
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மகாவிஷ்ணு மறுத்துரைத்தல்
====================
அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து
ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும்
மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே
இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம்
ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ
மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல்
அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே
என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால்
நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது
அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது
விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது
.
விளக்கம்
==========
ஈசனின் இதமான பேச்சு மகாவிஷ்ணுவை மகிழ்வித்தது என்றாலும் சிவபெருமானைப் பார்த்து ஈசுரரே தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் இப்போது முன்புள்ள நியாயமுறைகளை மீறியல்லவா செயல்பட்டிருக்கிறீர்.
.
இதற்கு முன்பெல்லாம் எனக்கு அறிவிக்காமலோ, மறைத்தோ ஏதேனும் ஒரு காரியம் செய்திருப்பீர்களா? இப்போது என்னை மதிக்காமல் கலியைப் பிறவி செய்ததினால் நம்மால் அநதக் கலியனை அழிக்க முடியாது. கலியை அழிக்கவேண்டுமானால் அவன் எங்கிருந்து ஆரம்பமானானோ அங்கிருந்தே ஆரம்பிக்க வெண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் ஏன் இப்போது ஒன்றும் தெரியாதவர்போல் விழிக்கிறீர். ஈசனே சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டேன். இன்னும் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
.
.
அகிலம்
========
நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே
சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண்
உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து
மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா
தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது
ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல்
பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில்
ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா
அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன்
சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால்
கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான்
முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால்
தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில்
நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண்
பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான்
ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண்
என்றாதி நாரா யணர்தானு மிப்படியே
அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச்
.
விளக்கம்
=========
முடிவாகச் சொல்லுகிறேன். நம்மால் கலியனை அழிப்பதென்பது நடக்காத காரியம். ஆகவே என்னை இனிமேல் வேலை வாங்க வேண்டாம். யுகத்துக்கு யுகம் அலைந்து திரிந்து என்னுடைய சந்து சதையெல்லாம் வலிக்கிறது. என் லட்சுமியைக் காணாமல் என் மனம் ஏங்கித் தவிக்கிறது.
.
அந்த ஆறுகத்துப் பாவிகளையும் அழப்பதற்கு நான் பட்ட பாட்டை நினைக்கும்போது என் உடம்பெல்லாம் சடைகிறது. அந்த முழுப் பாவிகளைவிட அதிக வலிமை பெற்றவன் இந்தக் கலி என்னும் கபடப்பாவி. பெற்றவர்களை வேலை வாங்கும் கொடியவர்களை விட இந்தப் பாவி கொஞ்சமும் குறைந்தவனில்லை.
.
அந்தக் கலியனோடு சண்டையிட யாரால் முடியும், அந்தக் கபடக் கலியனிடம் என்னை அனுப்பிவைக்க ஈசனே நீர் எத்தனிக்க வேண்டாம். கலியன் தரம் நியாயங்களைச் சற்றும் அறியாதவன். அவனிடம் வெற்றி பெறுவதென்பது முடியாத ஒன்று.
.
நான் ஏற்கெனவே ஆறுயுகங்களில் அந்த அரக்கர்களிடம் பட்ட அவலங்களை எல்லாம் மறந்து சற்று ஓய்வெடுக்கப் பேகிறேன். ஒட்டுமொத்தமாக என்னை அழித்துவிடத் தயவுசெய்து எண்ண வேண்டாம் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு கூறினார்.
.
.
அகிலம்
-------------
சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் இசைவு மொழி கூறுதல்
=============================================================
சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன்
புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே
இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால்
எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400
சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ
கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே
மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே
ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே
கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே
செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம்
நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால்
ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது
மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம்
கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது
தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு
மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம்
பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே
மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை
எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச்
சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று
ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார்
.
விளக்கம்
-----------------
மகாவிஷ்ணுவின் நீண்ட உரையால் மன வாட்டமடைந்த சிவபெருமான், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் சொல்லுகிறார்.. இந்த உலகத்திற்கு உயர்வான பொருளே, என் மாதவமே, இப்படியே நீர் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த உலகத்தை நான் எப்படி ஆட்சி புரிய முடியும்.
.
என்னுடைய மைத்துனரே நீர் சுவரென்ளால் நான் அதில் வரையப்பட்டுள்ள சித்திரமல்லவா? நீர்த்தேக்கமல்லவா தாங்கள். நாங்கள் அதிலிருந்து பிரிகின்ற கால்வாய் தானே? மாயவனாகிய நீர் எங்களுக்கெல்லாம் மலையல்லவா? மூவருக்கும் நடுவரான மைத்துனரே எங்களை கட்டிக்காக்கும் கோட்டைச் சுவரே நீர் தானே.
.
கிளைகளான எங்களையெல்லாம் தாங்கி நிற்கும் பெரிய விருட்சமே, செப்பல்லவா நீர். நாங்கள் சிமிழ் கூடு தானே? தாங்களே இப்படித் தளர்ச்சியடைந்து ஒதுங்கிக் கொள்வதுபோல் சொன்னால் வேறு யார் எங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். கிளைகளைத் தாங்கி நிற்கும் மூடு இப்படி அசைந்தால் கிளைகளாகிய எங்களுடைய கதி என்னவாகும். உடல் நிலைகுலையும்போது உயிர் நிலைகுலையாமல் இருக்குமா?
.
தேவர்கள், முனிவர்கள், சாஸ்திரிகள் முதலியோரின் சிறுமதிக் கிணங்கி மூவரில் ஒருவராகிய உம்மைச் சிறிது கூட நினைக்காமல் கலியனைப் படைத்தது பற்றிய குற்றங் குறைகளையெல்லாம் என்னுடைய மைத்துனராகிய தாங்கள் பொறுத்தருள வேண்டும். இன்னும் தாங்கள் மறுத்துக் கூறினால் அதற்குமேல் வலியுறுத்த எனக்கும் மார்க்கமில்லை. ஆகவே, எல்லாக் குற்றங்களையும் பொறுத்து நீர் நிச்சயித்தபடியே உம்முடைய ஒரு சொல்லை உலகிற்கு உத்தரவாக்கி அரசாளுங்கள் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
.
விளக்கம்
=========
சிவபெருமானே! எனக்குத் தாங்கள் அலைச்சல் ஏற்படுத்துவது ஒருபுறமிருந்தாலும், இப்போது எடைத்திருக்கிறீரே மாய்மாலக் கலி அதை எதிர்த்துப் போரிட்டு செல்ல வல்லவர் யார்? சொல்லும் பார்க்கலாம்.
.
கலி என்கிற வார்த்தையைக் கேட்டாலே உடலெல்லாம் நடுங்கி சடைந்து இருண்டுவிடுகிறது. உண்மையைத் தான் பேச வேண்டும் என்று மக்கள் பிடிவாதமாக இருந்தாலும், தாங்கள் படைத்திருக்கும் கபடமான கலிமாய்கை அவர்களைப் பொய் பேசத் துண்டுவதோடு பொய்யிலேயே மக்களெல்லாம் ஐக்கியமாகிவிடுவார்களே.
.
.
அகிலம்
=======
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம்
ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு
நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே
என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று
வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண்
நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு
வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு
தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான்
மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண்
பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான்
அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
இந்தக் கலியை வாள் அம்பு போன்ற எந்தவித ஆயுதத்தாலும் அழித்துப் பாழாக்கிவிட முடியாது. உலகிலுள்ள அத்தனை மனிதர்களின் சிந்தையிலும் கபடமென உறைந்து, உருவமே இல்லாமல் உலகத்தின் அமைதியைக் கெடுக்கும் மாயக் கலியை மாய்ப்பதற்கு எவ்வித ஆயுதத்தாலும் முடியாது.
.
இந்தச் சதிகாரக் கலிக்கு ஏதேனும் ஒரு உடலைக் கொடுத்துப் பிறவிசெய்திருந்தால் என் சிந்தனைக்கு இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது. அத்தனை வலிமை வாய்ந்த கபடமான கலி மாய்கைக்குள் என் மக்களெல்லாம் அகப்பட்டு கொண்டார்களே. கயமையான அந்தக் கலிக்குள் அகப்பட்ட மக்கள் அதிலிருந்து கடைத்தேறுவது எக்காலமோ தெரியவில்லையே.
.
துக்கமான அந்த மாய்மாலக் கலி மக்களை தொற்றிக் கொள்ளுமே, அந்த வீணான துன்பத்திலிருந்து மக்கள் விழித்தெழுவது ஏலாத காரியமாயிற்றே. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் நான் அழித்த அரக்கர்களை நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலியின் முன்னால் அந்த அரக்கர்களெல்லாம் எனக்குத் தூசுபோல் தெரிகிறது.
.
சிவபெருமானே, இந்தக் கலியை என்ன உபாயத்தால் அழிப்பது என்று யூகிப்பதிலே என்மனம் பலவாறு குழப்பமடைகிறது. நாடு, நகரம், தேசம் உலகம் எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இனி எல்லாமே உங்கள் பாடுதான். எனக்கு இங்கிருக்க ஒத்துவராது. நான் தேசாந்திரியாகப் போகப் போகிறேன்.
.
மாய்கையாகிய கலியில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்திருக்கப் போகிறேன். விரும்பியோரெல்லாம் தம் விருப்பபடி விளையாட்டு காட்டும் பெட்டிப் பாம்மைப்போன்று என்னையும் இங்கே அழைத்து அலைய வைத்த காரணத்தைச் சொல்லுங்கள் என்று சிவபெருமானிடம் மிகக் கோபமாகச் கேட்டார் மகாவிஷ்ணு.
.
.
அகிலம்
=======
சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் காரணம் உரைத்தல்.
=======================================================
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று
முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப்
பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே
அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும்
குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து
சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி
என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க
நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக
என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில்
தென்னவனே நீயும் செய்தத் தவமதினால்
எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் கோபமான கேள்விக்கு சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, இப்போது நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளும்.
.
பிரபஞச்சத்தின் ஆரம்ப காலத்திலேயே, அதாவது நாமெல்லாம் உதயமான காலத்திலேயே இத்தகைய துன்பங்களும் துயரங்களும் வரும். அதையெல்லாம் நீர்தான் எதிர்கொண்டு விடிவு காணவேண்டும் என்று நான் உம்மிடம் சொல்லியிருக்கிறேன். மைத்துனரே, அன்று நான் எந்தச் சந்தர்ப்பத்தில் எதனால் அப்படிச் சொன்னேன் என்பது பற்றிய விவரத்தையும் இப்போது சொல்லுகிறேன். கேட்டருளும்.
.
குறோணி என்றொரு கொடும்பாவி அசுரன் தோன்றி, மிக ஆவேசமாக இந்த உலகத்தையும், என்னையும், உமையவள் முதலாக எல்லாரையும் விழுங்க முற்பட்டபோது மாயவராகிய நீர் மட்டும் அதிலிருந்து தப்பித்து, பூலோகத்தில் என்னை நினைத்துத் தவமிருந்தீர்.
.
நீர் செய்த தவத்தின் பயனாக நான் உம்மிடம் எழுந்தருளி உமக்கு என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன்.
.
.
அகிலம்
=======
குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி
கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித்
தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய
வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன்
தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து
மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும்
சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித்
தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை
எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண்
என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன்
.
விளக்கம்
==========
அப்போது நீர் இந்த உலகத்தை விழுங்க நினைக்கும் குறோணியாகி அசுரனை ஆறு கூறாக வெட்டி விட்டெறிய எனக்கு வரம் தாரும் என்று கேட்டீர்.
.
அப்போது, உம்மிடம் அந்தக் குறோணியை ஆறு கூறாக்கி அவனியில் விட்டெறிந்தால் அவனுடைய ஒவ்வொரு நுறுகளும் உமக்கு எதிரியாக இவ்வுலகில் பிறக்கும், அதனால் யுகக் காண்டங்கள் ஏற்படும் என்று சொன்னேன். அதன்படிதான் ஆறு யுகங்களிலும் நீர் அவதரித்து அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்தீர். இவை யாவும் அன்று நான் சொன்ன சொல்படிதான் நடைபெறுகிறதே தவிர என்பேரில் கோபப்படவேண்டாம் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும்
ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்
சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ
.
விளக்கம்
=========
இதற்கு முன்பு நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும் அசுரர்களை விதம் விதமாக, அதிகமான பலமுடையவர்களாய் வேகமாகப் பிறவி செய்துள்ளீர். முதல் முதலாக தாங்கள் பிறவி செய்த குறோணி இந்த உலகத்ததையே விழுங்க முற்பட்டானே அவனை அழித்தவர் என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
இரண்டாவது யுகத்தில் குண்டோமசாலியனாய்ப் பிறவி செய்தீரே அவன் விண்ணுலகை விழுங்குவதற்காக ஆர்ப்பரித்து நின்றானே அவனைக் கொல்வதற்கு என்னைத் தவிர வேறு யாரும் உண்டா?
மூன்றாவது யுகத்தில் மல்லோசிவாகனனைப் பிறவி செய்தீரே அவன் தேவர்களையும் தெய்வமாதர்கள் மூவரையும் தமக்கு வேலை செய்யப் பணித்தபோது, அவர்களிட்ட அபயக் குரலைப் பொறுத்துக் கொள்முடியாமல், என்னை ஓடிப்போய்க் காப்பாற்று என்றீரே, அப்போது அவர்களை சிறைபிடித்த அரக்கர்களை அழித்தது என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
.
.
அகிலம்
========
நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன்
ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே
நாட்ட முடனே நாடும் படையோடு
கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க்
கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத்
தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து
இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி
உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர்
தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால்
மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால்
என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச்
சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே
விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப்
பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ
உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச்
செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே
.
விளக்கம்
=========
நான்காவது யுகத்தில் சூரபத்மனைப் பிறவிசெய்து அவன் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்ததுமல்லாமல் உம்முடைய கயிலையையும் அவனிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக என்னிடம் ஓடிவந்து என்னுடைய இருப்பிடமான கடலில் வந்து தங்கினீர். அப்போது அந்த சூரபத்மன் செய்த கொடுமையைத் தாங்காத தேவர்களின் அபயக்குரல் கேட்டு, அந்தச் சூரனை வதைக்க என்னை அனுப்பி வைத்தீர், அந்த அரக்கனோடு போர் புரிந்து நான்பட்ட இன்னல்களை எடுத்துரைத்தால் தாங்குமா?
.
.
அகிலம்
========
இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து
தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான்
பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து
கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம்
பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து
உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து
அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக்
குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப்
பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே
தேவியும் நானும் தேசமதி லேபிறந்து
அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச்
சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு
.
விளக்கம்
=========
மீண்டும் அவனை அதேயுகத்தில் இரணியனாய் எனக்கு எதிரியாய்ப் பிறவி செய்தீர். அவனை அவனுக்கே மகனாகத் தோன்றி அவனை அழித்தேன்.
.
ஐந்தாம் யுகத்தில் அவனை இராவணனாகப் பிறவி செய்தீர். அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தீர். வரமா அது? அல்ல உம்முடைய அருள் சக்தி அனைத்தையும் இராவணனுக்குக் கொடுத்துவிட்டீர். அதுமட்டுமல்லாமல் உம்முடைய இருப்பிடமான கயிலை மலையையும் அவனுக்குத் தாரைவார்த்துவிட்டீர்.
.
அப்பெரும் வலிமையினால் அவன் மூன்று லோகங்களையும் அடக்கி ஆண்டு அராஜகம் பலபுரிந்தான். அவனை நானும், திருமகளும் அவதாரம்புரிந்து அழித்தோம். உம்முடைய வலிமையாகிய சக்தியை மீட்டுத் தந்தோம்.
.
.
அகிலம்
========
சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு
சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
.
விளக்கம்
=========
ஆறாவது யுகத்தில் அவனைத் துரியோதனனாகப் படைத்தீர். அவனனை நான் எப்படிக் கொன்றேன் என்பதை இங்கே எடுத்துச் சொல்ல இயலுமா? அந்த யுகத்தில் கம்சன் என்று ஒரு கயவனைப் பிறவி செய்து வைத்தீரே… அடடா அந்த அரக்கனிடம் அடியேன் பட்ட அவலங்களை எடுத்தியம்ப எவராலும் ஏலாது. இதையெல்லாம் நான் நினைத்து பார்க்கும்போது சிவபெருமானே உமக்குச் சூடு சொரணை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவேதான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு எனக்கு அவ்வப்போது அலைச்சலை உண்டாக்குகிறீர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய
மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச்
சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல்
வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து
இத்தனை நாளும் யானும்மைக் காணாமல்
புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன்
மாரி காணாத வாய்த்த பயிர்போலும்
ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன்
இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித்
துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன்
என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும்
சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார்
இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே
துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு, சிவலோகமாகிய கயிலாசத்திற்கு வந்து சேர்ந்த உடன் அங்கே சூழ்ந்திருந்த காரிருள் அகன்றது. சிவபெருமானோ மகாவிஷ்ணுவைக் கண்டதும் தம் குழந்தையைக் காணாமல் தவித்த தாய் அந்தக் குழந்தையைக் கண்டதும் அன்புப் பெருக்கால் அள்ளி அணைப்பதைப் போல் மகாவிஷ்ணுவைத் தம் மார்போடு அணைத்துக் கொண்டார்.
.
பின்பு மாயவா, இத்தனை நாளும் நான் உம்மைக் காணாமல் பெற்றவளைப் பிரிந்து வாடும் பிள்ளையைப் போல் ஆகிவிட்டேன். மழையைக் காணாத பயிரைப் போல் வதங்கிவிட்டேன். ஏரியைக் காணாத நீரைப் போன்று நிலை குலைந்து விட்டேன். தன்னுடைய இனத்தைப் பிரிந்து தனிமையாகிவிட்ட மானைப் போன்று உம்மைப் பிரிந்து நான் வாடுகிறேன். உம்மைத் தேடித் தேடி தக்க துணையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மகாவிஷ்ணுவை வாரி அணைத்துக் கொண்ட சிவபெருமான், தொடர்ந்து தம் துயரத்தை வெளிப்படுத்துகிறார்.
.
மைத்துனரே இணை பிரியாத புறாவைப் போன்று நாம் இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தோமே… உமது துணையாகிய என்னை மறந்துவிட்டு நீர் வெகுதூரம் வெல்வதற்குக் காரணமென்ன?
.
.
அகிலம்
=======
என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல்
வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன்
துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக்
கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே
உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே
மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல்
பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே
சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ
இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல்
மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன
கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான்
அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான்
நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே
தானீ தமான சர்வபர நாரணரே
இந்த விதமாய் இகபர விதத்தோடும்
உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ
.
விளக்கம்
=========
நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் உமயவளைக் கூட நான் பார்க்கவில்லை. ஒன்றை ஒன்று பிரியாத அன்றில் பறவை, அதில் ஒன்றை இழந்து தவிப்பதுபோல், கணவனை இழந்த மனைவியைப் போல் இத்தனை நாளும் கலக்கமுடன் காத்திருந்தேன்.
.
உயிர்த் தோழனைப்போல் உன்னிடம் உறவு கொண்ட நாராணரே, நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் என்னுடைய மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நான் நித்திரையில் ஆழந்து நூறு வருடமாகி விட்டது.
.
எனக்கும் பிரம்மதேவருக்கும் மத்தியில் நடுநாயகமாய் இருந்து சித்தமாய் செயல்படுகின்றவரே நீர் என்னை விட்டுப் பிரிவதற்குக் காரணந்தான் என்ன? கயிலாசத்திற்கும் எனக்கும் ஏன் பதினான்கு லோகங்களையும் ஆளுகின்ற மந்திரியே, நீர் இல்லாமல் அச்செயலை எவரால் செய்ய இயலும். இகபர தவஞ் செய்தல்லவா நான் உம்மை அடைந்தேன்.
.
.
அகிலம்
=======
அப்படியே நீரும் ஆதிநா ராயணராய்
முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே
கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும்
ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும்
கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர்
மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும்
வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும்
நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும்
இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக்
கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல்
சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம்
எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும்
வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச்
செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு
மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது
எல்லா முமது இச்சையது போல்நடத்தும்
சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று
மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப்
பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை
.
விளக்கம்
=========
என்னுடைய இகபர தவத்தின்படியே ஆதி நாராயணராய் தோன்றி வந்த மாயவனே, கயிலை வாசிகளான தேவாதிகளும், மகாலட்சுமியும், வேத விற்பனர்களும், உற்ற ரிஷிபுங்கவர்களும், கின்னரர்களும், கிம்புருடர்களும், கேதாரர்களும், மன்னர்களும், மாமுனிவர்களும், நான்கு வேதங்களும், சாஸ்திரங்களும், பிரம்மாவும், நந்தியும் விதவிதமான பல சித்தர்களும், இப்படி மேலோகத்திலுள்ள அனைவருடைய ஆலோசனைகளையும் கேட்டு என்னுடைய காலில் நானே கல்லை இழுத்துப் போட்டதுபோல் கலியைப் படைத்துவிட்டு அதனால் ஆன அனைத்துத் துன்பங்களையும் அணுபவித்துவிட்டேன்.
.
வல்லவனே உம்முடைய ஆலோசனையைக் கேளாமல் கலியனைப் பிறவி செய்ததால் அதைப்பற்றி உம்மிடம் சொல்லவே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இதனால் சத்தியத்தையே நித்தியமாகக் கொண்ட தாங்கள் என்மீது சினங்கொள்ள வேண்டாம்.
.
இனிமேல் நடப்பவை யாவும் உம்முடைய விருப்ப்படியே நடத்தும், இந்த உலகத்தை உம்முடைய சொல் ஒன்றுக்குள்ளாக்கி தன்னிகரில்லாத் தர்மத் திருமுடி சூட்டி ஆட்சிபுரியும் என்று மகாவிஷ்ணுவின் மனம் மகிழும்படியாக பாலினுள்ளிருக்கும் மோர்போன்று மகாவிஷ்ணுவின் மனதிற்குள் உறைந்த சிவபெருமான் கூறினார்.
.
.
அகிலம்
=======
அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார்
எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை
நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய
ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள்
முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால்
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை
உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப்
பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண்
யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது
தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி
இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு
மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை
சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில்
சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு
எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு
வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே
அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும்
மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில்
இனிதிருக்கும் போது என்னை நினையாமல்
மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
அதைக் கேட்ட மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்துச் சொல்லுகிறார் மைத்துனரே, எப்போதும் உமக்கு இதே வழக்கமாகிவிட்டது. நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரமெடுத்து உம்மால் உருவாக்கப்படுகின்ற அரக்கர்களை ஒரு சாதாரண வேடனைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேனே அதைப் பற்றி நீங்கள் என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா?
.
பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் உம்மால் உருவாக்கப்பட்ட குறோணி, பிறகு துரியோதனனாகப் பிறந்து அவன் சாகும் வரையில் நிகழ்ந்த ஆறு யுகத்திலும் அந்தக் குறோணியின் உயிரைக் கொல்வதற்கு நான் பட்ட பாடென்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
.
நான்பட்ட அந்த துன்பங்களை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது. எனவேதான் இத்தனை யுகங்களிலும் அனுபவித்த வேதனைகள் போதுமென்றெண்ணி, இனிமேல் எந்த பகையும் இல்லாமல் இருப்பதற்காக தேவலோகத்தவர்களில் ஏழுபேரைத் தேர்ந்தெடுத்து, அயோக அமிர்த கங்கையருகில் நான் அனலாகி நின்று, ஏழு தேவமாதர்கள் மூலமாக ஏழு பிள்ளைகளை என் மகவாய்ப் பெற்றெடுத்து, நாம் எல்லாரும் ஒருமித்திருந்து உற்ற பெயரிட்டு, வல்லோராய் வாழுங்கள் என்று வரங்கொடுத்து வைத்துவிட்டு, இனிமேல் நமக்கு தொல்லைகளே இல்லை என்று நான் ஸ்ரீரங்க மாபதியில் களைப்பாறிக் கொண்டிருக்கும் போது, என்னை எள்ளளவும் எண்ணிப் பார்க்காமல் அந்த கபடமான கலிநீசனைப் பூமியிலே ஏன் படைத்தீர்? என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
உமையவள் மகாவிஷ்ணுவை மீண்டும் வருந்தி கயிலைக்கு அழைத்தல்
=====================
வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே
கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால்
அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில்
நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால்
தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே
நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே
மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே
கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே
மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே
கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து
உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே
ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து
பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே
அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி
எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா
என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும்
சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி
.
விளக்கம்
========
மகாவிஷ்ணுவின் மனவோட்டத்தையும், மாறாத கோபத்தையும் உணர்ந்த உமையவள், கண்ணீர் விட்டுக் கதறி அழுதவாறு, அண்ணா, தாங்கள் கயிலைக்கு வராமல் இருப்பீரேயானால் இந்த உலகமே இன்னும் ஒரு நொடியில் அழிந்து விடும்.
.
கலியின் கொடுமை தாங்காமல் நல்ல மனிதர்களெல்லாம் நலிந்து போனார்கள். நானும் என்னுடைய கணவர் சிவபெருமானும் வேடனின் வலையில் சிக்கிய ஆண்மானும் பெண்மானும் ஒன்றின் முகத்தை ஒன்று பார்த்துக்கொண்டே துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளமுடியாமல் பரிதவிப்பதுபோல் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
.
கயலை வாசிகளான முனிவர்களும், தேவர்களும் வரம் பழிந்து வாடுகிறார்கள். மழை மேகத்தைக் கண்டாடும் மயிலைப்போல் சந்தோசத்தையே கொண்டாடிக் கொண்டிருந்த சிவபெருமான், பேசவே ஆரையற்றுப் பலநாள் ஆகிவிட்டது.
.
தெய்வ மாதர்களெல்லாம் என்னைப் பற்றி நினைப்பதையே மறந்துவிட்டு, தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் கலியின் பிறப்பினால் கயிலையே கட்டுப்பாடற்றுப் போயிற்று. விஷப்பைகளையுடைய பாம்புகளை தன் திருமேனியில் ஆபரணமாக அணிகின்ற சிவபெருமானும் மௌனமாகிவிட்டார்.
.
ஆகவே அண்ணரே உங்கள் தங்கையான எனக்காக மனமிரங்கி, நினைவுகளால் நிர்ணயிக்க முடியாத கயிலைக்கு தாங்கள் எழுந்தருளுங்களய்யா என்று முப்பத்து இரண்டு தர்மங்களுக்கும் தலைமகளான உமையவள், மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பணிந்து நின்றாள்.
.
.
அகிலம்
========
மகாவிஷ்ணு கயிலைக்கு எழுந்தருள இசைதல்
=====================
மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத்
தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார்
.
திருமால் திருக்கயிலை ஏகல்
----------------------
உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால்
நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே
உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து
சந்தோச மற்று சடைக்க விதியாச்சே
என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு
இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று
தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு
மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி
நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள்
கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார்
.
விளக்கம்
=========
மனக்குழப்பத்தோடு தவித்து தாள்படிந்து நின்ற தங்கை உமையவளின் மறுக்கத்தை மனதிலுற்று மனமிரங்கிய மகாவிஷ்ணு தங்கை உமையவளைத் தன் மார்போடு அணைத்து மிகுந்த பாசப் பிணைப்போடு கொல்லுகிறார்… தங்கையே, நான் உன் உடன் பிறப்பான காரணத்தால் நமக்கான இடங்களில் நாம் நிம்மதியாக வாழ வழியற்றுப் போய் விட்டது.
.
உனக்காகத்தானே நான் அவ்வப்போது அவதாரமெடுத்து தேசமெல்லாம் திரிந்தலைந்து கொண்டிருக்கிறேன். அதனால் அல்லவா இப்போது சந்தோசமற்று சடைந்திருக்க வேண்டிய விதியாகிவிட்டது என்று உமையவளிடம் ஆறுதல் கூறிவிட்டு கயிலைக்கு எழுந்தருள முற்பட்டார். மூவருக்கும் நடுவராகிய மகாவிஷ்ணுவுடன், உமையவளும் தேவகன்னியர்களும், தேவர்களும், முனிவர்களும் சந்தோசமாகப் புறப்பட்டனர். எல்லாரும் கடற்கரையில் வந்து சேர்ந்ததும் கயிலைக்குச் செல்வதற்குரிய காலமேது என்று மகாவிஷ்ணு சிந்தித்தார்.
.
.
அகிலம்
=======
கலி தம்மை ஒட்டாதிருக்க பண்டார வேசம் பூணுதல்
=========================================================
இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச்
சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே
கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை
பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று
என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி
அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி
மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள்
பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய்
மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத்
தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து
காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து
மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக்
கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து
எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த
முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து
செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து
தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து
அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர
தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று
தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர
அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச்
செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி
எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து
வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் சிந்தனையில் தோன்றியது யாதெனில் இங்கிருந்து நாமெல்லாம் அவரவர் சொந்த ரூபத்தில் செல்வோமேயானால், கயிலைக்குச் சென்றடைவதற்கு முன்பு நாம் எல்லாரும் கலியில் மூழ்கி அந்தக் கலியிலிருந்து கரையேற முடியாமல் அழிந்து விடுவோம்.
.
எனவே கயிலைக்குச் சென்று சேரும்வரை கலி நம்மைப் பற்றிக் கொள்ளாத வகையில் ஒரு வேடம் புனைய வேண்டும் என்றெண்ணி, தமது உடம்பெல்லாம் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டார். தம் வெள்ளை மனத்தில் சிவபெருமானின் நினைவை நிறைத்துக் கொண்டார். இந்தப் பேருலகில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அதனால் உண்டாகும் சுகதுக்கங்களையும் விட்டொழித்து, சடைமேவிய பண்டாரக் கோலமானார்.
.
பண்டாரக் கோலம் பூண்ட மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பற்றியே சீரிய சிந்தனைகளைக் குண்டலமாகத் திரட்டி தம் செவிகளிலே காதணியாய் அணிந்து கொண்டார். பஞ்ச கிருத்தியங்களை பூணூலாக அணிந்து கொண்டார். மனோன்மணி எனப்படும் உந்மநாச சக்தியை அதாவது, பார்வையால் எதையும் வெல்லும் பலத்தை தம் கண்ணின் கருவிழியில் பதித்துக் கொண்டார். தம்முடைய ஈடு இணையற்ற தங்கை உமையவள் பேணி வளர்த்துக் கொண்டிருக்கும் முப்பத்து இரண்டு தர்மங்களையும் உடலெல்லாம் ஆடையாகப் பொதித்து கொண்டார். சந்திர ஒளியை ஒத்த வெண்மையான நல்லாடையை அங்க வஸ்திரமாக அணிந்து கொண்டார். குளுமையும் அழகும் ஒருமித்த செங்கோலை ஊன்று கோலாகக் கையிலே எடுத்துக் கொண்டார்.
.
இவ்வண்ணமாகப் பண்டார சொரூபத்தைப் புனைந்து கொண்ட மகாவிஷ்ணுவை, மண்ணகத்து மாந்தர்கள் அரகரா என்று போற்றினர். விண்ணகத்து தேவர்கள் சிவசிவா சிவனே என்று வணங்கினர். அம்மை உமையவளோ, தமது சடாமுடிகளை விரித்துப் போட்டபடி மகாவிஷ்ணுவுடன் கயிலையை நோக்கி நடந்து கயிலையை வந்தடைந்தனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார்
சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால்
எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில்
உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து
சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான்
நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை
ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான்
அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக்
கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு
ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான்
.
விளக்கம்
=========
மாயவளின் மனக் குமுறலையும், மறுகலையும் உணர்ந்த மகாவிஷ்ணு, மாயவளைப் பார்த்துச் சொல்லுகிறார்… சிவபெருமானும், நீயும் இல்லாமலிருந்திருந்தால் இந்த உலகத்தில் பிறந்த எவனுக்குமே எவ்வகைத் துன்பமும் ஏற்பட்டிருக்காது.
.
உங்கள் இருவரின் ஏதுவினால், நான் யுகத்துக்கு யுகம் பிறந்து சங்கடங்களை அனுபவித்துத் தவிக்க வேண்டியத் தலைவிதி ஏற்பட்டுவிட்டது. நீங்கள் இருவரும் இல்லையென்றால் எனக்கு எந்த வித துன்பமும் ஏற்பட்டிருக்காது. நான் எதற்காக உங்களோடு இந்த இன்னல்களையெல்லாம் அனுபவிக்க வேண்டும்?
.
அயோத்தியாபுரியை அரசாண்டு கொண்டிருந்த என்னை நம்பிக் கைபிடித்த என்னுடைய மனைவி எனக்கென்று இருக்கிறார். அப்படியிருந்தும் நான் ஏனிந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும்?
.
.
அகிலம்
=======
மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும்
கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன்
மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க
இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப்
பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென
எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும்
நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே
வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க
பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ
.
விளக்கம்
=========
நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பங்களைப் பார்த்து என்னுடைய மனைவி லட்சுமி மான்போன்று அழுது கொண்டிருப்பாளே. அவளைக் கைபிடித்த நாள் முதலாய் அவளோடு நான் எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியவில்லை. என் மனதிற்குகந்த மனைவி எனக்கிருந்தும், ஒரு பிச்சைக்காரனைப்போல் உலகமெல்லாந் திரிந்தலையும்படியாக பரப்பிரம்மன் என்னைப் படைத்திருக்கிறான். கரை காணமுடியாத இடையூறுகளை இதுநாள்வரை அனுபவித்த நான், இனியாவது அந்தத் துன்பங்களிலிருந்து மீள வேண்டும். மீண்டுவிடலாமென்றே நல்ல குலச் சான்றோர்களை நான் பெற்று வந்தேன்.
.
அதையெல்லாம் மனமாரக் கண்டிருந்தும் உன்னுடைய கணவராகிய சிவபெருமான், பொய்யினால் புடம்போடப்பட்ட அந்த பொல்லாத கலியனை பூமியிலே பிறவி செய்து விட்டாரே. அது ஞாயமா?
.
.
அகிலம்
=======
நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும்
பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே
தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும்
வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ
காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ
ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார்
மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே
மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார்
வாளா யுதத்தாலே மாளானே மாகலியன்
தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான்
முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை
உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே
அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே
ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண்
.
விளக்கம்
=========
அய்யா மாயவளை நோக்கி, என்னுடைய மக்களை அந்த மாநீசனின் கையில் பாச கயிறு கொண்டு பிணைத்த பந்துகளைப் போல் ஒப்படைத்து விட்டாரே இது ஞாயமாகுமா?
.
அந்தக் கலிநீசனைத் தொட்டாலும், அவனைக் கண்களால் பார்த்தாலும் அந்த கலிநீசத் தன்மைகள், என் மக்களையும் தொடர்ந்து வந்து வான பெளிபோல் வியாபித்து அவர்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கின்ற தன்மையுடையதாயிற்றே. கலி என்ற வார்த்தையைக் காதினால் கேட்டால்கூட அவர்களுக்குப் பாவம் வந்து பற்றிக்கொள்ளுமே.
.
அந்தக் கலியை அழிப்பதற்கான உபாயத்தை எவரும் அறிய மாட்டார்களே. கலியாகிய மாய்கை எல்லாரையும் தன்னகப்படுத்தும் தன்மையுடையதாயிற்றே. அந்த மாய்கையில் சிக்கினால் அதிலிருந்து மீளுவது எளிதில்லையே. கலியிலிருந்து நாம் கடைத்தேற வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டுவிடாதபடி கலிமாய்கை அவர்களைக் கபளிகரம் செய்து மீளவிடாமலாக்கிவிடுமே.
.
இடறான இந்தக் கலியை அழிப்பதற்கான வழியை யாரால் அறிய முடியும்? அது உருவமற்ற மாய்கை ஆயிற்றே. அதை, வாள், அம்பு போன்ற எந்த ஆயுதங்களாலும் அழிக்க முடியாதே. தூசுபோன்ற அந்தக் கலிமாசு வர்ணிக்கவே முடியாத வல்லமையுடையதாயிற்றே.
.
கலியாகப் பிறந்துள்ள அந்தக் குறோணியின் முன் பிறவி ஆறிலும் உண்டான வலிமைகளையெல்லாம் சேர்த்துக் கூட்டினாலும் இந்தக் கலியனின் வலிமையில் எட்டில் ஒரு பங்குகூட இருக்காதே.
.
யுகா யுகங்கள் தோறும் நம்மால் தோற்றுவிக்கப்படும் அரக்கர்களையெல்லாம் அழிப்பதற்காகவே, பிறந்து அல்லல் பல அனுபவித்துக்கொண்டிருப்பது விஷ்ணுவாயிற்றே என்று நெஞ்சில் கொஞ்சம் கூட நினைத்துப் பாராமல் தன்னுடைய சுய இச்சையாக இந்தக் கொடூரமான கலியைப் பிறவி செய்திருக்கிறாரே உன்னுடைய கணவர் சிவபெருமான். அதற்காகவா நான் அவரைப் பார்க்க அங்கு வர வேண்டும்.
.
.
அகிலம்
========
தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே
எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச்
சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே
தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல்
மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள்
தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி
அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன்
தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல்
ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே
இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு
அப்படியே வேறு வழியல்லவே யானதினால்
எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது
உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக்
கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும்
.
விளக்கம்
=========
என்னையும், என்னுடைய நிலையையும் கொஞ்சங்கூட நினைத்துப் பாராமல், வழக்கத்திற்கு மாறாக உன் கணவர் செயல்பட்டுவிட்டார். இவ்வளவு அவமதிப்பையும் பெற்ற நான் எங்கேயாவது என் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நற்குணமுற்ற நல்ல மனிதப் பிறவிகளுக்கு வேறு உறைவிடமில்லையே, தாயும், தந்தையும் இல்லாத அனாதைக் குழந்தைகளைப் போல், கபடமான அந்த கலியில் சிக்கி நற்குணமுள்ள மனிதர்களெல்லாம் நலிந்து போவார்களே.
.
அயோக வனத்து அமிழ்த கங்கையருகில் சப்தமாதர்கள் பெற்ற பிள்ளைகளின் பிதிர் வழிகளையெல்லாம், தகப்பனில்லாப் பிள்ளை என்று வசைபாடுவார்களே. அந்த சாந்த குலச் சான்றோரை தனிமைப்படுத்தி அந்த கலிநீசப் பாவிகள் அடிப்பார்களே.
.
அந்த சான்றோர்களைப் பெற்ற சப்தமாதர்களெல்லாம் தவம் மேற்கொண்டிருக்கிறார்களே, அறுபத்து நான்கு கலைகளையும் ஆய்ந்து உயர்ந்த லட்சுமி என்னைக் காணவில்லை என்று மனம் நொந்து போவாளே என்பன போன்ற பல காரண காரியங்களினால்தான் வேறு வழியே இல்லாமல் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன்.
.
இனி நான் என்ன செய்வது எங்கு போவதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆகவே, என் தங்கை உமையவளே நீ தயவு செய்து உன் கணவர் இருக்கும் கயிலைக்குப் போய்விடு என்று மகாவிஷ்ணு மிகக் கோபமாகக் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
உமயவள் மகாவிஷ்ணுவை கயிலைக்கு அழைத்தல்
=========================================================
முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே
அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே
கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே
இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால்
அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ
பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால்
பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே
.
விளக்கம்
==========
தொடக்கமோ முடிவோ இல்லாத மூலாதாரமான முதற்பொருளே, அரி நாராயணரே, அண்ணரே, அச்சுதரே, கரியமாலே, கண்ணரே, கார்வண்ணரே, மிகவும் கேவலமான மகாபாதகனும், ஏமாற்றத்தை எதிர்கொள்ளவிருக்கும் கலியனுமாகிய நீசனின் வரவினால் எங்களுக்கு மனவுளைச்சல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களை விட்டுத் தாங்கள் அகன்று இருப்பது எதற்காக?
.
மகாபாதகனாகிய கலியனின் பழி சாபச் சாபச் சூழ்ச்சியினால், வண்டுகள் அமர்ந்து அருந்தவேண்டிய மலரமுதை, தவளைகள் அமர்ந்து உண்ணுவதைப் போன்று நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் அந்தக் கலிநீசன் செய்து கொண்டிருக்கிறானே.
.
.
அகிலம்
========
கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும்
சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து
இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும்
உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும்
நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால்
என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும்
வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய்
நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம்
பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே
தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும்
பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன
நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன்
அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும்
பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும்
.
விளக்கம்
==========
அந்தப் பொல்லாக் கலியனின் ஏதுவினால் உம்முடைய மைத்துனர் கபாலீஸ்வரர் மிகவும் மனந்தளர்ந்து, உணர்வற்ற உடலோடு கண்களை வடியவராயத் தலைகவிழ்ந்து இருக்கிறார். அதனால் கயிலையே இருள் மூடியுள்ளது.
.
தங்களின் மைத்துனராகிய சிவபெருமானின் திருமேனியிலுள்ள இயல்பான சுவடுகளில் ஏதோ ஒருவித மாற்றம் தென்படுகிறது. நிலையாக நிச்சயிக்க முடியாத அந்த கபடமான கலிநீசன் பிறந்த நாள் முதலாய் ஈசர் என்னோடு பேசியதேயில்லை. அந்தக் கேடுகெட்ட மாநீசன் கயிலைக்கு என்று வந்தானோ அன்றிலிருந்து நானும் உம்முடைய மைத்துனரும் எந்த விதமான லாப நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அதுபற்றி மனம் விட்டு உரையாடவும் வழியில்லை.
.
அண்ணா, தோசம் நிறைந்த அந்தக் கலியனுடைய சூழ்ச்சியினால் நாங்களெல்லாம் அனுபவிக்கும் இன்னல்களை ஏறிட்டுப் பாராமல் எங்களை எளக்காரம் செய்கிறீர்களே அது ஏன்?, நன்றிகெட்ட அந்தக் கலிநீசன் இந்த உலகத்தையே உருப்படாமல் ஆக்கிவிட்டான். அதுமட்டுமின்றி, நம்முடைய அருமைக்குப் பாத்திரமான சான்றோர்களையெல்லாம் சஞ்சலத்தில் ஆழ்த்திவிட்டான். அந்தச் சான்றோர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்களையெல்லாம் தாங்கள் அகற்றி வைக்க வேண்டாமா? எழுந்தருளுங்கள் அண்ணா…
.
.
அகிலம்
=======
வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால்
பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி
முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி
பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி
தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல்
நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே
.
விளக்கம்
=========
பிறப்பு விதிகளை மீறிய கலியின் மாய்கையினால், படைப்பு கர்த்தனாகிய பிரம்மன் கூட நிலை தவறி தடுமாற்றம் அடைந்துவிட்டார். எனவேதான், இயற்கைக்கு மாறாக கலியன் தலைமாறிப் பிறந்திருக்கிறான். அந்த கலியன் பிறக்கும்போது அவனுக்குத் தலையோ, முகமோ, கண்களோ ஏனைய உறுப்புகளோ இல்லாத முண்டமாகவே தோற்றமளித்தான். சிவபெருமானும் அந்நேரம் ஒரே நினைவில் இல்லாததால்தான் அவனுக்கு உயிர் கொடுக்கும்போது, பாவக் குணங்களைக் கொண்ட உயிராக அவனுக்குக் கொடுத்திருக்கக் கூடும்.
.
.
அகிலம்
=======
சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப்
பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும்
படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல்
குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல்
இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே
அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே
எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே
சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது
.
விளக்கம்
=========
ஆனால் உணவு முதலான அனைத்தையும் அருளுகின்ற தாங்களும் அவனுக்கு எக்குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் கொடுத்தமையால்தான் இந்த உலகத்திற்கு இத்தனை கேடுகளும் ஏற்பட்டுள்ளது.
.
அந்த பாதகனாகிய கலியனால் அனைவரின் நிலையும் ஆட்டங் கண்டுவிட்டது. ஆகவே, தாகம் ஏற்பட்டால் தண்ணீரைக் கூட நிம்மதியாகக் குடிக்க முடியவில்லை. இத்தனை இன்னல்களும் கலியின் காரணமாக ஏற்பட்டதேயாகும்.
.
ஆனால் என் அண்ணராகிய தாங்கள் எல்லாம் அறிந்தும் ஏதும் அறியாதவராய் எங்கள்மீது பகை கொண்டவர்போல் இருக்கிறீர்களே அதற்கு காரணம் என்ன?
.
அச்சுதரே இத்தனை நாளும் நாங்கள் அனுபவித்த துன்பங்களை எவ்வளவு என்று எடுத்துச் சொல்ல எவராலும் முடியாது.
.
.
அகிலம்
=======
கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான்
அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே
ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி
மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும்
என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே
.
விளக்கம்
=========
கைலாச நாதராகிய சிவபெருமான் உம்மைக் காணாத காரணத்தால் இந்த உலகத்தை உற்றுக்கூடப் பாராமல் ஓய்வாகவே இருக்கிறார். ஆகவே. என்னுடைய அண்ணராகிய தாங்கள் கயிலைக்கு வாருங்கள். மானமுள்ள புத்திமதிகளை உங்கள் மைத்துனருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணுவின் முன்னிலையில் அம்மை உமையவள் மறுகித் தவித்தாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 26.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
வெள்ளையனின் வினையம்
=============================
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க
விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்
வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன்
நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப்
பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான்
மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல்
தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து
ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப்
பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக்
கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச்
சாதி வரம்பு தானழித்து மாநீசன்
மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து
நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான்
எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி
ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப்
பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி
நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத்
தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது
மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள்
ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே
தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி
மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை
.
விளக்கம்
==========
மகாவிஷ்ணு திருச்செந்தூரில் மகிழ்ச்சையுடன் பள்ளிகொண்டிருந்த அந்நாளில், தேளின் விஷம் போன்ற மனத்தினையுடையவனும், விலை மாதுவைப் போன்ற நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரனுமாகிய ஆங்கிலேயன் உலகம் முழுவதுமிருந்த வாழ்வியல் கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்தான்.
.
மேன்மை மிகு சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த நன்னெறிகளையெல்லாம் சீர் குலைத்தான். மேன்மக்களின் புகழையும், தர்ம நீதியையும், பெருமைகளையும் அழித்தான். இந்நிலையால் பாறையில் வளர்ந்த மாமரமும், முருங்கை மரமும் காய் பலனற்றுப் போவதைப்போல், நற்குணமுள்ள மக்களெல்லாம் தம்முடைய நிலை தவறி, ஒற்றுமை குலைந்து, இழிவான நடவடிக்கையுடைய மானிடம் போல் ஆகிவிட்டார்கள்.
.
அந்த வெண்ணீசனாகிய ஆங்கிலேயன் ஈனச்செயல் புரிவோரைத் தேடிப்பிடித்து அவர்களுக்குப் பவளத்தால் புனைந்த ஆபரணங்களைக் கொடுத்தும், இன்னும் பல்வேறு சலுகைகளைச் செய்தும் அவர்களையெல்லாம் தன் வயமாக்கிக் கொண்டான்.
.
முன்பு ஆண்ட மன்னர்களின் மகுடத்தைப் பின்னர் வரும் மன்னன் அணிந்து ஆட்சிபுரிகின்ற வழக்கத்தை முற்றிலும் மாற்றி, தன்னுடைய நாட்டை இரவலாக அம்மன்னன் ஆளுவது போலாக்கினான். இந்த நாட்டைத் தன் வயப்படுத்தி முன்பிருந்த கலியரசனைத் தனது ஆளாக ஆளவைத்து, முன்பிருந்த சட்ட திட்டங்களையெல்லாம் மாற்றி அமைத்து, தன் எண்ணப்படியே சட்டங்கள் வகுத்தான்.
.
வெண்ணீசன் வகுத்து நடைமுறைப்படுத்திய சட்டங்கள் யாவும் மானமுள்ள மனிதர்களின் மனதையும், வாழ்க்கை முறைகளையும் வெகுவாகப் பாதித்தது. நாளடைவில் சான்றோர்களெல்லாம் தன்னுடைய மகிமைகளையெல்லாம் இழக்க வேண்டியதாயிற்று. இந்நிலையுணர்ந்த வானவ தேவர்களெல்லாம் திருச்செந்தூருக்குச் சென்று மும்மூர்த்திகளும் ஒருமித்தவராகிய மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
.
.
அகிலம்
========
சான்றோர்களுக்காகத் தேவர்கள் முறையம்
===============================================
ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா
இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க்
கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது
சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன்
மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே
தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்
மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே
பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக்
காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்
இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல்
புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே
தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல்
சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன
.
விளக்கம்
==========
ஆதிகாரண அபூர்வ அகப்பொருளே ! வடிவம், முடிவுமில்லா மூலவனே ! தொடக்கமில்லாததும், நித்தியமுமான சமநிலை கர்த்தா ! சோதி வடிவ சொரூபியே ! எங்களுக்கு நேர்ந்துள்ள கவலைகளையெல்லாம் தீர்த்தருளும் அய்யா.
.
இத்தனை காலமும் நாங்கள் மானத்தோடு வாழ்ந்து விட்டோம். எங்களையெல்லாம் ஆளுகின்றவரே இனிமேல் எங்களால் மானத்தோடு வாழ முடியாதது போலாகிவிட்டது. வெண்ணீசனின் வரவினால் இந்தத் தேசத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் வரம்புகளும் சிதைந்து சீர்குலைந்து விட்டன.
.
அந்த வெண்ணீசனானவன் இந்தத் தேசத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரந்து விட்டான். ஆகவே, இனியுள்ள இளைய தலைமுறையினர் மானத்தோடு வாழ வகையில்லை. நற்குணத்தோரின் புனித செயல்களையெல்லாம் களங்கப்படுத்தி, வலுவற்ற முருங்கை மரம்போல் முறிந்து விழ வைத்து விட்டான். அந்த கலியர்களின் ஏதுவினால் சான்றோர்கள் ஒற்றுமை இழந்து உருக்குலைந்து வாடுகிறார்கள்.
.
இத்தனை காலமும் நாங்கள் தங்களிடம் முறையிட்டவற்றையெல்லாம் உங்கள் மனத்தில் அடக்கியே வைத்துக் கொண்டிருந்தால் எங்களால் இன்னும் பொறுத்திருக்க முடியாது. எங்கள் சகோதரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களைத் துடைக்காமல் செயலற்றவர் போல் முகவாட்டத்துடன் தலை கவிழ்ந்திருப்பதற்குக் காரணமென்ன?
.
.
அகிலம்
========
மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல்
பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன
சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல்
ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன
இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய்
முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால்
பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம்
தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும்
பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே
மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு
உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம்
அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ
.
விளக்கம்
==========
மக்களின் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு மனமிரங்காமல் தாங்கள் கண்டும் காணாதவர்போல் ஒதுங்கி இருப்பதற்கான காரணமென்ன? சான்றோர்கள் படும் இன்னல்களுக்காக மனமிரங்காமல் ஆண்டவரே தாங்கள் அயர்ந்திருப்பது எதற்காக?
.
எங்களுக்கு இந்த நிலை ஏற்படவேண்டுமென்றா வானவர்களாக இருந்த எங்கள் சகோதரர்களெயெல்லாம் சான்றோர்களாக மனித குலத்தில் பிறவி செய்து, நீசகுலத்தாரோடு நிம்மதியற்று வாழவா கண்ணியிட்டு வைத்தீர். பாதகர்களாகிய அந்த நீசகுலத்தவர்களெல்லாம், எங்களோடிருந்து, தங்களால் பூலோகத்தில் பிறப்பிக்கப்பட்ட தேவர்களைப் படுத்தும் கொடுமைகளையெல்லாம் கயிலையில் இருக்கும் சக்தியும் சிவபெருமானும் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார்களே, பூவுலகில் பவனி வந்து கொண்டிருக்கும் தங்களுக்குத் தெரியாதிருப்பதேன்?
.
எங்களுடைய துன்பத்தையும், துயரத்தையும், மன இரக்கத்தோடு பாருங்கள் அய்யா. யுகத்துக்கு யுகம் தாங்கள் பூவுலகில் அவதரிக்கும் காலங்களிலெல்லாம் நாங்களும் பூவுலகில் பிறந்து செய்து வந்த ஊழியங்களையெல்லாம் அகற்றி அருள்பாலித்த அச்சுதரல்லவா தாங்கள்.
.
.
அகிலம்
========
மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக
ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால்
இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான்
புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து
நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ
தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ
இப்படியே தேவர் எல்லோரு முறையமிட
அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே
.
அம்மை உமை இரங்கல்
----------------------------------------------
நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி
வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின்
அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள்
.
விளக்கம்
==========
வலங்கையர் என்ற உயர்வோடு எங்களை மண்ணுலகில் மனிதர்களாகப் பிறப்பித்தது மட்டுமின்றி, எங்களோடு எவ்வகை உறவுமில்லாத பாதகர்களான நீசர்களையும், அங்கே படைத்ததினால் இத்தனை கஷ்டங்களும் எங்களுக்கு ஏற்பட்டது. உங்களுடைய பிள்ளைகளாக எங்களைப் பூலோகத்தில் பெற்று வைத்த தாங்கள், நாங்கள் படும் பாட்டை கண்டதில்லையா காரணரே?
.
நாங்கள் இத்தனையும் எடுத்துரைத்தும் இன்னும் தங்கள் மனம் இரங்கவே இல்லையா? என்று தேவர்களெல்லாம் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே அன்னை உமையவள் எழுந்தருளி சர்வ சக்திகளையும் தனதுள் கொண்ட மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பணிந்து தன்னுடைய மனத்துயரை மாயோனிடத்தில் முறையிட முற்படுகிறாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு
நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி
மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய
திரமான வாயு சேடன் முதலறிய
வருண னறிய மதியு மிகவறிய
தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன்
அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்
என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான்
.
விளக்கம்
=========
நான் உலகை ஆளவைப்பதற்கு எப்பொழுது வருவேன் என்பது பற்றி முன்பே அறிவதற்காகச் செய்தி ஒன்று எழுதி இப்பரந்த உலகிற்கு அனுப்பி மரங்களும், சீவ செந்துகளும், மலைகளும், எப்பொழுதும் உலாவுகின்ற வாயுக்களும், சேடனும், வருணனும், சந்திரனும் அறியும்படியாகச் செய்வேன். தக்க சமயம் வருகின்றபொழுது நான் சாணார் இனத்தில் தோன்றுவேன். இவற்றை எல்லாம் அறிந்து எல்லாச் சாதியினரும் அன்பாக ஒன்று கூடி பிரிந்து வாழாத வாழ்க்கை வாழ்ந்து வந்தால் உயர்ந்தோராக வாழ்ந்து இருப்பர் என்று திருமால் இவவளவும் அந்த நீசனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
========
அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி
நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய
தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட
ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி
வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய
வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க
வீசுவீ சென்று உலாவி யதுவீச
வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க
மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று
மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம்
தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை
.
விளக்கம்
=========
இவ்வாறு நீசனுக்கு எல்லாப் புத்திமதிகளையும் சொல்லி எந்தப் பயனும் இல்லாமையால் திருவனந்தபுரம் தேசத்தைவிட்டு எழுந்து திருச்செந்தூர் புறப்பட்டார். திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறியதும் நீசனுடைய கோட்டைகள் எல்லாம் இடிந்தன.
.
தேசமக்கள் எல்லாம் நித்திராதேவி ஆட்கொண்டு அறிவின்மையை உண்டாக்கினாள். ஏழுவகை மேகங்களும் அந்த இராச்சியத்தைச் சூழ காற்றானது திரண்டு அத்தேசத்தில் வீச, மழை நீரானது யானையின் துதிக்கை போன்று பெய்து அங்குள்ள பூமியை அரித்துச் சென்றது. கோபமுற்ற கடலானது தனது நீரால் அத்தேசத்தை மூழ்கடித்தது. எருமைபோன்று மூச்செறிந்து வெகுண்டெழுந்த கடல், நீசன் உருவாக்கியிருந்த கடினமான கோட்டைகளை எல்லாம் தேன்கூடு போன்று நினைத்து அடித்து நொறுக்கியது.
.
.
அகிலம்
========
கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து
பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம்
உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி
கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே
சிப்பாயி யோட சுபேதாருந் தானோட
அப்பப்பா வென்று அந்நீசன் தானோட
பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது
ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ
அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள்
.
விளக்கம்
=========
நீசனது கோட்டைத்தளங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு யானைகள் எல்லாம் இறந்தன. பணப்பெட்டி, கோட்டை போன்ற பகுதிகளைப் பூட்டி காவல் புரிந்து வந்த காவலர்கள் எல்லாரும் மனம் பதறி ஓகோ என்று வாய் உளறி இயற்கையின் மோதலைச் சமாளிக்க முடியாமல் களைத்து ஓடினர். இதைக் கண்டு அங்கு நின்ற சிப்பாய்கள் ஓட சுபேதாரும் ஓட, அப்பப்பா என்று அபய ஒலி எழுப்பி, அந்த நீசன் தன்னை மறந்து ஓடினான். பிராமண நம்பூரிகள் எல்லாரும் புலம்பிப் புலம்பி அழுதனர். வேதியர்கள் திருமாலையும் காணவில்லையே, தேசம் முழுவதும் இருளாக இருக்கிறதே. அய்யோ, இந்த நீச மன்னன் நம்மைக் கெடுத்து விட்டானே என்று சொல்லித் தமது உடம்பில் குத்திக் கொண்டு விழுந்து அழுதார்கள்.
.
.
அகிலம்
========
மாய னனந்த புரத்திலே வாழுமட்டும்
நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில்
ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன்
பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்
என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக
அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள்
நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி
வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார்
இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே
அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே
இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று
சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப்
பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே
.
விளக்கம்
=========
அய்யோ திருமால் அனந்தபுரத்தில் இருந்தவரை நீசன் வைத்த சட்டங்கள் நல்ல முறையிலே நிறைவேற்றப்பட்டு வந்தனவே. திருமால் இங்கிருந்து சென்றவுடன் நல்வா என்கின்ற வெள்ளை நீசன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டானே என்று பலர் இந்த வகையாகக் கூறிப் புலம்பி அழுதார்கள்.
.
நம்பூரிகளும் வேதியர்களும் நாம் கெட்டு அழிந்தோம் என்று அவர்களுக்குள் கூறிக் கொண்டு வேறு யாரிடமும் கூற முடியாவண்ணம் புழுங்கினர். இப்பழயே அந்த தேச உயிர்கள் எல்லாம் திடுக்கிட்டுத் துன்பமுற்றன. அப்பொழுது திருமால் தேவர்களை நோக்கி, தேவர்களே இன்றுமுதல் நான் இருக்கின்ற இடங்களில் எல்லாச் சாதியினரும் ஓரினம்போல் ஒற்றுமையாக வாழ்ந்து வாருங்கள் என்று கூறித் திருச்செந்தூர் செல்லுவதற்காக நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது பல வகையான உயிரினங்கள் திருமாலை நோக்கி வந்து வணங்கி சென்றன. அன்பர்களே, கேட்பீர்களாக.
.
.
அகிலம்
========
திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப்
பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி
அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே
அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே
அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல்
நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித்
தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும்
மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக்
கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை
வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி
வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க
நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார்
.
விளக்கம்
=========
திருச்செந்தூரில் சென்று திருமால் அமர்ந்திருக்கின்ற சமயம் ஒரு சிறந்த நம்பூரி அன்றைய நிலை பற்றிய குறை நிறைகளைக் காணப் பொருச்சம் பார்த்தான். அப்பொழுது அவன் பார்த்த சாத்திரங்களில் இந்தப் பூமியிலுள்ள பல சாதி மக்களும் இனி எப்பொழுதும் சதா திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருப்பார் என்னும் விதியும் மிகவும் நல்ல குணம் பொருந்திய சாணார்கள் திருச்செந்தூரில் நல்ல தேர் ஒன்று உருவாக்கி அதைத் தொட்டுக் கொடுத்து அத்தேர் விழாவை நடத்த வேண்டும் என்னும் விதியும் மேலும், உயர்வு பொருந்திய வலங்கையர் என்னும் அச்சான்றோர் உயர்வு பொருந்தியவர்களுக்குப் பலவிதத் தானங்கள் கொடுக்க வேண்டும் என்னும் விதியும் இருக்கின்றன என்பதை எடுத்துக் கூறினான்.
.
இத்தகைய சாத்திர வாக்கிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் நடத்தித் திருமால் வாரிக்கரையாண்டி என்னும் திருநாமம் சூட்டப்பெற்று உயர்வான பெண்டிர் சூழத் திருச்செந்தூரில் இனிதாக அர்ந்திருந்தார்.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது. தொடரும்….. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
மகாவிஷ்ணுவின் புத்திமதிகளும் கலிநீசனின் மறுப்புரையும் தொடர்ச்சி...
=====================
பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும்
இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது
நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ
பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத்
தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது
ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ
பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம்
பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான்
அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான்
வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ
என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே
.
விளக்கம்
=========
உலகில் எல்லா உயிர்களுக்கும் பாகுபாடின்றி படியளந்து கொண்டிருக்கும் மகாவிஷ்ணு கலியரசனைப் பார்த்து கலியரசா ஏழை எளியவர்களையெல்லாம் கொடுமைப்படுத்திப் பணம் வசூலித்து தினந்தோறும் எனக்குப் பூசை செய் என்று உன்னிடம் நான் கேட்டோனோ?
.
நீ செய்த பூசையெல்லாம் பிராமணர்களுக்கும், நம்பூரிகளுக்கும்தான் என்பதை இந்த உலகம் அறியாதா? தேவைப்படும் நேரத்தில் அந்த விவரங்களை இந்த உலகத்தோர் சாட்சியாக நிரூபிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறாயா?
.
இது காலம்வரை நீ செய்த பூசைகளையெல்லாம் நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறாயா? நான் ஏற்கவில்லை என்பதற்கு உற்ற அடையாளத்தை உரைக்கிறேன் கேட்டுக்கொள்.
.
நீ என்னுடைய திரு உருவத்தைச் சிலையாக வடித்து வைத்திருக்கிறாயே அதைப் பார். தெற்கே தலை வைத்து எத்திக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை அந்த நிலை உனக்கு உணர்த்தும்.
.
ஆனால் நான் இங்கே அமுதமாக ஏற்றுக் கொண்டிருந்தது எதைத் தெரியுமா? உன்னால் கடைச் சாதி என்று ஒதுக்கி வைத்திருக்கும் புலைச்சியின் கையினால் ஏற்றி வைக்கப்பட்ட தீபத்தை மட்டுமல்லாமல் என்னுடைய எவ்விதமான பூசை புனக்காரங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
.
இத்தகைய இந்த நிலவரங்களைப் பற்றிய உண்மைகளை இந்த உலகத்தோர் அறிவார்கள். பதவி வெறிபிடித்த பதரான உனக்கு அதை அறியும் ஆற்றலும் அருகதையும் சற்றேனும் இல்லை என்று கலியரசனின் கவனத்தைக் கவரும்படியாக மகாவிஷ்ணு எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
========
அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன
போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை
.
விளக்கம்
=========
மாயோன் உரைத்த செய்தி மாநீசனுக்கு அடுக்கவில்லை. எனவே, அந்த மாநீசன் மகாவிஷ்ணுவைப் பார்த்துச் சொல்லுகிறான். நான் இதுநாள் மட்டும் செய்த பூசை புனக்காரங்களையெல்லாம் நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எனக்கு நெருக்கமானவனாக நீ என்னோடு இருக்கவேண்டிய அவசியமில்லை. உடனே இங்கிருந்து போய் விடு. நீ எங்கே இருக்கவேண்டும் என்று விரும்புகிறாயோ அங்கேயே போய் விடு என்று மகாவிஷ்ணுவை விரட்டினான்.
.
.
அகிலம்
========
அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை
அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்
போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு
எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா
எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி
நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்
நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்
ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்
.
விளக்கம்
=========
இதைக் கேட்ட திருமால் மிகுந்த கோபம் கொண்டு நீசனைப் பார்த்து, நீசனே நான் உன்னுடைய திருவனந்தபுரத்தை விட்டுத் திருச்செந்தூர் போகப் போகிறேன்.
.
பிறகு உன்னை வதைத்து அழிக்க ஓர் உருவம் கொண்டு இங்கு மீண்டும் வருவேன். மாநீசனே என்னை இவன் எளிய சாணான் என்று கீழ்த்தரமான எண்ணம் கொண்டு கேலியாகப் பேசி நகைத்தாயே.
.
எளியவர்கள், வலியவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்தும் உனக்கு எல்லா விவரங்களையும் வெளிப்படையாக உபதேசித்து அருளியும், நீ அறியும் படியாகத் தருமத்தை இப்பரந்த உலகினில் நடத்தியும், பேய் வெறியைக் கொன்றும், இந்தப் பெரிய உலகம் முழுவதும் ஆட்சி புரியும் தகுதியுள்ள சான்றோருக்கு நான் சிறந்த பட்டம் சூட்டியும் உள்ளத்தில் முழுமுயற்சியுடனும், உண்மையுடனும் என்னைச் சதா ஒரே நினைவாக நினைத்துக் கொண்டு இருப்பவருக்கு மாற்றுப்பிறப்பு கொடுத்தும் இந்தப் பூலோகத்தை ஆள வைப்பேன்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚












