
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி
அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப்
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா
.
விளக்கம்
========
மகாவிஷ்ணு இவ்வண்ணமாகச் சொன்னவுடன் சம்பூரணத் தேவன் மகாவிஷ்ணுவின் மலரடியை வணங்கியவாறு, அய்யா, என்னைப் பூலோகத்தில் பிறக்கப்போ என்று சொல்லுகிறீர்களே அந்த பூலோகம் இப்போது கலியர்களின் கபடமான பிடியில் அல்லவா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தர்மத்தின் பிறப்பிடமே, பொய்யான கலி உலவும் பூலோகத்தில் நான் போய்ப் பிறந்தால், நான் பிறந்த வழியும், அவ்வழியின் முன்னோரும், அக்குலமும் என் மூலமாக உயர்வு பெறும்படியாக அறிவைக் கொடுத்தருள்வதோடு, அவர்களோடு தாங்கள் எப்பொழுதும் இசைவோடு இருந்து நற்பலன் கொடுப்பேன் என்று தாங்கள் எனக்கு வாக்குறுதி தரவேண்டும். அதுமட்டுமின்றி தாங்கள் வந்து என்னை ஆட்கொள்ளும் நாளையும் விவரமாகச் சொல்லி அனுப்புங்களய்யா என்று வேண்டினான்.
.
.
அகிலம்
========
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்
பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள்
வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்
நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
.
விளக்கம்
========
சம்பூரணத்தேவனின் அவ்வுரையைக் கேட்ட மகாவிஷ்ணு, சம்பூரணத்தேவனுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில், வைகுண்ட அவதார உதயம் ஏற்படும் காலகட்டத்தில் நிகழவிருக்கும் உலக நியதிகளைப் பற்றி எடுத்து உரைக்கிறார்.
.
உலகத்தைப் பரிசோதிப்பதற்காக தெச்சணா பூமியில் நிச்சயமாக நான் அவதரிப்பேன். நான் அவதரிக்க இருக்கும் அந்தக் காலகட்டத்தை உணர்வதற்கான நிதர்சனமான அடையாளம் யாதெனில், உலகில் ஒரே ஒரு பகுதியில் மட்டுமே மக்களெல்லாம் மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வார்கள்.
.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடுவதற்கு வகை செய்கின்ற வேதாகமக் கருத்துக்களைப் போதிக்கின்ற நிலையை மக்கள் மறந்து விடுவார்கள். ஆகவே, தெய்வ நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து, உலகில் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை மேலோங்கி வரும்.
.
ஆண், பெண் ஆகிய இரு இனத்தாரும் அவரவருக்கான எல்லையை மீறுவர். ஆதனால் நிலை தடுமாற்றம் ஏற்படும். உலகில் இல்லத்தரசிகளின் அதிகாரம் மேலோங்கும். கெட்ட புத்தியுடைய கொடிய நிசர்கள் உலகெங்கும் கொடிப்படைபோல் படர்ந்து இருப்பார்கள். அவர்கள் ஒழுக்கத்திலும், பழக்க வழக்கத்திலும் மேன்மையுடையோரை எல்லாம் தொல்லைப்படுத்தி புண்படச் செய்து புறக்கணிப்பார்கள்.
.
வருடா வருடந்தோறும் வானத்து இடிகள் வையகத்தில் விழும். அதனால் மலைகள் குமுறும், எனவே பூமி அதிரும். ஆகவே சூரியன் சற்று சாய்ந்தே வரும்.
.
சோழ நாட்டின் தென்பகுதிகளிலெல்லாம் செழிப்பாக வளர்ந்த பயிர்களைக் கூட மண்ணோடு மண்ணாக நிரவ வேண்டிய நிலைமை ஏற்படும். தாவரங்களின் இலைகள் யாவும் கரிந்து போகும். ரிக், யசூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களில் இரண்டு வேதங்கள் பொய்யாகிவிடும். ஜனத்தொகைப் பெருக்கத்தின் காரணமாக மக்கள் எங்கே போவது என்ன செய்வது என்றறிய இயலாமல் தடுமாற்றம் அடைவார்கள்.
.
வானத்திலுள்ள நட்சத்திரங்கள் உதிர்ந்து பூமியில் விழும். வண்டி, வாகன அதிகரிப்பினால் நடந்து செல்லும் பயணங்கள் குறையும். அதனால் மிகத் தூரமான ஊர்கள் கூட சமீபமாகவே தோன்றும். பொய்யான பூசாரிகள் கோயில்களில் பெருக்கமாக இருப்பார்கள்.
.
நவ்வா துலுக்கர் நாடுகளிலெல்லாம் போராட்டம் யுத்தம் போன்றவற்றால் பெருங்குழப்பம் ஏற்படும். வழிபாட்டு ஆலயங்களெல்லாம் பராமரிப்பாரற்றுப் பாழாகும். நிலத்தடி நீரற்றுக் கிணறுகளெல்லாம் மூடப்படும். பிள்ளைப் பேறு அதிகரிப்பால் மக்கள் மிக இன்னல்களுக்குள்ளாவார்கள். அதனால் மிகப்பெரிய குழப்பம் உண்டாகும். மதக் குரோதப் பகையினால் உலகில் துரோகச் செயல்கள் மிகுந்து நடைபெறும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க
ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து
தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க
நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே
.
விளக்கம்
=========
சம்பூரணத்தேவன் தம் தவறை உணர்ந்து ஒப்புக்கொண்டு சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கி, வருந்தி வேண்டியதால், கொன்றைவாவை மலரைக்கூட மனமுவந்து சூடுகின்றவரும், வேதங்களுக்கெல்லாம் நாயகனுமாகிய சிவபெருமான், சம்பூரணத்தேவன் மீது ஆற்றொணா விருப்பத்தோடு, அழகுப் பிரகாசனும், மும்மூர்த்திகளின் நடுவனுமாகிய மகாவிஷ்ணுவைப் பார்த்து மாயவா, இந்த சம்பூரணத் தேவனுக்கு நிறைவாக என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். அதற்கு நான்கு திசைகளும் புகழுகின்ற தெய்வமாகிய மகாவிஷ்ணு, சம்பூரணத்தேவனின் பூலோகப் பிறப்பு பற்றிச் சொல்ல முனைகிறார்.
.
.
அகிலம்
========
சம்பூரணத் தேவனுக்குப் பூலோகப்பிறவி
=====================================
தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே
ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும்
அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது
நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார்
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன்
.
விளக்கம்
=========
சம்பூரணத்தேவன் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் போற்றிப் புகழ்ந்து பாடி வணங்குவதைப் பார்த்து மகிழ்ந்த சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து, அச்சுதரே, சம்பூரணத் தேவனுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை உறுதியாகச் சொல்லி அனுப்பும் என்றார். அதைக் கேட்ட மகாவிஷ்ணு, சொல்லுகிறேன் என்று மன மகிழ்ச்சியோடு சிவபெருமானிடம் சொல்லிவிட்டு, உடனே சம்பூரணத்தேவனை நோக்கிச் சொல்லுகிறார். சம்பூரணத்தேவா, நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள். நீ விரும்பிய பரதேவதை என்னும் பெண் ஏற்கெனவே இன்னொருவனின் மனைவி, தன்னுடைய கணவன் இருக்கும்போது இன்னொருவனை இச்சிக்கும் அவள் கீழான மங்கை என்று பொருள்.
.
அத்தகு கீழான அந்தப் பெண்ணை இன்னும் தாழ்வு நிலையை அடையவிடாதபடி மேல் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரே நினைவாகத் தவத்தில் நின்றாய். நீ நின்ற தவம் நிறைவேறும் வேளையில் தேவேந்திரனின் திருமுடிமேல் இச்சை கொண்டாயே, அது நீ செய் தவத்திற்கு ஒத்து வருமா?
.
உன்னைச் சூழ்ந்திருக்கும் வினைகள் யாவையும் அகற்றி மந்திர ஒலியை உன்னுள் வசப்படுத்தி, உள்முகமாய் ஒலித்து, சுவாசத்தைச் சுழுமுனையிலிட்டு நீ தவசு நிற்கும்போது ஆசை அலைகள் உன்னை அடிமையாக்கலாமா?
.
அறிவுகெட்ட சம்பூரணத்தேவா ஆசாபாசங்களை அகற்றினால்தானே பரகதியாகிய முக்தியை அடையமுடியும் என்பது உனக்கு ஏன் தெரியாமல்போனது. தவம் செய்து கொண்டிருக்கும்போது உனக்கு இத்தகு எண்ணம் ஏற்பட்டதால் நீ விரும்பிய பரதேவதை என்ற பெண் பூலோகத்தில் பிறந்தது போலவே நீயும் பூலோகத்தில் பிறந்து, உன்னுடைய வாழ் வினைகளையெல்லாம் சிலகாலம் பழமை வாய்ந்த அப்பூவுலகில் அனுபவித்து முடித்தபின்பு, பூலோகத்தில் பிறந்துள்ள பரதேவதையைக் கண்டு, முன்வினைப் பயனால் நீ அவளை உன்மேல் இச்சைபடச் செய்து, அவளுடைய நினைவை நெஞ்சிலே சுமந்து கொண்டு அலையும் உனக்கு, அவளின் ஏதுவால் நஞ்சு தின்றோ, நாண்டுகொண்டோ என் உயிரை மாய்த்துக்கொண்வதற்கு உனக்கு எண்ணம் ஏற்படும்.
.
அதன்பிறகு, சிலநாள் சென்ற பின்பு அந்தப் பெண்ணோடு நட்புகொண்டு, அவளை உன்னுடைய சொந்த ஓவியமாகவே நீ நினைத்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், உன்னுடைய துயரங்கள் யாவையும் தீர்த்து உன்னை என்னுடைய பிள்ளையாக எடுத்து, உன் துயரங்கள் யாவையும் என்னால் நீ மாற்றல் செய்து, என்னுடைய சிறப்பையும், ஈகையையும் உனக்குத் தந்து, உன்னைப் பொன்னரசுபுரிந்து புவியாள வைப்பேன் என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்
.
விளக்கம்
=========
பரதேவதை பூலோகத்தில் பிறந்த பின்பு, பூவிதழ் போன்ற தம் கரத்தில் சங்கு சக்கராயுதங்களை ஏந்திக்கொண்டிருக்கும் மகாவிஷ்ணு, சம்பூரணத்தேவனைப் பார்த்து, சம்பூரணா, நீ விரும்புகின்ற பரதேவதை பூலோகத்தில் பிறக்கப்போய்விட்டாள். இனியாவது நீ பூலோகத்தில் பிறக்க இசைகிறாயா? அல்லது இன்னும் ஏதேனும் கோரிக்கை வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். உடனே சம்பூரணத் தேவன் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் போற்றிப் புகழ்ந்து பாடி வணங்கலானான்.
.
அகிலம்
========
விருத்தம்
=========
ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே
அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா
நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா
வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா
எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே
.
விளக்கம்
=========
தீபவதியையும், தீர்த்த நதியையும் சடையினில் சூடிய சங்கரா, அலைகடலைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயில் புரியும் மூலமுதற் பரவெளியே,
.
உடல் நிலையானதில்லை, இறுதியில் அது சாம்பல் என்பதை உணர்த்துகின்ற பூவுடலோனாகிய சிவபெருமானே, சிவா எனும் உமையோடு உதித்து சிவ மைத்துனராகிய மாயவா.
.
வேகமிகு உமயவளின் நாயகனாக சிவனே, வீரலட்சுமியின் மன்னராகிய மகாவிஷ்ணுவே, இராம அவதாரனே, காளை வாகனாதிபதியாகிய ஈஸ்வரா, எமை ஆட்கொள்ளும் நாராயணா, உங்களைப் போற்றித் துதிக்கிறேன்.
.
.
அகிலம்
========
விருத்தம்
=========
சீதமாங்குணச் செல்வனே போற்றி
சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி
நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி
வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி
அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே
.
விளக்கம்
=========
குளிர்ச்சியான தன்மைகளையுடைய ஐஸ்வரியமே, அம்மையும் அப்பனுமாகிய சிவபெருமானே, நீதியின் தலைவா, சினேகத்திற்கு இசைவோனே, நீயே சிவனும் விஷ்ணுவும் ஆகி நிற்கிறாய். உம்மை நான் போற்றித் துதிக்கிறேன்.
.
குறோணியை வதைக்க வேண்டி ஆதியில் மாதவம்புரிந்த மாதவா, அரியதோர் வெற்றியாளனே, எல்லார்க்கும் வல்லவனே, ஆயவை அனைத்திற்கும் செல்வனே, கதிரவன் நின்றியங்கக் காரணமான நாராயணா, முதன் முதலே, முதலும் முடிவும் இல்லாதவரே, உம்மைப் போற்றித் துதிக்கிறேன்.
.
.
அகிலம்
========
விருத்தம்
========
அய்யனேதவம் யானிற்கும் போதிலே
அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன்
பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன்
வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள்
சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே
.
விளக்கம்
=========
எல்லை இல்லாது உயர்ந்தோனே, அடியேன் தவம் செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்திராணியின் கணவனாகிய தேவேந்திரனுடைய சங்கு சரத்தங்க நவரத்தினத் திருமுடியைக் கண்டதினால் போலியுகமாகிய கலியின் மாய்கை என்னுடைய நினைவினுள் புகுந்து விட்டது. எனவே தேவேந்திரனுடைய திருமுடியின் மீது ஆசைகொண்டது உண்மைதான்.
.
அந்த அர்ப்ப ஆசையினால் இப்போது நான் செய்துகொண்டிருந்த உயர்கதி அடைவதற்கான தவத்தை தவற விட்டுவிட்டு வாடி வதங்குகிறேன். சகலவிதமான சம்பிரதாயங்களுக்கும் நாயகா, அடியேனுக்காகத் தாங்கள் திருவுள்ளம் கசிந்து யாம் செய்த பாவச் செயலைப் பெரிதெனக் கருதாமல் அதைவிலக்கி வைத்து ஆட்கொண்டருளுங்கள் என் அம்மையும் அப்பனுமாகிய சிவசிவா உங்களைப் போற்றித் துதிக்கிறேன் என்று சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் சம்பூரணத் தேவன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
.
விளக்கம்
=========
எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வது உம் செயல்தான் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனம் மகிழ்ந்து இரங்கும் படியாக சம்பூரணதேவனும், பரதேவதையும் அருமையான விருத்தம் ஒன்று பாடினார்கள்.
.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, கிளிபோன்று மொழி பேசும் பரதேவதையைப் பார்த்து மெட்டுக் கொடி இடையே மின்னிடையே நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள். உன்னுடைய கணவன் எமலோகத்தில் உன் நினைவாகவே ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கிறான்.
.
நீயோ, அவனை மறந்துவிட்டு, தெய்வலோகத்தானாகிய சம்பூரணத்தேவனை விரும்பி, இருவருமாய் இணக்கமுற்று எப்போதும் வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் தவத்தை மேற்கொண்டீர்கள். அந்தத் தவமும் உங்களுடைய எண்ணத்தால் ஈடேறாமல் போய்விட்டது.
.
எனவே, பூலோகத்தில் என் மகவாகப் பெற்றுப் பெருகி இருக்கின்ற சான்றோர் இனத்தில், எமலோகத்தாரின் வாரிசாக நீ பிறக்கவேண்டும். அதுதான் உனக்கு அமைத்த அமைப்பாகும்.
.
இந்தத் தவத்தில் நீங்கள் இருவரும் மனதால் செய்த பிழைக்காக, நீ பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாலும் அங்கேயும் உன்னுடைய எமலோகக் கணவனும் பிறப்பான். அவனை நீ திருமணம் செய்து எமலோகத்தில் அவனுக்கு நீ செய்யாமல் விட்ட அத்தனை கடமைகளையும் செய்து, வருந்தித் துயரமுற்று அந்தக் கணவனுக்கு முறைப்படி செய்ய வேண்டிய தொண்டுகள் யாவையும் செய்தும் இனிமையான பேச்சோ, தாம்பத்திய நளினமோ இல்லாமல், எப்பொழுதுமே நீ ஏக்கத்தோடு வருத்தமுற்று இருக்கும் காலத்தில, இந்த சம்பூரணத்தேவன் எமலோகத்தில் உன்மேல் நட்புற்றதால் பூலோகத்தில் பிறந்து, முன் ஜென்ம வாசனையால் உன்னைக் கண்டு உன்மீது இச்சைகொண்டு, விதிப்பயனால் ஒருவரோடொருவர் உற்ற நட்பு கொண்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் இருவரும் ஒருவரெனக் கருத்தொருமித்திருப்பீர்கள்.
.
அதனால் நீ உணவை மறந்து, கணவன், தாய், தந்தை, மாமன், அண்ணன், ஆகிய அனைத்து உறவுகளையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்வையுமே மறந்து, சொந்த வீட்டையும், சுகசோபனங்களையும் மறந்து, சந்தோசம் என்பதே இல்லாமல், எல்லாரைக் கண்டும் வெட்கப்படும் நிலையில் உன்னுடைய கணவனுக்கு முற்பிறப்பில் செய்த துரோகத்திற்கான தண்டனைகளையும் சேர்த்து அனுபவிப்பாய்.
.
பிறகு அக்கம் பக்கத்தார் யாவரும் அறியும்படியாகச் சம்பூரணத்தேவனையே கணவனாக நினைத்துக்கொண்டிருப்பாய். அப்போதும் உன் கணவன் கட்டிய மாங்கல்யம் உலகறிய உன்னுடைய கழுத்தில்தான் இருக்கும். அந்தத் தருணத்தில் எனக்குப் பலவிதமான உபத்திரவங்கள் உண்டாகும். அதை நாள்வழியே பலர் கேலி செய்வர். அதனால் உனக்குப் பெரிய உனக்குப் பெரிய கவலையுண்டாகும். அந்தக் கவலையினால் மேலும் பல துன்பங்களை நாள்தோறும் அனுபவிப்பாய். அதனால் உனக்கு இரத்தப்போக்கு என்னும் பெரும்பாடு நோய் உண்டாகும். நாளடைவில் அதனால் சயரோகம் உண்டாகும். ஓயாமல் புரையேற்றமும் விக்கலும் ஏற்பட்டு தீராத நோயாளியாகவே இருப்பாய். இவை யாவும் உன் கணவனுக்கு நீ செய்த பாவத்திற்கான சம்பளமேயாகும்.
.
இத்தனை சோதனையும் நீ அனுபவிப்பதின் மூலம் உனக்கு இறை நாட்டம் ஏற்படும். அதனால் உன்னுடைய சிந்தனை விரிவடையும், அப்போது நீ மகாலட்சுமியைப் போன்ற மகிமையினை அடைவாய் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் பரதேவதையிடம் சொல்லி, அப்பொழுதே பரதேவதையை எமகுலத்தார் வழியில் பிறவி செய்தனர். அதன்படி பரதேவதை எமகுலத்தில் வந்து இயல்பாகப் பிறந்தாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா
என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்
பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்
.
விளக்கம்
=========
சிவபெருமானின் அந்த வார்த்தைகளால் சம்பூரணத் தேவனின் சிந்தை கலங்கி, மனம் குழம்பிய நிலையில் சொல்லுகிறான். உலக இயக்கத்திற்கு உற்ற காரண கர்த்தாவே, நாங்கள் மனதில் நினைத்தவைகளும், எங்களுக்குள் பேசிக்கொண்டதும் பூரணமாக உங்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டதோ?
