உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயமும், பெரும் சாத்தியக்கூறுகளும் நிலவும் தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
பொருளாதாரத் தடைகள் மீண்டும் இறுக்கப்படுகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.
இராஜதந்திரக் கோழைத்தனம் ஏதுமின்றி வெளிப்படையாகப் பேசுவோம். ஈரான் கொடூரமானது என்பதால் அது தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அது பிற்போக்குத்தனமானது என்பதால் அது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. தன் மக்களுக்கு எதிராக இருப்பதற்காக ஈரான் தாக்கப்படவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது.
அதுதான் குற்றம்.
எப்பொழுதும் அதுதான் குற்றம்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் தேசம் பணிய மறுத்து வந்துள்ளது. தன் எண்ணெயைக் கைமாற்றிவிட மறுத்து வந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ்வின் (இஸ்ரேல்) கைப்பாவை அரசாக மாற மறுத்து வந்துள்ளது.
இந்த மறுதலிப்புகளுக்காக, பொருளாதாரத் தடைகள், சதிகள், சுற்றி வளைத்தல்கள், படுகொலைகள் மற்றும் முடிவுறாப் பிரச்சாரங்கள் மூலம் ஈரான் தண்டிக்கப்பட்டுள்ளது.
இது அரசு தந்திரம் அல்ல. இது ஒரு போர் முற்றுகை.
பொருளாதாரத் தடைகள் என்பவை வெறும் கொள்கைகள் அல்ல. அவை ஆயுதங்கள்.
அந்த ஆயுதங்கள் அமைச்சர்களை அல்ல, உழைப்பாளர்களைக் குறிபார்க்கின்றன. தளபதிகளுக்குப் பதிலாகக் குழந்தைகளைக் குறிபார்க்கின்றன. மாளிகைகளை விடுத்து ஏழைகளைக் குறிபார்க்கின்றன.
பொருளாதாரத் தடைகள் என்றால், மருந்தில்லா மருத்துவமனைகள், உதிரிபாகங்கள் இல்லா ஆலைகள், எதிர்காலம் இல்லா இளைஞர்கள் என்று பொருள்.
தடைகள் என்பவை மெல்ல வெடிக்கும் வெடிகுண்டுகள்.
மெல்லக் கொல்லும் நஞ்சு தோல்வியடையும் பொழுது, வல்லரசு உடனே கொல்லத் தயாராகிறது.
போர்க்கப்பல்கள் தயாராகின்றன. படைத்தளங்கள் விரிவாக்கப்படுகின்றன. போருக்கான உளவியல் காற்றை நிரப்புகின்றன. ஆட்சி மாற்றம் பற்றி வாஷிங்டன் நிர்வாக அறைகள் வெளிப்படையாக விவாதிக்கின்றன.
நாம் பலமுறை பார்த்த அதே திரைக்கதைதான்.
ஈராக்கிற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டது. லிபியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. சிரியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கும், கியூபாவிற்கும், வெனிசுலாவிற்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மற்றவர்களை விடவும் ஆப்பிரிக்கர்களான நமக்கு இந்தத் திரைக்கதை நன்கு தெரியும்.
இதற்குப் பலியானவர்கள் பலரை நாம் அடக்கம் செய்துள்ளோம்.
நிலைத்தன்மை என்ற பெயரில் காங்கோ சூறையாடப்பட்டது.
ஜனநாயகத்தின் பெயரால் லிபியா அழிக்கப்பட்டது. பாதுகாப்பு என்று சொல்லி சோமாலியா இராணுவமயம் ஆக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் நமது மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு இருக்கும்போது, சர்வதேச நாணய நிதியம் (IMF) தன் கொள்கைகளை உத்தரவுகளாகப் பிறப்பிக்கின்றது. கென்யா கூடச் சுதந்திரமாய் இல்லை. அந்நியப் படைகள் நம் மண்ணில் தளம் அமைத்துள்ளன.
கடன்கள் நமது பொருளாதாரத்தைச் சங்கிலியால் பிணைத்துள்ளன. நமது பட்ஜெட் அறிக்கைகள் நம் மக்களைத் தாண்டி உலக வங்கிக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. நம் தேசத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியத்தால் மூச்சுத் திணறடிக்கப்படுவதால், நம் இளைஞர்கள் புலம்பெயர்கின்றனர்.
எனவே, ஈரான் திணறுவதை நாம் எளிதில் புரிந்துகொள்ள இயலும். ஈரானின் நெருக்கடிகளை, நம் சொந்தத் தொண்டை நெறிக்கப்பட்டது போலவே நாம் அறிய முடியும்.
ஈரானின் வீழ்ச்சி என்பதை, ஈரான் மக்களின் சுதந்திரம் என்று கருதுபவர்கள், ஒன்று அப்பாவிகளாக இருக்க வேண்டும், இல்லையேல் நேர்மையற்றவர்களாக இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் ஏகாதிபத்தியம் தலையிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் அங்கே சாம்பல் மட்டுமே மிஞ்சும். ஏகாதிபத்தியங்கள் தேசங்களை உருவாக்காது; தேசங்களை உடைக்கும். அது ஜனநாயகத்தைக் கொண்டு வராது; கைப்பாவைகளை மட்டுமே உருவாக்கும்.
ஏகாதிபத்தியம் விடுதலை தராது; ஆதிக்கம் மட்டுமே செலுத்தும்.
மார்க்ஸியர்களான நாங்கள் உலகை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்பவர்கள். ஒரு முக்கிய கேள்வியை முன்வைக்கிறோம்: இதன் மூலம் பலனடைவது யார்?
பொருளாதாரத் தடைகள் யாரைப் பாதிக்கும்? வால் வீதியையா (அமெரிக்கப் பங்குச்சந்தை) அல்லது ஈரானியத் தொழிலாளர்களையா? இராணுவ மிரட்டல்கள் ஈரானியப் பெண்களுக்கா அல்லது பென்டகனுக்கா? ஆட்சி மாற்றம் உதவப்போவது மக்களுக்கா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?
பதில், எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆகவே, முதன்மை முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது.
அனைத்து நாடுகளிலும் உள்ளது போலவே ஈரானின் உள் முரண்பாடுகள், ஈரான் மக்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியவை. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் மூலம் வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்புதான் முதன்மை எதிரி.
மார்க்ஸியர்கள் முதன்மை எதிரியைத்தான் தாக்குவார்கள்.
இந்தக் குழப்பங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஈரானின் இறையாண்மையோடு, ஐயம் ஏதுமின்றி உறுதியாக நிற்கிறோம்.
குண்டுகள் வீசுவதன் மூலம் எந்த மக்கள் மீதும் சுதந்திரத்தைத் திணிக்க முடியாது என நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பொருளாதாரத் தடைகள் மற்றும் நெருக்கடிகள் மூலமாக எந்தவொரு தேசத்திற்கும் ஜனநாயகத்தை வழங்க முடியாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தனக்காக மட்டும் அல்லாது, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசங்களுக்காகவும், வாஷிங்டனின் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்து ஈரான் இன்று எதிர்த்து நிற்கிறது.
ஈரான் எதிர்த்து நிற்கும் போது, சாம்ராஜ்யம் பலவீனமாகிறது.
ஒரு தேசம் எழுந்து நிற்கும் பொழுது, தங்களாலும் எழுந்து நிற்க முடியும் என மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஈரானின் போராட்டம் நம்முடையதிலிருந்து வேறுபட்டதில்லை.
இது கென்யாவின் போராட்டம்.
காங்கோவின் போராட்டம்.
பாலஸ்தீனத்தின் போராட்டம்.
சுயமரியாதையுடன் வாழவும் போராடவும் செய்யும் ஒவ்வொரு விவசாயியுடனும் தொழிலாளியுடனும் தொடர்புடைய போராட்டம்.
சர்வதேசியம் என்பது வெறும் இரக்கம் கிடையாது; அது பகிரப்பட்ட எதிர்காலம்.
எனவே, கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாங்கள் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றோம்:
ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எல்லாவிதமான இராணுவ மிரட்டல்களையும் போர் தயாரிப்புகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் நடக்கும் எல்லாவிதமான ஏகாதிபத்தியத் தலையீடுகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம்.
தங்களது அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் ஈரானிய மக்களின் உரிமையை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்.
ஏகாதிபத்தியத்தை அதன் அனைத்து அம்சங்களிலும் எதிர்த்து நிற்க, கென்ய மற்றும் அனைத்து ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை அழைக்கிறோம்.
ஏகாதிபத்தியங்கள் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளட்டும்.
எந்த எதிர்ப்பும் இன்றி ஆசியாவும் ஆப்பிரிக்காவும் ஆளப்பட்ட காலம் மலையேறிவிட்டது.
பணிந்து கிடந்த காலம் போய்விட்டது.
ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்த்து நிற்கக் கற்றுக்கொண்டுவிட்டனர்.
ஈரானின் இறையாண்மையைப் பாதுகாத்தல் என்பது, கென்யாவின் கண்ணியத்தைக் காப்பதாகும். ஆப்பிரிக்காவின் கண்ணியத்தைக் காப்பதாகும். ஒடுக்கப்பட்ட மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் காப்பதாகும்.
சரிந்து வீழும் ஏகாதிபத்தியங்களால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை.
எதிர்த்து நிற்கும் மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
பாட்டாளிவர்க்கச் சர்வதேசியம் வாழ்க!
ஆப்பிரிக்க, மேற்காசிய ஒற்றுமை ஓங்குக!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!
இறையாண்மை, கண்ணியம், சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்!
பூக்கர் ஓமோலே
பொதுச் செயலாளர்,
கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழில்: செம்படையான். #👨மோடி அரசாங்கம்


