#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் வெள்ளி 03 04 2026*
*முன்னுரை*
“நாசரேத்து இயேசு - யூதர்களின் அரசன்” என்று பிலாத்து எழுதிய வார்த்தைகள், இயேசுவின் திருப்பாடுகளின் மையமானது என்பதையும் பாடுகளின் பலனாக பாவ மீட்பு என்பதை அறிந்து அனுபவிக்கவும் இப்புனித வெள்ளி நம்மை அழைக்கின்றது. இறை மைந்தன் மானிட மகனாகி, மறுரூபமாகி, பாவிகளை மீட்க, பாவிகளின் கரத்தினால் சிலுவையில் அறையப்பட்டதே இப்புனித வெள்ளி.
பாவிகளால் சுமக்கப்பட்ட சிலுவை பாவமே அறியாத செம்மறியின் தோள்களைத் தொட்டதும் தூய்மை அடைகின்றது. கிறிஸ்தவர்களுக்குரிய அடையாளமாய் உயர்ந்து நிற்கிறது. மீட்பின் அடையாளம் மகிமையடையவும், அதனால் நம்மால் மகிழ்வை பகரவும் இப்பலியில் வேண்டுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியரின் பாடுகளை எடுத்துரைக்கின்றார். தம்மையே சாவுக்கு கையளித்தார் என்று இயேசுவின் பாடுகளை முன்னறிவிக்கின்றார். இயேசுவை அறியும் முன்னே, அவரது பாடுகளை அறிக்கையிடுகின்றார் இறைவாக்கினர். அவரது பாடுகளை அறிந்துள்ள நாம், அதை விசுவசிக்கும் நாம், பிறரின் பாரங்களையும் பாடுகளையும் சுமக்க மனதையும் உடலையும் பக்குவப்படுத்துவோம்.
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவுக்கு வழங்கிய சிலுவை மரணத் தீர்ப்பு முதல் இயேசுவின் இறப்பு வரை பாடுகளை எடுத்துரைக்கிறது. விபச்சாரிக்குக் கூட தீர்ப்பிடாதவர் இன்று நீதியற்றவர்களால் சிலுவை மரணத்திற்கு தீர்ப்பு பெறுகிறார். அற்புதங்களைச் செய்த கரங்களிலும், நற்செய்திக்காக நடை போட்ட கால்களிலும் ஆணிகள் அடிக்கப்படுகின்றன. விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவனின் மகன், அரசனுக்கும் மேலானவர் முள்முடி சூட்டப்படுகின்றார். செவ்விளம் மேனியில் சாட்டைகளால் இடப்பட்டு சிவந்த வரிகள். மனித சாயலே மறைந்து போனது. ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்று தன் உயிரையும் அர்ப்பணிக்கிறார். எல்லாம் யாருக்காக? சிந்திப்போம். சிலுவை முத்தி என்பதை சடங்காக அல்லாமல், உலக சிலுவையைச் சுமப்பவர்களுக்கு தோள் கொடுப்போம். இயேசுவின் பாடுகளுக்கு பயன் சேர்ப்போம்.
*நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.*
*“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16*
*மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.*


