கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 12.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை
வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
.
விளக்கம்
==========
சோழமன்னனுக்கு எதிராக அடுத்த நாட்டு மன்னர்கள் சூது செய்தாலோ, படையெடுத்து வந்தாலோ, அவர்களை எதிர்த்து போரிட்டு வெற்றிபெறும் இவர்கள், யானைச் சின்னத்தை மகுடத்தில் பதித்து அழிக்க முடியாத படைகளைப் கூட அழத்து வெற்றி விருதுகளைப் பெற்று, வீரத்தனமாக ஆட்சிபுரிந்தனர்.
.
.
அகிலம்
=========
துவாபரயுகத்தின் இறுதிகால சம்பவம்
=========================================
கலியன் பிறப்பு
===============
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே
சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
.
விளக்கம்
==========
சான்றோர்கள், செப்பவொண்ணாச் சிறப்புகளோடு, சோழன் கொடுத்த பகுதியைத் தமக்குள்ளாக்கிவைத்து தர்ம நியதிகளுக்கு தப்பரவில்லாமல் அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தார்கள். அப்போது மகாவிஷ்ணு, உலகமே வியக்கத்தக்க நிலையில் ஸ்ரீரங்க மாபதியில் அமர்ந்து அருளாட்சி புரிந்துகொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் கலியுகம் பிறந்தது. அதன் காரணமாக உலகுக்குக் கேடு ஏற்பட்டது என்ற செய்தியை மகாவிஷ்ணு தன் இணையாளாகிய அன்னை மகாலட்சுமிக்குச் சொல்லும் பாங்கினை அவர்தம் மக்களாகிய நமக்கு அரிகோபால சீசரின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானையில் அருளுகிறார் அதையும் அறிவோமாக.
.
பிரபஞச்சத்தின் தொடக்க காலத்தில் தீவினைகளின் முதல்வனாகத் தோன்றிய குறோணி என்னும் கொடியவனிடம் குடிகொண்டிருந்த காமம், குரோதம், லோபம், மோகதம், மதம், மாச்சரியம் எனப்படும் உட்பகைகள் ஆறையும் தனித்தனி கூறுகளாக்கும் விதத்தில் பகிர்ந்து அவனை ஆறு கூறுகளாக வகுத்துக் கொல்லப்பட்டது.
.
அவற்றில் ஒரு பகுதியை குண்டோமசாலியாகவும், இரண்டாவது பகுதியை தில்லைமல்லாலன், மல்லோசி வாகனனாகவும், மூன்றாவது பகுதியை சூரபத்மன், சிங்கமுக சூரனாகவும் மீண்டும் இரணியனாகவும், நான்காவது பகுதியை இராவணனாகவும், ஐந்தாவது பகுதியைத் துரியோதனாதிகளாகவும் பிறப்பிக்கப்பட்டனர்.
.
இப்படி முதற் பிறவியாகிய குறோணியோடு ஆறு முறை அவன் பிறந்தும், அவனுடைய எந்தப் பிறவியிலும், இறைவனை முதன்மையாக நினைத்து வாழாமல் உலகை ஆளாமல் நீதிநெறி தவறிய நீசனாகவே வாழ்ந்து விட்டான். அத்தகு குணமுடைய குறோணியின் உடலிலுள்ள ஆறு கூறுகளில் இன்னும் ஒன்று இதுவரை பிறவி செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது.
.
அகிலம்
========
ஈசனிடம் கலியனைப் பிறவி செய்ய குருமுனி முறையிடுதல்.
===================================================================
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
.
விளக்கம்
==========
அந்த ஆறாவது கூறைப் பிறவி செய்வதற்கான காலம் கனியவே, புத்திக் கூர்மையில் மெத்தப் பெருமையுள்ள குருமுனிவர், மேலோனை நாடி மேருமலை சென்று அந்த ஆதியைப் போற்றி அரனே என வணங்கி, தன் சிந்தையில் உதித்த கருத்தை சிவபெருமானிடம் சொல்கிறார்.
.
விருத்தம்.
===========
முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
.
விளக்கம்
===========
மகாதேவா ! தீவினையாக முதலில் பிறந்த குறோணியை அழித்ததினால் உண்டான ஆறு கூறுகளில், இதுநாள் வரை ஐந்து கூறுகளைப் பூலோகத்தில் பிறப்பித்தும், அவன் இறைவனாகிய உங்களைப் பற்றி உணராத காரணத்தால் அவனை அழிப்பதற்காக அவ்வப்போது பூவுலகில் அவதரித்த மகாவிஷ்ணு அம்பின் குறையகற்றி, அதாவது வேடனிட்ட அம்பின் மூலம் தன் கிருஷ்ண அவதார சரீரமாகிய உபாயமாய உடலை பருவதாமலையில் உகுத்து வைத்துவிட்டு பூலோக வைகுண்டமெனப் போற்றப்படும் ஸ்ரீரங்கமாபதியில் அமர்ந்துள்ளார். ஆனால், அன்று இறந்த குறோணிக்கு இன்னும் ஒரு பிறவி உண்டல்லவா ?
.
.
அகிலம்
=========
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே
ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து
பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
.
விளக்கம்
==========
தவமே ! தவத்திற்கெல்லாம் கருவாகிய காரணப்பொருளே ! உலக நாடகமேடையில் ஒப்பரிய உன் நடிப்பெனும் நடனத்தால், நாசகாரர்களை நசுக்குகின்ற நாயகா ! அன்பை இருப்பிடமாகக் கொண்ட அரனே ! எவரொருவரோடும் ஒப்பிட்டுரைக்க முடியாத ஈசனே ! அடியேன் தங்களிடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பணம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் செவிமடுக்க வேண்டுமய்யா.
.
குறோணியாகிய கொடிய அரக்கனின் உடலை, உலகத்திற்கே உதிரமாக விளங்கும் மகாவிஷ்ணு, தன் புத்தி கூர்மையால் ஆறு கூறுகளாகப் பிளந்து அன்றைய பூமியில் விட்டெறிந்தார். அதன்பிறகு அந்தக் குறோணியின் உயிரை ஐந்துமுறை இந்தப் பூமியில் பிறவிசெய்யப்பட்டது.
.
ஆயிலும் அந்த அரக்கன், இளம் பிறையைத் திருமுடியில் சூடுகின்ற ஈசனாகிய தங்களையோ, மாயைகளுக்கெல்லாம் மாயையாகிய மகாவிஷ்ணுவையோ, சிறிதும் மதிக்காமல் அகங்காரமாக இருந்ததினால், மகாவிஷ்ணு அவதாரமெடுத்து வந்து அந்த அசுரர்களை அழித்தார்.
.
முதன் முதலாகத் தோன்றிய குறோணியைக் கொன்றதோடு இதுகாலம் வரை ஆறு யுகத்தில் அந்த அரக்கனையும் அவனுடைய குடும்பத்தையும் அழித்த மாயனாகிய மகாவிஷ்ணு, தம்முடைய அவதார கைங்கரியங்களுக்காக அவர் பயன்படுத்திய அந்தப் பொய்யுடலைப் பூமியிலே கழற்றி வைத்துவிட்டு அவர் அருளாட்சி புரிந்து கொண்டிருந்த ஸ்ரீரங்கமாபதியில் உறைந்துவிட்டார்.
அகிலம்
=========
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
.
விளக்கம்
==========
ஆனால், அந்தக் குறோணியின் உடலிலுள்ள ஆறில் ஒரு கூறு இன்னும் எஞ்சியிருக்கிறது. அந்தக் குறோணிக்கு மொத்தம் ஏழு பிறப்பு உள்ளன. இதுவரை ஆறு பிறப்பு பிறந்துவிட்டதால் இன்னும் ஒரு பிறப்பு அவன் பிறக்கவேண்டியுள்ளது. ஆகவே, அந்த அரக்கனை அவன் தோன்றிய முதல்யுகம் நீங்கலாகவுள்ள ஆறாவது யுகத்தில் பிறவிசெய்யுங்கள் சிவபெருமானே என்று குருமுனிவர் பிடிவாதமாக முறையிட்டார்.
.
குருமுனிவரின் இந்த வேண்டுகோளை விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமான், குருமுனிவரைப் பார்த்து, மாமுனிவரே, உம்முடைய விண்ணப்பம் நியாயமானதுதான். ஆனால் அதைச் செயல்படுத்த வேண்டுமானால் மகாவிஷ்ணுவும் வேண்டும். ஆகவே, அவர் இங்கே வரும் நாள் வரை காத்திருப்போமா? என்று குருமுனிவரிடம் சிவபெருமான் கேட்டார்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar


