கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
.
விளக்கம்
==========
பலவகையான உருவங்களை நான் எடுத்து இந்த உலகில் தோன்றி விளையாடுவேன். எனது தூலதேகத்தின் மகிமையை அறியாமல் உலக மக்கள் மயங்குவர். அன்பர்கள் எல்லாரும் என்னைக் கண்டதும் இன்பத்தில் என்னைக் கட்டிப்பிடித்து ஏங்கி ஏங்கி அழுவர்.
.
.
அகிலம்
========
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து
புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
.
விளக்கம்
==========
சிலர் இவ்வளவு காலமும் இவரை நம்பி இருந்தோம், புத்தி கெட்டோமே? என்று பேதலிப்பார். அச்சமயம் தீயோர்கள் எல்லாரும் மன்னர் பலர் சொன்னவற்றை ஏமாற்றி இவன் கண்டதாகச் சொல்லுகிறான்? என்று கூறுவர்.
.
.
அகிலம்
========
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
.
விளக்கம்
==========
அத்தகையோர் என் அன்போரைத் துன்பம் உண்டாக்கி அடிப்பர். மகனே சூட்சமமான சொரூபம் ஒன்று நான் எடுக்கும் காலம்தான் முக்கியமானது. உண்மையில் இது சூட்சுமம் நிறைந்தது. இதற்குப் பிறகு அன்பர்கள் மிகவும் பெரியோராய் ஆவர். இதை தாண்டிச் செல்லுகின்றவர் எல்லாரும் வல்லவரே.
.
.
அகிலம்
========
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
.
விளக்கம்
==========
இன்னும் ஒரு சூட்சுமம் சொருபத்தைச் சரியான அளவுள்ள வடிவத்துடன் எடுப்பதைச் சொல்லுகிறேன். மணியே, பராபரமே, நீ கேட்பாயாக.
.
.
அகிலம்
========
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
.
விளக்கம்
==========
குளத்தை விரைவாக ஆங்காங்கே வெட்டி உடைக்கவும், அக்கினியை எங்கும் சுழற்றி வீசி எறியவும், துர்க்கையை அனுப்புவோம் பூமியில் அவள் விளையாடிக் கொண்டிருப்பாள். கட்டிடங்கள் எல்லாம் அசைந்து ஆடி அழியும். தீயோர்கள் எல்லாரும் பதறி அறம் மெலிந்து ஓடிடுவர். பொறுமையை விரும்பும் பெரியோர்கள் நலமாக வாழ்ந்திருப்பர்.
.
.
அகிலம்
========
என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம்
மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
.
விளக்கம்
==========
பொன்மகனே உன் காலத்தை இன்னும் கூறுகிறேன் கேட்பாயாக. கெட்ட புத்தியுள்ள நசுறாணி அச்சமயத்தில் எழும்பித் தெச்சாணாபூமியில் ஆட்சியைப் பிடித்திட விரைந்து வந்து தோற்று ஓடுவான். பிறகு மொட்டைத் தலையையுடைய ஒருவன் வந்து ஆளத் துடிப்பான். முனையன் ஆகிய அவனும் தோற்று ஓடி ஆங்காங்கே அலைந்து திரிவான். பிறகு நசுறாணியும் இவனும் ஒரே மாதிரியாக அழிவர். இச்சமயம் உனது நல்ல காலம். மகிழ்ந்து இரு என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩


