#🧐நாட்டு நடப்பு #📺வைரல் தகவல்🤩 #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
#Throwback April 3rd
''படத்துல எல்லாம் நடிக்கிறியே...'' - விஜயகாந்த்
25 வருடங்களாகி விட்டது, நடிகர் விஜயகாந்த் பற்றி எழுத ஆரம்பித்து. 'தொழில்நிமித்தமாக' மட்டுமே சந்தித்துப் பேசியிருக்கிறேன். இதுவரை 'பெர்சனல்' விஷயத்துக்காக அவரை நான் சந்தித்ததில்லை. பேசவும், பழகவும் இனிமையானவர் விஜயகாந்த். இது, அவரது ஆரம்பகாலத்தில் இருந்து பழகிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
விஜயகாந்த் அரசியலுக்கு சென்ற பிறகு பெரும்பாலான சினிமா பத்திரிகையாளர்களுக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கு ஒரு கொள்கை இருக்கும். நமக்கேன் அரசியல் என்று விலகியிருப்பேன்.
நேற்று காலை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் 'சகாப்தம்' படத்தின் பிரீவியூ நடந்தது. அனைவரும் கூடியிருந்தோம். அப்போது புரட்சிக்கலைஞரின் கார் உள்ளே வந்தது. அதுவரை என்னென்னவோ கமெண்ட் அடித்துக்கொண்டிருந்த சினிமா பத்திரிகையாளர் கூட்டம், விஜயகாந்தை பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல மொய்த்தது. சிலர் அவரது காலை மிதித்தனர். பலர் அவரது முகத்தில் மைக்கை நீட்டி, 'பேசுங்க' என்று கர்ஜித்தனர். அவர் பார்க்காத கூட்டமா? கையில் பிடிக்காத மைக்கா?
வழக்கமான தோரணையுடன் தியேட்டருக்கு உள்ளே வர முயன்ற அவர், முதலில் மூத்த பத்திரிகையாளர் தேவிமணியைப் பார்த்து சிரித்து, 'என்ன மணி...' என்றபடி தோளில் கை போட்டார். பிறகு என்னைப் பார்த்து, 'என்ன தேவராஜி... படத்துல எல்லாம் நடிக்கிறியே...' என்றார். அவரது வியப்புக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. பிறகு முன்னாள் பத்திரிகையாளர் பழனிகுமார் வந்தார். அவரையும் எங்களுக்கு அருகில் நிற்க வைத்து, சண்முக பாண்டியனையும் அழைத்து, 'இவங்கள்லாம் பழைய ஆளுங்கப்பா' என்றார்.
அங்கிருந்த போட்டோகிராபர்களிடம், 'எல்லாரையும் சேர்த்து போட்டோ எடுங்கப்பா' என்றார். அதுதான் இங்குள்ள போட்டோக்கள். எடுத்தவர், நாளைய இளம் ஹீரோ சுரேஷ். பிறகு விஜயகாந்த், சினிமா பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து 'சகாப்தம்' பார்த்தார். முடிவில் தியேட்டர் வாசலில் நின்ற அவர், மீடியாக்காரர்களின் 'நெருக்கடி'யை சமாளிக்க முடியாமல், 'இதுக்குதான் நான் பிரஸ்சு பக்கமே வர்றதில்லை' என்றபடி, விருட்டென்று காரில் ஏறி கிளம்பிவிட்டார்.


