பைபிள் வாசகங்கள்:
பிப்ரவரி 12 : முதல் வாசகம்
என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13
அந்நாள்களில்
சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகை மேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.
ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி,
“நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி. ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிப்ரவரி 12 : பதிலுரைப் பாடல்
திபா 106: 3-4. 35-36. 37,40 (பல்லவி: 4a காண்க)
பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்!
3
நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4
ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! - பல்லவி
35
வேற்றினத்தாரோடு கலந்து உறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;
36
அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. - பல்லவி
37
அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
40
எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 21
அல்லேலூயா, அல்லேலூயா!
உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.
பிப்ரவரி 12 : நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30
அக்காலத்தில்
இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
-----------------------------------------------------------------------------
"நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்”
பொதுக்காலத்தின் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
I 1 அரசர்கள் 11: 4-13
II மாற்கு 7: 24-30
“நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்”
ஹட்சன் டைலரின் தாழ்ச்சி:
சீனாவிற்கு நற்செய்தியைக் கொண்டு சென்று, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தவர் ஹட்சன் டைலர் (Hudson Taylor).
ஒருமுறை இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவர் செய்த அளப்பரிய பணிகளைப் பார்த்துவிட்டு, இவரை மிகவும் புகழ்ந்து பேசியபோது, இவர் அவரிடம், “நீ என்னை இவ்வளவு புகழ்ந்து பேசும் அளவுக்கு நான் ஒன்றுமே இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சீனாவிற்கு நற்செய்தியை அறிவிக்க மிகவும் பலவீனமான ஒரு மனிதரைக் கடவுள் தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் மிகவும் பலவீனமான மனிதனான நான் கிடைத்தேன். கடவுள் என்னைக் கொண்டு சீனாவில் நற்செய்தி அறிவிக்க வைத்தார்” என்றார்.
ஆம், கடவுளின் வார்த்தையைச் சீனாவில் உள்ள மக்களுக்கு அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்திருந்த போதும், ஹட்சன் டைலர் மிகவும் தாழ்ச்சியோடு இருந்தார். இன்றைய நற்செய்தியில் கிரேக்கப் பெண்மணி இயேசுவிடம் தாழ்ச்சியோடு பேசியதால், தன்னுடைய மகளிடமிருந்து பேய் நீங்கப் பெறுவது குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூத சமயத் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருந்ததால், சில காலத்திற்கு ஓய்வெடுக்கவும், அதே நேரத்தில் தன்னுடைய சீடர்களுக்குத் தனது பாடுகளைப் பற்றி விளக்கிக் கூறவும், இயேசு பிறவினத்தார் பகுதிக்கு வருகின்றார். அப்போதுதான் அவர் கிரேக்கப் பெண்மணியைச் சந்திக்கின்றார். தனது மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவர் இயேசுவிடம் கேட்கின்றபோது இயேசு அவரிடம், “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தை, “முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் – அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் – அந்த மீட்பு உண்டு” புனித பவுலின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன (உரோ 1:16, 15:8).
இயேசு இவ்வாறு சொன்னாலும், கிரேக்கப் பெண்மணி, “மேசையின் கீழிலிருக்கும் நாய்க் குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்கிறார். அந்தப் பெண்மணி இவ்வாறு சொல்வதற்கு உள்ளத்தில் மிகுந்த தாழ்ச்சி இருந்திருக்க வேண்டும். அதனால் இயேசு அவரிடம், “நீ இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்கிறார்.
இங்கு நாம் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவெனில், கிரேக்கப் பெண்மணி இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரில் நம்பிக்கை கொண்டது. அதே நேரத்தில் இஸ்ரேயலின் அரசனாக இருந்த சாலமோன் கடவுளின்மீது நம்பிக்கை கொள்ளாமல், வேற்று தெய்வங்களின் மீது நம்பிக்கை கொள்கின்றான். இதனால் அவனுடைய அரசு உடைந்து போகிறது. இது குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம்.
ஆகவே, நாம் கிரேக்கப் பெண்மணியைப் போன்று உண்மைக் கடவுளான ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அவர்முன்பு தாழ்ச்சியோடு வாழ்ந்து, அவர் தரும் ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
தாழ்ச்சியே கடவுளின் ஆசியைப் பெறுவதற்கு முதல் படி
பதவி உயர உயர பணிவு வரவேண்டும்
கடவுள் தாழ்ச்சிநிறைந்த நெஞ்சத்தில் குடி கொள்கின்றார்.
இறைவாக்கு:
‘கடவுள் முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீக் 6:8) என்பார் மீக்கா இறைவாக்கினர். எனவே, நாம் கடவுள் முன்பு தாழ்ச்சியோடு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

