#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 30.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
.
விளக்கம்
==========
இப்பூவுலகில் கலியழித்து தருமபூமியில் வாழும் மக்கள் தம்மைத் தாமே அறிந்து பொறுமையுடைய பெரியோராய் எல்லா இடங்களும் பரந்து வாழ்வர். அப்போது நீ தருமபூமியை அரசாட்சி புரிவாய்.
.
.
அகிலம்
========
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
.
விளக்கம்
==========
மூன்று கடல்கள் ஒன்றுகூடி ஒரு தீவைச் சுற்றி இருக்கும் சாதி பேதமின்றி ஒரே இனமாய்த் தோன்றும் அக்காலம் நீ ஆட்சி புரிவாய்.
.
.
அகிலம்
========
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
.
விளக்கம்
==========
தங்களுக்கு ஏற்றவாறு நியாயத்தைத் திருப்பித் தவறாக வாதம் பேசும் கோள் நிறைந்த நீசப்பாவிகளுக்குக் கேடு வரக்கூடிய காலத்தில் கிருஷ்ணனாகிய என் மகனே, வைகுண்டா உனக்கு நல்ல காலம் பிறக்கும்.
.
.
அகிலம்
========
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
.
விளக்கம்
==========
வானத்தில் வெள்ளி முதலியன மாறி மேகக்கூட்டங்கள் மாறி வானம் ஒன்றுமற்றதாகக் காட்சியளிக்கும் அக்காலம் உனக்கு வரும் நல்ல காலம் ஆகும். மகனே, இப்படியே நான் சொல்லச் சொல்ல உபதேசங்கள் வந்து கொண்டே இருக்கும், அவற்றைச் சொல்லி முடிப்பது முடியாது.
.
.
அகிலம்
========
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
.
விளக்கம்
==========
அவை எல்லாவற்றையும் சில உபதேசங்களில் அடக்கி உன்னிடத்தில் உரைத்துள்ளேன் அதை நீ உன் அகத்தில் நிலை நிற்கும் வகையில் நினைவில் நிறுத்தினால் நினைத்தவை எல்லாம் இனிதாக முடியும் என்மகனே. பெரியவனே பொறுமையும் தருமமும் எல்லாவற்றை விடவும் பெரியன.
.
.
அகிலம்
========
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே
வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
.
விளக்கம்
==========
எனவே அவற்றை எப்போதும் நீ கடைப்பிடித்து வந்தால் எல்லாம் உனது ஆசைப்படி நடக்கும். நல்லவர்கள் ஒரே நினைவாக ஒரே இறைவனை நினைத்தவண்ணம் இருப்பதே நலமாகும் என்று எல்லாரிடமும் சொல்லி வாழ்ந்து வா. பொல்லாதவரோடும் உன்னால முடிந்தவரை பொறுமையாகப் பதில் உரைத்திடு. பொறுமை வந்தவர்கள் தருமபதியை அறிவர். அப்படி பொறுமை வராதவர்கள் அழிவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


