த ஹைதர் அலி மூலமும் ஆயுத உதவியும் படை உதவியும் கேட்டுப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக எட்டு ஆண்டுகளில் படைகளை முழுமையாகத் தயார்படுத்தி வியூகங்கள் வகுத்து மண் மீட்பு போரை துவங்கினார் வேலுநாச்சியார்.
மூன்று பிரிவுகள் :
படைகளை மூன்று பிரிவுகளாக்கி, திருப்பத்தூர் பிரிவிற்கு நன்னியம்பலத்தையும், காளையார் கோவில் பிரிவிற்கு மருதுபாண்டியர் களையும் சிவகங்கை பிரிவிற்கு தானே தலைமை ஏற்று போரை தொடங்கினார்.
ஆயுதக் கிடங்கு :
ஆங்கில கும்பினிப்படை பிரங்கி துப்பாக்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளை அரண்மனையில் குவித்து வைத்திருக்கின்றார்கள். அதை அழித்து ஒழித்தால் மட்டுமே வெற்றி நமக்கு வசப்படும் என்றும் அதை தகர்ப்பதற்கு திட்டமிட்டனர் .
முதல் மனித வெடிகுண்டு :
ஆண்டுக்கு ஒரு முறை விஜயதசமி தசரா விழாவிற்காக அரண்மனையில் உள்ள ராஜேஸ்வரி அம்மனை தரிசிக்க பொதுமக்களுக்கு ஆலயம் திறந்து விடப்படும் .அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ராணி வேலுநாச்சியாரின் பணிப்பெண் தோழி "குயிலி "உடல் முழுதும் நெய் பூசி மேலே துண்டு அணிந்து கொண்டு கையில் அகல் விளக்கை ஏந்தி பக்தி பரவசத்தோடு அரண்மனை மேல்மாடம் சென்று, உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு, வெடிமருந்து பாதுகாத்து வைக்கப்பட்டு வந்த ஆயுதக்கடங்கில் குதித்து தகர்த்து வெற்றியை வசப்படுத்தி கொடுத்தாள்.
குயிலி "உலகின் முதல் மனித வெடிகுண்டாக" மாறிப் போனாள்.குயிலியின் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கு நிகர் சொல்ல முடியாது.
வெற்றி :
மும்முனைத் தாக்குதலை ஆற்காடு நவாப் படையும் கும்பினிப்படையும் எதிர்கொள்ள முடியாமல் சிதறி ஓடியது .ஆங்கிலேய படைத் தளபதி பால்ஜோர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தார்.
ராணி :
மண்ணெல்லாம் வீரம் பேசி , மலரெல்லாம் தமிழாய் நாறி,பெண் எல்லாம் புலியாய் சீறும்... சினம் மணக்கும் சிவகங்கை சீமையை 8 ஆண்டுக்கு பின் மீட்டு ராணியாக முடி சூட்டிக் கொண்டார் வேலுநாச்சியார். அதற்கு பின் 25 .7 .1796 ராணி வேலுநாச்சியார் இயற்கை அடைந்த பின் சிவகங்கை ஆளும் பொறுப்பு மருதுபாண்டியர்கள் வசம் வந்தது .
வாரிசு :
இதை பிரிட்டிஷார் விரும்பவில்லை வாரிசுரிமை பிரச்சினையை உருவாக்கி சிவகங்கை ஆளும் உரிமை வடமத்தூர் ஒய்யா தேவர் என்பவருக்குத்தான் உண்டு என்று அவருக்கு பட்டம் கட்டி அவரே சிவகங்கை ராஜா என அறிவித்து மருதுபாண்டியர்களுக்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தினர் .
மருது பாண்டியர் வம்சம் :
மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு மடிப்பிச்சை ஏந்தி அடங்கி வாழ கோழைகள் கூட்டம் அல்ல ..மரணத்தையே மண்டியிட வைத்து அடக்கி ஆண்ட மருது வம்சம் நாங்கள் .
"துள்ளுபவர்கள் எல்லாம் துள்ளட்டும் முடிந்தால் இந்த அகமுடையானை வெல்லட்டும்" என்று சபதம் ஏற்று
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லல் அருகே சிறுவயல் என்னும் ஊரில் கோட்டை அமைத்து, சாதி மத வேறுபாடுகளை களைந்து , நல்லாட்சி வழங்கி காளையார் கோவில் கோபுரத்தை அழகுற கட்டிக் கொடுத்த பெருமை மருதிருவரையே சாரும் .
அதற்கு நன்றி கடனாகத்தான் மருதிருவர் மறைவிற்குப் பின் மக்கள் அவர்கள் இருவருக்கும் காளையார் கோவில் காளீஸ்வரர் ஆலயத்தில் உட்புறம் சிலை வைத்தனர். அவர்களின் உடலை கோவிலுக்கு வெளியே புதைத்து நினைவு சின்னங்கள் ஆக்கினார்கள் என்பது வரலாறு.
கூட்டணி :
வெள்ளை ஏகாதிபத்தியத்தை முளையிலேயே கிள்ளி எறிய முதன்முதலாக பாளையக்காரர்களை சிற்றரசர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தவர்கள் மருது பாண்டியர்களே! வீர உணர்வை மான உணர்வை மக்களிடையே ஊட்டினார்கள். பாளையக்காரர்களை எச்சரித்து பாளையங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் வெள்ளையரின் சூழ்ச்சியால் ஹைதர் அலிக்கு ,திப்பு சுல்தானுக்கு ,புலித் தேவனுக்கு முத்து வடுகநாதருக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட துன்பமான முடிவுகள் தான் நம் ஒவ்வொருவருக்கும் வரும் என்று எச்சரிக்கை செய்து அணி சேர்த்தார் .
ஜம்புத்தீவு பிரகடனம் :
வெள்ளையர் நவாப்பல்லாத கூட்டணியை உருவாக்கி ,
12 .06 .1801 அன்று திருச்சி காவிரி ஆறு சூழ்ந்த ஸ்ரீரங்கம் தீவில் வைத்து ஒரு பிரகடனம் வெளியிட்டனர் .அதற்கு "ஜம்புத் தீவு பிரகடனம் "என்று அழைக்கப்பட்டது. அதில் மக்கள் தங்களுக்குள் இருக்கும் வர்க்கம் சாதி மத வேறுபாடுகளை கலைந்து வெள்ளையருக்கு எதிராக ஒன்று பட்டு போராட முன் வர வேண்டும் என்று பாளையக்காரர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது .
நாடு கடத்துதல் :
விடுவார்களா வெள்ளை பரங்கியர்கள் .?போரை தொடுத்தனர் போராடியவர்களை கைது செய்து விசாரணை இன்றி தூக்கிலிடப்பட்டும் நாடு கடத்தியும் அச்சத்தை உருவாக்கினார்கள் .
வெங்கம் பெரிய உடையத் தேவர் & துரைசாமி :
சிவகங்கை கடைசி மன்னரான வெங்கம் பெரிய உடையத் தேவர் , சின்ன மருதுவின் மகன் துரைசாமி, மற்றும் வாராப்பூர் ஜமீன்தார் பொம்ம நாயக்கர், கோம்பை ஜமீன்தார் பாண்டி நாயக்கர், ராமநாதபுரம் அவில்தார் ஜகந்நாத ஐய்யர் மற்றும் தளபதிகள், போர்வீரர்கள் என்று 73 பேர்களை 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்று அழைக்கப்பட்ட மலேசிய நாட்டின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கு சிலநாட்கள் கழித்து வெங்கம் பெரிய உடையத் தேவர் மற்றும் சிலரை மட்டும் பிரித்து ஏப்ரல் மாதம் இந்தோனேசியா பென்கோலன் தீவு சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அடுத்த ஐந்து மாதத்தில் 19 செப்டம்பர் 1802 அன்று இயற்கை எய்தினார் .
பெரிய மருதுவின் மகன்களான கறுத்தம்பியும் மோலிக்குட்டி தம்பியும் தூக்கிலிடப்பட்டனர். இன விருத்தி அடையக்கூடாது என்று ஆண் வாரிசுகளே இருக்கக் கூடாது என்று செய்தனர் .இதுவும் ஒருவகை இன அழிப்பு நடவடிக்கைதான் . மிக மோசமான கொடுரமாக இந்த பாதக செயலைச் செய்து வந்தனர் வெள்ளை கும்பினி நிர்வாகத்தினர் .
கொரில்லா போர் :
இக்காலகட்டத்தில் மரபு வழி போரை பின்பற்றாமல் முறை தவறி நடக்கும் வெள்ளையர்களை திகிலுற செய்ய காட்டில் மறைந்து கொரில்லா போர் முறையில் வெள்ளை பரங்கியர்கள் படையை நிலைகுலைய வைத்தனர் மருது சகோதரர்கள்.
சன்மானம் :
மருது சகோதரர்களை காட்டி கொடுத்தாலோ அல்லது உயிருடனோ பிணமாகவோ கொண்டு வந்தாலோ சன்மானம் கொடுக்கப்படும் என்று வெள்ளையர்கள் அறிவித்தார்கள். சின்னமருது உடன் இருப்பவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார். கடைசியாக வெள்ளையர்கள் பெரிய மருதுவிற்கு கெடுவிதித்தனர். சரணடையவில்லை என்றால் காளையர் கோவில் வெடிவைத்து தகர்க்கப்படும் என்று எச்சரித்தனர். தங்களின் குலதெய்வ ஆலயம் காக்கப்பட தன்னை வெள்ளையரிடம் ஒப்புக்கொடுத்தார் பெரிய மருது .
தூக்கு :
பெரிய மருதும் அவரின் படை வீரர்கள் 500 பேரையும் எந்த விசாரணையும் இல்லாமல் திருப்பத்தூர் கோட்டை மைதானத்தில் வைத்து
24 .10 .1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். மூன்று நாட்கள் உயிரற்ற சடலம் தூக்கில் தொங்கியது. பின்னர் பெரிய மருதின் தலையை வெட்டி காளையர் கோவில் காளீஸ்வரர் ஆலயம் முன்பு புதைத்தனர் .உடலை திருப்பத்தூரில் புதைத்தனர். ஆண்டுகள் 223 கடந்து ஓடிவிட்டது.
மண்டியிடாத வீரத்துக்கு சொந்தக்காரர்களான மருது பாண்டியர்கள் வரலாற்றை சிவகங்கை சரித்திரக் கும்மி, சிவகங்கை சரித்திர அம்மானை நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் :
மருது பாண்டியர்களின் கொடி வழி வந்த காரணத்தினால் தான் திருப்பத்தூர் நினைவிடம் இன்றளவும் இவர்களின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பதை நினைவு கூற வேண்டும் .
மருது பாண்டியர்களின் நாட்டுப்பற்றை அவர்கள் மூட்டிய சுதந்திர வேள்வியை நினைவு கூறும் வகையி்ல் மத்திய அரசு 23 10 2004 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது .
வாழ்க மருது பாண்டியர்கள் புகழ்..!
உலகத்தின் கோரமான மரணங்கள் :
அன்றைய தென் தமிழகத்தை 72 பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் நிலவியது. உடன் இருந்து கொள்ளும் நோயைப் போன்று வெள்ளையருடன் நட்பு பாராட்டி எதிரிக்கு எதிரி நன்பன் என்பதைப் போன்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சமயம் பார்த்து ஒருவரை ஒருவர் பழிதீர்த்துக் கொள்வார்கள். பாளையக்காரர்களைப் பொருத்த வரை பிரித்தானிய கும்பினியாரை முழுமையாக எதிர்த்து நின்று போராடினார்கள் என்று சொல்லி விடமுடியாது. வெள்ளையரிடம் நட்பாக இருந்து பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார்கள். இதில் ஒரு சில பாளையக்காரர்கள் விதிவிலக்காக இருந்து இருக்கலாம் .
எட்டயபுரம் பாளையக்காரர்:
வெள்ளை கும்பினி நிர்வாகத்திற்கு கப்பம் வசூல் செய்து தந்து வந்த கான்சாகிபிற்கும் எட்டயபுரம் பாளையக்காரர் ஜெகவீரராம எட்டப்பருக்கும் கப்பம் கட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டு 1757 ல் போர் மூண்டது.
இதில் எட்டையபுரம் சமஸ்தானம் தோற்று பின்வாங்கி தளபதியாக இருந்த வீரன் அழகுமுத்துக்கோன் உடன் "பெருநாழி" காட்டில் தலைமறைவாகி, மீண்டும் படையைத் திரட்டி ,அதே ஆண்டில் போர் தொடுத்து தோற்ற பின்னர் வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட ஏழு படைத்தளபதிகளை 11. 07. 1757 அன்று பீரங்கி வாயில் கட்டி வைத்து சுட்டு உடலை குரூரமாய் சிதற அடித்து கொன்றான் கான்சாகிப் என்னும் மருதநாயகம் .
கைது செய்யப்பட்ட 257 போர் வீரர்களின் வலது கரம் இனி வாள் ஏந்தக்கூடது என்று வெட்டி வீழ்த்தப்பட்டது.
நூற்றுக்கணக்கானவர்களை விசாரணை இன்றி தூக்கிலிடப்பட்டனர். இதற்கு பழிக்குப்பழி வாங்க எடுத்த நடவடிக்கைகள் அவரவர் தரப்பு நியாயமானதாக இருந்தாலும் வரலாறு வேறுவிதமான நீங்கா பழிச் சொல்லை தந்து விட்டது .
பூலித்தேவன் :
1767 ல் நெற்கட்டான் செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவன் வெள்ளைப் பரங்கியர்களை எதிர்க்க பக்கத்து பாளையக்காரர்களை ஒன்றினைக்க முயற்சி செய்து முடியாமல் போனதால் தன்னந்தனியாக 15 ஆண்டுகள் எதிர்த்து நின்று போராடினார். "சல்லிக் காசு கூட கப்பம் கட்ட முடியாது.. உன்னால் ஆனதைப் பார்" என்று வீர முழக்கமிட்டார். அவருக்கும் கான்சாகிப் பின்னர் கும்பினித் தளபதி டொனால்ட் இடையேயான போர் கோரமான முடிவானது .
வீரபாண்டிய கட்டபொம்மன் :
"நாடோடிகளாக வந்தவர்களுக்கு நாடாளுபவர்கள் வரித் தருவதா? தானம் கேளுங்கள் தருகிறேன் ...வரி கேட்டால் கிடைக்காது" என்று வீர முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கும்பினித் தளபதி பானர்மேனுக்கும் 05 09 1799 அன்று நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி பின்வாங்கியது. வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி காட்டில் தலைமறைவாக இருந்த போது காட்டிக் கொடுக்கப்பட்டு 17 .10. 1799 அன்று கயத்தாறு புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இடித்து தரைமட்டமாக்கப் பட்டு அங்கு எருக்கம் செடிகள் நடப்பட்டது .
வரலாறு :
இவையாவும் பாளையக்காரர் களுக்குள் ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்தி வெள்ளை கும்பினி கிழக்கிந்திய கம்பெனி பரங்கியர்கள் பகைமையைப் பாராட்டி அவ்வப்போது ஒட்டி உறவாடி பின்னர் பகையாகி ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொடுக்க வைத்து இந்த ஈவு இரக்கமற்ற மனிதாபிமானமற்ற கோரமான படுகொலைகளை செய்து முடித்தனர் .
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்..
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்..!