.
அய்யகோ, நான் என்னுடைய ஆசையை என் பெண்ணாளிடம் மட்டுமேதான் சொன்னேன். நான் அவளிடம் அப்படிப் பேசும்போது இங்கே யாருமே இல்லையே... ஒரு ஓரமாக இருந்த நாங்கள் மௌனமாகப் பேசியது எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்தான் தெரியம். உலகத்திற்குத் தெரியாது என்று நினைத்தேனே.
.
ஈசனும், விஷ்ணுவும் அறிந்துள்ளனரே, இவர்களுக்கு இதை யார் சொல்லியருப்பார்கள்? நாங்கள் பேசும் போது யாருமே இங்கு வந்ததாகத் தெரியவில்லையே... அப்படியிருக்க இவர்களுக்கு யார்தான் இச்செய்தியைச் சொல்லியிருக்கக் கூடும்? என்றெல்லாம் தன்மனதிற்குள்ளே வினா எழுப்பியும் விடைகாண முடியாத சம்பூரணத் தேவன் மீண்டும் அவர்களின் பாதம் பணிந்து தார்மீகச் சிறப்புடைய சிவபெருமானே, எல்லாருக்கும் இரங்குகின்ற இறையோனே, எல்லாம் முழுமையாக நிறைந்தோனே, இந்திரனுமானோனே, எம்பிழை பொறுத்து அருளுமையா. நாராயணப்பொருளே, எமையாளும் சிவமே, மன்னித்து அருளுமையா என்று சம்பூரணத்தேவன் உணர்வு்ப் பூர்வமாக மன்றாடினான். அப்போது பரதேவதையாகிய பெண்மணியும் சம்பூரணத்தேவனுடன் இணைந்து அம்மை உமையவள், சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோரைப் போற்றிப் புகழ்ந்து விருத்தம் பாடலாயினர்.
.
.
அகிலம்
========
காரணா அரிநாரணா கவிபூரணா
வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா
கருணகரத் தருணாவெகு தருணா
கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத்
தினமே யருள் நியாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
.
விளக்கம்
=========
பிரபஞ்ச இயக்கங்களுக்கெல்லாம் மூல கர்த்தனாகிய அரிநாராயணரே, கதை, கவி, கவிதை ஆகியவற்றிற்கெல்லாம் முதன்மையும், முழுமையும் ஆனவரே, எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக இருப்பவரே, கவிஞர்களெல்லாம் வணங்குகின்ற கடலே,
.
கருணை அருளும் கரத்தோனே, இளமைக்கெல்லாம் இளமை ஆனவனே, கவிக்கடலே, கவிகளுக்குக் கருவான சிவபெருமானே, உம்மை வணங்குகின்றோம்.
மழை மேகத்தைப் போன்ற நிறமுடைய சிவடிபருமானே, உம்மையே மூலப்பொருளாகக் கொண்டு உருவேற்றித் தவம் செய்யும் எமக்கு எப்பொழுதும் உம் நினைவு மாறாத நிறைவினைத் தந்தருளுங்கள் மேன்மைமிகு கருணைக் கரத்தோனே, வணங்குகிறேன்.
.
.
அகிலம்
========
குணசீரா வெகுதீரா நலிவீரா
புவிநாதா திருவோடுறு மார்பா
சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத
மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே
.
விளக்கம்
=========
பண்பில் சிறந்தவரே, வலுவில் உயர்ந்த நல்வீரனே, லோக நாயகா, செல்வநாயகியான லட்சுமிதேவியை நெஞ்சில் நிறைத்து வைத்திருக்கும் மாயவா, சிறியவர்களாகிய நாங்கள் அறிவில்லாமல் செய்த வெறித்தனமானதைச் சிறிதாக நினைத்து எங்களுக்காக எங்கள் மீது கருணைகொண்டு எங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தாருங்கள்.
.
இப்படி ஒரு முடிவு வரும் என்பதை உணருகின்ற அறிவு இல்லாமல் தேவேந்திரனின் திருமுடி மீது மோகித்து மயங்கிப் பிதற்றிவிட்டோம். ஆகவேதான் எங்களுடைய தவத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
.
தங்களுடைய உத்தரவில்தான் எங்களுடைய எதிர்கால இன்பம் அடங்கியுள்ளது. எங்களுடைய தோல்வியை நினைத்து வெட்கப்படுவதோடு, அஞ்சிச் சரணடைகின்றோம். எங்களுக்கு நல்லருள்புரிவதெல்லாம் உம் செயலே என்றாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் அய்யா வைகுண்டரின் 194ஆம் ஆண்டு அவதார தின நல்வாழ்த்துகள் 💐*
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ
கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ
இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
.
விளக்கம்
=========
அப்போது சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் அவர்கள் முன்னால் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்ட சம்பூரணத் தேவனும், பரதேவதையும் தாம் தவம் இருக்கிறோம் என்பதையே மறந்து, அவர்களின் பொற்பாத கமலங்களை வணங்கியவாறு, இத்தனை நாட்களாக நாங்கள் செய்த தவத்திற்கு இரங்கி இங்கே வருகை தந்தீர்களோ?
சிவபெருமானே, எம்பெருமானே, இறைவா, நந்தகோபாலா, நாராயணரே, குருவே, அரிநாதா, கோபாலா, முருகக் குருபரனே, மோட்சத்தின் நாயகனே, செல்வக் கடலே, சீமானே, கல்விக் கடலே, கரைக்கண்டா, அரவத்தை ஆபரணமாக அணிந்தோனே, யானைத் தோலை உரித்து உடையாகப் போர்த்தியோனே, ஈசனும் விஷ்ணுவுமான ஏகனே எங்களுக்காக மனமிரங்கி வந்தீர்களோ என்று அடிபணிந்து போற்றினர்.
.
.
அகிலம்
=======
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
.
விளக்கம்
=========
சம்பூரணத் தேவனும், பரதேவதையும் அடிபணிந்து வணங்குவதைப் பார்த்து, மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் மனமகிழ்ச்சி அடைந்தவாறு ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர். அப்போது சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மாயவரே, இந்தச் சம்பூரணத்தேவன் மேற்கொண்ட தவத்தை முழுமையாக முடிக்கவில்லை. தவம் முழுமையாக நிறைவேறப்போகும் நேரத்தில் லௌகீக வேட்கையினால் தேவேந்திரனின் திருமுடிமேல் ஆசைப்பட்டுத் தவநிலை இழந்து, இருவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நீங்கள் என்ன உபாயத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்.
.
அதனால் அகமகிழ்ந்த மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து ஈசுரரே, இவர்கள் இருவரின் தவமும் நிறைவேறாமல் போவதற்கு என்ன காரணம்? ஏதுவிதமான இடையூறு ஏற்பட்டது. தீது வந்த காரணத்தை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று கேட்டார். ஆகவே சிவபெருமான், சம்பூரணத் தேவனைப் பார்த்து, தேவா, இப்போது உன்னுடைய மனதில் நீ என்னவெல்லாம் நினைத்தாயோ அவற்றை அப்படியே சொல்லு என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 03.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கலிக்கு எடுக்க வேண்டிய அவதாரம் பற்றிய ஆலோசனை
=========================
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு
நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
ஓம்கார நாதத்தை ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அலை கடலினுள், வரைந்து வைத்த சித்திரத்தின் வனப்போடு மகாலட்சுமி தேவி மகரச் சிலைபோல் வளர்ந்து கொண்டிருக்கும் போது, மகரந்தம் உள்ள மலர்மாலைகளைச் சூடுகின்ற மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் சென்று, ஈஸ்வரா, கூட்டுக் கிளிபோல் என்னுடன் இருந்த கொடியிடையாள் மகாலட்சுமியை மகரச் சிலையாக வளரும்படி அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் எப்படி மைத்துனரே நலமோடு இருக்க முடியும்?
.
மகாலட்சுமியைக் கடலுக்குள் மகரச் சிலையாக வளர விட்டு விட்டு, அப்படி வளர விட்டதற்கான வழிமுறைகளைச் செய்யாமல் இங்கே சும்மா இருப்பது சரியாகுமா? என்று கேட்டார்.
இதை கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து, சிமிழ் கூடு போன்ற மகாவிஷ்ணுவே, மேல் நடப்புக் காரியங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை யாவையும் உடனடியாகச் சோர்வற்றுச் செயல்படுத்தும் என்றார்.
.
.
அகிலம்
=======
சம்பூரணத்தேவன் பரதேவதை ஆகியோரின் தவத்தைப் பரிசோதித்தல்
=====================================================================
சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு
அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
.
விளக்கம்
=========
அதனால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சிவடிபருமானைப் பார்த்து, நலமே அருளினீர் ஈசுரரே என்று சொல்லிக்கொண்டே, ஈசுரரே ! நம்மையே நாடுகின்ற தேவாதிகளில் வல்லவனான சம்பூரணத் தேவனும், எமலோகத்திலுள்ள பரதேவதை என்னும் பெண்மணியும் இணைபிரியாத கணவனும் மனைவியுமாக வாழ்வதற்காக பூலோகத்தில் பிறவி அமைக்க வேண்டும் என்று நம்மை வேண்டி உருவேற்றி உயர்வான தவத்தினை மேற்கொண்டு உள்ளனர்.
.
ஆகவே, அவர்களைச் சில குறைபாடுகளுடன் பூலோகத்தில் பிறக்கச் செய்வதற்கு இந்தநாள் ஏற்புடையதாக அமையும். எனவே, அவர்களின் தவம் இப்போது எந்த அளவில் உள்ளது என்பதை அறிவதற்காகத் தாங்கள் என்னுடன் இப்போதே எழுந்தருளி வாருங்கள் என்று சிவபெருமானை மகாவிஷ்ணு அழைத்தார்.
.
அழைப்பை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், சம்பூரணத் தேவனும், பரதேவதையும் தவமிருந்துகொண்டிருக்கும் இடத்திற்கு மகாவிஷ்ணுவோடு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் வருகையை உணர்ந்த தேவேந்திரன் அவர்களை வரவேற்பதற்காக விரைந்து எதிரே செல்கிறான்.
.
தேவேந்திரன் திருமுடியோ, மும்மூர்த்திகளின் நடுவரும், விமோசன கர்த்தாவுமாகிய மகாவிஷ்ணுவின் திருமுடியைப் போன்று சங்கு சரம்போல் தங்க நவரத்தினத்தால் எங்கும் ஒளிவீசும் இயல்புடையதாகும்.
.
சம்பூரணத்தேவனை நோக்கிவருகின்ற சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வரவேற்ற தேவேந்திரன் அவர்கள் இருவருடனும் வந்து கொண்டிரப்பதை சம்பூரணத்தேவன் காணுகின்றான். அவனுடைய கவனமெல்லாம் தேவேந்திரன் திருமுடிமேல் செல்கிறது.
.
அதனால் தாம் தவமிருக்கிறோம் என்ற நினைவை மறந்த சம்பூரணத்தேவன், தம்மோடு தவமிருந்து கொண்டிருக்கும் தம் காதலியாகிய பரதேவதையைப் பார்த்து, பெண்ணே ! அதோ சிவபெருமான், மகாவிஷ்ணு இருவரோடும் வந்து கொண்டிருக்கிற தேவேந்திரனின் தலையில் இருக்கின்ற சங்குசரத் தங்கத் திருமுடியைப் பார்... ஆகா அந்த அழகிய திருமுடியை என்னுடைய தலையிலே சூட்டி, பூலோகத்தையே ஆளுவதற்கான இரத்தின சிங்காசனத்தில் உன்னோடு நான் மன்னாதி மன்னனாக அமர்ந்திருந்து, சப்தமாதர்கள் பெற்ற மக்களை எல்லாம் நம் அருகில் வைத்து, ஏற்புடைய என் ஆணைப்படி பூலோகத்தில் வலிமைமிகு நீதியை நிலவச்செய்து, மகிழ்ச்சியோடு நாம் அரசாட்சிபுரிவதற்கும், சிறப்போடு வாழ்வதற்கும் உற்றதோர் திருமுடி இதுவல்லவா? என்று தம் பேராவலைப் பரதேவதையிடம் ஏக்கத்தோடு கூறினான்.
.
அதைக் கேட்ட பரதேவதையின் எண்ணத்திலும் அந்த ஆசை எழுந்தது. என்றாலும் அவள் சம்பூரணத்தேவனைப் பார்த்து நீங்கள் சொன்ன வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி நம்மை இறைவன் படைத்திருந்தால் இப்போது இருக்கின்ற இந்தத் தேவேந்திரன் இறந்தல்லவா போக வேண்டியிருக்கும்? என்று தேவேந்திர பதவிக்கான தகுதியை மறைமுகமாக சம்பூரணத் தேவனுக்கு உணர்த்தினாள். அதனால் அதிர்ச்சி அடைந்த சம்பூரணத் தேவன் ஆற்றொணா அலைபோல் ஏக்கம் மிகுந்த பெருமூச்சு விடலானான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாலெட்சுமி மகரமாதல்
==========================
லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
.
விளக்கம்
=========
சிவபெருமானிடம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று சொன்ன மகாவிஷ்ணு, அடுத்த ஏற்பாடாக மகாலட்சுமியை அழைத்துச் சொல்லுகிறார். தெளிவான ஒளியாய்ச் சுடர்விடும் தருணத் திரவியமே, என்னுடைய தேவியே, இந்தக் கலியுகத்திற்கு முன்பு நிகழ்ந்த துவாபரயுகத்தில் நீ உருப்பிணியாய் (ருக்குமணியாக) அவதரித்திருந்தாய்.
.
அமிழ்திலும் இனிய மாதே, இப்போது நான் கலியாகிய மாய்மாலத்தை அழித்து ஒழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன். எனவே, என்னுடைய நாயகியாகிய நீயும், இப்போது பேரழகுப் பொன்மகரப் பெண்மயில்போல் முருகபெருமான் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர் கடலினுள் வளர வேண்டும்.
.
என் கண்ணின் மணியாகிய நீ, கடலினுள் பொன்மகரச் சிலையாக வளர வளர உன்னைச் சூழ்ந்து தங்க நவரத்தினங்களான மண்டபங்களும், தேனிலும் இனியதாய் விரும்பத்தக்க மண்டபங்களும் தெருக்களும், சிங்காசன மேடையும், அவற்றைச் சுற்றிலும் பலவிதமான அரங்குகளும் வளரும். அது வளருமளவில் தெய்வ ரம்பையர்களையும் சூழ வைத்து, அத்துடன் எக்காளமொடு பேரிகையும் முழங்க சித்திர வல்லுநர்களெல்லாம் உன்னைச் சுற்றிச் சேவித்து நிற்க, அகரத்தெரு, அரம்பையர்கள் தெரு, சிகரத்தெரு போன்ற தெருக்களெல்லாம் உன்னைச் சுற்றிலும் உருவாகச் செய்வேன்.
.
தினந்தோறும் வலம்புரிகள் முழங்கி உன்னை வணங்கும், உன்னைச் சுற்றிலும் கோட்டைகள் அமைத்து, கொடி மரமும், கொடிமர மண்டபமும் முகித்து வீட்டு அலங்காரம் போல் பல வேலைகளைச் செய்து தருவேன். அங்கே உன்னுடைய திருமேனியோ உரசிப் பார்க்க வேண்டியதில்லாத் தங்கமாகச் செந்தழல்போல் மின்ன மகரச்சிலையாக நீ வளர்ந்துயிரு.
.
.
அகிலம்
========
கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை
வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
.
விளக்கம்
=========
நீ மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, கலியுகத்தை முடிப்பதற்காகக் கண்ணான ஓர் உயிரை, வலிமையுடையதாக உன் வயிற்றில் பிறவி செய்து, அந்த குழந்தையின் மூலமாக உலக மக்களின் மனங்களில் படிந்திருக்கின்ற அழுக்கான கலியைத் துடைத்து, அவர்களைத் தூய்மையான மக்களாக்கிய பின்பு உன்னுடைய மகனுக்கு இந்த உலகத்தையும், உலகத்தை அரசாளுவதற்கான மேன்மையான திருமுடியும், நாம் விரும்புகின்ற தர்மயுகத்தை உருவாக்குவதற்கான செங்கோலும் கொடுத்து அரசாள வைக்கவேண்டும். அந்த ஆண்பிள்ளை உன் மூலமாகப் பிறக்க வேண்டும். எனவே மேன்மகளே ! நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலைபோல் வளரச் செல்க என்று மகாலட்சுமி தேவியிடம் கூறினார்.
.
.
அகிலம்
மகாலட்சுமியின் கேள்விக்கு மகாவிஷ்ணுவின் பதில்
====================================================
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணு கூறியதைக் கேட்ட மகாலட்சுமி, கிளிபோன்று மொழி பேசும் தம் திருவாயால், உலகையே தம் உடமையாகக் கொண்டுள்ள நாராயணப் பரம்பொருளே ! நான் திருப்பாற் கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்தால் உயர்ச்சி மிகுந்த கோபுரமே திவ்விய சித்தமே தாங்கள் என்னிடம் என்ன விதமாக வடிவெடுத்து வருவீர்கள். நீங்கள் என் அருகில் வரும்போதுள்ள அடையாளத்தை என்னிடம் இப்போது சொல்லங்கள் என்று மகாலட்சுமி கேட்டாள்.
.
.
அகிலம்
=======
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்
பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே
இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
.
விளக்கம்
=========
மகாலட்சுமியின் கேள்வியால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சொல்லுகிறேன் கேள் என்று நிகழவிருக்கும் நிசழ்ச்சியினைத் திருமகளாகிய மகாலட்சுமியிடம் சொல்லுகிறார். தேவி, நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, என்னிடம் சிவபெருமானும், பிரம்மதேவனும் ஒருசேரத் திரண்ட பரப்பிரம்மமாக வருவோம்.
.
அப்போது என் கண்களில் ஞான சூரியர்கள் பதிந்திருப்பர். என்னுடைய நெற்றியிலோ, பிறை வடிவச் சந்திரனும், வடவாமுக அக்கினி என்னும் ஊழித்தீயும் ஒளிப்பிழம்பாகி என் மேனியைச் சூழ்ந்து எண்ணாயிரம் தூய்மைத் தரம்வாய்ந்த அக்கினிச் சுவாலையெனப் பிரகாசிப்பேன். அந்நிலையில் என்மேனி பதினான்கு லோகமும் நிறைந்த விஷ்வரூபமாகத் தெரியும். அதன் வெப்பத்தால் கடல் நீரெல்லாம் நெருப்பாகக் கொதிக்கும்.
.
நீ மகரச் சிலைபோல் வளரப்போகும் திருச்செந்தூர் கடலிலிருந்து நேர்மேற்காக ஏழு காதம் அதாவது, எண்பத்து நான்கு மைல்தொலைவில் திருவாங்கூரை ஆண்டு கொண்டிருக்கும் கலியரசன் அன்றே எரித்தொழிவதற்கான சீதாங்க பாஷாண வெற்றிக் குண்டலத்தை என் காதுகளில் அணிந்தும், கணீர் கணீரென ஒலிக்கின்ற தர்ம மாமணிகளைக் காலில் தண்டையாக அணிந்தும், எல்லா வேதங்களும் என் மேனி முழுவதும் மேவி மிளிரும் நிலையோடு நான் உன் அருகே வருவேன்.
.
பெண்ணரசே ! நான் உன்னருகே வருகிறேன் என்பதற்கான பெருமைக்குரிய அடையாளங்கள் இதுவேயாகும். இத்தகைய என் வரவை நீ எதிர்கொள்ள வேண்டுமானால், என் கண்ணரசே, நீ இன்று முதல் எந்நேரமும் என்னுடைய நினைவாகவே இருக்க வேண்டும். அப்படிக் கருத்தாக இருந்தால் மட்டுமே நீயும் பிழைப்பாய்.
.
இவ்வண்ணமாக நான் உன்னிடம் வந்து, நாம் இருவரும் ஒருமித்து, ஒரு பிள்ளையைப் பெற்று இந்த யுகத்தைப் பரிசோதிப்பதற்காக உடனே அனுப்பி வைத்து, குறுகிய எண்ணங்களோடு உலகுக்குக் கேடு செய்து கொண்டிருக்கின்ற பாவக் கலியை அடியோடு அழித்து, நாம் அமுதமென ஈன்ற மதலைக்கு முடிசூட்டி உலகாள வைத்து, நாம் உவகை கொள்ளவேண்டும் என்று வைகுண்ட அவதாரத்திற்கான ஏற்புடைய அடையாளங்களை மகாலட்சுமியிடம் உரைத்த மகாவிஷ்ணு மீண்டும் லட்சுமியைப் பார்த்து நன்றினிய மாதே, நாம் இச்செயலில் ஈடுபடப்போவது குறித்து உனக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதோ என்று இதமாகக் கேட்டார்..
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
காளிதேவியின் சிறைவாசத்தால் வாதை, பேய்கள் புலம்பல்.
========================
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
.
விளக்கம்
=========
காளிதேவிக்கு சிறைவாசம் ஏற்பட்ட செய்தி, கூளிகணங்கள், வாதை, மற்றும் பெய்களுக்கெல்லாம் தெரிந்தது. ஆகவே, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த கூளி கணங்களும். வாதைகளும், பேய்களும் காளியின் சிறை வாசத்தை நினைத்து அஞ்சின.
.
சகல வல்லமைகளும் உள்ள காளி நாச்சியாருக்கே சிறை வாசம் சிக்கியுள்ளது என்றால், இனிமேல் நமக்கெல்லாம் என்னென்ன இன்னல்கள் ஏற்படப் பொகிறதோ என்று வருந்திப் புலம்பின. இன்னும் சில பேய்கள், கேச்சி, கேசி சூதகன், கேசிகை என்று போற்றப்படுகின்ற மகாவிஷ்ணுவின் மாய்கையினால் பேய் உலகிற்கு பேரழிவு ஏற்படப் போவதை நினைத்து நினைத்து நிலைகுலைந்தன.
.
இயல்பாகவே வலிமையும் மூர்கத்தனமும் உள்ள சில, மூளிப் பேய்களோ, காளி சிறையில் அகப்பட்டு விட்டதால் இனி நாம் நமது மனம் போல் செயல்படலாம் என்று கூவி ஊளையிட்டுக் கொண்டாடித் திரிந்தன. இவ்வண்ணமாக பேய்கிள்ன நிலைப்பாடும் காளிதேவியின் சிறைவாசமும் அமைந்திருந்தது.
.
.
அகிலம்
========
கலியை அழிப்பது பற்றி சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஆலோசித்தல்
==========================================================================
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை
வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி
.
விளக்கம்
=========
அப்படியிருக்க, மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து, அனைத்து வல்லமையும் உடைய அரும்பொருளே ! வேதங்களாலும் விரித்து உரைக்க முடியாத சித்திரமே ! காளிதேவிக்கே இவ்வாறு கடுமையான சிறையில் கவிழ்ந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாலும், இனி இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தில் யாருக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய முடியும்.
இந்த உலகத்தை வியாபித்திருக்கும் கலியாகிய மாய்கையைக் கரைத்து ஒழிப்பதற்கு முதன்மை வகிக்க வேண்டிய பத்திரகாளியே கடுமையான அக்கினிச் சிறையில் அடைந்திருக்கும் நிலையில் நாம் கலியை அழிப்பதற்கு எந்த உபாயமும் செய்யாமல், இங்கே அமைதியாகக் கலியின் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.
.
ஆகவே, கலியை அழிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சகல வலிமையும் உடைய சிவபெருமானே நீர்தான் சொல்லவேண்டும் என்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் வேண்டினார்.
.
மகாவிஷ்ணுவின் உரையில் உறைந்திருந்த உட்கருத்தினை உணர்ந்த சிவபெருமானோ, மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, என்னோடு கலியை அழிப்பதைப் பற்றி பேசவேண்டுமே என்று கடனைக் கழிப்பதற்காக இத்தகைய கலவரமான உரையாடலை நடத்துகிறீரா?
.
இந்த உலகத்தையே உருக்குலைத்துக் கொண்டிருக்கும் சூதகமான கலியை அழிக்கக்கூடாது என்று நானா தடுத்துக் கொண்டிருக்கிறேன். கலியை அழிப்பது பற்றி என்னோடு ஏன் கலந்துரையாட வேண்டும்?
.
கலியை அழித்து எங்களுக்குகெல்லாம் எப்போது நற்கதி அருள்வீர் என்று நாங்களெல்லாம் நினைத்து நினைத்துச் சோர்ந்து போய் இருக்கிறோம். உலகத்தை கவ்விப் பிடித்திருக்கும் கலியாகிய அழுக்கைத் துடைத்து தெய்வத்தெளிவும், சிறப்பும் அருளி எமது இருப்பிடமாகிய கயிலையை எப்பொழுது தூய்மைப் படுத்துவீர் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறேன்.
.
நான் இத்தகைய ஏக்கங்களோடு தவித்துக் கொண்டு இருப்பதையும், அத்தனை தவிப்பையும் அடக்கிக் கொண்டு சந்தோசமாக இருப்பதுபோல் காட்சியளிப்பதையும் நீர் அறியவில்லையா? என்று சிவபெருமான் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட மகாவிஷ்ணு எல்லாம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
பத்திரகாளிக்குச் சிறை
======================
மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி
சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம்
நன்றான கன்னி நாரா யணரிடத்தில்
வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு
சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு
உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே
நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான்
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட
மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற
பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன்
அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன்
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப்
புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
.
விளக்கம்
========
அப்போது அங்கே, மாகாளியாகிய வடபத்திரகாளி, அதிசயிக்கத் தக்கச் செயல்களையுடைய மிகுந்த பலக்காரி வருகிறாள். வந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து, மண்ணில் புரண்டு அழுகிறாள்.
.
அனைத்துச் செயல்களுக்கும் ஆதாரமான மாயதி சூட்சனே, உமக்கு நான் பிழை செய்து விட்டேன். உம்முடைய மக்கள் சான்றோர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைக் கொடுமையாகச் சோழ மன்னன் கொன்று பழியேற்றுவிட்டான்.
.
அந்தப் பாதகனின் அச்செயலைத் தாங்க முடியாத நான், கரிகால் சோழனுடைய நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் போகவும், அதனால் அவனுடைய நாட்டில் எல்லாமே பட்டுப் போகவும், தட்டழிந்து, தடுமாறிப் போகவும், அந்தப் பாவியின் நாட்டில் பகலில் நரி நடமாடுமளவில் அந்நாடு காடாகிப் போகவும் சாபமிட்டேன்.
.
அது மட்டும் அல்லாமல் அந்தச் சோழ மன்னனும் அவனுடைய குடும்பத்தாரும் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் படி சாபமிட்டேன். இத்தனை சாபங்களையும் ஜபித்து, அவற்றை எல்லாம் நிறைவேற்றிவிட்டு, இப்போது உங்களுடைய மக்களின் செய்தியைச் சொல்வதற்காக உங்களை நாடி வந்தேன் என்றாள்.
.
.
அகிலம்
=======
அப்போத னாதி அய்யாநா ராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான்
பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ
நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ
தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார்
வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய்
நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால்
மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து
ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே
மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
.
விளக்கம்
=========
அதைக் கேட்டதும், ஆதியும் அந்தமும் இல்லாத மகாவிஷ்ணு, சிமிழ் போன்ற சிவபெருமானைப் பார்த்து, எனக்கு அனைத்துக் கிருபைகளையும் அருள் பாலிக்கும் சிவபெருமானே ! இந்தப் பத்திரகாளி சொல்லுவதைக் கேட்டீர்களா? இந்தப் பெண்ணின் பேச்சு நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதா?
.
என்னுடைய பிள்ளைகளுக்கு எவ்விதமான இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து வளர்ப்பேன் என்று என்னிடம் வாக்குறுதியளித்து, என் பிள்ளைகளை என்னிடமிருந்து வாங்கினாள்.
.
அப்போது மருட்டி விழித்தவள் இப்போது திருட்டு மொழி பேசும் செய்தியை நீர் கேட்டீரோ? நான் என்னுடைய பிள்ளைகளை இவளிடம் கொடுக்கும்போது நான் தனி ஒருவனாகக் கொடுக்கவில்லை. அதற்குச் சாட்சிகளாகப் பலர் உள்ளனர்.
.
நான் தனி ஒருவனாக என் பிள்ளைகளை அவளிடம் கொடுத்திருந்தால், நான் இப்போது சொல்லுவதைத் தப்பிதம் என்று கூடச் சொல்லத் துணியலாம். ஆனால், நான் இந்தப் பத்திரகாளியிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு, என் பிள்ளைகளைக் கொடுக்கும்பொது வானவரும், தானவரும், மறையவரும் சாட்சியாக இருந்தார்கள்.
.
பிள்ளைகளைக் கொடுக்கும்போது, என்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு இன்னல் ஏற்பட்டால் கூட மிகப் பெரிய சிறைவாசம் உனக்கு சித்திக்கும் என்று சொல்லித்தான் இவள் கையில் என் பிள்ளைகளைக் கொடுத்தேன்.
.
சிவபெருமானே, என் பிள்ளைகள் இறந்த உடனேயாவது வந்து சொன்னாளா? இத்தனை நடந்துங்கூட கொஞ்சமும் அச்சமில்லாமல் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு, இப்போது அவளுடைய புத்தி மனத்தை அச்சுறுத்தியதால் சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தோடுதான் இங்கே வந்திருக்கிறாள்.
.
அவள் பெற்ற பிள்ளைகளாக இருந்திருந்தால் இவ்வளவு பொறுமையாக இருந்திருப்பாளா? என் பிள்ளைகள் என்பதால் தானே தட்டிக் கேட்காமல் இருந்திருக்கிறாள். மாற்றான் பிள்ளைகளுக்காக மற்றொருவர் தம் உடமைகளை இழக்க முன்வரமாட்டார்கள். பெற்றவர்களுக்குப் பிள்ளைகளிடம் இருக்கும் கருதல் மனப்பான்மை மற்றவர்களுக்கு இருக்காது தானே. பெற்ற வயிறுதானே பிள்ளைக்கு ஒரு தீங்கு என்றதும் பெரும் நெருப்பாய்ப் பற்றி எரியும். மற்றவர்கள் வயிறு வருந்திக் குமுறாது.
.
பாவி அந்தச் சோழன் என் பாலகர்களைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் என் ஆன்மாவிற்குத் தெரியாமல் போய்விட்டதே. யாரேனும் வந்து என்னிடம் சொல்லவும் இல்லையே, தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் போல் என் பிள்ளைகள் திகைத்திருப்பார்களே. இவை யாவும் பரமனுக்கும் தெரியாமல் நடந்த பழவினையோ என்று சொல்லியவாறு பத்திரகாளையைப் பார்த்து, மாகாளியே இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் உடலோடு உயிர் திரும்பி எழுந்து வரும் காலம் வரை நீ சிறையிலே இரு என்று மகாவிஷ்ணு பத்திரகாளிக்கு உத்தரவிட்டார்.
.
மகாவிஷ்ணுவின் இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த பத்திரகாளி, கைலாசத்தில் வடவாமுகத்தில் அமைந்துள்ள அக்னி மண்டபத்தில் ஈசனின் செயலால் இந்தச் சிறைவாசம் நமக்கு ஏற்பட்டது என்று நினைத்துக்கொண்டே சிறையில் இருந்தாள்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.



![Ayya Vaikundar - DMuthu Prakash] 08 March 2026 7:44 pm DMuthu Prakash] 08 March 2026 7:44 pm - ShareChat Ayya Vaikundar - DMuthu Prakash] 08 March 2026 7:44 pm DMuthu Prakash] 08 March 2026 7:44 pm - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_195429_2363ee5f_1773015194161_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=161_sc.jpg)








