From Dinakaran 🙏🙏🙏🙏
ஸ்ரீ கண்ணனை பெற்ற தேவகி, பாலகனின் கோலங்களையெல்லாம் கண்டு ஆனந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான பாக்கியம் யசோதைக்குக் கிடைத்ததேயன்றி, அவளை வயிற்றில் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள்.
“தொல்லையின் பத்திறுதி கண்டாளே” என்ற பதம் அற்புதம்.
உரையாசிரியர் உருகி எழுதுகிறார்.
உபநிஷத்தின்படி - தொல்லையின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லியது.
அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள்!
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே.
(பரிச் சிந்நர்- ஓரளவு பட்டவர். தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே என்ற வரியில் பெற்ற தாயின் ஆற்றாமையை அப்படியே பிசைந்து கொடுக்கிறார்
குலசேகராழ்வார்.
சரி, குழந்தையை வந்து பார்க்கிறவர்கள்” இதோ பார், இந்தக் குழந்தையின் மென்மையான கையைப் பார். கண்களைப்பார்...பாதங்களைபார்...” என்றெல்லாம் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாகப் பேசுவதைக்கண்டு, யசோதை மகிழ்ச்சி அடைகிறாள்.
குழந்தையின் பாதம் முதல் தலைவரை இருபது பாடல்களால் வர்ணிக்கிறார் பிள்ளைத்தமிழ் பாடிய பெரியாழ்வார்.
பொதுவாக ஒரு பதிகத்தில் 10 பாசுரங்கள்தான் இருக்கும். இந்தப் பதிகத்தில் மட்டும் இருபது பாசுரங்கள்.
இந்த அழகு வேறு எந்த நூலிலும் நாம் பார்க்க முடியாது. துண்டு துண்டாக அவயவ வர்ணனை இருக்குமே தவிர, கண்ணனின் பாதாதிகேச வர்ணனை இத்தனை அழகான தமிழில் கொடுத்தவர் பெரியாழ்வாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இந்த இருபது பாடல்களையும் புதிதாகக் குழந்தை பிறந்தவர்கள், அல்லது கர்ப்பம் தரித்த பெண்கள் பூஜையறையில் பாட வேண்டும், என்று சான்றோர் கூறுகின்றனர்.
‘‘இப்படிப்பட்ட குழந்தை வேண்டும்” என்று இந்த இருபது பாடல்களையும் பக்தியோடு படித்தால் அழகான குழந்தை பிறக்கும் என்பார்கள்.
அதில் முதல் பாடல் என்ன அழகாக இருக்கிறது பாருங்கள்.
சீதக்கடலுள் அமுதன்ன தேவகிகோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்தபேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்பாதக்கமலங்கள் காணீரேபவளவாயீர் வந்து காணீரே
அழகான திருப்பாற்கடல். அது தோன்றிய திருமகள் போன்றவள் தேவகி. தேவகி பெற்று, யசோதைக்கு கொடுக்கப்பட்ட குழந்தை கண்ணன். குழந்தை தொட்டிலில் அழகான ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய கால் கட்டை விரலைத் தூக்கி, வாயில் வைத்துக் கொண்டு சுவைத்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அழகான மென்மையான பாதங்களை எடுத்துக் காட்டுகிறது.
ஒரே நேரத்தில் அவனுடைய திருவடி, திருவாய் இரண்டும் இணைந்து இருக்கிறது.
‘‘பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்” என்று ஆழ்வார் சொன்னதுபோல, பவளம் போன்ற இந்த வாயை வந்து பாருங்கள்.
தன்னுடைய கால் கட்டை விரலை பிடித்து சுவைத்துச் சாப்பிடும் அழகை பாருங்கள். கண்ணனின் அழகிய வடிவங்களை நீங்கள் எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கலாம்.
யசோதை இடுப்பில் தூக்கி வைத்திருப்பது போல... யசோதை தயிர் கடையும் பொழுது பக்கத்தில் கண்ணன் கட்டிக் கொள்வதைப் போல.... இப்படிப் பல படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்.
ஆனால், ஒரு ஆலின் இலையில் படுத்துக்கொண்டு, சின்னஞ்சிறு பாலகனாய், தன்னுடைய கால் கட்டைவிரலை, தானே சுவைக்கக் கூடிய அந்த அழகான காட்சி அற்புதத்திலும் அற்புதம் அல்லவா!
பரமாத்மாவாகிய கண்ணன் ஏன் தன் கால் கட்டை விரலை தானே சுவைக்கிறான்?
கிருஷ்ணாவதாரத்தின் பின்புலம் இந்த ரகசியத்தில் அடங்கியிருக்கிறது.
நம்முடைய நண்பர் அந்தாதி கவிஞர் ஆர்.வீ.சுவாமி அவர்கள் பெரியவர்களிடம் கேட்டு இதற்கு ஒரு அற்புதமான விளக்கத்தைத் தந்திருக்கிறார்.
அவர் தந்த விளக்கத்தை அப்படியே தருகின்றேன்.வைகுந்தத்தில் ஒரு காட்சிபிராட்டியர் (தேவி), அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், நித்யர், முக்தர்கள் என எல்லோரும் தத்தம் கைங்கர்யங்களை மிகமிக உகப்போடு பகவானுக்குச் செய்துகொண்டுள்ளார்கள்.
அப்போது, எம்பெருமான் மிகமிக மெல்லிய குரலில் பிராட்டியிடம், ‘‘அது என்ன பிராட்டி? நித்யர்கள், முக்தர்கள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், தவசீலர்கள், அடியார்கள் என எல்லோரும் எனது திருவடியே அவர்களுக்கு உகப்பென்றும், அதன் சுவை அமுதத்தை விஞ்சியதென்றும், அதன் சுவைக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்றும் ஓயாது, ஒழியாது, புகழ்ந்து, போற்றிப் பிதற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதனைச் சுவைக்கத் துடித்துக்கொண்டே இருக்கிறார்கள். “தேனே மலரும் திருப்பாதம்...” என்று கூட நம்மாழ்வார் பாடியிருக்கிறார்.
அப்படியென்ன எனது திருமேனியின் மற்ற அவயவங்களுக்கு இல்லாத பொல்லாச்சுவை திருவடிகளுக்கு மட்டும் என்று தெரியவில்லையே!
எனவே, அவற்றை நானும் சுவைத்துப் பார்த்து, அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினான்.
பிராட்டிக்கு பகவானின் ஆசை விபரீதமாகத் தோன்றியது. உடனே அவள், ‘‘பிரபு! இது வைகுந்தம்! நிலஉலகல்ல! இங்குள்ள நித்யர்கள், முக்தர்கள் அறியாது நீங்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாது!
அவர்கள் கண்கள் இம்மியளவுகூட இமைப்பதில்லை! இருந்தபோதும் சோர்வதில்லை! இங்கு இரவுமில்லை! பகலுமில்லை! கனவுமில்லை! நனவுமில்லை!
சங்கு, சக்ரம் ஏந்திக்கொண்டு, நான்கு திருத்தோள்களோடு அவர்கள் இங்கே உலவுவதைத் தேவரீரும் பார்க்கவில்லையா?
அவர்கள் அறியாது ஒரு காரியமும் நீங்கள் செய்ய இயலாது என்று தெரிந்தும், உங்கள் திருவடியை நீங்களே சுவைத்துப் பார்க்கும் இந்த விபரீத ஆசை ஏன் வந்தது?
இத்துடன் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்!” என்றாள்.
ஆனால், எம்பெருமானால் அப்படி இருக்க இயலவில்லை. ‘‘என்னசெய்யலாம்” என யோசித்தான்.
நன்கு யோசித்த பிறகு, இப்படிச் செய்தால் என்ன என்று ஒரு யோசனை வந்தது. குதூகலித்தான்! அவனுக்கு அப்போது திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது.
தூபக் கைங்கர்யம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்க, அதனைச் செய்து கொண்டிருந்த நித்யர், முக்தர்களை உற்சாகப்படுத்திப் பாராட்டி, அதனைத் தான் மிகமிக உகப்பதாய்க் காட்டிக்கொள்ள,
அவர்கள் மிகவும் உற்சாகமடைந்து, மீண்டும் மீண்டும் என தூபப்புகையை எம்பெருமானது உகப்புக்காகக் கூட்டினார்கள்.
வைகுந்தமெங்கும் நறுமணத்தோடு கூடிய தூபப்புகை மண்டலம் உருவாகியது. திருமாமணி மண்டபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க இயலவில்லை! பார்த்தான் பரந்தாமன்!
‘‘ஆகா! இதுதான் அற்புதமான வாய்ப்பு!” என்று அந்தத் தூபப்புகை குறைவதற்கு முன்னர் திருவடமதுரையிலே வசுதேவர் - தேவகி தம்பதியர்களுக்கு திருமகனாய் அவதரித்து, திருவாய்ப்பாடியிலே நந்தகோபர் - யசோதை திருமகனாய் வளர்ந்து, பாலலீலைகள் பலபுரிந்து, அவனது அளவற்ற ஆசையான தனது திருவடியைத் தானே சுவைத்துப் பார்க்கும் போராசையை நிறைவேற்றி மகிழ்ந்தான்!
ஆம்! தனது திருவடியின் பெருவிரலைத் தனது திருப்பவள வாய்க்குள் வைத்து ஆசைதீரச்சுவைத்து மகிழ்ந்து, “எனதடியார்கள் வார்த்தை சத்தியம்! சத்தியம்!” என உகந்தான்.
அவனது கிருஷ்ணாவதாரத்தின் ஏனைய காரியங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு தூபப்புகை மண்டலம் குறையுமுன்னர் மீண்டும் வைகுந்தம் திரும்பினான்.
ஆக, கிருஷ்ணாவதாரத்தின் சீரிய காரணம், சீரிய பின்புலம் எம்பெருமான் மிகமிக உகந்த காரணம் அடியார்களுக்குத் திருமோட்சம் அளித்தளித்தே அமுதச்சுவை கூடிக்கொண்டே இருக்கும் தனது திருவடிச் சுவையினை சுவைத்து இன்புறவே என்பது புலனாகிறதன்றோ?
இதுவே கிருஷ்ணாவதாரத்தின் சுவையான பின்புலம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் தானே? இப்போது பெரியாழ்வாரின் இந்தப் பாடலை படியுங்கள், திருவடியின் மேன்மை புரியும்.
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்து காணீரே #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻


