#வரலட்சுமி விரதம் 🙏🙏 #வரலட்சுமி ௮ம்மன் #வரலட்சுமி பூஜை தின நல்வாழ்த்துக்கள் 🌺🙏 #வரலட்சுமி பூஜை அலங்காரம் #எங்க வீட்டு வரலட்சுமி பூஜை அள்ளித்தருவாள் அலைமகள் - வரலட்சுமி விரதம் குறித்த சந்தேகங்களும் பதில்களும்
நம் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? செல்வ வளமும் சேர்ந்த உடன் சேர்ந்த நலமும் தரும் விரதங்களை நம் முன்னோர்கள் அருளியிருக் கிறார்கள். அவற்றில் தலையாயது வரலட்சுமி விரதம்.
தீர்க்க சுமங்கலி பாக்கியமும் பொன் பொருள் சேர்க்கையும் அருளும் இந்த விரதத்தைப் பெண்கள் மிகுந்த ஆர்வமுடன் கடைப்பிடிப்பது வழக்கம். அப்படிப்பட்ட விரதம் குறித்த சில கேள்விகளை ஜோதிடர் பாரதி தரிடம் கேட்டோம்.
“இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது என்கிற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது. சிராவண மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை என்பதே பலரின் கருத்து. இது குறித்து பஞ்சாங்க பேதங்கள் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு காஞ்சி சங்கர மடத்திலிருந்து சமீபத்தில் ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 21 - ம் தேதியே வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று வழிகாட்டி உள்ளனர்.
இந்த நாளில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை வரலட்சுமியாக வழிபட வேண்டியது அவசியம். பொதுவாக வரலட்சுமிதேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபடுவது ஒரு வழக்கம். கலசத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள், காசுகள் ஆகியன சேர்த்து மேலே மாவிலை, தேங்காய், ஆகியன வைத்துத் தயார் செய்ய வேண்டும்.
சிலர் ஜாதிக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய பொருள்களையும் சேர்ப்பார்கள். கண் மை டப்பியையும் போட்டு வைக்கும் வழக்கம் உண்டு.
இவ்வாறு அம்மன் கலசங்களில் இட்டுவைத்த மையைப் பிறந்த குழந்தைகளுக்கு திலகமிட பயன்படுத்துவார்கள். அத்துடன் கட்டாயம் காதோலை கருகமணி சமர்ப்பிக்க கலசத்தின் இரு பக்கமும் தொங்கும்படி அதை மாட்டிவிட வேண்டும். வெள்ளிமுகம் இருப்பவர்கள் அதைக் கலசத்தில் பொருத்தலாம்.
இதில் பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. வீட்டில் கலசம் வைத்து வழிபடும் வழக்கமே உள்ளது. இப்போது முகம் வாங்கி வைத்து வழிபடலாமா என்பதுதான். குடும்பத்தில் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் அதையே செய்ய வேண்டும். பெண்கள் திருமணமாகி வரும்போது வெள்ளி முகம் சீதனாகக் கொண்டு வருவார்கள். அந்தப் புதிய முகத்தைக் கலசத்துக்கு அருகில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்த கேள்வி, இதுவரை எங்கள் குடும்பங்களில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் பழக்கம் இல்லை. நாங்கள் புதிதாகத் தொடங்கலாமா என்பதுதான். நிச்சயமாகத் தொடங்கலாம். எந்தத் தவறும் இல்லை. ஆனால் தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்கும் மன உறுதி வேண்டும். ஆசைக்கு ஓர் ஆண்டு செய்துவிட்டு அதைக் கைவிட்டுவிடக் கூடாது.
அம்மனை அழைப்பது என்பது வரலட்சுமி விரதத்தில் மிகவும் முக்கியமானது. விரத நாளுக்கு முன் தினம் மாலையே அம்மனை அலங்காரம் செய்துவிட வேண்டும். அந்த நாளில் இரவு அம்மனுக்கு புலகம் எனப்படும் துவரம்பருப்பு பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.
மறுநாள் காலையே அம்மனை அழைக்க வேண்டும். வீட்டின் வாசலில் கோலமிட்டு அதில் மனைப் பலகை ஒன்றை அலங்கரித்து வைத்து அதில் அலங்கரித்த அம்மனின் கலசம் அல்லது முகத்தை அதில் எழுந்தருளச் செய்து பின் லட்சுமி வாராய் என் இல்லத்துக்கு என்று பாடி அழைக்க வேண்டும். வெள்ளிக் கிழமை காலை 8-9 மணிக்குள் அழைக்க வேண்டும்.
பிறகு அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அம்மனைத் தனி ஒருவராக அழைத்துச் செல்லக் கூடாது. இருவர் அவசியம். இருவரும் சுமங்கலிக ளாக இருந்தால் சிறப்பு. உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு சுமங்கலி தான் என்றால் பக்கத்து வீடுகளிலுள்ளவர்கள் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து முன்னரே அவர்களுக்குச் சொல்லி விட்டால் அவர்களும் குளித்து தயாராக இருப்பார்கள். பொதுவாக இந்த பண்டிகைகளே அனைவரோடு கூடியிருந்து குளிரத்தான் என்பதால் அக்கம்பக்கத்தில் நல்லுறவைப் பேண இவை உதவும்.
மண்டபம் அமைக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அதற்கு வீட்டில் இருக்கும் மர ஸ்டூல்களைப் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அதை முன் தினமே தூய்மை செய்து வைத்துவிட வேண்டும். அதற்கு வெள்ளை மற்றும் காவி வர்ணம் மாறி மாறிப் பூசி அலங்கரிக்க வேண்டும். முடிந்தவர்கள் புதிய ஸ்டூல் வாங்க முடிந்தால் நல்லது.
வரலட்சுமியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கலாம். வெள்ளிக் கிழமைகளில் 10.30.12 ராகு காலம் என்பதால் அதற்கு முன்பாகத் தொடங்கிவிடலாம். பூஜையைத் தொடங்கும் முன்பு கைகளில் கட்டிக்கொள்ளும் தோரணங்களை (மஞ்சள் சரடு) அம்மன் மீது அலங்காரமாக சாத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒருசில சரடுகள் சேர்த்து வைக்க வேண்டும். இந்த சரடுகளில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். பூஜையின் முடிவில் அந்த முடிச்சிகள் ஒவ்வொன்றுக்கும் பூஜை செய்து பின் கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும்.
முதலில் பிள்ளையார் பூஜையோடு தொடங்கி அவரவர் வழக்கப்படி நாமாவளிகள் சொல்லி நறுமண மலர்கள் சாத்தி வழிபடலாம். நிவேதனங்களும் அவரவர் வசதிப்படி செய்தால் போதுமானது.
பூஜையில் வில்வம் இருப்பது சிறப்பு. திருமகளை ‘ பில்வ நிலயாயை நம:’ என்று போற்றித் துதிப்பார்கள் (பில்வம் -வில்வம் ). எனவே நமக்கு திருமகளின் கருணை கிடைத்து செல்வ வளம் சேரும்.
இந்த பூஜையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சரடி கட்டிக்கொள்வதுதான். கட்டிக்கொள்ளும் சரடுகளுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சிகளையும் பின் வரும் மந்திரங்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும்.
ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி
ஓம் ரமாயை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் லோக மாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் விச்வ ஜநந்யை நம: சத க்ரந்திம் பூஜயாமி
ஓம் மகாலட்சுமியை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி
ஓம் க்ஷீராப்தி தநயாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி
ஓம் விவ்வஸாக்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி
ஓம் சந்த்ரஸோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி
ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி
என்று 9 முடிச்சையும் பூஜை செய்ய வேண்டும். அதாவது நவசக்திகளையும் அந்தக் கயிற்றில் எழுந்தருளச் சொல்லி பூஜிக்கிறோம். இதன் மூலம் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தாயாரின் கருணை எப்போதும் நிறைந்திருக்கும்.✍🏼🌹