#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
அனைவரும் திருச்செந்தூர் புறப்படல்.
======================================
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து
கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்
தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
.
விளக்கம்
==========
பிறகு வியாகரரை அனுப்பிய திருமால், ஈசரை மார்புறத் தழுவி அழைத்துக் கொண்டு, கேதாரக் கோவிலை விட்டு அகன்று, கயிலையின் மூலப்பகுதிக்கு வந்து அமர்ந்து சங்கக் கூட்டத்தை நோக்கிக் கூறலுற்றார்.
.
செந்தூர்க் கடலில் நான் சென்று, அங்கே பள்ளி கொண்டிருந்து, என் விந்து வழிக் குல சான்றோர் வழியில் பிறவி செய்து வித்தைகளுக்குத் தலைவனை பெற்றெடுத்து, இத்தேசத்தின் பாவ புண்ணிய பரிசோதனை செய்த் தெச்சணாபூமிக்கு அனுப்பிவிட்டு மிகுந்த இன்பமுடன் நான் இங்கே திரும்பி வருவேன் என்றுரைத்தார்.
.
.
அகிலம்
========
அப்போதீ சுவரரும் ஆனசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
.
விளக்கம்
==========
இதைக் கேட்ட ஈசரும் அங்குக் கூடியிருந்த ஏனைய சங்கத்தோரும் திருமாலை நோக்கி, இப்பொழுதே நாங்களும் உம்மோடு வருவோம் என்று உரைத்தனர். உடனே, திருமால், நான் இப்பொழுது சொல்லுகின்ற மறை பொருள் உபதேசத்தை நீங்கள் அறிய முடியாது. சம்பூரண தேவனும், இலட்சுமியும், தேவகன்னிகளும், மூவரும்கூட இதன் உண்மை இரகசியத்தை அறிய முடியாது. நான் நடத்தும் செயல்களை நடந்து முடிந்த பிறகே அறிந்து கொளவர். நடந்து முடியும் முன்னால் எவரும் அறிய முடியாத மாயப்பொருள் அடங்கிய உயர்வான உபதேசமொழி இதுவாகும் அல்லவா? எனவே, நீங்கள் எல்லாரும் என்னுடன் வந்தால் அது சரியன்று. ஆனால், நீங்கள் வரக் கூடாது என்று நான் கூறினால் நீங்கள் வருந்துவீர்களே? என்று திருமால் கூறினார்.
.
.
அகிலம்
========
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடி
.
.
விளக்கம்
==========
இதைக்கேட்ட அவர்கள், திருமாலை நோக்கி, நாங்கள் உமது உபதேச இரகசியம் முதலிய எதையும் அறிய முடியாது. இருப்பினும், நாங்கள் உம்மோடு வருகின்றோம் என்றனர். உடனே, திருமால் தமக்குரிய இலட்சுமியின் நினைவு மேலிடத் திருச்செந்தூர் நோக்கி நடக்கலானார். அவரோடு ஈசரும், சக்திதேவியும், தேவர் முதலியோரும், மாமுனிவர்களும், கின்னரரும், வானலோகக் கங்கக் கூட்டங்களும் சகல கலைவாணர்களும், மங்களக்காரர்களும் சென்றனர். மேலும் அழகு பொருந்திய அரம்பையர்களும், வேதம் கூறும் பெண்டிர்களும். அலை அலையாய்க் கன்னிகளும், சக்திதேவிக்குப் பணிவிடைகள் செய்து சூழ்ந்து வர ஏழு வகை வாத்தியங்களை எமலோகத்தில் உள்ளவர்கள் வாசித்து வர, அவர்களை வணங்குனின்ற சிலர், தொம் தொம் எனச் சத்தம் உருவாக்கி ஆடி வர எல்லாரும் திருமாலைப் பின் தொடர்ந்தனர்.
.
.
அகிலம்
========
கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
.
விளக்கம்
==========
திருமால், திருச்செந்தூர்க் கடலில் ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அக்குழந்தையைக் கன்னியர் நடனமாடும் தெச்சணாபூமியில் பாவ புண்ணிய கணக்கெடுக்க நகர்சோதனைக்கு அனுப்பி கலியை அழித்து உலக மயக்கத்தால் ஏற்படும் அச்சம் முதலியவற்றையும் அழித்து, நிரந்தரத் தன்மையுள்ள தருமபதியில் கன்னி மக்களாகிய சான்றோர் ஆட்சி புரிவதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தி ஆகிய அவ்வைகுண்ட நாதன் வரப் போகின்றார் பேறு பெற்றவர்கள் அவரைக் கண்டு உயர்வான தருமபூமியை அறிவர் என்று சில வாத்தியங்கள் இசைந்து இசைந்து ஊதி வர, பசுக் கூட்டங்களை மேய்த்த திருமால் கயிலை மலையைக் கடக்கலானார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


