#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாலெட்சுமி மகரமாதல்
==========================
லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
.
விளக்கம்
=========
சிவபெருமானிடம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று சொன்ன மகாவிஷ்ணு, அடுத்த ஏற்பாடாக மகாலட்சுமியை அழைத்துச் சொல்லுகிறார். தெளிவான ஒளியாய்ச் சுடர்விடும் தருணத் திரவியமே, என்னுடைய தேவியே, இந்தக் கலியுகத்திற்கு முன்பு நிகழ்ந்த துவாபரயுகத்தில் நீ உருப்பிணியாய் (ருக்குமணியாக) அவதரித்திருந்தாய்.
.
அமிழ்திலும் இனிய மாதே, இப்போது நான் கலியாகிய மாய்மாலத்தை அழித்து ஒழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன். எனவே, என்னுடைய நாயகியாகிய நீயும், இப்போது பேரழகுப் பொன்மகரப் பெண்மயில்போல் முருகபெருமான் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர் கடலினுள் வளர வேண்டும்.
.
என் கண்ணின் மணியாகிய நீ, கடலினுள் பொன்மகரச் சிலையாக வளர வளர உன்னைச் சூழ்ந்து தங்க நவரத்தினங்களான மண்டபங்களும், தேனிலும் இனியதாய் விரும்பத்தக்க மண்டபங்களும் தெருக்களும், சிங்காசன மேடையும், அவற்றைச் சுற்றிலும் பலவிதமான அரங்குகளும் வளரும். அது வளருமளவில் தெய்வ ரம்பையர்களையும் சூழ வைத்து, அத்துடன் எக்காளமொடு பேரிகையும் முழங்க சித்திர வல்லுநர்களெல்லாம் உன்னைச் சுற்றிச் சேவித்து நிற்க, அகரத்தெரு, அரம்பையர்கள் தெரு, சிகரத்தெரு போன்ற தெருக்களெல்லாம் உன்னைச் சுற்றிலும் உருவாகச் செய்வேன்.
.
தினந்தோறும் வலம்புரிகள் முழங்கி உன்னை வணங்கும், உன்னைச் சுற்றிலும் கோட்டைகள் அமைத்து, கொடி மரமும், கொடிமர மண்டபமும் முகித்து வீட்டு அலங்காரம் போல் பல வேலைகளைச் செய்து தருவேன். அங்கே உன்னுடைய திருமேனியோ உரசிப் பார்க்க வேண்டியதில்லாத் தங்கமாகச் செந்தழல்போல் மின்ன மகரச்சிலையாக நீ வளர்ந்துயிரு.
.
.
அகிலம்
========
கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை
வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
.
விளக்கம்
=========
நீ மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, கலியுகத்தை முடிப்பதற்காகக் கண்ணான ஓர் உயிரை, வலிமையுடையதாக உன் வயிற்றில் பிறவி செய்து, அந்த குழந்தையின் மூலமாக உலக மக்களின் மனங்களில் படிந்திருக்கின்ற அழுக்கான கலியைத் துடைத்து, அவர்களைத் தூய்மையான மக்களாக்கிய பின்பு உன்னுடைய மகனுக்கு இந்த உலகத்தையும், உலகத்தை அரசாளுவதற்கான மேன்மையான திருமுடியும், நாம் விரும்புகின்ற தர்மயுகத்தை உருவாக்குவதற்கான செங்கோலும் கொடுத்து அரசாள வைக்கவேண்டும். அந்த ஆண்பிள்ளை உன் மூலமாகப் பிறக்க வேண்டும். எனவே மேன்மகளே ! நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலைபோல் வளரச் செல்க என்று மகாலட்சுமி தேவியிடம் கூறினார்.
.
.
அகிலம்
மகாலட்சுமியின் கேள்விக்கு மகாவிஷ்ணுவின் பதில்
====================================================
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணு கூறியதைக் கேட்ட மகாலட்சுமி, கிளிபோன்று மொழி பேசும் தம் திருவாயால், உலகையே தம் உடமையாகக் கொண்டுள்ள நாராயணப் பரம்பொருளே ! நான் திருப்பாற் கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்தால் உயர்ச்சி மிகுந்த கோபுரமே திவ்விய சித்தமே தாங்கள் என்னிடம் என்ன விதமாக வடிவெடுத்து வருவீர்கள். நீங்கள் என் அருகில் வரும்போதுள்ள அடையாளத்தை என்னிடம் இப்போது சொல்லங்கள் என்று மகாலட்சுமி கேட்டாள்.
.
.
அகிலம்
=======
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்
பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே
இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
.
விளக்கம்
=========
மகாலட்சுமியின் கேள்வியால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சொல்லுகிறேன் கேள் என்று நிகழவிருக்கும் நிசழ்ச்சியினைத் திருமகளாகிய மகாலட்சுமியிடம் சொல்லுகிறார். தேவி, நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, என்னிடம் சிவபெருமானும், பிரம்மதேவனும் ஒருசேரத் திரண்ட பரப்பிரம்மமாக வருவோம்.
.
அப்போது என் கண்களில் ஞான சூரியர்கள் பதிந்திருப்பர். என்னுடைய நெற்றியிலோ, பிறை வடிவச் சந்திரனும், வடவாமுக அக்கினி என்னும் ஊழித்தீயும் ஒளிப்பிழம்பாகி என் மேனியைச் சூழ்ந்து எண்ணாயிரம் தூய்மைத் தரம்வாய்ந்த அக்கினிச் சுவாலையெனப் பிரகாசிப்பேன். அந்நிலையில் என்மேனி பதினான்கு லோகமும் நிறைந்த விஷ்வரூபமாகத் தெரியும். அதன் வெப்பத்தால் கடல் நீரெல்லாம் நெருப்பாகக் கொதிக்கும்.
.
நீ மகரச் சிலைபோல் வளரப்போகும் திருச்செந்தூர் கடலிலிருந்து நேர்மேற்காக ஏழு காதம் அதாவது, எண்பத்து நான்கு மைல்தொலைவில் திருவாங்கூரை ஆண்டு கொண்டிருக்கும் கலியரசன் அன்றே எரித்தொழிவதற்கான சீதாங்க பாஷாண வெற்றிக் குண்டலத்தை என் காதுகளில் அணிந்தும், கணீர் கணீரென ஒலிக்கின்ற தர்ம மாமணிகளைக் காலில் தண்டையாக அணிந்தும், எல்லா வேதங்களும் என் மேனி முழுவதும் மேவி மிளிரும் நிலையோடு நான் உன் அருகே வருவேன்.
.
பெண்ணரசே ! நான் உன்னருகே வருகிறேன் என்பதற்கான பெருமைக்குரிய அடையாளங்கள் இதுவேயாகும். இத்தகைய என் வரவை நீ எதிர்கொள்ள வேண்டுமானால், என் கண்ணரசே, நீ இன்று முதல் எந்நேரமும் என்னுடைய நினைவாகவே இருக்க வேண்டும். அப்படிக் கருத்தாக இருந்தால் மட்டுமே நீயும் பிழைப்பாய்.
.
இவ்வண்ணமாக நான் உன்னிடம் வந்து, நாம் இருவரும் ஒருமித்து, ஒரு பிள்ளையைப் பெற்று இந்த யுகத்தைப் பரிசோதிப்பதற்காக உடனே அனுப்பி வைத்து, குறுகிய எண்ணங்களோடு உலகுக்குக் கேடு செய்து கொண்டிருக்கின்ற பாவக் கலியை அடியோடு அழித்து, நாம் அமுதமென ஈன்ற மதலைக்கு முடிசூட்டி உலகாள வைத்து, நாம் உவகை கொள்ளவேண்டும் என்று வைகுண்ட அவதாரத்திற்கான ஏற்புடைய அடையாளங்களை மகாலட்சுமியிடம் உரைத்த மகாவிஷ்ணு மீண்டும் லட்சுமியைப் பார்த்து நன்றினிய மாதே, நாம் இச்செயலில் ஈடுபடப்போவது குறித்து உனக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதோ என்று இதமாகக் கேட்டார்..
.
.
தொடரும்…. அய்யா உண்டு.


