
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்
.
விளக்கம்
=========
பிறகு திருமால் குருவாகிய ஈசரிடம் பதில் கூறலானார். என்னுடைய ஈசரே, என் முதற்பொருளே, நாம் இங்கே வந்த முக்கியமான காரியங்கள் என்ன என்று எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார்.
இதைக் கேட்ட ஈசரும், நாரணனே, உனது கலியழிக்கும் காரியத்தைச் செயல்படுத்து என்று அனுமதி அளித்தார்.
.
உடனே கட்டுக்கடங்கி இருந்த அக்கடற்கரையில் வந்திருந்த எல்லாரும் திருச்செந்தூரின் இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே உள்ள திறமை மிக்கோர் எல்லாரும் அங்கு வந்து குழுமினர்.
.
.
அகிலம்
========
சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்
அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்
.
விளக்கம்
=========
இவ்வாறாக அங்கே சிலகாலம் அமர்ந்து இருக்கின்ற சமயத்தில், திருமால் தமக்கு மகனாக நியமிக்கப்பட்ட பொன்கூட்டுச் சடலத்தின் பெருமையைப் பற்றி அன்பர்களாகிய நீங்கள் மகிழ்வுறும்படி இனிக் கூறப் போகின்றோம் கேட்பீர்களாக.
.
.
அகிலம்
========
சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்
நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு
.
விளக்கம்
=========
அழகு பொருநத்திய நல்ல தெச்சணாபூமியில் உயர்வு பொருந்திய நன்மையான தாமரை ஊர் என்னுமிடம் உள்ளது. அப்பூமி தவசு புரிய ஏற்ற இடமாகும். இங்குச் சிவசிவா என்னும் மந்திரச்சொல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஐவர் பஞ்சபாண்டவரில் வில்வீரத்தில் சிறந்தவனான அருச்சுனன், சிவனிடம் சிறந்த பாசுபத ஆயுதம் பெறுவதற்குச் சிவனை மனதில் நினைத்துத் தவம் புரிந்து, தவத்தில் வெற்றி கண்டு சிவனையும் சத்தியையும் கண்டு, அவர்களிடமிருந்து பாசுபதத்தைப் பெற்றுக் கொண்டது பெருமை வாய்ந்த இவ்வூரில் தான். இவ்வூரில் தான் முன்பு அதியரசன் கடடினமான தவம் புரிந்து ஈசனுடைய மனைவியான பார்வதியை மகளாகப் பெற்றெடுத்தான். அந்தத் தெச்சணாபூமிதான் தாமரையூர் என்றும், செவ்வூர் என்றும் மணவைப்பதி என்றும் கூறப்படுகிறது. வானலோகத்தில் வாழுகின்ற சிறந்த தெய்வேந்திரனும் சிவனைக் கண்டு தன் துன்பம் தீரத் தவம் இருந்ததும் இப்பூமிதான்.
.
.
அகிலம்
========
பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய
அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து
.
விளக்கம்
=========
முன்னர்ப் பஞ்சபாண்டவர்களுக்குக் கண்ணன் உதவி செய்வதற்குச் செய்தியனுப்பி விட்டு அமர்ந்திருந்ததும் இந்தப் பூமியே. சாம்பசிவனை வழிபடும் சான்றோர் குலம் தழைத்து வளர்ச்சியுற்றதும் இப்பூமியிலே ஆகும். தாம்பிரபரணி கிளை ஆறுகள் அதிகமாகத் தழைத்து இருந்தது இப்பூமியில்தான். பராசர முனி மிகப்பெரிய தவம் செய்து சக்தி பொருந்திய வியாகரரைப் பெற்றெடுத்ததும் இப்பூமியில்தான். தவம் புரிய வேண்டுமென்று நினைத்தவர்கள் தாமரை ஊருக்கு வந்து பாவம் நீங்கப் பெற்று வாழ்வதாக உயர்ந்தோர் உரைப்பர். இவ்வாறு தவசு புரிவதற்குச் சிறப்பான அழகு வாய்ங்நத ஊர் இதுவாகும். சகலவிதச் செழிப்புகள் உள்ளதும், ஞானப்பால் அருந்திய மக்கள் வாழுகின்றதும் இவ்வூராகும். இத்தகைய சிறப்பான இந்த ஊரில் ஆதி சிவனின் அருளால் செம்மை பொருந்திய மகாவிஷ்ணு அவதாரம் எடுக்க உருவாக்கிய பொன் கூட்டுச் சடலம் பிறந்தது.
.
.
அகிலம்
========
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்
.
விளக்கம்
=========
அச்சடலம் வளர்ந்து பெருமைக்குரிய புகழுடன் வாழ்ந்து வந்தது. அப்பிள்ளை தமக்காக முன் அமைந்த பெண்ணை மறந்திடாதவாறு ஏற்று, அவளோடு உறவாடி பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவரது இல்லத்தில் திருமாலை மறவா வண்ணம் பூஜை செய்து, துதித்துத் தமது ஆத்மா விளங்கும்படியாக ஒரு பீடமிட்டு மிகவும் கட்டுப்பாடாக ஒரே மனதுடன் கலியன் தேசத்தில் வளர்ந்து வந்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே
.
விளக்கம்
=========
திருமால் ஈசரோடும் மடக்கொடி உமையாளோடும், வேதம் ஓதும் முனிவர்களோடும், தேவர்களோடும், மாயோனின் ஆடல் கலையைச் செய்து வேதங்களைத் தெளிவாக அறிந்த முனிவர்களோடும், இன்னும் பல ரிஷிகளோடும் திருச்செந்தூர்க் கடற்கரையை வந்தடையவும் எல்லாரும் அக்கடலைக் கண்டு மகிழ்ச்சி எய்தினர்.
.
.
அகிலம்
========
விருத்தம்
=========
வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்
.
