#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்.
========
நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி
பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்
கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்
கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
.
விளக்கம்
=========
கடலில் பிறந்து ஞானம் பெற்ற வைகுண்டர் ஆங்காங்கே கண்ட கோவிலின் அலங்காரங்களைப் பார்த்தபடி சிறந்த கடற்கரை வழியே தெச்சணாபூமி நோக்கி நடந்தார்.
.
அகிலம்.
========
வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்
=====================================================
நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே
கடந்து முன்போன காண்டா மிருகமொடு
சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்
பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்
ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை
செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்
கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த
சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்
தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப்
பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து
.
விளக்கம்
=========
இப்படி நடந்து வந்த வைகுண்டர் முன்னால் ஏற்கெனவே கலியைக் கண்டு கண் காணாதவாறு பயந்து ஓடிய காண்டா மிருகம் சிங்கம், யாளி, செங்கருடன் குரங்கு, தீமையில்லாத இறஞ்சி, வெள்ளை நிறப்பட்சிகள், ஐந்து தலை நாகம், அஞ்சுகின்ற ஐந்து வகைச் சாரைகள், செந்தலைக் கருடன், அழிவில்லாப் பெரிய மிருகங்கள், அழகான பல வர்ணப் பட்சிகள்வரை, இன்னும் பல உயிரினங்கள் ஆகிய பொறுமைக் குல உயிர்கள் திருமபூமியை ஆளப் போகின்ற வைகுண்டர் வந்தார் என்று சொல்லி அவரைக் காணப் புறப்பட்டு வந்து அவர் மலர்ப் பாதங்களைக் கட்டி பிடித்து மகிழ்ந்தன.
.
அகிலம்
=======
வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு
சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே
வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று
கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்
கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்
செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய
.
.
விளக்கம்
=========
பிறகு அவை வைகுண்டரை நோக்கி, சித்தர்களின் குலத்துக்கு மன்னவனே, தெய்வப் பெருமானே, வைகுண்டரே, நீர் எப்பொழுது இங்கு வருவீர் என்று கையில் கிடைத்த திரவியத்தைக் காண முடியாதவரைப் போன்று இது நாள்வரை தவித்தோம். இப்பொழுது உம்மைக் கண்டதும் காற்றில் அகப்பட்ட கப்பல் கரையை அடைந்ததைப் போன்று நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறி விளக்க முடியாத அவர் திருப்பாதங்களை வணங்கின.
.
.
அகிலம்
========
வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே
தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்
என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே
.
விளக்கம்
=========
மீண்டும் வைகுண்டரை நோக்கி, வைகுண்ட பெருமானே, நாங்களும் உம்முடன் வருகிறோம். உமது பாதங்கள் எங்கள் முதுகின் மேல் தாங்கிட நாங்கள் பணிந்து தருகிறோம் என்று அவை எல்லாம் இரங்கித் தொழுதன.
.
.
அகிலம்
=======
நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்
ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது
இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ
இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்
குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்
என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு
அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்
.
விளக்கம்
=========
வைகுண்டர் அவற்றை நோக்கி, நல்லது நான் ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாளும்வரை பொறுத்து இருங்கள். உண்மையாக இது தப்பாமல் நடக்கும். இரண்டாவது சொல்ல உருவாகும் முன்னால் நீங்கள் என்னை அடையுங்கள். அதுவரை நான் முன்னால் அனுப்பிய கானகத்திலே வாழ்ந்து வாருங்கள். அங்கு என்னைச் சிந்தித்த வண்ணமாக வாழுங்கள். சிந்தனை மாறுபடாமல் இருங்கள். உங்கள் ஐம்புலன்களையும் அதற்குரிய விருப்பம்போல் விட்டுவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கக்கூடிய என்னை உங்கள் உள்ளத்தில் நிலை பெறச் செய்யுங்கள் என்று அவர் முன் தோன்றிய எல்லாவகை உயிரினங்களுக்கும் சட்ட விதிமுறைகளைக் கூறி அவற்றை அனுப்பி விட்டு மீண்டும் தெச்சணாபூமி நோக்கி நடக்கலானார்.
.
.
அகிலம்
=======
நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்
கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்
இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்
விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்
வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி
சூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்து
வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்
.
விளக்கம்
=========
பல திசைகளையும் கடந்து நல்ல வனவாசப் பகுதிகளையும் கடந்து, சில ஊர்களையும் கடந்து, கடற்கரை வழியே நடந்தார் அய்யா. பழரசங்களையும் கனிகளையும் உண்ட வண்ணமாக இரவும் பகலும் நடந்தார். விரைவாக வந்து கொண்டிருந்த வைகுண்டர் லீசா வீதியைக் கடந்தார். பிறகு கடற்கரை வழியாக வர வேண்டும் என்று எண்ணிச் சக்தி வாய்ந்த வைகுண்டர் விரைந்தார்.
.
.
அகிலம்
=======
கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்
=====================================================
கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார்
மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி
கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்
திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே
.
விளக்கம்
=========
கடற்கரையை அடைந்து நடந்து கொணடிருந்த வைகுண்டர், சூரியன் மென்மையானக் கதிர் வீசும் தன்மையைக் கண்டும், கடலினுள் பல பதிகளைப் கொண்டும் நடந்தார். அப்போது, கடல் விரைவாக வந்து கலி அழிக்கும் வைகுண்டரைத் தீர்த்தம் ஈடச் செய்து கடல் பெருமாள் வருகிறார். அவரைக் கண்டு களிப்போம் என்று கூறித் தைரியமாகக் அவரைக் கண்டு களித்துத் தொழுதது.
.
.
அகிலம்
========
முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு
வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே
இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்
சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்
தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்
நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்
ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ
இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து
நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே
.
விளக்கம்
=========
முத்துக்களும், சங்குகளும் வந்து வைகுண்டரை வணங்கி. முப்பூ நிலையை அடைந்த உயர்வான வைகுண்ட மன்னவரே, இவ்வளவு காலமும் தீய இயல்புடைய கலியன் துன்பத்தினால் நாங்கள் சிறுபொழுது கூட வெளியில் வராவண்ணம் கடலின் உள்ளேயே வாழ்ந்து வந்தோம். தருமபெருமானே, சுவாமி, நீர் இங்கு வந்ததால் மகிழ்ச்சியுடன் நாங்கள் உம்மோடு நாட்டிற்கு வந்து வாழ்கின்றோம் என்று அந்தக் கடல் உயிரினங்கள் கூறின. உடனே, வைகுண்டர் அவற்றை நோக்கி, ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாளும்வரை கடலினுள்ளே வாழ்ந்து வாருங்கள். இரண்டாவது சொல் உருவாகும்வரை நீங்கள் காத்திருங்கள் என்று கூறி வைகுண்டர் தெச்சணாபூமி நோக்கி விரைவாகச் சென்றார்.
.
.
அகிலம்
=======
கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்
ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்
திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து
கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து
ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று
காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
அங்கே கிடந்த திரவியப் பொருள்களும் கீழே கிடந்த காசுகளும் சேர்ந்து உயரே எழும்பி வந்து மகிழ்ச்சியுடன் நோக்கின. திடீர் என்று வைகுண்டர் ஆதிகேடன் பாம்புடன் வாழ்ந்து வந்த கயிலாசம் என்னும் முனியை அழைத்து அவனை நோக்கி, நீ மிகவும் கவனமாக இந்தத் திரவியங்களையும் காசுகளையும் கொண்டு சென்று பாதுகாவல் செய்து வைத்துக் கொள் என்று உரைத்துச் சம்பூரணதேவனாகிய வைகுண்டர் அவனுக்குச் சட்ட விதி முறைகளைக் கூறிவிட்டு தெச்சணாபூமி செல்ல வேண்டும் என்று மிகுந்த விரைவுடன் நடக்கலானார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


