#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 03.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கலிக்கு எடுக்க வேண்டிய அவதாரம் பற்றிய ஆலோசனை
=========================
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு
நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
ஓம்கார நாதத்தை ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அலை கடலினுள், வரைந்து வைத்த சித்திரத்தின் வனப்போடு மகாலட்சுமி தேவி மகரச் சிலைபோல் வளர்ந்து கொண்டிருக்கும் போது, மகரந்தம் உள்ள மலர்மாலைகளைச் சூடுகின்ற மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் சென்று, ஈஸ்வரா, கூட்டுக் கிளிபோல் என்னுடன் இருந்த கொடியிடையாள் மகாலட்சுமியை மகரச் சிலையாக வளரும்படி அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் எப்படி மைத்துனரே நலமோடு இருக்க முடியும்?
.
மகாலட்சுமியைக் கடலுக்குள் மகரச் சிலையாக வளர விட்டு விட்டு, அப்படி வளர விட்டதற்கான வழிமுறைகளைச் செய்யாமல் இங்கே சும்மா இருப்பது சரியாகுமா? என்று கேட்டார்.
இதை கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து, சிமிழ் கூடு போன்ற மகாவிஷ்ணுவே, மேல் நடப்புக் காரியங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை யாவையும் உடனடியாகச் சோர்வற்றுச் செயல்படுத்தும் என்றார்.
.
.
அகிலம்
=======
சம்பூரணத்தேவன் பரதேவதை ஆகியோரின் தவத்தைப் பரிசோதித்தல்
=====================================================================
சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு
அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
.
விளக்கம்
=========
அதனால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சிவடிபருமானைப் பார்த்து, நலமே அருளினீர் ஈசுரரே என்று சொல்லிக்கொண்டே, ஈசுரரே ! நம்மையே நாடுகின்ற தேவாதிகளில் வல்லவனான சம்பூரணத் தேவனும், எமலோகத்திலுள்ள பரதேவதை என்னும் பெண்மணியும் இணைபிரியாத கணவனும் மனைவியுமாக வாழ்வதற்காக பூலோகத்தில் பிறவி அமைக்க வேண்டும் என்று நம்மை வேண்டி உருவேற்றி உயர்வான தவத்தினை மேற்கொண்டு உள்ளனர்.
.
ஆகவே, அவர்களைச் சில குறைபாடுகளுடன் பூலோகத்தில் பிறக்கச் செய்வதற்கு இந்தநாள் ஏற்புடையதாக அமையும். எனவே, அவர்களின் தவம் இப்போது எந்த அளவில் உள்ளது என்பதை அறிவதற்காகத் தாங்கள் என்னுடன் இப்போதே எழுந்தருளி வாருங்கள் என்று சிவபெருமானை மகாவிஷ்ணு அழைத்தார்.
.
அழைப்பை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், சம்பூரணத் தேவனும், பரதேவதையும் தவமிருந்துகொண்டிருக்கும் இடத்திற்கு மகாவிஷ்ணுவோடு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் வருகையை உணர்ந்த தேவேந்திரன் அவர்களை வரவேற்பதற்காக விரைந்து எதிரே செல்கிறான்.
.
தேவேந்திரன் திருமுடியோ, மும்மூர்த்திகளின் நடுவரும், விமோசன கர்த்தாவுமாகிய மகாவிஷ்ணுவின் திருமுடியைப் போன்று சங்கு சரம்போல் தங்க நவரத்தினத்தால் எங்கும் ஒளிவீசும் இயல்புடையதாகும்.
.
சம்பூரணத்தேவனை நோக்கிவருகின்ற சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வரவேற்ற தேவேந்திரன் அவர்கள் இருவருடனும் வந்து கொண்டிரப்பதை சம்பூரணத்தேவன் காணுகின்றான். அவனுடைய கவனமெல்லாம் தேவேந்திரன் திருமுடிமேல் செல்கிறது.
.
அதனால் தாம் தவமிருக்கிறோம் என்ற நினைவை மறந்த சம்பூரணத்தேவன், தம்மோடு தவமிருந்து கொண்டிருக்கும் தம் காதலியாகிய பரதேவதையைப் பார்த்து, பெண்ணே ! அதோ சிவபெருமான், மகாவிஷ்ணு இருவரோடும் வந்து கொண்டிருக்கிற தேவேந்திரனின் தலையில் இருக்கின்ற சங்குசரத் தங்கத் திருமுடியைப் பார்... ஆகா அந்த அழகிய திருமுடியை என்னுடைய தலையிலே சூட்டி, பூலோகத்தையே ஆளுவதற்கான இரத்தின சிங்காசனத்தில் உன்னோடு நான் மன்னாதி மன்னனாக அமர்ந்திருந்து, சப்தமாதர்கள் பெற்ற மக்களை எல்லாம் நம் அருகில் வைத்து, ஏற்புடைய என் ஆணைப்படி பூலோகத்தில் வலிமைமிகு நீதியை நிலவச்செய்து, மகிழ்ச்சியோடு நாம் அரசாட்சிபுரிவதற்கும், சிறப்போடு வாழ்வதற்கும் உற்றதோர் திருமுடி இதுவல்லவா? என்று தம் பேராவலைப் பரதேவதையிடம் ஏக்கத்தோடு கூறினான்.
.
அதைக் கேட்ட பரதேவதையின் எண்ணத்திலும் அந்த ஆசை எழுந்தது. என்றாலும் அவள் சம்பூரணத்தேவனைப் பார்த்து நீங்கள் சொன்ன வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி நம்மை இறைவன் படைத்திருந்தால் இப்போது இருக்கின்ற இந்தத் தேவேந்திரன் இறந்தல்லவா போக வேண்டியிருக்கும்? என்று தேவேந்திர பதவிக்கான தகுதியை மறைமுகமாக சம்பூரணத் தேவனுக்கு உணர்த்தினாள். அதனால் அதிர்ச்சி அடைந்த சம்பூரணத் தேவன் ஆற்றொணா அலைபோல் ஏக்கம் மிகுந்த பெருமூச்சு விடலானான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


