தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (26). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. சென்னை மாதவரத்தில் உள்ள துணிக்கடை குடோன் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதிக்குப் பிறகு மகேந்திரன் மாயமானதையடுத்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், மகேந்திரனின் செல்போன் அவருடன் வேலை பார்த்த வைத்தியநாதன் (44) என்பவரிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, தலாரன்ஸ் (47) என்பவருடன் சேர்ந்து மகேந்திரனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மகேந்திரன், லாரன்ஸ், வைத்தியநாதன் ஆகிய மூவரும் நண்பர்கள். லாரன்ஸின் மனைவிக்கும் மகேந்திரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. லாரன்ஸின் எச்சரிக்கையையும் மீறி, அவரது மனைவியை மகேந்திரன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு மாதமாகத் தங்கியிருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ், தனது நண்பர் வைத்தியநாதனுடன் சேர்ந்து மகேந்திரனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, மகேந்திரனை நைசாகப் பேசி திருவள்ளூருக்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் லாரன்ஸின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் மது போதையில் இருந்த மகேந்திரனை, தலையணையால் முகத்தை அழுத்தியும், பெல்டால் கழுத்தை நெரித்தும் இருவரும் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, லாரன்ஸ் வீட்டின் பின்புறம் உள்ள 6 அடி ஆழ கழிவுநீர் தொட்டிக்குள் வீசி மூடியுள்ளனர்.
கொலைக்குப் பிறகு இருவரும் எதுவுமே நடக்காதது போல உலவி வந்துள்ளனர். லாரன்ஸின் மனைவி, மகேந்திரன் தங்கி இருந்த வீட்டிலேயே தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார். சடலம் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்ததாலும், துர்நாற்றம் வெளியே வராததாலும் இச்சம்பவம் ஒரு மாதமாக வெளியே தெரியாமல் இருந்துள்ளது.
நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அழுகிய நிலையில் இருந்த மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளான லாரன்ஸ் மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #📢பிப்ரவரி 11 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