விளக்கம்
=========
கடலோரம் வந்த எல்லாரும் அங்கே கூடி ஒன்றாக நின்றனர். அப்போது, சந்தன மணத்தையுடைய திருச்செந்தூக் கடலின் கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு அழகான முனிவர்கள் திருமாலின் முன்னால் வந்தனர். அவர்கள் திருமாலின் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி, எங்களுடைய இறைவனே, அருள் புரிவீராக என்று கூறித் துதித்துச் சொல்லலானார்கள்.
.
.
அகிலம்
========
கலைமுனி ஞானமுனி வரவு
ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
.
விளக்கம்
=========
ஆதியே, எங்கள் அய்யா நாராயணரே, சோதியே எங்களுடைய தவமானது சீக்கிரமாக உயர்வு அடைந்து உம் அருளைக் கண்டு கொண்டோம். இதயத் தாமரையில் அமர்ந்திருக்கும் மூலப்பொருளே, நீர் ஏற்கெனவே கூறியபடி எங்களைக் கருணையுடன் பார்த்து வரம் தர வேண்டும் அய்யா, எனக் கூறி இரு முனிவர்களும் தொழுது நின்றனர். அப்பொழுது இவ்வுலகை அளந்த திருமால் பதிலுரைப்பதை அன்பர்களே, நீங்கள் கேட்பீராக.
.
.
அகிலம்
========
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம்
இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து
சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர்
இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப்
பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று
நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி
பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும்
உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ
கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார்
.
விளக்கம்
=========
மாமுனிவர்களே, நீங்கள் இங்கு நின்று தவம் செய்கின்ற காரணங்கள் என்ன? சொல்லுவீர்களாக என்று தேன் சிந்தும் பூவைக் கையில் வைத்திருக்கும் சந்நியாசி ஆகிய திருமால் கூறினார்.
.
அப்பொழுது மாமுனிவர்கள், திருமாலை நோக்கி, சுவாமி முன்பு ஒரு சமயம் நாங்கள் மும்மூர்த்திக்கும் முதல் மூர்த்தியாகிய ஈசரின் சொல் மாறாவண்ணம் மேலோகத்தை விட்டு உமது கருணைச் செயலால் இப்பூவுலகில் இறங்கி பொங்கும் துவாரகாபதி கடற்கரையை அணுகி, ஈசர் சொன்ன கட்டளையைக் கடலிடம் கூறி நீதி நெறியாய் நிற்க வேண்டும் என்று அதற்குச் சட்ட விதிகளை இட்டுக் கொடுத்தோம்.
.
ஈசர் கட்டளையை நிறைவேற்றி விட்டு, மீண்டும் கயிலையை நோக்கி நாங்கள் திரும்புவதற்குப் பார்க்கின்ற சமயத்தில் வைகுண்ட லோகத்திலிருந்து வந்து கொண்டிருந்த கலியனைக் கண்டு பயமுற்று, கயிலை உலகம் செல்லுவதற்கு எந்த வழியும் தெரியாமல் பூலோகத்திற்கே சென்று கண் கவிழ்ந்தவண்ணம் தவம் இருந்தோம்.
.
அப்பொழுது, திருமாலே நீர் அங்கு வந்து எங்களை நோக்கி, நீங்கள் போய் எனது திருச்செந்தூர்க் கடற்கரையில் சென்று, சூரியனைப் போன்ற பிரகாசமுள்ள பரிசுத்தமான வைகுண்டராசர் இக்கடலில் பிறப்பெடுத்து எங்களை அழைத்து அவரது பக்கத்தில் வைத்து, உயர்ந்த வைகுண்டபதவி தர வேண்டுமென்று ஒரு நினைவாகக் கடுந்தவம் செய்யுங்கள் என்று சொன்னீர்.
.
எல்லா உயிரினங்களையும் வளர்க்கும் சக்தி படைத்தவரே, அய்யாவே, ஈசரின் மைத்துனரே, கண்ணரே, நீர் ஏற்கெனவே உரைத்த மொழிகளைப் பற்றி உமது உள்ளம் அறியாதோ? என்று கூறித் தொழுதனர்.
.
.
அகிலம்
========
அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து
செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர்
வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து
அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே
.
விளக்கம்
=========
அப்பொழுது திருமால் மனம் மகிழ்ந்து, செப்புச் சிலையைப் போன்று அழகு பொருந்த சிரித்து, அவர்களிடம் பிள்ளைகளே, மிகவும் நல்லது.. நான் விரும்பிய தவத்தினைச் சிறப்பாகச் செய்தீர்கள். நீங்கள் வல்லமை உள்ளவர்களே. நீங்கள் எமது அருகில் வந்து நில்லுங்கள் என்று கூறி மகிழ்ந்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
.
விளக்கம்
=========
கந்தன், ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று, அய்யா, பெரியோர்களே, வாருங்கள். என் மண்டபத்தில் உள்ள சிங்காசனங்களில் அமருங்கள். எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் பாருங்கள். நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன.
.
.
அகிலம்
========
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
.
விளக்கம்
=========
பாட்டினைப் பாடுவதற்கும் படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும், நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்கள் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவகைப் பாலும் பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்ய நிறைந்த பொருள்களும் உள்ளன.
.
.
அகிலம்
========
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
.
விளக்கம்
=========
சுவைக்கத் தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும், கோவிலில் போகிமாரும் உள்ளனர்.
.
குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும் சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ளி கொள்ள பால்கடலும், ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொன்சவடி ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும், வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர்.
.
இப்படியாக எனக்குப் பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று முருகன் அழைத்தான்.
.
.
அகிலம்
========
கந்தன் அழைப்பை மறுத்துத் திருமால் திருச்செதூர் கடற்கரை ஏகல்
======================================================================
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
.
விளக்கம்
=========
திருமால் தமது கீழ் உதடு சிறிதுகூட அசையாமல் சிரிப்பினை மிகவும் கடினத்துடன் உள்ளடக்கி, முருகனை நோக்கி மறுத்து உரைக்கலானார். முருகா, மருமகனே, நீ நலமாய் இருப்பது மிகவும் நன்று. பொல்லாத செயல்கள் செய்யாமல் நீ இங்கு ஆட்சி புரிவதே போதுமானது ஆகும் என்று அய்யா திருமால் கூறினார்.
.
.
அகிலம்
========
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை
.
விளக்கம்
=========
பிறகு ஈசரை நோக்கி, ஈசரே, முன்னர் நாம் அனுப்பி திருவாசகச் சொல் பூமிக்கு முழுமையாக வந்தடைந்துவிட்டதா? மிகுந்த ஆணவம் உள்ளவர்களுக்குச் செல்வச் செழிப்பினால் உண்டாகும் மதமும் இப்படித்தான் இருக்கும். ஆனால், பொருளில்லா ஏழைகளுக்கு ஆறுமுகன் சொல்லும் ஆணவச் சொல்லின் மேல் பற்று இருக்கும் என்று கூறி இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர். பிறகு, கந்தனை நோக்கி அவனுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக் கூறிவிட்டு எல்லாரும் நடந்து திருச்செந்தூர்க் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
.
விளக்கம்
=========
திருமால் கயிலை மலையைக் கடந்து, திருச்செந்தூர்க் கடலில் இலட்சுமிதேவியைத் தேடிக் காண வேண்டி, நல்ல ஈசர், சக்திதேவி ஆகியவர்களோடு கூடி, அமைதியாகக் கொலு ஆரவாரத்தோடு விரைவாக நடந்தார்.
.
இப்படித் திருமால் நடந்து வருகின்றபோது அந்தணர்கள் எல்லாரும் நான்கு திசைகளிலிருந்தும் அவரை வாழ்த்திப் போற்றி நின்றனர். திருமால் திருச்செந்தூர்க் கடற்கரை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
.
.
அகிலம்
========
கந்தன் எதிர் கொண்டு அழைத்தல்.
===================================
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி
.
விளக்கம்
=========
இவ்வாறு திருச்செந்தூர் நோக்கி வழி நடந்து வந்த மாயவரையும், ஈசுரரையும், மகிழ்வோடு வரும் சக்திதேவியையும், திருச்செந்தூர்க் கடல் ஓரத்திலிருந்து ஒரு காதம் வழிக்கு முன்னால் அவர்கள் வரும்போதே கந்தன் கண்டு கொண்டான். தன்னுடைய அங்கங்கள் பதறக் கலங்கினான்.
.
.
அகிலம்
========
ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி
வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
.
விளக்கம்
=========
ஆறுமுகன் தனது விரைவான மயில் வாகனத்தில் ஏறாமலும், தேவர்கள் தமது வெற்றியையுடைய இரதத்தில் ஏறாமலும் மனம் கலங்கினர். இவர்களைக் கண்ட செந்தூர் இறைவன் ஆறுமுகன் பதறி என்ன நடக்கப்போகிறேதோ என மனம் குலைந்து மயக்கமுற்று அவர்களை நோக்கி வந்தான்.
.
தன் மாமனாகிய திருமாலையும், தனது மாதா பிதாவையும், எல்லாரும் மகிழும்படியாகத் தாழ்மையுடன் வணங்கினான்.
.
.
அகிலம்
========
இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
.
விளக்கம்
=========
இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேனாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பார்த்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது என்று பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும், கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
அனைவரும் திருச்செந்தூர் புறப்படல்.
======================================
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து
கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்
தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
.
விளக்கம்
==========
பிறகு வியாகரரை அனுப்பிய திருமால், ஈசரை மார்புறத் தழுவி அழைத்துக் கொண்டு, கேதாரக் கோவிலை விட்டு அகன்று, கயிலையின் மூலப்பகுதிக்கு வந்து அமர்ந்து சங்கக் கூட்டத்தை நோக்கிக் கூறலுற்றார்.
.
செந்தூர்க் கடலில் நான் சென்று, அங்கே பள்ளி கொண்டிருந்து, என் விந்து வழிக் குல சான்றோர் வழியில் பிறவி செய்து வித்தைகளுக்குத் தலைவனை பெற்றெடுத்து, இத்தேசத்தின் பாவ புண்ணிய பரிசோதனை செய்த் தெச்சணாபூமிக்கு அனுப்பிவிட்டு மிகுந்த இன்பமுடன் நான் இங்கே திரும்பி வருவேன் என்றுரைத்தார்.
.
.
அகிலம்
========
அப்போதீ சுவரரும் ஆனசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
.
விளக்கம்
==========
இதைக் கேட்ட ஈசரும் அங்குக் கூடியிருந்த ஏனைய சங்கத்தோரும் திருமாலை நோக்கி, இப்பொழுதே நாங்களும் உம்மோடு வருவோம் என்று உரைத்தனர். உடனே, திருமால், நான் இப்பொழுது சொல்லுகின்ற மறை பொருள் உபதேசத்தை நீங்கள் அறிய முடியாது. சம்பூரண தேவனும், இலட்சுமியும், தேவகன்னிகளும், மூவரும்கூட இதன் உண்மை இரகசியத்தை அறிய முடியாது. நான் நடத்தும் செயல்களை நடந்து முடிந்த பிறகே அறிந்து கொளவர். நடந்து முடியும் முன்னால் எவரும் அறிய முடியாத மாயப்பொருள் அடங்கிய உயர்வான உபதேசமொழி இதுவாகும் அல்லவா? எனவே, நீங்கள் எல்லாரும் என்னுடன் வந்தால் அது சரியன்று. ஆனால், நீங்கள் வரக் கூடாது என்று நான் கூறினால் நீங்கள் வருந்துவீர்களே? என்று திருமால் கூறினார்.
.
.
அகிலம்
========
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடி
.
.
விளக்கம்
==========
இதைக்கேட்ட அவர்கள், திருமாலை நோக்கி, நாங்கள் உமது உபதேச இரகசியம் முதலிய எதையும் அறிய முடியாது. இருப்பினும், நாங்கள் உம்மோடு வருகின்றோம் என்றனர். உடனே, திருமால் தமக்குரிய இலட்சுமியின் நினைவு மேலிடத் திருச்செந்தூர் நோக்கி நடக்கலானார். அவரோடு ஈசரும், சக்திதேவியும், தேவர் முதலியோரும், மாமுனிவர்களும், கின்னரரும், வானலோகக் கங்கக் கூட்டங்களும் சகல கலைவாணர்களும், மங்களக்காரர்களும் சென்றனர். மேலும் அழகு பொருந்திய அரம்பையர்களும், வேதம் கூறும் பெண்டிர்களும். அலை அலையாய்க் கன்னிகளும், சக்திதேவிக்குப் பணிவிடைகள் செய்து சூழ்ந்து வர ஏழு வகை வாத்தியங்களை எமலோகத்தில் உள்ளவர்கள் வாசித்து வர, அவர்களை வணங்குனின்ற சிலர், தொம் தொம் எனச் சத்தம் உருவாக்கி ஆடி வர எல்லாரும் திருமாலைப் பின் தொடர்ந்தனர்.
.
.
அகிலம்
========
கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
.
விளக்கம்
==========
திருமால், திருச்செந்தூர்க் கடலில் ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அக்குழந்தையைக் கன்னியர் நடனமாடும் தெச்சணாபூமியில் பாவ புண்ணிய கணக்கெடுக்க நகர்சோதனைக்கு அனுப்பி கலியை அழித்து உலக மயக்கத்தால் ஏற்படும் அச்சம் முதலியவற்றையும் அழித்து, நிரந்தரத் தன்மையுள்ள தருமபதியில் கன்னி மக்களாகிய சான்றோர் ஆட்சி புரிவதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தி ஆகிய அவ்வைகுண்ட நாதன் வரப் போகின்றார் பேறு பெற்றவர்கள் அவரைக் கண்டு உயர்வான தருமபூமியை அறிவர் என்று சில வாத்தியங்கள் இசைந்து இசைந்து ஊதி வர, பசுக் கூட்டங்களை மேய்த்த திருமால் கயிலை மலையைக் கடக்கலானார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
திருமால் வியாகரரை அழைத்துக் கேட்டல்.
==============================================
சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே
பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
.
விளக்கம்
==========
இவ்வாறு ஈசர் கூறவும் திருமால் மகிழ்ந்து வியாகரரை ஆள் அனுப்பி அழைத்தார். அதைக் கேள்வியுற்ற வியாகர மாமுனியும் பிறவிப் பெருங்கடலிலிருந்து பிழைத்தவர் போல மிகவிரைவாக ஓடி வந்து மூவரையும் வணங்கி, சுவாமி தாங்கள் என்னை அழைக்கக் காரணம் என்ன? என விண்ணப்பித்தார்.
.
.
அகிலம்
========
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
.
விளக்கம்
==========
திருமால் வியாகரரிடம், வியாகரரே, உலகம் தோன்றியது முதல் இதுவரை இவ்வுலக யுகங்களின் முடிவுகளும் சொல்லி இனிப் பிறக்கப் போகின்றவற்றையும் தெளிவாகத் தவறின்றிச் சொல்லுவீராக என்றார்.
அப்போது வியாகரர், ஆதியின் அருளால் நான் எல்லாவற்றையும் சொல்லுகிறேன் என்று வணங்கி விட்டுச் சொல்லலுற்றார்.
.
.
அகிலம்
========
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
====================================
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
.
விளக்கம்
==========
இப்பூவுலகில் குறோணி முதல் எந்தவித நல்ல குணமும் இல்லாத கெட்ட கலிநீசன்வரை ஏழு யுகங்களின் தோற்றத்தையும் கூறி, ஆறு யுகங்களின் அழிவு பற்றித் தெளிவாக எடுத்துக் கூறி, உயர்வான சத்திய வழியோடு தருமபூமி தோன்றப் போவதும் கூறி சாணார் இனத்தினரை வைகுண்டர் நல்ல உயர்வான நிலை கொடுக்க நாடிச் செல்வது பற்றியும் எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
========
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
.
விளக்கம்
==========
குறோணி முதல் நீசன் வரை கீழ்த்தன்மையான ஏழு பிறவிகள் பிறந்து இப்பூவுலகில் ஆறு யுகங்களிலும் தன் செயலினாலே அழிந்து மாண்ட நிலைகளையும் தெளிவுடன் நல்ல இயல்பு கொண்ட நாராயணரை நோக்கி தூய்மையான மனதுடைய வியாகரர் மீண்டும் தொடர்ந்து கூறலானார்.
தெச்சணத்தை ஆளும் நல்ல அரசர்கள் இறப்பு உய்தி, தீமையான மக்களின் குறும்பு அதிகமாகப் பெருத்திருக்கும். தெச்சணம் நோக்கிப் பயன் பெற வரும் நசுறாணி அத்துசம் வந்தவுடனே தோல்வியுற்று ஓடிவிடுவான். அதிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து வைகுண்டர் என்னும் ஒருவர் வந்து உலகத்தை அரசாட்சி செய்வார் என்று ஏற்கெனவே பரம்பொருள் கூறியுள்ளார்.
.
.
அகிலம்
========
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
.
விளக்கம்
==========
அதன்படி தருமபூமியில் வைகுண்டர் மூலம் அரசாட்சி புரியும் ஒரே கடவுள் நீவிரே ஆவீர் சுவாமி. அப்போது அத்தருமயுகத்தில் தமது தீய முன் வினைகளை கழித்து அழித்தவர்கள் அங்கே சுகமாக வாழ்ந்து வருவர் என்று முந்தைய ஆகமங்களை ஆய்ந்து ஆதி வியாகரர் பாம்பு மெத்தையில் படுத்துப் பள்ளி கொள்ளும் நாராயணரை நோக்கி எடுத்துக் கூறினார்.
.
.
அகிலம்
========
வியாகரர் மொழிந்ததைக் கயிலையில் பொறித்தல்
====================================================
உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்
என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
கண்டுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
.
விளக்கம்
==========
உடனே, ஈசர் வியாகரரை நோக்கி, வியாகரரே, எந்தக் குறிப்புகளையும் எக்காலமும் கரைத்திட முடியாவண்ணம் அமைந்திருக்கும் கயிலையில் காணும் கல் தூண் மீது எழுதி வைப்பீராக. எக்காலத்திலும் நரைக்காத முடியையுடைய முனிவராகிய நீர் சொல்லிய நாள் குறிப்புகள் முழுவதுமாக எழுதி வைப்பின் எல்லாருக்கும் அது மேலும் உதவி செய்ய வசதியாக அமையும், என்றார்.
.
அதன் வியாகரர் மொழிந்தவை எல்லாம் எழுதப்பட்ட அக்கல் தூணினை அன்றே ஈசர் கயிலை மலையில் நாட்டினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 04.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
திருமால் பூலோகப் பிறவியெடுக்க ஈசருடன் ஆலோசித்தல்
--------------------------------------------------------
நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு
.
விளக்கம்
==========
திருமால் பூலோகம் அனுப்பிய திருவாசகத்தை நாட்டு மக்கள் நன்றாக அறியும்படியாகச் செய்து விட்டுத் திருமால் தமது ஆக்ஞா பகுதியில் நிலை நின்று ஈசரோடு பேசலானார்.
.
.
அகிலம்
========
வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்
சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்
.
விளக்கம்
==========
ஈசரே, எந்த விதமான பேதமும் இல்லாமலும், வஞ்சகத் தன்மை இல்லாமலும், சகலவிதச் சக்தியுடன் பூவுலகம் அறியும்படியாகத் திருவாசகத்தை மொழிந்து எழுதி அனுப்பி வைத்தோம். நம்மேல் எந்தவித ஆணவ அவப்பேரும் உலகில் யாராலும் இனிமேல் கூற முடியாது. எனவே இனி இந்த யுகத்தின் பாரத்தினைத் தீர்ப்பதற்கு அனுமதி தர வேண்டும். நாம் ஏற்கெனவே இலட்சுமியைத் திருச்செந்தூர்க் கடலில் போய் வளர்ந்து வர அனுப்பி வைத்தோம். கிடைத்தவற்றை உண்ணும் காளியைக் கடுமையான சிறையில் அடைத்தோம். என்னுடைய குழந்தையாய் பிறப்புப் பிறக்க வேண்டி பூவுலகில் பொன்கூட்டு சடலத்தோடு குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு இருபத்து நான்கு வயது ஆகிவிட்டது.
.
.
அகிலம்
========
கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு
நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்
.
விளக்கம்
==========
மேலும், அக்குழந்தை கருவுற்று முன்வினைத் தோசங்கள் கழிந்து ஒழிகின்ற தினம் இன்றைய தினம் ஆகும். நாம் அனுப்பிய திருவாசகத்தைப் பூலோக மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களின் துன்பங்கள் மிகவும் கொடியதாகப் பூவுலகில் காட்சி அளிக்கின்றன. அவர்களுக்கு நல்ல புத்தி உருவாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வகையிலும் தப்பிப் பிழைக்க முடியாத நீசனின் மனம் நமது திருவாசகத்தைச் சிறிதளவாவது ஏற்றுக் கொள்ளுமா? ஏற்காது. எனவே, இவற்றை எல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருந்தால் மட்டும்போதாது. பூவுலகில் நம் மக்கள் எல்லாரும் நமது வருகைக்குக் காத்திருந்து வாடுகின்றனர். அந்த நல்லவர்களின் துன்பத்தைத் தீர்த்து நன்மை வாய்ந்த ஒரு சொல்லுக்குள் பக்தர்களைக் கரையேற்ற தோணி ஏறும் வைகுண்டர் தருமயுகத்தை ஆள வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நாள் ஏதாவது உண்டா? வேதங்களில் அதற்குரிய குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா? அதற்குரிய கிரக நிலைகள் என்ன? அவருக்கு வெற்றி வாய்ப்புள்ளதா? இக்கேள்விகளுக்குப் பதிலாக உமது வேத உரையை எடுத்துக் கூறுவீராக என்றார்.
.
இதைக் கேட்ட ஈசர் உள்ளம் மகிழ்ந்து, திருமாலே நீ கூறியபடியுள்ள விளக்கங்களை முறைப்படி கேட்க வேண்டும் என்றால் ஆதி வியாகரரை அழைத்து அவரிடம் கேட்பாயாக என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே
.
விளக்கம்
=========
என்னுடைய சொல்லையும் எழுத்தையும் ஏடாக இணைத்து இந்த உலகத்தில் கவனக் கூர்மையால் கருத்து தெளிந்து மகிழுகின்ற பக்தர்களுக்கு எளிதில் புரிகின்ற வகையில், காரணக் காரியக் குணக் கூறுகளோடு இந்த ஆகமத்தை எழுதி வைத்துள்ளேன்.
.
அதை அந்த பக்தர்கள் எந்த நிலையில் இருந்தாலும், அதனால் அச்சங்கொள்ளாமல் எடுத்துப் படிப்போரும், அதற்கு ஏற்புடைய கருத்துரை கூறுவோரும், இவ்வுலகில் சகல நித்திய சேமங்களோடும், நிலையான புகழோடும் நீடித்து வாழ்ந்து அடுத்து வரவிருக்கின்ற தர்மயுக வாழ்வையும் அடைவார்கள்.
.
.
அகிலம்
========
காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே
.
விளக்கம்
=========
இப்படி, தர்மயுக் காட்சிகளைத் தம் வாழ்வில் ஆன்மிக ஞானத்தின் மூலமாகக் கண்டு, தர்ம நெறிமுறைகளைச் செவ்வனே கடைப்பிடித்து கையாண்டு கருணையே வடிவாக வாழுகின்ற அன்பு மயமான பக்தர்கள், பிறப்பு இறப்பு என்ற துன்பங்களைக் கடந்து பேரானந்தப் பெருநிலையை அடைவர்.
.
எவ்வகையான இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் இயல்பைப் பெற்று, என்றென்றும் ஆத்ம ஞானத்தோடு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவ ஞானத்தால், ஆக்ஞாவில் அதாவது புருவமத்தில் ஞானக்கண் திறக்கப்பெற்று, அதன் மூலம் எப்போதும் பிரபஞ்ச கர்த்தனாகிய பரம்பிரம்மத்தை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
.
நீதிக்கு நிகரான ஞானக் கண்ணைப் பெற்ற அந்தப் புனிதர்கள், கருணையை தம் கரங்கெளெனக் கொண்டுள்ள சிவபெருமானைப் போல் எப்போதும் கவலையற்ற நிலையிலேயே காணப்படுவார்கள்.
.
அவர்கள் எங்கே இருந்தாலும் தாம் இருக்கின்ற இடத்தைச் சிவபெருமானின் இருப்பிடமாகிய கயிலாசமாகவே நினைத்து அதற்கேற்ப தம்மை ஆட்படுத்திக் கொண்டு ஆனந்தமாக வாழ்வார்கள்.
.
.
அகிலம்
========
இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே
.
விளக்கம்
=========
இந்த் திருவாசகச் செய்திகளை இளக்காரமாகப் பேசி ஏளனம் செய்வோர் அகந்தை உடையவராவார். அத்தகு பொல்லாதவர்கள் படப்போகும் பாட்டையும் கற்றுக் கேட்டுக் கொள்ளுங்கள்.
.
இறைவன் படைத்த இறைவனுக்கே சொந்தமான இந்த உலகத்தைக் கவ்விக்கொண்டிருக்கும் கொடுமையான கலி, அவர்களை விட்டு ஒரு நாளும் விலகாது. அதனால் அவர்களின் அறிவுக்கண் குருடாகி ஆணவமல வேட்கையால் தெய்வத்தை நிந்தித்து, சுவாசக் கால்களின் தடுமாற்றத்தினால் உடல் உபாதைகளுக்குள்ளாகி உருக்குலைந்து மடிவார்கள்.
ஆகவே, இத்தகையோர்க்குப் பாவப் பெருக்கு மேலோங்கி பிறவிப் பிணியாகிய உபாதையிலிருந்து விடுதலை பெறாமல், மேலும் மேலும் பூலோகத்தில் பிறந்து பிறந்து இறப்பர். அவர்களுக்கு மனிதப் பிறப்பு என்பது அகன்று, எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் பிறந்து அலைந்து அழிவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இது என்மீது சத்தியம்.
.
.
அகிலம்
========
தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே
.
விளக்கம்
=========
இந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றில் எதுவுமே நழுவிப்போகாது என்பதை வலிமையான என்மீது சத்தியம் செய்து உறுதியளித்துள்ளேன். இந்த ஆகமச் செய்திகள் யாவையும் உலகத்தில் உள்ள எல்லாரும் அறியவேண்டும் என்பதற்காகவே எழுதியுள்ளோம்.
.
இது இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் ஒப்பு உவமை சொல்லமுடியாத அளவில் உயர்நிலை பெற்றர்களாலுங்கூட எழுத முடியாது. அண்ட சராசரத்திற்கும் தந்தையாகிய இறைவன் எழுதிவைத்த அகிலத்திரட்டு அம்மானை இதுவே ஆகும்.
.
.
அகிலம்
========
என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே
.
விளக்கம்
=========
உலக நிகழ்வுகள் யாவையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாகச் சொல்லப்பெற்ற இந்தத் திருவாசகத்தைச் சொல்லின் செல்வியாகிய சரசுபதிதேவி சொல்லச் சொல்ல மகாவிஷ்ணு தம் திருக்கரத்தால் எழுதினார்.
இவ்வண்ணமாக வைகுண்ட லோகத்தில் வைத்து எழுதிய அந்தத் திருவாசகத்தைக் கலியுகத்திற்கு அணுப்பும்போது, ஏதேனும் ஒரு மேன்மை மிகுந்த மறையோனிடம் சென்று இருந்துகொண்டு, அவர் மூலமாக உன்னுள் அடங்கியுள்ள எல்லாவற்றையும் உலகம் அறியும்படி செய்வாயாக என்று அந்தத் திருவாசகத்திற்குப் போதனை செய்து, அதைப் பூலோகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு மற்றும் முதல் பாகம் நிறைவு பெற்றது.
.
தொடரும்... அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம். 998ல்.
.
விளக்கம்
=========
மூன்றாம் தவத்துக்கு வந்தவுடனே, அங்கே மனிதர்களில் ஒருவருக்கொருவர், உள்ளபடியே உள்ள சம்பந்தம் அதாவது ஐக்கியம் பற்றிய குழப்பம் உண்டாகும்.
.
அந்தக் குழப்பத்தில், எல்லாருமே இறைவனின் படைப்பு, அதில் எவ்வித ஏற்றத் தாழ்வும் கூடாது. தீண்டாமை என்ற தீயசெயலை ஒழித்திடல் வேண்டும் என்ற எண்ணம் உடைய முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும், அதற்கு மாற்றுக் கருத்துடைய பிற்போக்குச் சிநதனையாளர்களுக்கும் மோதல் உண்டாகி அதனால் ஒருவர்கொருவர் ஆணவ மல வேட்கையால் அழிந்து போவார்கள்.
.
அப்படி அழிந்து போனவர்கள் போக எஞ்சி இருக்கிறவர்கள் எல்லோரும் புண்ணியவான்களாக இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்னென்ன பாக்கியங்கள் வேண்டுமோ அத்தனை பாக்கியங்களையும் கொடுப்போம். இது எழுதப்பட்டது கொல்லம் ஆண்டு 998ல்.
.
அகிலம்
========
விருத்தம்
==========
பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே
.
விளக்கம்
=========
நல்லொழுக்கமான குண நலன்களோடு வாழுகின்ற புண்ணியவான்களுக்குச் சகல பாக்கியத்தையும் கொடுப்போம். எனவே, அந்தப் பாக்ககியவான்களின் விருப்பங்கள் யாவும், கருணைமிக்க காரியங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும். ஆகையால் அவர்கள் இன்னொரு பிறப்புக்கு இடம் வைக்காதவர்களாகவும் அதாவது, இப்பிறப்பில் எவ்வகைக் கடமைக் கடனும் வைக்காதவர்களாய், மன உளைச்சலோ, அதனால் உடல் உபாதையோ இல்லாமல் வாழ்வார்கள்.
.
இந்தத் திருவாசகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைத் தப்பு இல்லாமல் தெளிவாக உணர்ந்து திடமாக நம்புகின்றவர்கள், வரம் பல பெற்றோர் வாழுமிடமாகிய வைகுண்ட லோகத்திற்கு வந்து மோட்சம் பெற்றுப் பேரின்பப் பெருநிலையை அடைவார்கள்.
.
அகிலம்
========
விருத்தம்
---------------
தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே
.
விளக்கம்
=========
ஒரு நாளில் ஒரு முறையாவது எமது திருவாசகத்தைக் கேட்டீர்களானால், கதிரவனின் நீண்ட கரங்களின் ஒளிப்பிரவேசத்தினால் பனித்துளிகள் காணாமல் போய்விடுகிறதே அதைப் போல, உங்களைச் சூழ்ந்திருக்கும் பாவங்கள் யாவும், உங்களை விட்டுவிலகி விரைவாக ஓடிப்போய்விடும் என்பது எமது சத்திய வாக்காகும்.
.
கனிவாகச் சொல்கின்ற தெய்வத்தின் மெய்யுரையும், அதைத் தம் திருக்கரத்தால் எழுதுகின்ற மகாவிஷ்ணுவின் கிருபையும் ஒருங்கே அமைந்துள்ள இந்த திருவாசகத்தைத் தெளிவாகக் கேட்போரும், அதற்கு உதவியோரும் பிறவித் துன்பத்திலிருந்து மீண்டு நற்பேறு பெறுவர்.
.
அகிலம்
========
வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்
.
விளக்கம்
=========
இந்தத் திருவாசகத்தை வாசித்தவர்களும், வாசிப்பதைக் கேட்டவர்களும், அதனை மனப்பாடம் செய்து அதன் அகப்புறக் கருத்துக்களை ஆராய்ந்து உணர்ந்து கற்றவர்களும், இதனைப் பரம்பொருளின் பங்குவமான அறிவுரை எனக் கண்டுணர்ந்து, அது கூறுகின்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்களும் சித்தாதி சித்துக்களுக்கெல்லாம் பேரரசனாகிய இறைவனின் திருவடியைக் காணுகின்ற பேறும், தேவலோக வாழ்க்கையும் சித்திக்கும். அதுவரை பூவுலகில் சகல ஐஸ்வர்யங்ளோடும் சிறப்பாக வாழ்வார்கள்.
.
.
அகிலம்
========
திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே
.
விளக்கம்
=========
இந்த் தெய்விகச் சொல்லான வசனத்தைப் பூலோகத்திற்கு அனுப்புவதற்ககு முன்பே, நாங்கள் பூலோகத்திற்கு வருவோம் என்பதை உறுதிசெய்து, தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டாம் ஆண்டில் இதை எழுதினோம்.
.
அனேகமாக இருந்து அருள்பாலித்துவரும் தெய்வீக சத்திகள் யாவும் ஒன்றுதிரண்டு ஏகனாக, அதாவது, பரம்பிரம்மமாக வருவோம் என்று இன்று இதில் எழுதியுள்ளபடி ஆயிரத்து எட்டாம் ஆண்டில் வந்து இந்த வசனத்தை அகிலத்திரட்டு அம்மானையிலும் எழுதி வெளிப்படுத்துனோம்.
.
.
அகிலம்
========
வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்
.
விளக்கம்
=========
998ல் விண்ணகத்தில் எழுதி, மண்ணகத்திற்கு அனுப்பி வைத்த திருவாசகச் செய்தியை, இந்த அகிலத்திரட்டு அம்மானையில் பெருந்தன்மையோடு புதிய வடிவத்தில் சுருக்கமாக வரச் செய்துள்ளோம். இந்த திருவாசகக் கருத்து, மனதை ஒருமுகப்படுத்தி ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் சிந்திப்பவர்களுக்கு மட்டுமே புலப்படும்.
.
இந்த திருவாசகத்தைப் பிடிப்பு இல்லாமல் ஏனோ தானே என்று படிப்போரும் கேட்போரும், அதிலுள்ள ஒரு வார்த்தைக்குக் கூட உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியாது. இதை மகிழ்ச்சியோடு படிப்போரும், கேட்போரும் வார்த்தைக்கு வார்த்தை உட்பொருளை உணர்ந்து இது இறைவனால் அருளப்பட்ட அரியதோர் பொக்கிஷம் என்பதை உலக நடப்பின் வாயிலாக் கண்டு களிப்பார்.
.
.
அகிலம்
========
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே
.
விளக்கம்
=========
உலகில் வாழுகின்ற மனிதர்களில் யாரோ ஒருவர், பல ஆகமங்களின் ஆதாரங்களை வைத்து, அலங்காரமாக இந்த அகிலத்திரட்டு அம்மானையை எழுதியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அதையே ஓங்கி உரைத்து மற்றோரைக் குழப்படையச் செய்தாலும், தெய்விக உரையான இந்த ஆகமத்தைப் பழித்துக் கூறி ஏளனம் செய்தாலும், அவர்களின் அத்தகைய பேய்குணத்தை முழுமையாக ஊடுருவிப் பார்த்து, தீயசெயல் புரிவோரைச் சென்றடையச் செய்கின்ற நரகத்தில், அசையவே முடியாதபடி ஆணியால் அறைந்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு, அவர்கள் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, அவர்களின் ஈரல் பாகத்தை நிம்மதி இல்லாமல் நிலைகுலையச் செய்து அவர்களுக்காக முன் கூட்டியே முடிவுசெய்து வைக்கப்பட்டிருக்கின்ற நரகத்தில் கொண்டு போட்டுவிடும்படி உத்தரவிடுவேன்.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முகியும்.
