ஒன்றிய பட்ஜெட்-2026 சாமானிய மக்களை ஏமாற்றியுள்ளது! - எஸ்டிபிஐ
வேலையின்மை மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சாமானிய மக்களுக்கு உண்மையான நிவாரணம் அளிக்கும் எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லாமல், வெறும் பெருமிதமான அறிக்கைகளாலும், சுய புகழ்ச்சிகளாலும் நிரம்பிய ஒரு ஆவணமாக ஒன்றிய பட்ஜெட் 2026 அமைந்துள்ளது என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயல்தலைவர் முகமது ஷஃபி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது; உணவு, எரிபொருள், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி ஆகியவற்றின் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சாமானிய குடும்பங்கள் தத்தளிக்கும் இந்த நேரத்தில், இந்தப் பட்ஜெட் மிகைப்படுத்தப்பட்ட கணிப்புகளையும் நீண்டகால வாக்குறுதிகளையும் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பொருளாதார நெருக்கடிகளைக் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளது. சாதாரண இந்தியர்களின் நிதர்சன வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக இந்தப் பட்ஜெட் தெரிகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் இருந்தபோதிலும், வருமான வரி வரம்புகள் (income tax slabs) எவ்வித மாற்றமும் இன்றி உள்ளன. இது வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்துவரும் சம்பளக்காரர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. வரிச் சலுகைகள் அல்லது வருமான ஆதரவு வழங்க மறுப்பதன் மூலம், அரசு உள்நாட்டு நுகர்வை பலவீனப்படுத்தி, பொருளாதார மீட்சியை மேலும் தாமதப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பட்ஜெட் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி எதுவும் பேசவில்லை. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் கணிக்க முடியாத சந்தை நிலவரங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் அமைப்புசாரா விவசாயிகளுக்கு அர்த்தமுள்ள சலுகைகளும் வழங்கப்படவில்லை. வருமானப் பாதுகாப்பு இல்லாத நிலையில், கிராமப்புற துயரங்கள் மேலும் ஆழமடையும்.
தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது இன்னும் கவலை அளிப்பதாக உள்ளது. லட்சக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் அவர்களை மேம்படுத்தும் பயனுள்ள நலத்திட்டங்கள் அல்லது வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் எதுவும் இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் வருமான ஆதரவு குறித்த மௌனம், சமூகப் பொறுப்பில் கடுமையான தோல்வியை பிரதிபலிக்கிறது.
நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் "சப்கா சாத், சப்கா விகாஸ்" (அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி) என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். ஆனால் சிறுபான்மை சமூகங்களை மேம்படுத்துவதற்கான உறுதியான திட்டங்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்திய தலையீடுகள் இல்லாதது, சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்துகிறது.
ஆகவே, மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட்டானது வேலைவாய்ப்பு, விலை கட்டுப்பாடு, வருமானப் பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சமூகத்தின் பெரும்பகுதியினர் பாதுகாப்பின்மைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும்போது, உள்கட்டமைப்பு எண்களால் மட்டும் வளர்ச்சியை அளவிட முடியாது. நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையாக சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு முகமது ஷஃபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩


