
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
ஐம்பத்து ஐந்து ரிசிமார்களின் அடையாளம் கூறுதல்
====================
மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத்
தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும்
கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று
அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே
அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
.
விளக்கம்
=========
பிரமலோக வாசிகளான ரிசிமார்களே, அந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்களில் சிலர் மான்தோலில் அமர்ந்து வானத்தையே பார்த்த வண்ணம் இருப்பர்.
.
ஒருநாளும் ஒருவேளை கூட உணவிற்காக சாதத்தை அருந்தாமல், தண்ணீரைக் குடித்துவிட்டு, வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை கடைப்பிடிக்கும் முறைமையை நான் உணவாக உட்கொள்ளுகிறேன் என்பர்.
.
அதனால் கலிமாய்கையுடையோரால் பல விதமான இன்னல்களை அனுபவித்து ஒளி சற்றும் இல்லாத குழந்தைகளைப் போல் இருப்பார்.
.
அப்போது நான் பரப்பிரம வைகுண்டமாக அவதரித்து பூலோகத்தில் வந்து இந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளையும் எம்மிடம் வரவைத்து, அவர்களின் அந்தப் பிறவியை நிறைவு செய்து மீண்டும் உங்கள் இனத்திலே அவர்களைப் பிறவி செய்து உங்களோடு வாழ வழி வகுப்பேன். இதுவே அவர்களுக்கான அறிகுறிகளாகும்.
.
இப்படி அந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளும் ஆளுக்கு ஒரு விதமாக இருந்து கொண்டு, வித்தியாசமான உணவு வகைகளை உண்ணுவதைப் பற்றியும், வேறுபாடான நடவடிக்கைகளைப் பற்றியும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
.
அதுபற்றி வவரங்களைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விளக்க முனைந்தால் நேரம் மிகவாகும். ஆகவே இரத்தின சுருக்கமாகத் திரட்டித் தருகிறேன் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
.
.
அகிலம்
=======
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து
அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
.
விளக்கம்
=========
அந்த ஐம்பத்து ஐந்து ரிஷிகளில் சிலர் குரு மிளகை உணவாக உண்டு கொண்டு ஒன்பது விதமான ஆபரணங்களை அணிந்திருப்பர். சிலர் பச்சை மிளகாயை உணவாகக் கொண்டு சாம்பலை உடலெல்லாம் பூசிகொண்டு, வெள்ளியினால் செய்யப்பட்ட தகடை தடுக்காகப் பயன்படுத்தி அதன்மேல் அமர்ந்திருப்பர்.
.
சிலர் யானைத் தோலை ஆடையாகப் போர்த்திக் கொண்டு எவ்வித உணவையும் அருந்தாமல் பல்வேறு நாடுகளிலுமுள்ள காடுகளில் கண் இமைக்காமலே வாழ்ந்து கொண்டிருப்பர்.
.
சிலர் தம் சுவாசத்தை தம்முள் அடக்கிய வண்ணம், தம்மீது சிலந்தி வலை பின்னுவதைக் கூட உணராத நிலையில் ஏதேனும் ஓர் மரக்கட்டையின் மேல் மரம்போல் நிற்பர்.
.
சிலர், புங்கமரத்துக் கொடியையும், மிளகு வெற்றிலைக் கொடியையும் மிக விருப்பத்துடன் மென்று தின்ற வண்ணமாகத் தவமிருப்பர்.
.
சிலர் சாதத்தில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அதில் உப்பு சேர்க்காமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் குடித்துக் கொண்டு நெருப்பை வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருப்பர்.
.
.
அகிலம்
========
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து
நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
.
விளக்கம்
==========
மலைகளின் மீது வாழ்ந்து கொண்டிருக்கும் சில ரிசிகள், கிராமங்களிலும், நகரங்களிலும் வாழ ஆசைகொண்டு அப்பகுதிகளுக்கு வரப்போகிறேன் என்பர். சிலர் கள்ளிச் செடியிலுள்ள பாலைக் குடித்துக் கொண்டு தலை நிமிர்ந்து பாராமல் இருப்பர்.
.
சிலர், பற்றி எரியும் விறகிலுள்ள நெருப்புத் தழலையும், சுய உணர்வுகளை மயக்கம் அடையச் செய்கின்ற கஞ்சா இலையையும் உணவுக்கு பதிலாகச் சாப்பிட்டுவிட்டு அந்த மயக்கத்தில், இந்த உலகத்தையே விழுங்கிவிடுவோம் என்பர்.
.
சிலர் உணவாகப் புல்லைத் தின்றுவிட்டு புலித்தோலில் அமர்ந்து இருந்து கொண்டு இனிமேல் எங்களுக்குத் தில்லை மரத்துப் பால் தான் உணவு என்பர்.
.
சிலர் புகையிலைச் சாறு குடித்து வாழ்வோம் என்றும், சிலர் நாங்கள் இந்த உலகம் முடியும் காலம் வரை பசி வராத உணவை உட்கொண்டுள்ளோம் என்பர்.
.
சிலர், நாங்கள் மலர்களின் மேல்தான் படுத்து உறங்குவோம், பசும்பாலைத்தான் அருந்துவோம் என்று சொல்லிக்கொண்டே சோலைப் பகுதிகளில் ஆடை அணியாமல் வாழ்வர்.
.
சிலர், ஆடை எதுவும் இணியாமல் கழுத்து நிரம்ப ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு, இரண்டு கால்கள் இருந்தும் ஒற்றைக் காலால் குதித்துக் குதித்து நடப்பர். இவ்விதமாக இந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளும் ஆளுக்கொரு விதமாக ஐம்பத்துதாறு தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
பிரமலோகத்தார் பூலோகப் பிறப்பு
===================================
பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே
ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார்
அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார்
இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில்
படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல்
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது
முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே
பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால்
அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று
இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம்
ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய
ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால்
இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில்
கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார்
.
விளக்கம்
=========
சொர்க்கலோகத்தாரை எல்லாம் பூலோகப் பிறவிக்கு அருள் பாலித்த மகாவிஷ்ணு, அடுத்து, பிரமலோக வாசிகளான ரிசிகளை எல்லாம் வரவழைத்து, என் குழந்தைகளான பலமிக்க ரிசிமார்களே ! இப்போது வானுலகத்தவர்களை எல்லாம் பூவுலகத்திலே பிறவி செய்யப்படுவதான நடவடிக்கைகளில் உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் உள்ளதானால் உடனே சொல்லுங்கள் என்றார்.
.
அதைக் கேட்ட அந்த ரிசிமார்கள், சுவாமி, எங்களை எல்லாம் பூலோகத்தில் பிறவி செய்யவேண்டும் என்று தாங்கள் நிச்சயித்தது நிச்சயித்தபடியே ஆகட்டும். அது நிகழ்ந்தாக வேண்டிய விதியுமாகும். எனவே, அந்த விதி ஒரு போதும் பொய்க்காது.
.
உங்கள் திட்டப்படி எங்களையெல்லாம் பூலோகத்தில் பிறவி செய்ய வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் இருக்கும் சொர்க்க லோகத்தில் உள்ள ஒருவரின் உயிரை முன் ஏற்பாடாக சப்தமாதர்களில் ஒரு மாதுவின் மணிவயிற்றின் மூலம் உம்முடைய பிள்ளையாகப் பெற்றுக் கலியுகத்திலே பெருகி வாழ வைத்திருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.
.
முன்னொரு காலத்தில் எங்களோடு பிரம்ம லோகத்தில் இருந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்கள், பிரம்ம தேவனுக்கே உரிய பிறவிக் கணக்குச் சுவடியைத் திருடிய குற்றத்திற்காக, அவர்கள் ஐம்பத்து ஐந்து பேரையும், கல்சிலையாகுவீர் என்று பிரம்மதேவன் சாபமிட்டதின் விளைவாக, அவர்கள் 55 ரிசிமார்களும் கல்சிலையாகி, பூலோகத்தில் நிற்கும்போது, தாங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வேளையில் தங்களின் திருக்கரம் அந்தச் சிலைகளின் மேல்பட்டு அந்த 55 ரிசிகளும் உயிர் பெற்று, சுவாமி எங்களுக்கு நற்கதி அருளுங்கள் என்று வேண்டினர்.
.
அப்போது அந்த 55 ரிசிகளையும் பார்த்து நீங்களெல்லாம் சீமைக்கு ஒரு ரிசியாய்ச் சென்று, பிச்சையெடுத்து அதை மிச்சம் வைக்காமல் உண்டு, வினயமாக வேறெதுவும் நினைக்காமல் வாழுங்கள் என்று சொல்லி அனுப்பினீர்கள். தங்களின் உத்தரவுப்படி அவர்களும் சீமைக்கு ஒருவராக திரிந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
.
இந்த நிலையில் எங்களையும், தாங்கள் பூலோகத்திலே மனுக்குலத்தில் பிறவி செய்தால், அந்த 55 ரிசிகளும் எங்களோடு வந்து சேர்வது எப்போது என்பதையும் எங்களுக்குச் சொல்லி அனுப்புங்கள் மேன்மைக்கும் மேன்மையான நாராயணப் பரம்பொருளே என்று வேண்டினர்.
.
.
அகிலம்
========
நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார்
வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே
அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று
மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே
சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே
என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய்
துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு ரிசிமார்களைப் பார்த்து, ரிசிமார்களே, முன்னாளில் நிகழ்ந்த அருமையானதோர் சம்பவத்தை நினைவுகூர்ந்து தேவையான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அதற்கான விவரத்தை இப்போதே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுகிறேன்.
.
அந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்களும் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து நாட்டுக்கு ஒருவராக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் பூலோகத்தில் பிறந்திருக்கும் காலத்தில் என்ன விதமாக அங்கே இருப்பார்கள் என்பது பற்றிய விவரத்தைத் துல்லியமாகச் சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்று மகாவிஷ்ணு சொல்லத் தொடங்குகிறார். ரிசிமார்கள் ஆவலோடு அதைக் கேட்க முனைகின்றனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி சம்பூரணத் தேவனும் பரதேவதையும் தவமிருத்தல்
====================
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
.
விளக்கம்
=========
என்னுடைன் பரதேவதையைச் சேர்த்து வையுங்கள் என்ற என்னுடைய கோரிக்கைக்கு, இனித் தாங்கள் மறுப்புச் சொல்ல வேண்டாம் சுவாமி என்று சம்பூரணத் தேவன் மகாவிஷ்ணுவிடம் சொன்னதுமே, மகாவிஷ்ணு, சம்பூரணனைப் பார்த்துச் சொல்லுகிறார், தேவா என் பேச்சை ஏற்க நீ மறுக்கிறாய். என்னுடைய புத்திமதிகளை உன் மனது ஒத்துக் கொள்ளவில்லை. தாழ்ந்த நிலையுடைய அந்தப் பெண்ணை மேல்நிலைக்கு உயர்வடையச் செய்ய வேண்டுமென்றால் யானையைப் போன்று மதம் பிடித்துள்ள நீ கடுமையாகத் தவஞ்செய்ய வேண்டும்.
.
அதுமட்டுமல்ல நீ தவஞ்செய்வதைப் போல், தன்னை மேல்நிலைக்கு உயர்த்தும்படி வேண்டி, பரதேவதையையம் கடுந்தவஞ் செய்யச் சொல். இப்படி நீங்கள் இருவரும் கடுமையாகத் தவம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் இருவரும் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று தவமிருக்கும் போது, நீங்கள் செய்யும் தவத்தில் நினைத்தவை எல்லாம் உங்களுக்கு அருள்பாலிப்பேன் என்றார்.
.
மகாவிஷ்ணு அவ்வாறு சொன்னதால், சம்பூரணத் தேவனின் மனம் சந்தோசமடைந்தது. உடனே மகாவிஷ்ணுவிடம் சுவாமி தாங்கள் சொன்னபடியே நாங்கள் இருவரும் தவம் செய்கிறோம் என்று சொல்லி மகாவிஷ்ணுவை வணங்கி விடைபெற்று, பரதேவதையையும் அழைத்துக்கொண்டு, இறைவனை நினைத்துப் பிரம்ம மந்திரத்தைச் செபித்து இறைவனே தஞ்சமென இணைந்து தவம் செய்யலானார்கள்.
.
அகிலம்
=======
எமலோகத்தார் மனுப்பிறப்பு
===========================
அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்
ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத்
தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே
ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார்
உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி
எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே
மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று
எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்
.
விளக்கம்
=========
சம்பூரணத்தேவன், பரதேவதை தவத்திற்கு வழிவகை உரைத்த மகாவிஷ்ணு அடுத்தபடியாக எமலோக வாசிகளான தபோதனர்களை எல்லாம் அழைத்து, தபோதனர்களே நான் உங்களை இங்கே அழைத்ததின் நோக்கத்தை அறிவீர்கள். இது பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதேனுமிருந்தால் சொல்லுங்கள். இல்லையேல், நீங்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் எமலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்னுடைய பிள்ளைகளாகப் பூலோகத்தில் பிறந்து வளர்ந்து பெருகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிதிர் வழியில் நீங்களெல்லாம் பிறந்து மானமுள்ள மனிதர்களாக வாழவேண்டும்.
.
பூலோகத்தில் பிறக்கும் உங்களுக்கு இறப்பு வரும். அதன்படி இறந்து பிறந்தாலும் அதே சான்றோர்களாகவே பிறப்பீர்கள். என்றாலும் உங்களை அணுகி இருப்போருக்கெல்லாம் நீங்கள் ஏதாவது ஒர் இடையூறு செய்து கொண்டே வாழ்வீர்கள். ஆயினும் சான்றோர்களின் உதவியால் இருளகன்று வாழுவீர்கள் என்று கூறி எமலோக வித்தில் பிறந்த சான்றோரின் வழிக்குலத்தில் பிறவி செய்தார்.
.
.
அகிலம்
=======
சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு
====================================
சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து
மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே
நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு
.
விளக்கம்
=========
எமலோக வாசிகளையெல்லாம் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்க வழிவகுத்த மகாவிஷ்ணு, அடுத்து, சொர்க்க லோகத்தாரையெல்லாம் அழைத்து, மேலவர்களே நீங்கள் யாவரும் பூலோகத்தில் மனுக்குலத்தில் பிறக்க வேண்டியுள்ளது. அதில் உங்களுக்கு ஏதேனும் அபிப்பிராய பேதம் உள்ளதானால் சொல்லுங்கள்.
.
நீங்களெல்லாம் நான் பூலோகத்தில் அவதாரம் மேற்கொள்ளும் போதெல்லாம் என்னைப் பூரணமாக நம்பி என்னோடு பூலோகத்தில் பிறந்து, எனக்குப் பின்னால் நின்று எனக்குப் பல வகையில் சேவை செய்துள்ளீர்கள். ஆகவே உங்களோடுள்ள வானவரில் ஒருவரை என் மகவாகப் பூலோகத்தில் பெற்று வளர்ந்துப் பெருகச் செய்துள்ளேன். அவர்கள் சான்றோராகப் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
.
காலத்தின் கட்டாயத்தால் கட்டுக்கடங்காமல் காட்டாட்சி புரிந்து கொண்டிருக்கும் கலியை, என்மக்களாகப் பிறந்து சான்றோர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மூலமாகக் கருவறுத்து, உங்களை மேல் யுகமான தர்மயுகத்தை ஆளவைக்க நான் நிச்சயித்து இருப்பதினால், நீங்களும் பூலோகத்தில் பிறந்திருக்கும் வானுலக வாசிகளான உங்களுடைய வழியில் மங்களமாய்ப் பிறந்து என்னுடைய பிள்ளைகளாக வாழுங்கள்.
.
அப்படி நீங்கள் வாழுகின்றபோது நான் உங்களிடம் வருவேன். ஆகவே, தினந்தோறும் என் மனம் மகிழும்படியான நற்பணிகளை நீங்கள் எப்போதும் செய்துகொண்டே இருங்கள். உங்களுடைய சேவைகளைக் கணக்கெடுத்து, அதற்கேற்ப உங்களைப் பாதுகாத்து ஆட்கொள்வேனென்று கூறிச் சொர்க்க லோகத்தாரைப் பூலோகப் பிறவிக்கு அருள்பாலித்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தேவலோகத்தார் மனுப்பிறப்பு
============================
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்
தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே
பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு
இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால்
இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க
வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை
அப்போது அய்யா அரிநமோ நாரணரும்
செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார்
மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து
என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர்
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார்
நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம்
வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில்
தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு தனதுள் சிவபெருமானையும், பிரம்ம தேவரையும் உருவேற்றி, மும்மூர்த்திகளும் ஒருமித்திருக்கும் பரப்பிரம்ம நிலையில் இருந்துகொண்டு, தேவலோகத்தாரையெல்லாம் வரவழைத்துச் சொல்லுகிறார்,. தேவர்களே, நீங்களெல்லாம் தெய்வலோகத்தில் இருந்தும், அவதார நிர்ணயங்களை, அதாவது அவதாரண ஞானங்களைத் தெரிந்திருந்தும் அதன் உள்ளார்ந்த தத்துவக் கருத்துகளை சிந்தித்து உண்மையை உணராமல், இந்த கலியுகத்திலுள்ள கலிநீசப் பாவிகள், அவதார எதார்த்தங்களைப் பற்றிச் சற்றும் அறியாமல் பிதற்றுகின்றார்களே அதைப் போல மகாவிஷ்ணு மண்ணுலகில் மாண்டு கிடக்கிறார் என்றும், அவர் இங்கு இல்லை என்று பொய்யானதோர் செய்தியைச் சொல்லியுள்ளீர்கள். இந்தக் குற்றத்திற்காக நீங்களெல்லாம் பூலோகத்தில் மனதர்களாகப் பிறந்தாக வேண்டும்.
.
நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தேவலோகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏற்கனவே நான் பூலோகத்தில் என் பிள்ளையாகப் பெற்று வைத்திருக்கிறேன். அவருடைய பிதிர் வழியில் பெண்ணின் கருவறையில் கருவாகப் புகுந்து உருவாகத் திரண்டு சான்றோராகப் பிறவி எடுங்கள் என்று மகாவிஷ்ணு தேவலோகத்தாரிடம் சொன்னார்.
.
மகாவிஷ்ணுவின் அந்த உத்தரவால் உளம் பூரித்த தேவர்கள், நாங்கள் பிழைத்தோம் நல்ல காரியம் செய்தீர்கள் சுவாமி என்று நன்றி தெரிவித்தவாறு, சுவாமி ! நாங்கள் பூலோகத்தில் பிறப்பதற்காகப் போகப் போகிறோமே அங்கே பிறந்தால் அடியார்களாகிய எங்களுக்குப் பூலோக நியதிப்படி இறப்பதற்கான விதியும் உண்டல்லவா?
.
கேடான கலி இவ்வுலகில் வந்த காரணத்தால் பூலோகத்தில் பிறவியெடுக்கும் எங்களுக்கு அங்கே சாவு வந்தாலும் மீண்டும் அதே சான்றோர்களாக நாங்களெல்லாம் பிறப்பதற்கான வரத்தினைத் தந்து எங்களை அனுப்பி வையுங்கள் சுவாமி என்று வணங்கி நின்றார்கள்.
.
அதனால் அகமகிழ்ந்த நாராயணப் பரம்பொருள் தேவர்களைப் பார்த்து, தேவர்களே நீங்களெல்லாம் பூலோகத்தில் போய் பிறந்தால், அந்த கலியின் ஏதுவான மாய்மால மயக்கம் உங்களையும் விட்டு வைக்காது. அப்படி உங்களையும் கலியானது சூழ்ந்திருக்கும் அந்நேரம் என்னுடைய பெயரையும், சிவபெருமானின் பெயரையும், லோகமாதாவாகிய உமையவளின் பெயரையும், நீங்கள் உச்சரிக்கவே கூடாது என்று கலிமயக்கம் அதிகமானோரெல்லாம் ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்களை அடித்து உதைத்துத் தடை செய்வார்கள்.
.
இத்தகைய சூழ்நிலைக் கைதிகளாக வாழ்ந்துவரும் உங்களுக்கு நிலவுகலக நியதிப்படி சாவு வரத்தான் செய்யும் . வந்தாலும் உங்கள் உயிருக்கு எந்தவிதக் கேடும் ஏற்படாத வண்ணம் மீண்டும் மீண்டும் அதே சான்றோர்களாகவே பிறப்பீர்கள்.
இப்படி உங்கனை நான் வந்து ஆட்கொண்டு அருள்பாலிக்கும் காலம்வரை, எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உயிர் சான்றோர் நிலையை விட்டு அகலாது என்று கூறினார். இதனால் மனமகிழ்ந்த தேவர்கள் சான்றோர்களாகப் பிறக்கச் சென்றார்கள்.
.
.
அகிலம்
--------------
சம்பூர்ணத்தேவன் பூலோகத்தில் பிறக்க மறுத்தல்:.
======================================================
மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம்
போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
.
விளக்கம்
=========
தேவலோகத்தார்கள் எல்லாம் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்க ஒப்புக்கொண்டு சென்றபோது, தேவலோகத்திலுள்ள தேவர்களில் பெருமைக்குரியதோர் சம்பூரணத்தேவன், எமலோகத்தில் தன்னுடைய கணவனை கைவிட்டுவிட்டு வாழ்ந்துவரும் பரதேவதை என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி நீண்டகாலம் இருவரும் உறவாடி வந்ததால் பூலோகத்தில் பிறவியெடுக்கமாட்டேன் என்று மகாவிஷ்ணுவிடம் மறுப்பு தெரிவித்தான்.
சுவாமி ! நான் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கப்போக வேண்டுமானால், எமலோகத்தை சேர்ந்த பரதேவதை என்ற பெண்ணையும் என்னோடு பூலோகத்தில் பிறவிசெய்து, அவளை எனக்கு மனைவிபோல் ஆக்குவீரானால் நான் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கப்போவேன் இல்லையென்றால் அதில் பல இடையூறுகள் ஏற்படும் என்று சம்பூரணத்தேவன் சொன்னான்.
.
.
அகிலம்
--------------
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா
.
வெண்பா
=========
ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்
.
நடை
=====
ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
.
விளக்கம்
=========
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, சம்பூரணத் தேவனைப் பார்த்து, தேவா ! நீ என்ன நியாயம் பேசுகிறாய். நீ தேவலோகத்தைச் சேர்ந்தவன். பரதேவதையோ எமலோகத்தைச் சேர்ந்தவள். அதுமட்டுமல்ல அவள் இன்னொருவனின் மனைவி. அவள் தன் கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு உன்னை விரும்புகிறாள். நீயோ இன்னொருவனின் மனைவியை அவனிடமிருந்து பிரித்த குற்றத்திற்கு ஆளாகுகிறாய்.
.
நீங்கள் இருவர் செய்வதும் பெரும் பிழையாகும். அத்துடன் உங்கள் இருவரின் இருப்பிடங்களும் கலாசார வேறுபாடு உடையதாகும். யானையும், பூனையும் ஒன்றோடு ஒன்று எப்படி இணைந்து உறவாடாதோ, அதுபோல் பூனையோடு நாய் புணர முடியாது, ஈயோடு ஈசல் சேராது. இப்படியிருக்க, மதம் பிடித்த யானை அதன் தலையில் அதுவே மண்ணை வாரிப் போடுவதைப்போல் நீ ஏன் உன்னையும் உன்னுடைய வாழ்வையும் பாழாக்குகிறாய்?
.
தேவா கீரிக்குப் பாம்பு ஒருபோதும் உறவாகாது. நரியும் சிங்கமும் எந்த நிலையிலும் நயந்து வாழாது. அதுபோல் உங்கள் இருவரின் வாழ்வியலும் ஒத்துப்போகாது. ஆகவே, உன்னுடைய இந்த ஆசை நல்லதல்ல. எனவே உன்னுடைய கோரிக்கையை கைவிட்டுவிடு என்று சம்பூரணத் தேவனுக்கு மகாவிஷ்ணு எடுத்துரைத்தார்.
.
மகாவிஷ்ணு இத்தனை புத்தி எடுத்துரைத்த பின்னும், சம்பூரணத் தேவனின் மனதில் சற்றுக் கூட மாற்றமில்லை. அவன் மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கி, எங்களையெல்லாம் காத்தருளும் தாங்கள் எங்கள் ஆசையை நிறைவேற்றி அருள் பாலியுங்கள். நான் இதுகாலம் வரை இச்சை கொண்டது அவளை மட்டுந்தான். அவள் மீது கொண்ட ஆவலை என்னால் மாற்றவே முடியாது. எப்படியாவது பரதேவதை என்ற பெண்ணோடு நான் அன்னியோன்னியமாக வாழ்ந்தாக வேண்டும் என்பதே என் ஆசை. அதை நிறைவேற்றினால் புண்ணியமாய்ப் போகும். என்னுடைய இந்தக் கோரிக்கைக்கு இனி மறுப்பு தெரிவிக்காதீர்கள் சுவாமி என்றான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார்
நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள்
வல்ல பரமே சுரரோ டேவகிர்வார்
கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால்
நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண்
ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும்
ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக்
கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து
முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே
தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும்
மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும்
மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப்
பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க
வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே
தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய்
ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக்
கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப்
பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன்
.
விளக்கம்
=========
ஈசர் முதலான எல்லாரும் சேர்ந்து, உங்கள் எண்ணப்படியே எங்களையும் இந்த உலகத்தையும் இயக்குங்கள் என்று சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற மாயோன், இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தபடியே சிவபெருமானிடம் சில செய்திகளை உரையாடினார்.
.
பாவ வினை போன்ற கலியுகம் பிறந்திருப்பதால் நாமெல்லாங் கூட இந்த கலியுகத்தில் பிறந்தாக வேண்டிய காலம் அடுத்து விட்டது. எனவே, ஈசுரரே நான் சொல்லுகின்ற செய்தியைக் கவனமாகக் கேளுங்கள்.
.
கெடுமதியாளனான பாவி துரியோதனனைக் கொன்று அவன் பஞ்சபாண்டவர்களிடமிருந்து அபகரித்து ஆண்ட குருநாட்டை மீட்டு பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு. நான் ஸ்ரீரங்கம் செல்லும்போது, விண்ணுலகம் ஏழிலுமுள்ள தேவர்களெல்லாம் மண்ணுலகத்தில் விஷ்ணுவின் பிள்ளைகளாகப் பிறப்பார்கள் என்று, முன்பொருகால் யோக முனிவர் இட்ட சாபத்தின் காரணமாகச் சப்தமாதர்களின் மூலமாகத் தாங்களும் அறியும்படி ஏழு லோகத்திலும் ஏற்றமுள்ள வித்தெடுத்து பூமியிலே மனிதர்களாய்ப் பிறப்பித்தோம். பிறந்த அந்த பிள்ளைகளுக்கு தேவசங்கங்கூடி பெருமையோடு பெயரிட்டு கீர்த்தியுள்ள சான்றோராய் தரணியிலே வாழுங்கள் என்று வாழ்த்தி வைத்து விட்டு ஸ்ரீரங்கத்திலே போயிருந்தேன்.
.
.
அகிலம்
=======
மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில்
அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே
புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும்
தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும்
வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய்
நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான்
தாது கரமணிந்த தானவரே தர்மிகளே
ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன்
என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும்
அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும்
கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள்
சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால்
இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக்
கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
ஸ்ரீரங்கத்தில் சிறிது காலம் இருந்த நான் அங்கிருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் போய்க் கொண்டிருந்த வேளையில், தெய்வ லோகத்திலுள்ள தேவர்களும் வைகுண்டலோகத்தில் வாழுகின்ற தர்மிகளும், சிவலோக வாசிகளான சித்தர்களும், வானவர்களும், பிரம்மலோகத்தைச் சேர்ந்த தபோதனர்களும் வட கயிலாசத்தில் மனவாட்டத்தோடு என்னை நினைத்துத் தவமிருந்தார்கள்.
.
அவர்கள் அப்படித் தவமிருப்பதை உணர்ந்த நான் அவர்களிடம் சென்று, நீங்களெல்லாம் இங்கே வந்து மனக்கவலையோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். என்னுடைய அந்தக் கேள்விக்கு அவர்களெல்லாம் சொன்ன பதிலை அப்படியே சொல்லகிறேன் ஈசுரரே தாங்கள் கவனமாக கேட்டருளுங்கள்.
.
சுவாமி ! இந்த உலகத்திற்குக் கேடு விளைவிக்கும் கபடமான கலி பிறந்துவிட்டதால், இதற்கு முன்பிருந்த மனுதர்மம், மனச்சாட்சி, மனதநேயம், விசுவாசம், நம்பிக்கை போன்ற நற்குணங்கள் யாவும் கட்டழிந்து நிலைகுலைந்து தடுமாற்றமாகி விட்டது.
.
ஆகவே நாங்கள் இது காலம் வரைக்கும் கட்டிக்காத்து வந்த தான தவங்களும் மானம், மரியாதைகளும் எங்களை விட்டு கொஞ்சங் கொஞ்சமாக நழுவிப்போவதைப் போல் உணருகிறோம். எனவே, இனி இங்கிருந்து எப்பலனும் நம்மிடம் நிலைத்து நிற்காது என்று எண்ணின, இந்த நிலைமைகளுக்கு விடிவாகிய தங்களை கனிவோடு தேடிய வண்ணம் தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்று அந்த தேவர்களும், தர்மிகளும், சித்தர் முதலான வானவர்களும், தபோதனர்களும் என்னிடம் சொன்னார்கள் என்ற செய்திகளை மகாவிஷ்ணு சிவபெருமானிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
.
.
அகிலம்
=======
அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம்
இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன்
சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே
நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால்
கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும்
அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது
சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும்
தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம்
மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து
யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும்
அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும்
எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ
ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில்
சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில்
அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால்
எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே
ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது
மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே
கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே
இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப்
பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால்
திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான்
நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார்
பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார்
.
விளக்கம்
==========
உங்களுடைய வருகைக்காகத்தான் காத்திருக்கிறோம் என்று அவர்கள் சொனனதும், நான் அவர்களிடம் தேவர்களே ! தர்மிகளே ! சித்தர் முதலான வானவர்களே ! தபோதனர்களே ! உங்களுக்கெல்லாம் என் மூலமாக என்ன காரியம் ஆகவேண்டும் என்று உடனே சொல்லுங்கள் எனக் கேட்டேன்.
.
அவர்களோ, என்னைப் பார்த்து, சுவாமி ! இந்த உலகில் கபடம் நிறைந்த கலியன் கொடூரம் அதிவேகமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. ஆகவே, அற்பர்களுக்கெல்லாம் அதிக சந்தோசமாகிவிட்டது. எனவே, கலியுகம் பிறப்பதற்கு முன்பிருந்த நல்லொழுக்கங்களும், கலியுகம் பிறக்கும் போதிருந்த நியாய நடுக்களும் அலட்சியமாக்கப்பட்டு விட்டது.
.
ஆனதினால், இந்த இடறான கலிக்கு முடிவு ஏற்படும் காலத்தில், சிவபெருமானும், உமையவளும், மற்றுமுள்ள உயிரினங்களும், தவத்தினால் வலிமைபெற்ற முனிவர்கள் முதலாக இந்த உலகிலுள்ள புல், பூண்டு, மரம், மட்டை மூலிகைகள், மலைகள், கடல் மற்றும் பாம்பு முதலான ஊர்வனங்கள் யாவற்றிலும் தேர்வு செய்து. அதில் மகாவிஷ்ணுவின் மனதிற்கு உகந்த உத்தமத் தன்மையடையவற்றை தேர்ந்தெடுத்து, அவைகளின் உள்ளத்திலும் உடலிலுமுள்ள அழுக்கான ஊறல்களைக் கழுவிக் களைந்து, ஞான விழிப்புணர்வு பெறுவதற்குத் தடையாக இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி, உயர்நிலை பெறுவதற்காக, அவரவர்க்கு ஏற்ற வகையில் பூலோகத்தில் ஏதேனும் ஒரு நாட்டில் பிறந்து ஆகவேண்டும் என்பது தானே விதி? அதற்கான காலம் இது தானே?
.
ஆகும் பிறப்பு ஆவதுவும் இப்போதுதான், சாகும் பிறப்புத் தவறுவதும் இப்போது தான். அந்த மோசமான கலியன் பிறந்த நீசத்தனத்தினால் இந்த இரண்டில் ஒன்று நடந்தேயாகும் என்ற திட்டம் ஏற்கெனவே உள்ளதுதானே. அந்தத் திட்டத்தின்படி எங்களைப் பிறவி செய்வதாகயிருந்தால், மானமுள்ள சான்றோராகப் பூவுலகிலே பிறவி செய்யுங்கள் என்று என்னிடத்தில் சொன்னார்கள்.
.
அவர்களின் இந்த இணக்கமான விணணப்பத்திற்குப் பதிலாகக் கொஞ்சநாள் பொறுத்திருங்கள் என்று அன்று நான் கூறினேன். அன்று நான் இவர்களிடம் சொன்னதையும், இன்று இவர்கள் நடந்து கொண்ட முறைகளையும், இவர்களின் பேச்சையும் ஆராய்ந்து பார்க்கும்போது இவர்களையெல்லாம் இப்போதே பூலோகத்தில் பிறவி செய்வதற்கான நியாயமுண்டு.
.
ஆகவே, அனைத்திற்கும் காரணமான ஆதி முதற் பொருளான ஈசுரரே ! இனி உங்கள் கருத்தென்ன என்பதை எடுத்துரையுங்கள் என்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் கேட்டார்.
.
அதைக் கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து மைத்துனரே இப்பொழுது நான் சொல்வதற்கொன்றுமில்லை. தாங்கள் நிச்சயித்தபடியே நிறைவேற்றுங்கள் என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும்
என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே
சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும்
என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன்
அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும்
உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து
தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு
அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச்
செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக்
கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து
விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத்
தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற
மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள்
மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே
திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச்
சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற
நமனும் பதற நாரா யணருரைப்பார்
.
விளக்கம்
----------------
சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கிய மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்துச் சொல்லுகிறார், எல்லா புகழுக்கும் சொந்தக்காரரான சிவபெருமானே, நான் இங்கே விளக்கமாகச் சொல்லுவதைச் சற்றுக் கவனமாகக் கேளுங்கள்.
.
பிறப்பு இறப்பு விதிகளைக் கடந்து அவதாரம் பலபுரியும் என்னைக் கூட பூலோகத்தில் இறந்து கிடந்தார் என்று சொன்னவர்களையெல்லாம் உடனே இங்கே வரச்சொல்லுங்கள் என்றார்.
.
மகாவிஷ்ணுவின் திருவுள்ளப்படி சிவபெருமான் அவர்களையெல்லாம் அங்கே வரவழைத்தார். தேவர்களும் முனிபுங்கவர்களும் மிக விரைவாகவும் பதற்றத்தோடும் ஓடோடி வந்து சிவபெருமானையும். மகாவிஷ்ணுவையும் தாழ்படிந்து வணங்கி நின்றார்கள்.
.
அவர்களைக் கண்ட மகாவிஷ்ணுவின் கண்கள் கடுஞ் சினத்தால் செந்தழல்போல் சிவந்தன. அவருடைய கார் வண்ணத் திருமேனியோ அங்கம் அங்கமாக விறைத்துத் துடித்தன. அதனால் விண்ணகமும், மண்ணகமும் நிலைகுலைந்து போயிற்று, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானும், உமையவளும், எமனும், ஏனைய எல்லா வகைகளும் மலைகளும் அதிரும்படியாக மகாவிஷ்ணு கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
.
அகிலம்
=======
தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே
மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார்
ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று
கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம்
சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச்
சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள்
சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம்
பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே
கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல்
விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே
நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும்
அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம்
இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல்
நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன
பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால்
சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன்
அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன
இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம்
இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம்
எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார்
.
விளக்கம்
----------------
தேவர்களே, வானவர்களே, தெய்வமுனி சாஸ்திரிகளே முப்பெரு மண்டலங்களைச் சார்ந்த நீங்கள் மூவரும் சொல்லுங்கள், நான் எங்கே ஒளித்திருந்தேன்? எந்த இடத்தில் சாகக் கிடந்தேன்? யாரிடமிருந்து தப்பிப்பதற்காக நான் ஒளிந்தேன்? அடுத்து பிறவி எடுப்பதற்காக நான் சாகக் கிடந்ததாகவும், செத்தே போய்விட்டதாகவும் சொன்னீர்களாமே அது எங்கே? சொல்லுங்கள்.
.
ஆளுக்கொரு விதமாக அவரவர் சிந்தனைக்கு எட்டியவாறு கற்பனை செய்துகொண்டு, உங்கள் கற்பனையில் தோன்றியவற்றைத் தோன்றியவாறெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் மாயவனாகிய என்னையே இங்கு இல்லையென்று மகாதேவனாகிய நமது குரு சிவபெருமானிடத்திலே கோளுரைத்திருக்கிறீர்கள். நடவாத ஒன்றை நடந்ததாகத் கூறிக் குழப்பம் விளைவித்திருக்கிறீர்கள். அதைச் சாட்சி பூர்வமாகத் தெளிவுபடுத்துங்கள். அதாவது சாஸ்திரங்களைப் புரட்டிப்பார்த்து, அதல் எங்களுடைய பிறப்பு இறப்பு பற்றி என்ன விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாகச் சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணு கடுகடுத்த கோபத்தோடு அவர்களிடம் கேட்டார்.
.
தேவர்களும், முனிவர்களும் தெய்வமுனி சாஸ்திரிகளும், வாய் திறந்து பதிலுரைக்கக் கதியற்றவர்களாய், பற்கள் பூண்டநிலையில் உதடுகளைப் பிறந்து வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாமல் பதைபதைத்து தலை குனிந்து நின்றார்கள்.
அவர்களின் நிலைமையை உணர்ந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, தேவர்களே, முனிவர்களே, தெய்வமுனி சாஸ்திரிகளே நீங்களெல்லாம் அன்று என்னிடம் உண்மையென, உறுதிபட ஓங்கி உரைத்த பேச்சுகளெல்லாம் இன்றெங்கே போச்சுது?
இப்போது இங்கே மகாவிஷ்ணு கேட்கும் கேள்விகளுக்கு உண்டென்றோ, இல்லையென்றோ சொல்லாமல் நீங்கள் நிலை குலைந்து நிற்கிறீர்களே அது ஏன்? பேசிப் பழகிய கிளி பூனையைக் கண்டவுடன் மரண பயத்தால் இயல்பான அதன் சொந்த மொழியில் கீச்சுகீச்சென்ற சத்தத்துடன் மறைந்து பதுங்குவதைப் போன்று நீங்கள் தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் என்ன? அன்று என்னிடம் ஆணித்திறமாக அடித்துச் சொன்னீர்களே, அதையே இன்றும் சொல்ல வேண்டியதுதானே என்று சிவபெருமானும் சற்று சினத்தோடு கேட்டார். அதனால் நிலை தாழ்ந்த தேவர்களும், வானவர்களும் தெய்வமுனி சாஸ்திரிகளும் தம் தவறை உணர்ந்து பதிலுரைக்க பலமில்லாமல் பதைபதைத்து நின்றார்கள்.
.
.
அகிலம்
-------------
சிவன் திருமால் ஐக்கியம்
=========================
எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு
சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ
நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும்
அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார்
இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது
என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும்
மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே
வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச்
சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும்
எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின்
நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய்
இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக்
கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே
நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண்
அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண்
இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி
என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து
சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான்
இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண்
உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால்
நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும்
என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும்
அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும்
சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு
.
விளக்கம்
=========
இந்நிலையில் எல்லாம் அறிந்த மகாவிஷ்ணு, அவர்களையெல்லாம் பார்த்து, பொய்யுரைத்த பொல்லாதவர்களுக்கெல்லாம் பூலோகத்தில் பிறப்பொன்று வரப்போகிறது. நான் இன்னுமொன்று சொல்லுகிறேன் அதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அங்கிருந்தோரெல்லாம் மகாவிஷ்ணு என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கவனமாகக் கேட்க ஆவலாயினர். அப்போது மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து, ஈசுரரே, நான் இங்கே எடுத்துரைக்கும் நியாயங்களைக் கவனமாக கேட்பீர்களா என்றார்.
.
உடனே, சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து உலகளந்த பெருமானே ! என்னுடைய மைத்துனரே! என்று மகாவிஷ்வைத் தம் அருகில் அழைத்து அமரவைத்து, சிவன் விஷ்ணு பிரம்மா உமையவள் ஆகிய அனைவரும் ஒருமித்திருக்கும் நிலையில் ஓர் சத்தியப் பிரமாணம் செய்யலானார்.
.
மாயோனே ! நாங்கள் இதற்கு முன்பு செய்த பிழைகளையெல்லாம் பொறுத்து, உம்முடைய விருப்பப்படி செயல்படுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் அடக்கங்களையும், அந்த அடக்கத்திலுள்ளேயிருக்கும் காரண காரிய முடிச்சுகளையும், ஆதிமூலமாகிய உம்மிடம் ஒப்படைத்துவிட்டோம். ஆகவே இன்று முதல் உம்முடைய விருப்பமில்லாமல் கலியைப் படைத்ததினால், இனி என்னோடு சேர்த்து எல்லாரையும் நீர்தான் வழிநடத்தவேண்டும் என்றனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மகாவிஷ்ணு மறுத்துரைத்தல்
====================
அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து
ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும்
மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே
இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம்
ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ
மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல்
அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே
என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால்
நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது
அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது
விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது
.
விளக்கம்
==========
ஈசனின் இதமான பேச்சு மகாவிஷ்ணுவை மகிழ்வித்தது என்றாலும் சிவபெருமானைப் பார்த்து ஈசுரரே தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் இப்போது முன்புள்ள நியாயமுறைகளை மீறியல்லவா செயல்பட்டிருக்கிறீர்.
.
இதற்கு முன்பெல்லாம் எனக்கு அறிவிக்காமலோ, மறைத்தோ ஏதேனும் ஒரு காரியம் செய்திருப்பீர்களா? இப்போது என்னை மதிக்காமல் கலியைப் பிறவி செய்ததினால் நம்மால் அநதக் கலியனை அழிக்க முடியாது. கலியை அழிக்கவேண்டுமானால் அவன் எங்கிருந்து ஆரம்பமானானோ அங்கிருந்தே ஆரம்பிக்க வெண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் ஏன் இப்போது ஒன்றும் தெரியாதவர்போல் விழிக்கிறீர். ஈசனே சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டேன். இன்னும் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
.
.
அகிலம்
========
நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே
சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண்
உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து
மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா
தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது
ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல்
பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில்
ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா
அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன்
சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால்
கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான்
முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால்
தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில்
நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண்
பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான்
ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண்
என்றாதி நாரா யணர்தானு மிப்படியே
அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச்
.
விளக்கம்
=========
முடிவாகச் சொல்லுகிறேன். நம்மால் கலியனை அழிப்பதென்பது நடக்காத காரியம். ஆகவே என்னை இனிமேல் வேலை வாங்க வேண்டாம். யுகத்துக்கு யுகம் அலைந்து திரிந்து என்னுடைய சந்து சதையெல்லாம் வலிக்கிறது. என் லட்சுமியைக் காணாமல் என் மனம் ஏங்கித் தவிக்கிறது.
.
அந்த ஆறுகத்துப் பாவிகளையும் அழப்பதற்கு நான் பட்ட பாட்டை நினைக்கும்போது என் உடம்பெல்லாம் சடைகிறது. அந்த முழுப் பாவிகளைவிட அதிக வலிமை பெற்றவன் இந்தக் கலி என்னும் கபடப்பாவி. பெற்றவர்களை வேலை வாங்கும் கொடியவர்களை விட இந்தப் பாவி கொஞ்சமும் குறைந்தவனில்லை.
.
அந்தக் கலியனோடு சண்டையிட யாரால் முடியும், அந்தக் கபடக் கலியனிடம் என்னை அனுப்பிவைக்க ஈசனே நீர் எத்தனிக்க வேண்டாம். கலியன் தரம் நியாயங்களைச் சற்றும் அறியாதவன். அவனிடம் வெற்றி பெறுவதென்பது முடியாத ஒன்று.
.
நான் ஏற்கெனவே ஆறுயுகங்களில் அந்த அரக்கர்களிடம் பட்ட அவலங்களை எல்லாம் மறந்து சற்று ஓய்வெடுக்கப் பேகிறேன். ஒட்டுமொத்தமாக என்னை அழித்துவிடத் தயவுசெய்து எண்ண வேண்டாம் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு கூறினார்.
.
.
அகிலம்
-------------
சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் இசைவு மொழி கூறுதல்
=============================================================
சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன்
புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே
இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால்
எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400
சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ
கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே
மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே
ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே
கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே
செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம்
நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால்
ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது
மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம்
கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது
தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு
மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம்
பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே
மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை
எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச்
சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று
ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார்
.
விளக்கம்
-----------------
மகாவிஷ்ணுவின் நீண்ட உரையால் மன வாட்டமடைந்த சிவபெருமான், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் சொல்லுகிறார்.. இந்த உலகத்திற்கு உயர்வான பொருளே, என் மாதவமே, இப்படியே நீர் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த உலகத்தை நான் எப்படி ஆட்சி புரிய முடியும்.
.
என்னுடைய மைத்துனரே நீர் சுவரென்ளால் நான் அதில் வரையப்பட்டுள்ள சித்திரமல்லவா? நீர்த்தேக்கமல்லவா தாங்கள். நாங்கள் அதிலிருந்து பிரிகின்ற கால்வாய் தானே? மாயவனாகிய நீர் எங்களுக்கெல்லாம் மலையல்லவா? மூவருக்கும் நடுவரான மைத்துனரே எங்களை கட்டிக்காக்கும் கோட்டைச் சுவரே நீர் தானே.
.
கிளைகளான எங்களையெல்லாம் தாங்கி நிற்கும் பெரிய விருட்சமே, செப்பல்லவா நீர். நாங்கள் சிமிழ் கூடு தானே? தாங்களே இப்படித் தளர்ச்சியடைந்து ஒதுங்கிக் கொள்வதுபோல் சொன்னால் வேறு யார் எங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். கிளைகளைத் தாங்கி நிற்கும் மூடு இப்படி அசைந்தால் கிளைகளாகிய எங்களுடைய கதி என்னவாகும். உடல் நிலைகுலையும்போது உயிர் நிலைகுலையாமல் இருக்குமா?
.
தேவர்கள், முனிவர்கள், சாஸ்திரிகள் முதலியோரின் சிறுமதிக் கிணங்கி மூவரில் ஒருவராகிய உம்மைச் சிறிது கூட நினைக்காமல் கலியனைப் படைத்தது பற்றிய குற்றங் குறைகளையெல்லாம் என்னுடைய மைத்துனராகிய தாங்கள் பொறுத்தருள வேண்டும். இன்னும் தாங்கள் மறுத்துக் கூறினால் அதற்குமேல் வலியுறுத்த எனக்கும் மார்க்கமில்லை. ஆகவே, எல்லாக் குற்றங்களையும் பொறுத்து நீர் நிச்சயித்தபடியே உம்முடைய ஒரு சொல்லை உலகிற்கு உத்தரவாக்கி அரசாளுங்கள் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
.
விளக்கம்
=========
சிவபெருமானே! எனக்குத் தாங்கள் அலைச்சல் ஏற்படுத்துவது ஒருபுறமிருந்தாலும், இப்போது எடைத்திருக்கிறீரே மாய்மாலக் கலி அதை எதிர்த்துப் போரிட்டு செல்ல வல்லவர் யார்? சொல்லும் பார்க்கலாம்.
.
கலி என்கிற வார்த்தையைக் கேட்டாலே உடலெல்லாம் நடுங்கி சடைந்து இருண்டுவிடுகிறது. உண்மையைத் தான் பேச வேண்டும் என்று மக்கள் பிடிவாதமாக இருந்தாலும், தாங்கள் படைத்திருக்கும் கபடமான கலிமாய்கை அவர்களைப் பொய் பேசத் துண்டுவதோடு பொய்யிலேயே மக்களெல்லாம் ஐக்கியமாகிவிடுவார்களே.
.
.
அகிலம்
=======
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம்
ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு
நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே
என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று
வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண்
நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு
வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு
தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான்
மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண்
பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான்
அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
இந்தக் கலியை வாள் அம்பு போன்ற எந்தவித ஆயுதத்தாலும் அழித்துப் பாழாக்கிவிட முடியாது. உலகிலுள்ள அத்தனை மனிதர்களின் சிந்தையிலும் கபடமென உறைந்து, உருவமே இல்லாமல் உலகத்தின் அமைதியைக் கெடுக்கும் மாயக் கலியை மாய்ப்பதற்கு எவ்வித ஆயுதத்தாலும் முடியாது.
.
இந்தச் சதிகாரக் கலிக்கு ஏதேனும் ஒரு உடலைக் கொடுத்துப் பிறவிசெய்திருந்தால் என் சிந்தனைக்கு இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது. அத்தனை வலிமை வாய்ந்த கபடமான கலி மாய்கைக்குள் என் மக்களெல்லாம் அகப்பட்டு கொண்டார்களே. கயமையான அந்தக் கலிக்குள் அகப்பட்ட மக்கள் அதிலிருந்து கடைத்தேறுவது எக்காலமோ தெரியவில்லையே.
.
துக்கமான அந்த மாய்மாலக் கலி மக்களை தொற்றிக் கொள்ளுமே, அந்த வீணான துன்பத்திலிருந்து மக்கள் விழித்தெழுவது ஏலாத காரியமாயிற்றே. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் நான் அழித்த அரக்கர்களை நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலியின் முன்னால் அந்த அரக்கர்களெல்லாம் எனக்குத் தூசுபோல் தெரிகிறது.
.
சிவபெருமானே, இந்தக் கலியை என்ன உபாயத்தால் அழிப்பது என்று யூகிப்பதிலே என்மனம் பலவாறு குழப்பமடைகிறது. நாடு, நகரம், தேசம் உலகம் எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இனி எல்லாமே உங்கள் பாடுதான். எனக்கு இங்கிருக்க ஒத்துவராது. நான் தேசாந்திரியாகப் போகப் போகிறேன்.
.
மாய்கையாகிய கலியில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்திருக்கப் போகிறேன். விரும்பியோரெல்லாம் தம் விருப்பபடி விளையாட்டு காட்டும் பெட்டிப் பாம்மைப்போன்று என்னையும் இங்கே அழைத்து அலைய வைத்த காரணத்தைச் சொல்லுங்கள் என்று சிவபெருமானிடம் மிகக் கோபமாகச் கேட்டார் மகாவிஷ்ணு.
.
.
அகிலம்
=======
சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் காரணம் உரைத்தல்.
=======================================================
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று
முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப்
பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே
அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும்
குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து
சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி
என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க
நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக
என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில்
தென்னவனே நீயும் செய்தத் தவமதினால்
எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் கோபமான கேள்விக்கு சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, இப்போது நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளும்.
.
பிரபஞச்சத்தின் ஆரம்ப காலத்திலேயே, அதாவது நாமெல்லாம் உதயமான காலத்திலேயே இத்தகைய துன்பங்களும் துயரங்களும் வரும். அதையெல்லாம் நீர்தான் எதிர்கொண்டு விடிவு காணவேண்டும் என்று நான் உம்மிடம் சொல்லியிருக்கிறேன். மைத்துனரே, அன்று நான் எந்தச் சந்தர்ப்பத்தில் எதனால் அப்படிச் சொன்னேன் என்பது பற்றிய விவரத்தையும் இப்போது சொல்லுகிறேன். கேட்டருளும்.
.
குறோணி என்றொரு கொடும்பாவி அசுரன் தோன்றி, மிக ஆவேசமாக இந்த உலகத்தையும், என்னையும், உமையவள் முதலாக எல்லாரையும் விழுங்க முற்பட்டபோது மாயவராகிய நீர் மட்டும் அதிலிருந்து தப்பித்து, பூலோகத்தில் என்னை நினைத்துத் தவமிருந்தீர்.
.
நீர் செய்த தவத்தின் பயனாக நான் உம்மிடம் எழுந்தருளி உமக்கு என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன்.
.
.
அகிலம்
=======
குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி
கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித்
தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய
வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன்
தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து
மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும்
சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித்
தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை
எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண்
என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன்
.
விளக்கம்
==========
அப்போது நீர் இந்த உலகத்தை விழுங்க நினைக்கும் குறோணியாகி அசுரனை ஆறு கூறாக வெட்டி விட்டெறிய எனக்கு வரம் தாரும் என்று கேட்டீர்.
.
அப்போது, உம்மிடம் அந்தக் குறோணியை ஆறு கூறாக்கி அவனியில் விட்டெறிந்தால் அவனுடைய ஒவ்வொரு நுறுகளும் உமக்கு எதிரியாக இவ்வுலகில் பிறக்கும், அதனால் யுகக் காண்டங்கள் ஏற்படும் என்று சொன்னேன். அதன்படிதான் ஆறு யுகங்களிலும் நீர் அவதரித்து அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்தீர். இவை யாவும் அன்று நான் சொன்ன சொல்படிதான் நடைபெறுகிறதே தவிர என்பேரில் கோபப்படவேண்டாம் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும்
ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்
சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ
.
விளக்கம்
=========
இதற்கு முன்பு நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும் அசுரர்களை விதம் விதமாக, அதிகமான பலமுடையவர்களாய் வேகமாகப் பிறவி செய்துள்ளீர். முதல் முதலாக தாங்கள் பிறவி செய்த குறோணி இந்த உலகத்ததையே விழுங்க முற்பட்டானே அவனை அழித்தவர் என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
இரண்டாவது யுகத்தில் குண்டோமசாலியனாய்ப் பிறவி செய்தீரே அவன் விண்ணுலகை விழுங்குவதற்காக ஆர்ப்பரித்து நின்றானே அவனைக் கொல்வதற்கு என்னைத் தவிர வேறு யாரும் உண்டா?
மூன்றாவது யுகத்தில் மல்லோசிவாகனனைப் பிறவி செய்தீரே அவன் தேவர்களையும் தெய்வமாதர்கள் மூவரையும் தமக்கு வேலை செய்யப் பணித்தபோது, அவர்களிட்ட அபயக் குரலைப் பொறுத்துக் கொள்முடியாமல், என்னை ஓடிப்போய்க் காப்பாற்று என்றீரே, அப்போது அவர்களை சிறைபிடித்த அரக்கர்களை அழித்தது என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
.
.
அகிலம்
========
நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன்
ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே
நாட்ட முடனே நாடும் படையோடு
கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க்
கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத்
தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து
இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி
உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர்
தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால்
மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால்
என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச்
சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே
விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப்
பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ
உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச்
செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே
.
விளக்கம்
=========
நான்காவது யுகத்தில் சூரபத்மனைப் பிறவிசெய்து அவன் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்ததுமல்லாமல் உம்முடைய கயிலையையும் அவனிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக என்னிடம் ஓடிவந்து என்னுடைய இருப்பிடமான கடலில் வந்து தங்கினீர். அப்போது அந்த சூரபத்மன் செய்த கொடுமையைத் தாங்காத தேவர்களின் அபயக்குரல் கேட்டு, அந்தச் சூரனை வதைக்க என்னை அனுப்பி வைத்தீர், அந்த அரக்கனோடு போர் புரிந்து நான்பட்ட இன்னல்களை எடுத்துரைத்தால் தாங்குமா?
.
.
அகிலம்
========
இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து
தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான்
பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து
கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம்
பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து
உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து
அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக்
குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப்
பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே
தேவியும் நானும் தேசமதி லேபிறந்து
அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச்
சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு
.
விளக்கம்
=========
மீண்டும் அவனை அதேயுகத்தில் இரணியனாய் எனக்கு எதிரியாய்ப் பிறவி செய்தீர். அவனை அவனுக்கே மகனாகத் தோன்றி அவனை அழித்தேன்.
.
ஐந்தாம் யுகத்தில் அவனை இராவணனாகப் பிறவி செய்தீர். அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தீர். வரமா அது? அல்ல உம்முடைய அருள் சக்தி அனைத்தையும் இராவணனுக்குக் கொடுத்துவிட்டீர். அதுமட்டுமல்லாமல் உம்முடைய இருப்பிடமான கயிலை மலையையும் அவனுக்குத் தாரைவார்த்துவிட்டீர்.
.
அப்பெரும் வலிமையினால் அவன் மூன்று லோகங்களையும் அடக்கி ஆண்டு அராஜகம் பலபுரிந்தான். அவனை நானும், திருமகளும் அவதாரம்புரிந்து அழித்தோம். உம்முடைய வலிமையாகிய சக்தியை மீட்டுத் தந்தோம்.
.
.
அகிலம்
========
சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு
சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
.
விளக்கம்
=========
ஆறாவது யுகத்தில் அவனைத் துரியோதனனாகப் படைத்தீர். அவனனை நான் எப்படிக் கொன்றேன் என்பதை இங்கே எடுத்துச் சொல்ல இயலுமா? அந்த யுகத்தில் கம்சன் என்று ஒரு கயவனைப் பிறவி செய்து வைத்தீரே… அடடா அந்த அரக்கனிடம் அடியேன் பட்ட அவலங்களை எடுத்தியம்ப எவராலும் ஏலாது. இதையெல்லாம் நான் நினைத்து பார்க்கும்போது சிவபெருமானே உமக்குச் சூடு சொரணை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவேதான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு எனக்கு அவ்வப்போது அலைச்சலை உண்டாக்குகிறீர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய
மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச்
சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல்
வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து
இத்தனை நாளும் யானும்மைக் காணாமல்
புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன்
மாரி காணாத வாய்த்த பயிர்போலும்
ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன்
இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித்
துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன்
என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும்
சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார்
இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே
துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு, சிவலோகமாகிய கயிலாசத்திற்கு வந்து சேர்ந்த உடன் அங்கே சூழ்ந்திருந்த காரிருள் அகன்றது. சிவபெருமானோ மகாவிஷ்ணுவைக் கண்டதும் தம் குழந்தையைக் காணாமல் தவித்த தாய் அந்தக் குழந்தையைக் கண்டதும் அன்புப் பெருக்கால் அள்ளி அணைப்பதைப் போல் மகாவிஷ்ணுவைத் தம் மார்போடு அணைத்துக் கொண்டார்.
.
பின்பு மாயவா, இத்தனை நாளும் நான் உம்மைக் காணாமல் பெற்றவளைப் பிரிந்து வாடும் பிள்ளையைப் போல் ஆகிவிட்டேன். மழையைக் காணாத பயிரைப் போல் வதங்கிவிட்டேன். ஏரியைக் காணாத நீரைப் போன்று நிலை குலைந்து விட்டேன். தன்னுடைய இனத்தைப் பிரிந்து தனிமையாகிவிட்ட மானைப் போன்று உம்மைப் பிரிந்து நான் வாடுகிறேன். உம்மைத் தேடித் தேடி தக்க துணையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மகாவிஷ்ணுவை வாரி அணைத்துக் கொண்ட சிவபெருமான், தொடர்ந்து தம் துயரத்தை வெளிப்படுத்துகிறார்.
.
மைத்துனரே இணை பிரியாத புறாவைப் போன்று நாம் இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தோமே… உமது துணையாகிய என்னை மறந்துவிட்டு நீர் வெகுதூரம் வெல்வதற்குக் காரணமென்ன?
.
.
அகிலம்
=======
என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல்
வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன்
துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக்
கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே
உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே
மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல்
பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே
சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ
இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல்
மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன
கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான்
அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான்
நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே
தானீ தமான சர்வபர நாரணரே
இந்த விதமாய் இகபர விதத்தோடும்
உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ
.
விளக்கம்
=========
நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் உமயவளைக் கூட நான் பார்க்கவில்லை. ஒன்றை ஒன்று பிரியாத அன்றில் பறவை, அதில் ஒன்றை இழந்து தவிப்பதுபோல், கணவனை இழந்த மனைவியைப் போல் இத்தனை நாளும் கலக்கமுடன் காத்திருந்தேன்.
.
உயிர்த் தோழனைப்போல் உன்னிடம் உறவு கொண்ட நாராணரே, நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் என்னுடைய மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நான் நித்திரையில் ஆழந்து நூறு வருடமாகி விட்டது.
.
எனக்கும் பிரம்மதேவருக்கும் மத்தியில் நடுநாயகமாய் இருந்து சித்தமாய் செயல்படுகின்றவரே நீர் என்னை விட்டுப் பிரிவதற்குக் காரணந்தான் என்ன? கயிலாசத்திற்கும் எனக்கும் ஏன் பதினான்கு லோகங்களையும் ஆளுகின்ற மந்திரியே, நீர் இல்லாமல் அச்செயலை எவரால் செய்ய இயலும். இகபர தவஞ் செய்தல்லவா நான் உம்மை அடைந்தேன்.
.
.
அகிலம்
=======
அப்படியே நீரும் ஆதிநா ராயணராய்
முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே
கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும்
ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும்
கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர்
மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும்
வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும்
நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும்
இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக்
கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல்
சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம்
எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும்
வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச்
செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு
மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது
எல்லா முமது இச்சையது போல்நடத்தும்
சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று
மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப்
பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை
.
விளக்கம்
=========
என்னுடைய இகபர தவத்தின்படியே ஆதி நாராயணராய் தோன்றி வந்த மாயவனே, கயிலை வாசிகளான தேவாதிகளும், மகாலட்சுமியும், வேத விற்பனர்களும், உற்ற ரிஷிபுங்கவர்களும், கின்னரர்களும், கிம்புருடர்களும், கேதாரர்களும், மன்னர்களும், மாமுனிவர்களும், நான்கு வேதங்களும், சாஸ்திரங்களும், பிரம்மாவும், நந்தியும் விதவிதமான பல சித்தர்களும், இப்படி மேலோகத்திலுள்ள அனைவருடைய ஆலோசனைகளையும் கேட்டு என்னுடைய காலில் நானே கல்லை இழுத்துப் போட்டதுபோல் கலியைப் படைத்துவிட்டு அதனால் ஆன அனைத்துத் துன்பங்களையும் அணுபவித்துவிட்டேன்.
.
வல்லவனே உம்முடைய ஆலோசனையைக் கேளாமல் கலியனைப் பிறவி செய்ததால் அதைப்பற்றி உம்மிடம் சொல்லவே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இதனால் சத்தியத்தையே நித்தியமாகக் கொண்ட தாங்கள் என்மீது சினங்கொள்ள வேண்டாம்.
.
இனிமேல் நடப்பவை யாவும் உம்முடைய விருப்ப்படியே நடத்தும், இந்த உலகத்தை உம்முடைய சொல் ஒன்றுக்குள்ளாக்கி தன்னிகரில்லாத் தர்மத் திருமுடி சூட்டி ஆட்சிபுரியும் என்று மகாவிஷ்ணுவின் மனம் மகிழும்படியாக பாலினுள்ளிருக்கும் மோர்போன்று மகாவிஷ்ணுவின் மனதிற்குள் உறைந்த சிவபெருமான் கூறினார்.
.
.
அகிலம்
=======
அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார்
எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை
நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய
ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள்
முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால்
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை
உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப்
பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண்
யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது
தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி
இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு
மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை
சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில்
சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு
எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு
வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே
அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும்
மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில்
இனிதிருக்கும் போது என்னை நினையாமல்
மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
அதைக் கேட்ட மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்துச் சொல்லுகிறார் மைத்துனரே, எப்போதும் உமக்கு இதே வழக்கமாகிவிட்டது. நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரமெடுத்து உம்மால் உருவாக்கப்படுகின்ற அரக்கர்களை ஒரு சாதாரண வேடனைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேனே அதைப் பற்றி நீங்கள் என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா?
.
பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் உம்மால் உருவாக்கப்பட்ட குறோணி, பிறகு துரியோதனனாகப் பிறந்து அவன் சாகும் வரையில் நிகழ்ந்த ஆறு யுகத்திலும் அந்தக் குறோணியின் உயிரைக் கொல்வதற்கு நான் பட்ட பாடென்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
.
நான்பட்ட அந்த துன்பங்களை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது. எனவேதான் இத்தனை யுகங்களிலும் அனுபவித்த வேதனைகள் போதுமென்றெண்ணி, இனிமேல் எந்த பகையும் இல்லாமல் இருப்பதற்காக தேவலோகத்தவர்களில் ஏழுபேரைத் தேர்ந்தெடுத்து, அயோக அமிர்த கங்கையருகில் நான் அனலாகி நின்று, ஏழு தேவமாதர்கள் மூலமாக ஏழு பிள்ளைகளை என் மகவாய்ப் பெற்றெடுத்து, நாம் எல்லாரும் ஒருமித்திருந்து உற்ற பெயரிட்டு, வல்லோராய் வாழுங்கள் என்று வரங்கொடுத்து வைத்துவிட்டு, இனிமேல் நமக்கு தொல்லைகளே இல்லை என்று நான் ஸ்ரீரங்க மாபதியில் களைப்பாறிக் கொண்டிருக்கும் போது, என்னை எள்ளளவும் எண்ணிப் பார்க்காமல் அந்த கபடமான கலிநீசனைப் பூமியிலே ஏன் படைத்தீர்? என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚











