#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கற்பகத்தரு
===========
குழந்தைகளுக்கு அமிழ்தம் கொண்டு வர வானோரை அனுப்புதல்
=======================================================================
சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி
ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம்
சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும்
வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று
கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை
வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும்
பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார்
.
விளக்கம்
==========
சரஸ்வதி தேவி, ஏழு குழந்தைகளையும் சந்தோசமாகத் தாலாட்டியதும், மண்ணுலகில் மனிதர்களாய் பிறந்ததினால் உண்டாகும் வெண்தோசங்கள் விலகிப் போவதற்காக அக்குழந்தைகளை நீராட்டி, வைகுண்டலோகத்தில் வாசம் செய்பவரான மகாவிஷ்ணுவிடம் கொடுத்தாள். மலையை ஒத்த நிறமுடைய மகாவிஷ்ணு குழந்தைகளை வாங்கியதும், சிவபெருமான் முதலான அனைவரும் சேர்ந்து, அக்குழந்தைகள் செல்வம் பொருந்தி சிறப்போடு வளரச் சேனை ஊட்டவேண்டுமென விரும்பினார்கள்.
.
ஆகவே, ஆகாய கங்கையில் சுரக்கும் அமிழ்த்தை, அதாவது, கயிலை வாசிகளுக்காக வைகுண்டலோகத்திலிருந்து பாயும் அமிழ்தத்தை வருவித்து அந்த ஏழு குழந்தைகளுக்கும் ஊட்ட வேண்டும் என்று எண்ணிய சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், இந்தக் கைங்கரியத்தைச் சிறப்பாகச் செய்ய உகந்த வானவர்களைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள்.
.
.
அகிலம்
========
வானவர்கள் அந்தணனையும் அவன் மனைவியையும் சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்தல்
==============================================================================
அப்படியே வானோர் ஆகாய மீதேகி
செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே
ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே
சீருரூப மான சிவகயிலை யானதிலே
பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற
வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும்
அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத்
தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல்
ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில்
கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும்
பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக
அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள்
.
விளக்கம்
==========
இறைவனின் கட்டளைப்படி வானகமேகிய வானவர்கள் உரிய இடத்திற்குச் சென்று தேடினார்கள். அப்போது, உருவமற்ற ஆகாயத்திலிருந்து ஊறிவரும் அமிழ்த்தை, சாஸ்திர வேதங்களையெல்லாம் சரிவரக் கற்றுணர்ந்த ஒரு வேதியனும், அந்த வேதியனின் மனைவியும் ஆவலோடு குடித்தது மட்டுமல்லாமல், அதைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்து மகிழ்ந்தார்கள். அதனால் அவர்கள் இருவரின் உடல் கொழுப்பேறி நிமிர்ந்தது. எனவே, அந்த ஆகாய அமிழ்த கங்கை பாயும் இடத்தை தமதாக்கிக் கொண்டு ஆர்ப்பரித்து நின்றனர்.
.
அமிழ்தத்தைத் தேடிவந்த வானவர்களோ, அங்கே ஊறிப் பாயும் அமிழ்த்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இது என்ன மாயம் என்று வானவர்கள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அமிழ்த்தை உண்டு மகிழ்ந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த வேதியனையும், வேதியனின் மனைவியையும் கண்டார்கள்.
.
உடனே, அவர்கள் இருவரையும் விரிந்து பிடித்து இழுத்தனர். வர மறுத்ததால் அடித்தனர். கட்டி இழுத்து வந்து மகாவிஷ்ணுவின் முன்னிலையில் சிவபெருமானிடம் கொண்டு நிறுத்தி, நடந்த சம்பவங்களைச் சமர்ப்பித்தனர்.
.
.
அகிலம்
========
அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரமாகச் சபித்தல்.
=====================================================================
பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம்
உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து
வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே
சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு
நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க
அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார்
எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம்
கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார்
அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட
இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன்
இப்போது இட்ட இச்சாப மானதுதான்
எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன்
.
விளக்கம்
==========
லோகநாயகா ! நீண்ட நெடுங்காலமாகப் பாய்ந்த ஆகாய அமிழ்த்தை இவர்கள் இருவரும் உண்டு கொழுப்பேறியதால், எங்களை மதிக்காமல் வசை வார்த்தைகளால் வடுப்படுத்தினார்கள். ஆகவேதான், அவர்களை உங்களிடம் இழுத்து வந்தோம் என்றார்கள்.
.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் இல்லையா ஈசுவரரே? என்றார். அதனால் அகமகிழ்ந்த சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் அங்கிருந்த தேவர்களையெல்லாம் பார்த்து, இவர்கள் இருவரும் இதுநாள்வரை உண்டு மகிழ்ந்த அமிழ்த்தை இந்த பாலர்களுக்கும், அவர்களுடைய பிற்கிளைகளுக்கும் கொடுக்க வல்ல பனைமரமாக இவர்கள் இருவரையும் முளைக்கச் செய்யுங்கள் என்றார்.
.
சிவபெருமானின் ஆணையைச் சீக்கிரமாகச் செய்து முடிக்கத் தேவர்களெல்லாம் ஆயத்தமானார்கள். அப்போது வானத்து அமிழ்தத்தை உண்டு கொழுத்த வேதியனும், அவனுடைய மனைவியும் சிவபெருமானைப் பார்த்து, இறைவா ! எங்களுடைய இந்தச் சாபம் எப்போது நீங்கும் . நாங்கள் மறுபடியும் இப்போதைய நிலைக்கு வருவோமா என்று கேட்டார்கள்.
.
அகிலம்
========
நீசக் குலமறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு
அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர்
வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார்
.
விளக்கம்
==========
பனைமரமாக முளைக்கப்போகும் வேதியனாகிய அந்த அந்தணனும், அவனுடைய மனைவியும் சிவபெருமானிடம் கேட்ட கேள்விக்கு, அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட சிவபெருமான், வேதியரே, நீங்கள் இருவரும் பேராசையல் அமிழ்த்தை அபகரித்து உண்டு விட்டீர்கள். அதற்குப் பரிகாரமாகத்தான் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
.
கலியுகத்தில் நீசக்குலத்தோர் நிலையழிந்து நிற்பார்கள். அவர்களை அழித்து தர்மயுகத்தைத் தோற்றுவித்து ஆட்சி புரிவதற்காக, திருமாலின் தேகனாய் திவ்விய பரப்பிரம்மம் வைகுண்ட அவதாரனாகத் தோன்றி, வையகத்து மக்களிடம் அன்பைச் சேமிப்பதற்காக வரும் போது, வம்புகள் மாளும். அப்போது உங்கள் சாபமும் மாறும் என்றார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


