பாரத போரின் ஒன்பதாம் நாள் மாலை போர் முடிவதற்கான சங்கொலி காற்றில் பரவியது. போரின் கொடுமையை காண சகிக்காமல் ஆதவன் மேற்கே மறைந்தான். இருதரப்பின் படைவீடுகளில் லாப நஷ்ட கணக்கு துவங்கியது.நேற்று இருந்தவர் இன்று இல்லை. செலவு கணக்கில் வரவாகி இருந்தார். இன்றுவரவு கணக்கில் இருப்பவர்கள் நாளை செலவு கணக்கில் வரவு வைக்க தயாராக இருந்தனர். யார் முந்தி. யார் பிந்தி என்பதைத்தான் யாரும் அறியமுடியவில்லை.
படைவீட்டின்மையத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
"கிருஷ்ணா!அடுத்தது யாரை கொல்லலாம் என்று யோசிக்கிறாயா?" என்றான் அர்ச்சுனன்.
"இல்லை! என்னால் கொல்லமுடியாதவர்களை பற்றி யோசிக்கிறேன்"
"ஆச்சரியம்! உன்னால் கொல்லமுடியாதவர்களும் இருக்கிறார்களா?" என்றான் பீமன்.அவன் குரலில் வியப்பிருந்தது.
"ஆம். இருவர் இருந்தார்கள். ஒருவனை சந்தேகத்தின் பெயரால் களத்திற்கு வராமல் செய்துவிட்டேன். இன்னொருவரைத்தான் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். ஒருவன் பிறப்பென்னும் ஒரு கதவு வழியாக இங்கே வந்தால் மரணமென்னும் இன்னொரு வாசல் வழியாக வெளியேறியாக வேண்டும். இதுதான் உலகின் இயற்கை நியதி. ஒருவன் ஜனனம் என்னும் ஒருவழிப்பாதையில் வந்தவன். இன்னொருவனுக்கு மரணத்தின் வாயில் அவனாக நினைக்கும்வரை திறவாது"
"புதிராக பேசாதே! விளக்கமாக சொல்" என்றான் தர்மன்.
"நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு இங்கிருக்கும் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்"
"கேள் உன் கேள்விகளை?"
"இந்த யுத்தம் எதற்காக நடக்கிறது. ? பெண்ணை அவமதித்ததற்காகவா? இல்லை மண்ணை தரமறுத்ததற்காகவா?"
"இரண்டுக்கும்தான்" என்றான் சகாதேவன்.அவன் மனதில் திரெளபதியின் விரிந்த கூந்தல் வந்து போனது.
"சாஸ்திர நிபுணனே!உனக்கு தெரியாத மூன்றாவது காரணம் ஒன்றிருக்கிறது. அதை உன்னால் கூறமுடியுமா?"
அவன் சுற்றிலும் பார்த்தான். அனைவரது உதடுகளும் பிதுங்குவதை பார்த்து" எனக்கு தெரியவில்லை. நீயே கூறு" என்றான்.
"சரி. நானே சொல்கிறேன். நான் கூறிய இருவரில் ஒருவன் அஸ்வத்தாமன். சாவே இல்லாத சிரஞ்சீவிகளில் ஒருவன். ஒருவழிப்பாதையில் உலகில் உழல்பவன்.அவன் கவுரவர் படை தலைவனாக வந்தால் நம் கதி அதோகதிதான். சாவே இல்லாத ஒருவனுடன் சண்டைபோட்டு நாம்தான் சாவோம். துரியன் மனதில் சந்தேகத்தை விதைத்து அவனை களத்திலிருந்து அகற்றினேன்.துரியனின் சக்திவாய்ந்த ஆயுதம் அவன்தான்.அவனை பயன்படுத்த மறுக்கிறான் துரியன் .நாம் வெற்றி என்னும் இலக்கை அடையும்வரை அவன் களத்திற்கு வரமாட்டான். இன்னொருவர் பீஷ்மர். தான் நினைக்கும்போது சாகும்வரம் பெற்றவர். அவரை வீழ்த்த யாராலும் முடியாது. அவர் களத்தில் இருக்கும்வரை வெற்றியும் வசப்படாது. அவரைப்பற்றித்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்"
"யார் நம்பாட்டனாரையா சொல்கிறாய்?"
" ஆம். அவரேதான்."
"அவர் போரிலிருந்து ஒதுங்கிகொண்டால்?"
"அது நடவாது. அஸ்தினாபுரத்து அரியணைக்கு அடிமை அவர். அதில் வீற்றிருப்பவர்யாராயினும் அவரின். விசுவாசி அவர். அரியணைக்கு ஆபத்து வரும்போது களம் காண மறுப்பாரா என்ன?"
"அவரை வெல்ல என்னதான் வழி?"
"எனக்கு எதுவும் புலப்படவில்லை,"
"அப்படி என்றால் நாம் தோற்பது உறுதி என்கிறாயா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை."
"போர்முஸ்தீபுகளில் சொல்ல மறந்துவிட்டேன். இப்போதுதான் நினைவுக்கு வந்தது"
"இப்போது என்ன செய்வது ?"
"அவரை எப்படி வீழ்த்துவது என்று அவரிடமே கேட்போம்"
"முட்டாள்தனமாக இருக்கிறது. யாராவது தன் பலவீனத்தை எதிரியிடம் சொல்வார்களா?"
"ஒருவன் தன் பலவீனத்தை சொல்கிறான் என்றால் அதை வெல்லும் வழிகளையும் அறிந்துவைத்திருப்பான் என்பதுதானே நியதி. "
"எனக்கு இது சரியாக தோன்றவில்லை. அவர் தன்னை வீழ்த்தும் வழிகளை சொல்வாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது."
"மரத்தை நோக்கி கல்லை எறிவோம். விழுந்தால் பழம். இல்லை. கல்.இரண்டில் ஒன்று."
"எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. அவர் சொல்ல மறுத்துவிட்டால் இந்த யுத்தத்தின் முடிவு?"
"விதி விட்ட வழி. வாருங்கள் பீஷ்மரின் படைவீடு நோக்கி போவோம்."
பாண்டவரோடு நடந்தான் கிருஷ்ணன்.
தங்களிடையே பாண்டவரோடு பிரவேசித்த கிருஷ்ணனை பார்த்து சலசலத்தது கௌரவர் படை.
சேதியறிந்து வாசல் வந்த பீஷ்மரின் காலில் விழுந்தார்கள் பாண்டவர்கள்.
"தீர்க்காயுஷ்...என்று ஆசீர்வாதம் செய்ய திறந்த அவரின் வாய் சற்று தடுமாறி மவுனமானது.
" ஏன் தாத்தா! ஆசீர்வாதம் செய்ய விருப்பமில்லையா? வாயில் வந்த வார்த்தைகள் பாதியில் தடைபட்டு நின்றுவிட்ட வே?" என்றான் குறும்பு சிரிப்புடன் கிருஷ்ணன்,
"ஆசீர்வாதம் செய்ய வேறு வார்த்தைகளை தேடுகிறேன் கிருஷ்ணா"
"காலம்காலமாக சொல்பவைதானே? வெறும் வாய் வார்த்தைதானே?"
"ஆசிர்வாதம் உள்ளன்போடு வரவேண்டும். போகட்டும். இப்போது இவர்களை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? இனி சமாதானம் பேச ஏதுவுமில்லையே?"
"சமாதானம் பேச வரவில்லை தாத்தா! சண்டை செய்யத்தான் வந்திருக்கிறோம். உங்களை வீழ்த்தினால் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும்."
"என்னை வீழ்த்த உன்னால் முடியுமா?"
" முடியாது என்று தெரிந்துதானே உங்களிடமே வந்திருக்கிறேன்"
"விசித்திரமாக இருக்கிறது உனது போர் யுக்தி. "
"வெல்லமுடியாதவர்களிடம் சரணாகதி அடைவதுதானே விவேகம்'அந்த விவேகத்தை மதிப்பவர் தானே வீரர். நான் விவேகி. நீங்கள் வீரர் !"
"நன்றாகவே பேசுகிறாய்.நான் பெண்களை, நிராயுதபாணிகளை எதிர்த்து போர்புரியமாட்டேன். சிறந்த வில்லாளியான அர்ச்சுனனுக்கும் இதே விதிகள் பொருந்தும்."
"நன்றி தாத்தா! நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த உங்கள் மரண கதவின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்காக அதன் கதவை அகல திறந்துவைக்கிறேன்."
"அது உன்னால் முடியாது. நான் சாகவேண்டும் என்று நினைத்தால்தான் சாவேன். நான் அப்படி நினைக்க போவதில்லை"
"சரி தான் தாத்தா! ஒரு மனிதனின் குற்றவுணர்ச்சி ஆயுள் முழுவதும் அவனை கொல்லும் சக்தி படைத்தது. அதே ஆயுதம் தான் உம்மையும் கொல்லபோகிறது. வருகிறேன் தாத்தா! நாளை நாம் களத்தில் சந்திப்போம்"
அவர்கள் திரும்ப நடந்தார்கள். பீஷ்மர் அவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டார்.
செய்தியறிந்த துரியன் சிரித்தான்.இப்படி ஒரு கேவலத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.இதிகாசம் இழித்து பேசட்டும் இந்த இழிபிறவிகளை என்று இடிஇடித்தது போல் சிரித்தான் அவன்.
படைவீட்டில் கிருஷ்ணன் புன்னகைத்தான்.
"நாளை பீஷ்மருக்கு எதிராக நிற்க போவது சிகண்டி" என்று அறிவித்தான் அவன்.
"துருபதன் மகனா?"
"அவனேதான். பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவன்.அவனது நதிமூலம் பீஷ்மருக்கு தெரியும். அவர் அவனுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மாட்டார். அவர் ஆயுதத்தை கீழே போடும் முன்பாக அர்ஜுனா உன் பானங்களை ஏவிவிடு. அவரை படுகாயபடுத்து. அம்பு படுக்கையில் கிடத்து. மீதியை நான் பார்த்து கொள்கிறேன்"
"நிராயுதபாணியை எப்படி கொல்வது?"
"ஆயுதம் கையில் இருக்கும்வரை அவர் நிராயுதபாணியல்ல."
"அவர் திருப்பிதாக்கினால்?"
"சிகண்டியை முன்நிறுத்து. அவனுக்கு பின்னால் பதுங்கி தாக்குதல் நடத்து. உனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் திறமையை காட்டவேண்டும். புரிகிறதா?"
"அப்படியே ஆகட்டும்"
பத்தாம் நாள் யுத்த முடிவில்
பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கிறார்.
காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தால் கண்ணன்.
"என்ன தாத்தா! இந்த படுக்கை எப்படி இருக்கிறது. ? வெறுந்தரையில் படுத்த தேகம் முள் படுக்கையை ஏற்கிறதா?"
"வா! கண்ணா' எனக்கு எதற்கு இந்த நிலை?"
"தாத்தா!எல்லாம் கர்மவினை..அம்பாவின் வாழ்வோடு விளையாடினாய். அவன் மறுபிறவி எடுத்து சிகண்டியாக வந்து வன்மம் தீர்த்தான். சகுனியின் சகோதரர்கள் நூறு வரை கொன்றாய். தப்பிபிழைத்த சகுனியோ நூற்றுவரின் கூற்றுவனாக மாறி குரு வம்சத்தை அழித்தான். திரவுபதியின் துகில் உறியப்பட்டபோது அரியணையின் அடிமையாக அமைதிகாத்தாய். அர்ச்சுனன் பழிதீர்த்தான்"
"நான் செய்த எதுவும் எனக்கு தவறாக தோன்றவில்லையே?"
"காரணம் துரியனின் செஞ்சோற்று கடன். நைஷ்டிக பிரம்மசாரியான நீர் உப்பில்லாத உணவையே உண்டீர். அதில் துரியனின் பாவ எண்ணங்கள் கலந்திருந்தன. அதனால் அவன் செய்வது எதுவும் உமக்கு தவறாக தோன்றவில்லை.இதோ இந்த அம்பு படுக்கையில் வடியும் ரத்தத்தில் உமது பாவங்கள் விடைபெறுகின்றன. அதனால் நீர் செய்த பாவங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். இத்தனை பேர் குடும்பங்களை அழித்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு உமக்கு வரும். நீர் இனி உயிர்வாழ விரும்பமாட்டீர். மரணத்தின் கதவுகள் அகல திறந்துவிட்டன. இனி நீர் பயணம் செய்வது மட்டுமே பாக்கி. "
"குரு வம்சத்தை தோற்றுவித்தவன் நான். வழிதவறியவர்களை நல்வழிசெலுத்த வேண்டியவன் நான்.அநீதி நடக்கும்போதெல்லாம் அமைதி காத்ததுதான் நான் செய்த மிக பெரிய குற்றம்.நான் ஒருவன் செய்த தவறால் மொத்த நாடும் நாசமாகிறது. இது வினை அறுக்கும் காலம்"
"உண்மையை உணர்ந்து பேசுகிறீர்"
"எனக்கு ஒரு உதவி செய்"
"சொல்லுங்கள்"
"எனக்கு தண்ணீர் தாகமெடுக்கிறது. என் அன்னையை காணவேண்டும் போலிருக்கிறது"
"அர்ச்சுனா. அவரது தலைமாட்டில் ஒரு அம்பை விடு"
அர்ச்சுனன் அம்பு விட்ட இடத்தில் கங்கை நீர் பீறிட ஆரம்பித்தது.
"கங்கையின் மைந்தனே! இதோ உன் தாயின் அரவணைப்பு. போரின் முடிவை பார்த்தபின்பே உமது உயிர் பறவை உடலைவிட்டு போகும். அதுவரை உம்மை காண வருவர்களுக்கு நல்வழி கூறுவீராக"
பீஷ்மர் கண்களுக்கு திறந்த நெடுங்கதவு ஒன்று புலப்பட்டது.
#🤔தெரிந்து கொள்வோம்