.
விளக்கம்
=========
இந்த திருவாசகத்தில் இதுவரைச் சொல்லியுள்ள உத்தரவை சிறிதளவேனும் கடைப்பிடித்து வாழ்வதற்கான வைராக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வைராக்கியத்தை எல்லாரும் எடுத்துக் கொண்டால் இந்த உலகம் சகல ஐஸ்வரியங்களையும் பெறும்.
.
அதனால் உலகம் முழுவதிலும் ஒரு நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் வீதமும், 144 நிமிட நேரம் நடந்துசெல்லும் தூரத்திற்கு ஒரு அன்ன தர்ம சாலை வீதமும் நல்ல முறையில் அமையும்.
.
உள்ளுறை மறைபொருள் விளக்கம்
===================================
ஒரு கழஞ்சி என்பது இன்றைய எடையில் 5 கிராம் 30 மில்லிகிராமாகும். முந்தைய காலங்களில் குறைந்த பட்சம் என்பதற்குப் பதிலாக ஒரு கழஞ்சியேனும் என்று சொல்வது வழக்கம். அதைப்போல் இந்தத் திருவாசகத்தில் குறைந்த அளவைக் குறிக்கும் நோக்கத்திலேயே கழஞ்சி என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதைப் போல் சலம் என்ற சொல்லுக்கு வைராக்கியம் என்றும் ஒரு பொருள் உள்ளது. ஆக, இந்த திருவாசக அறிவிப்பின்படி நாம் கொஞ்சமாவது செயல்பட வேண்டும் என்ற வைராக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி யாவரும் முறைப்படும் நிலை உண்டாகும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் சம்பவமும் நடக்கும்.
.
ஒரு நாழிகை என்பது 48 நிமிடமாகும். ஆரோக்கியமான ஒரு மனிதன் 96 நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தண்ணீர்ப் பந்தலும் 14 நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தர்ம சாலை, அதாவது, அன்ன தர்மச் சத்திரமும் உலகெங்கும் சிறப்பாக அமைந்து செழிப்பாக நடைபெறும்.
.
அகிலம்
========
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது.
.
விளக்கம்
=========
உலகில் உள்ள எல்லாரும் தர்ம சிந்தனை உடையோராக இருந்தால் உலகத்தில் தர்மம் கொடுப்போர் உள்ளனர். அதனை வாங்குவதற்க்கு ஆளில்லை என்கிற தன்னிறைவு நிலை தாரணியில் தாமாக ஏற்படும் என்று போதனை செய்கின்ற மூவருக்கும் முன்னவர் ! மூவலர் தேடியும் முற்றா முதல்வன் என்றெல்லாம் போற்றப்படுகின்ற பரப்பரம்மத்தின் தாய்த் தன்மை பொருந்திய பூலோகத்தில், இப்போதெல்லாம் தன்னிறைவு நிலையை விரும்புகின்ற நல்லோர் பிறப்பதில்லை. இத்தகு நிலை ஏற்பட்டு பத்து வருடம் ஆகி விட்டது.
.
.
அகிலம்
========
நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால்
.
விளக்கம்
=========
நாங்களும், அதாவது மூவாதி மூவரும், முப்பெரும் தேவியரும், தேவாதி தேவர்களும் கலியின் தாக்கம் எந்த நிலையிலும் நெருங்கவே முடியாத மேன்மை மிகுந்த பரலோகத்தில் என்றென்றும் நிலை மாற்றமே இல்லாத இளமையோடு இருக்கிறோம். அந்த வாலிபத் தன்மையுடைய நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால்.
.
.
அகிலம்
========
வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
.
விளக்கம்
=========
வீரத்தில் நெருப்புக்கு நிகரான தர்மராசாவாகிய மகாவிஷ்ணு, அவருக்கே வழக்கமான வழியில், அதாவது, பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த காலத்தில் அறத்தை அறியாத அநியாயக் கேடனாக மண்ணகம் முழுவதும் மாமிச மலைபோல் பிறந்தானே குறோணி என்னும் கொடிய அசுரன், அவனைக் கொல்வதற்காக மண்ணுலகில் வந்து மாதவம் செய்தாரே அதைப்போலக் கலியை அழிக்கவும் விடுபட்ட கிரிகைகளை நிறைவேற்றுவதற்காகவும், அதாவது, தாம் அவதாரம் எடுத்த யுகங்களிலெல்லாம் நிலுவையில் இருந்துள்ள வேலைகள் யாவையும் செய்து முடிக்கின்ற (நாராயணம்) பரம்பொருளாக, பூலோகத்திற்கு வந்து, மாதம் என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி பெருமை என்றோர் அருமையான பொருளைத் தருகிறது. அதன்படி மூன்று பெருமைகளுக்கான தவம் செய்வார்.
.
அத்தகு பெருமைகளுக்கான மூன்று தவம் யாதெனில், இந்தக் கலியுகத்தைமுடிப்பதற்கு ஒரு தவம். சாதி வரம்புகளை உடைத்து சமப்படுத்துவதற்கு ஒரு தவம். உலக இயக்கத்தின் பொருட்டு ஏகனாகிய பரம்பிரம்மத்திலிருந்து அனேகமாகி அருள்பாலித்த தாய்நிலைத் தெய்வங்கள் முதலாக சப்த மாதர்கள் வரையிலானவர்களை எல்லாம் ஆட்கொண்டு, நல்வழியில் வாழுகின்ற மக்களைக் கடைத்தேறச் செய்வதற்காகவும் ஒரு தவம்.
.
இம்மூன்று பெருமைகளுக்கான தவத்தில் இரண்டு பெருமைகளுக்கான தவத்தை முடித்து, அதற்கு மேல் மூன்றாம் தவத்துக்கு வருவார்.
.
தொடரும்... அய்யா உண்டு.












