ஆணவக்கொலை

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
673 views
1 months ago
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரின் தந்தை கொத்தனார் வேலை செய்து வருகிறார். 19 வயதாகும் பார்த்திபன், சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் நேற்றிரவு பார்த்திபன், ஜாதியை சொல்லி திட்டி அடித்ததாக காதலியின் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் இன்று காலை 6 மணிக்கு சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் உடனடியாக தேடுதலை தொடங்கியுள்ளனர். பார்த்திபனின் செல்ஃபோன் டவர் லொகேஷனை சோதனை செய்த போது சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை காட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, காதலர்கள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர். இதனால் ஏடிஎஸ்பி சுரேஷ் மற்றும் டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது காதலர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இளைஞரின் குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினர் மீது ஆணவக் கொலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதேபோல் தனது மகன் உயிரிழந்த விரக்தியில் சிறுமியின் உறவினர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை பார்த்திபன் தரப்பினர் சேதப்படுத்தி இருக்கின்றனர். இதனால் இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரச்சனையான சூழலில், அடுத்த நாள் காலையிலேயே சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கிடைத்த பின், போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #ஆணவக்கொலை
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
639 views
2 months ago
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வம் – எஸ்தர் பாலின் தம்பதி மகன் சிவஞானம் (22), மகள் அபிசெல்வி (19). செல்வம் இறந்து விட்டார். சிவஞானம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அபிசெல்வி பிளஸ்2 படிப்பை பாதியில் கைவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் அபிசெல்விக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஹரி பிரசாத், பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அபி செல்வி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர். எனினும் இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர். இந்த விவகாரம் அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாயார் எஸ்தர் பாலினுக்கு தெரியவே அவர்கள் அபிசெல்வியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அபிசெல்வி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறு காயங்களுடன் தப்பிய அபிசெல்வி, ஹரி பிரசாத்துடன் மீண்டும் காதலை தொடர்ந்துள்ளார். இதனால் சிவஞானம் மற்றும் அவரது தாய் எஸ்தர் பாலின் ஆகியோர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கடந்த 9ம் தேதி மாலை சிவஞானம், அபிசெல்வியிடம் காதலை கைவிடுமாறு கூறவே, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிவஞானம், அபிசெல்வியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சிவஞானமும், எஸ்தர் பாலினும் சேர்ந்து அபிசெல்வி, தற்கொலை செய்து கொண்டது போல் காட்டுவதற்காக அவரது கழுத்தில் சேலையால் கட்டி, வீட்டில் உள்ள உத்திரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டது போல் தொங்க விட்டுள்ளனர். பின்னர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு போன் செய்து மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எஸ்தர் பாலின் தெரிவித்துள்ளார். போலீசார் நேரில் விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டு நெல்லையிலேயே தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அபிசெல்வி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கயத்தாறு போலீசார், அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலினை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அபிசெல்வியை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். இதன் பிறகு தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று மாலை கோவில்பட்டி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் சிவஞானத்தை பாளை. மத்திய சிறையிலும், எஸ்தரை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். * வேறு யாருக்கும் தொடர்பா? அபிசெல்வி உயிரிழந்ததும் அவரது உடலை தாய், சகோதரர் இருவரும் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இருவர் மட்டும்தான் ஈடுபட்டனரா? அல்லது வேறு யாரும் உடந்தையாக செயல்பட்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். * மீண்டும் தலைதூக்கும் ஆணவக் கொலைகள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ். காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக கவினின் காதலியான சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கயத்தாறில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்திருப்பது தென்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்டுத்தி உள்ளது. தனிச்சட்டம் எப்போது? தமிழ்நாட்டில் காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கொலை வழக்கு, உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விவகாரங்களில் சில வழக்குகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப் போகின்றன. தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. தனிச்சட்டம் இயற்றப்படுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் உள்ளன. இதுதவிர, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக, லதாசிங் – உத்தரபிரதேச அரசுக்கு எதிரான வழக்கில், `கலப்புத் திருமணம் செய்வதற்கு இந்து திருமணச் சட்டம் தடையாக இல்லை' எனக் கூறியுள்ளனர். அதேபோல், ஆறுமுகம் சேர்வை – தமிழ்நாடு அரசுக்கு எதிரான வழக்கில், 'சாதி பஞ்சாயத்தும் கட்டப்பஞ்சாயத்தும் ஒன்றுதான். இவை இரண்டும் மோசமான விஷயங்கள். இவை ஜனநாயகத்துக்கு எதிரானது' என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். * மறைக்க முயன்ற போலீசார் அபிசெல்வியின் சாவில் ஆரம்பம் முதலே சந்தேகம் இருந்துள்ளது. ஆனால் போலீசார், உடலை கைப்பற்றிய போது அவர் ரசாயன பவுடரை குடித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அண்ணனும், தாயும் தெரிவித்தனர். ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டால், அவர் கழுத்தில் காயங்கள், எலும்பு முறிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் அபிசெல்வி விவகாரத்தில் எந்த தடயம் இல்லாத நிலையில், இது ஆணவக் கொலை என்றால் விவகாரமாகி விடும் என்பதால், போலீசார் இந்த வழக்கை முதலில் தற்கொலை வழக்கு எனக் கூறி மூடி மறைக்க முயற்சித்தனர். எனினும் பிரேத பரிசோதனையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிய வந்ததையடுத்தே கொலை வழக்காக போலீசார் மாற்றினர். #🗞️ஜூன் 12 முக்கிய தகவல்📺 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #ஆணவக்கொலை