#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
.
விளக்கம்
==========
சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே.
.
.
அகிலம்
========
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
.
விளக்கம்
==========
செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே.
.
.
அகிலம்
========
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
.
விளக்கம்
==========
உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே.
.
.
அகிலம்
========
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
.
விளக்கம்
==========
எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே.
.
.
அகிலம்
========
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
.
விளக்கம்
========
பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன்.
.
.
அகிலம்
========
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
.
விளக்கம்
==========
நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


