#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை காலை ஜெபம்*
"அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது".
(திருப்பாடல் 66: 1-3a. 5,8. 16-17)
கடவுளே! அனைத்து உலகின் வேந்தர் நீரே. இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்தி, போற்றி, வணங்கி, ஆராதிக்கின்றேன்.
இறைவா! நாங்கள் இருவர், மூவர் என்று கூடும் நேரங்களில், பிறரைப் பற்றி புறம் பேசிய தருணங்கள் ஏராளம். மற்றவரைக் குறைகூறி தீர்ப்பளித்த நேரங்களுக்காக, உம்மிடம் நாங்கள் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம்.
இனி இருவர், மூவர் நாங்கள் கூடும்போது, எங்களது உரையாடல்கள் உம்மைக் குறித்தும், உமது மாட்சியின் வல்லமையைக் குறித்தும், வல்லமையின் நிமித்தம் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் இருப்பனவாக. மேலும், பிறரைக் கூறித்து பேசும்போது, அவர்களது நிறைகளை மட்டும் பேசும், உயர்ந்த நேர்மையான உள்ளங்களை எங்களுக்குத் தந்தருளும்.
இயேசுவே! இன்று எங்களது எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், அனைத்தையும் உம் திருக்கரத்தில் ஒப்படைக்கின்றோம். ஆண்டவரே! நீரே அவற்றை ஆசீர்வதித்து, உமது பாதையில் வழிநடத்தும்.
இன்று நாங்கள், யாருடைய மனதும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருக்கவும், மாறும் உலக அன்பிற்காக ஏங்காமல், என்றென்றும் வாழச்செய்யும் உமது நிலையான அன்பில் நாங்கள் நிலைத்திருந்து, களிகூரவும் செய்தருளும்.
இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
#இன்றைய வசனம்