#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா
என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்
பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்
.
விளக்கம்
=========
சிவபெருமானின் அந்த வார்த்தைகளால் சம்பூரணத் தேவனின் சிந்தை கலங்கி, மனம் குழம்பிய நிலையில் சொல்லுகிறான். உலக இயக்கத்திற்கு உற்ற காரண கர்த்தாவே, நாங்கள் மனதில் நினைத்தவைகளும், எங்களுக்குள் பேசிக்கொண்டதும் பூரணமாக உங்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டதோ?
.
அய்யகோ, நான் என்னுடைய ஆசையை என் பெண்ணாளிடம் மட்டுமேதான் சொன்னேன். நான் அவளிடம் அப்படிப் பேசும்போது இங்கே யாருமே இல்லையே... ஒரு ஓரமாக இருந்த நாங்கள் மௌனமாகப் பேசியது எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்தான் தெரியம். உலகத்திற்குத் தெரியாது என்று நினைத்தேனே.
.
ஈசனும், விஷ்ணுவும் அறிந்துள்ளனரே, இவர்களுக்கு இதை யார் சொல்லியருப்பார்கள்? நாங்கள் பேசும் போது யாருமே இங்கு வந்ததாகத் தெரியவில்லையே... அப்படியிருக்க இவர்களுக்கு யார்தான் இச்செய்தியைச் சொல்லியிருக்கக் கூடும்? என்றெல்லாம் தன்மனதிற்குள்ளே வினா எழுப்பியும் விடைகாண முடியாத சம்பூரணத் தேவன் மீண்டும் அவர்களின் பாதம் பணிந்து தார்மீகச் சிறப்புடைய சிவபெருமானே, எல்லாருக்கும் இரங்குகின்ற இறையோனே, எல்லாம் முழுமையாக நிறைந்தோனே, இந்திரனுமானோனே, எம்பிழை பொறுத்து அருளுமையா. நாராயணப்பொருளே, எமையாளும் சிவமே, மன்னித்து அருளுமையா என்று சம்பூரணத்தேவன் உணர்வு்ப் பூர்வமாக மன்றாடினான். அப்போது பரதேவதையாகிய பெண்மணியும் சம்பூரணத்தேவனுடன் இணைந்து அம்மை உமையவள், சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோரைப் போற்றிப் புகழ்ந்து விருத்தம் பாடலாயினர்.
.
.
அகிலம்
========
காரணா அரிநாரணா கவிபூரணா
வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா
கருணகரத் தருணாவெகு தருணா
கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத்
தினமே யருள் நியாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
.
விளக்கம்
=========
பிரபஞ்ச இயக்கங்களுக்கெல்லாம் மூல கர்த்தனாகிய அரிநாராயணரே, கதை, கவி, கவிதை ஆகியவற்றிற்கெல்லாம் முதன்மையும், முழுமையும் ஆனவரே, எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக இருப்பவரே, கவிஞர்களெல்லாம் வணங்குகின்ற கடலே,
.
கருணை அருளும் கரத்தோனே, இளமைக்கெல்லாம் இளமை ஆனவனே, கவிக்கடலே, கவிகளுக்குக் கருவான சிவபெருமானே, உம்மை வணங்குகின்றோம்.
மழை மேகத்தைப் போன்ற நிறமுடைய சிவடிபருமானே, உம்மையே மூலப்பொருளாகக் கொண்டு உருவேற்றித் தவம் செய்யும் எமக்கு எப்பொழுதும் உம் நினைவு மாறாத நிறைவினைத் தந்தருளுங்கள் மேன்மைமிகு கருணைக் கரத்தோனே, வணங்குகிறேன்.
.
.
அகிலம்
========
குணசீரா வெகுதீரா நலிவீரா
புவிநாதா திருவோடுறு மார்பா
சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத
மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே
.
விளக்கம்
=========
பண்பில் சிறந்தவரே, வலுவில் உயர்ந்த நல்வீரனே, லோக நாயகா, செல்வநாயகியான லட்சுமிதேவியை நெஞ்சில் நிறைத்து வைத்திருக்கும் மாயவா, சிறியவர்களாகிய நாங்கள் அறிவில்லாமல் செய்த வெறித்தனமானதைச் சிறிதாக நினைத்து எங்களுக்காக எங்கள் மீது கருணைகொண்டு எங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தாருங்கள்.
.
இப்படி ஒரு முடிவு வரும் என்பதை உணருகின்ற அறிவு இல்லாமல் தேவேந்திரனின் திருமுடி மீது மோகித்து மயங்கிப் பிதற்றிவிட்டோம். ஆகவேதான் எங்களுடைய தவத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
.
தங்களுடைய உத்தரவில்தான் எங்களுடைய எதிர்கால இன்பம் அடங்கியுள்ளது. எங்களுடைய தோல்வியை நினைத்து வெட்கப்படுவதோடு, அஞ்சிச் சரணடைகின்றோம். எங்களுக்கு நல்லருள்புரிவதெல்லாம் உம் செயலே என்றாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


