கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும்
ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்
சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ
.
விளக்கம்
=========
இதற்கு முன்பு நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும் அசுரர்களை விதம் விதமாக, அதிகமான பலமுடையவர்களாய் வேகமாகப் பிறவி செய்துள்ளீர். முதல் முதலாக தாங்கள் பிறவி செய்த குறோணி இந்த உலகத்ததையே விழுங்க முற்பட்டானே அவனை அழித்தவர் என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
இரண்டாவது யுகத்தில் குண்டோமசாலியனாய்ப் பிறவி செய்தீரே அவன் விண்ணுலகை விழுங்குவதற்காக ஆர்ப்பரித்து நின்றானே அவனைக் கொல்வதற்கு என்னைத் தவிர வேறு யாரும் உண்டா?
மூன்றாவது யுகத்தில் மல்லோசிவாகனனைப் பிறவி செய்தீரே அவன் தேவர்களையும் தெய்வமாதர்கள் மூவரையும் தமக்கு வேலை செய்யப் பணித்தபோது, அவர்களிட்ட அபயக் குரலைப் பொறுத்துக் கொள்முடியாமல், என்னை ஓடிப்போய்க் காப்பாற்று என்றீரே, அப்போது அவர்களை சிறைபிடித்த அரக்கர்களை அழித்தது என்னைத் தவிர வேறு யாராவது உண்டா?
.
.
அகிலம்
========
நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன்
ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே
நாட்ட முடனே நாடும் படையோடு
கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க்
கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத்
தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து
இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி
உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர்
தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால்
மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால்
என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச்
சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே
விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப்
பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ
உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச்
செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே
.
விளக்கம்
=========
நான்காவது யுகத்தில் சூரபத்மனைப் பிறவிசெய்து அவன் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்ததுமல்லாமல் உம்முடைய கயிலையையும் அவனிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக என்னிடம் ஓடிவந்து என்னுடைய இருப்பிடமான கடலில் வந்து தங்கினீர். அப்போது அந்த சூரபத்மன் செய்த கொடுமையைத் தாங்காத தேவர்களின் அபயக்குரல் கேட்டு, அந்தச் சூரனை வதைக்க என்னை அனுப்பி வைத்தீர், அந்த அரக்கனோடு போர் புரிந்து நான்பட்ட இன்னல்களை எடுத்துரைத்தால் தாங்குமா?
.
.
அகிலம்
========
இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து
தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான்
பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து
கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம்
பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து
உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து
அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக்
குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப்
பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே
தேவியும் நானும் தேசமதி லேபிறந்து
அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச்
சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு
.
விளக்கம்
=========
மீண்டும் அவனை அதேயுகத்தில் இரணியனாய் எனக்கு எதிரியாய்ப் பிறவி செய்தீர். அவனை அவனுக்கே மகனாகத் தோன்றி அவனை அழித்தேன்.
.
ஐந்தாம் யுகத்தில் அவனை இராவணனாகப் பிறவி செய்தீர். அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தீர். வரமா அது? அல்ல உம்முடைய அருள் சக்தி அனைத்தையும் இராவணனுக்குக் கொடுத்துவிட்டீர். அதுமட்டுமல்லாமல் உம்முடைய இருப்பிடமான கயிலை மலையையும் அவனுக்குத் தாரைவார்த்துவிட்டீர்.
.
அப்பெரும் வலிமையினால் அவன் மூன்று லோகங்களையும் அடக்கி ஆண்டு அராஜகம் பலபுரிந்தான். அவனை நானும், திருமகளும் அவதாரம்புரிந்து அழித்தோம். உம்முடைய வலிமையாகிய சக்தியை மீட்டுத் தந்தோம்.
.
.
அகிலம்
========
சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு
சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
.
விளக்கம்
=========
ஆறாவது யுகத்தில் அவனைத் துரியோதனனாகப் படைத்தீர். அவனனை நான் எப்படிக் கொன்றேன் என்பதை இங்கே எடுத்துச் சொல்ல இயலுமா? அந்த யுகத்தில் கம்சன் என்று ஒரு கயவனைப் பிறவி செய்து வைத்தீரே… அடடா அந்த அரக்கனிடம் அடியேன் பட்ட அவலங்களை எடுத்தியம்ப எவராலும் ஏலாது. இதையெல்லாம் நான் நினைத்து பார்க்கும்போது சிவபெருமானே உமக்குச் சூடு சொரணை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவேதான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு எனக்கு அவ்வப்போது அலைச்சலை உண்டாக்குகிறீர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚


