கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
உமையவள் மகாவிஷ்ணுவை மீண்டும் வருந்தி கயிலைக்கு அழைத்தல்
=====================
வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே
கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால்
அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில்
நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால்
தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே
நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே
மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே
கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே
மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே
கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து
உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே
ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து
பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே
அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி
எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா
என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும்
சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி
.
விளக்கம்
========
மகாவிஷ்ணுவின் மனவோட்டத்தையும், மாறாத கோபத்தையும் உணர்ந்த உமையவள், கண்ணீர் விட்டுக் கதறி அழுதவாறு, அண்ணா, தாங்கள் கயிலைக்கு வராமல் இருப்பீரேயானால் இந்த உலகமே இன்னும் ஒரு நொடியில் அழிந்து விடும்.
.
கலியின் கொடுமை தாங்காமல் நல்ல மனிதர்களெல்லாம் நலிந்து போனார்கள். நானும் என்னுடைய கணவர் சிவபெருமானும் வேடனின் வலையில் சிக்கிய ஆண்மானும் பெண்மானும் ஒன்றின் முகத்தை ஒன்று பார்த்துக்கொண்டே துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளமுடியாமல் பரிதவிப்பதுபோல் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
.
கயலை வாசிகளான முனிவர்களும், தேவர்களும் வரம் பழிந்து வாடுகிறார்கள். மழை மேகத்தைக் கண்டாடும் மயிலைப்போல் சந்தோசத்தையே கொண்டாடிக் கொண்டிருந்த சிவபெருமான், பேசவே ஆரையற்றுப் பலநாள் ஆகிவிட்டது.
.
தெய்வ மாதர்களெல்லாம் என்னைப் பற்றி நினைப்பதையே மறந்துவிட்டு, தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் கலியின் பிறப்பினால் கயிலையே கட்டுப்பாடற்றுப் போயிற்று. விஷப்பைகளையுடைய பாம்புகளை தன் திருமேனியில் ஆபரணமாக அணிகின்ற சிவபெருமானும் மௌனமாகிவிட்டார்.
.
ஆகவே அண்ணரே உங்கள் தங்கையான எனக்காக மனமிரங்கி, நினைவுகளால் நிர்ணயிக்க முடியாத கயிலைக்கு தாங்கள் எழுந்தருளுங்களய்யா என்று முப்பத்து இரண்டு தர்மங்களுக்கும் தலைமகளான உமையவள், மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பணிந்து நின்றாள்.
.
.
அகிலம்
========
மகாவிஷ்ணு கயிலைக்கு எழுந்தருள இசைதல்
=====================
மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத்
தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார்
.
திருமால் திருக்கயிலை ஏகல்
----------------------
உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால்
நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே
உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து
சந்தோச மற்று சடைக்க விதியாச்சே
என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு
இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று
தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு
மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி
நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள்
கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார்
.
விளக்கம்
=========
மனக்குழப்பத்தோடு தவித்து தாள்படிந்து நின்ற தங்கை உமையவளின் மறுக்கத்தை மனதிலுற்று மனமிரங்கிய மகாவிஷ்ணு தங்கை உமையவளைத் தன் மார்போடு அணைத்து மிகுந்த பாசப் பிணைப்போடு கொல்லுகிறார்… தங்கையே, நான் உன் உடன் பிறப்பான காரணத்தால் நமக்கான இடங்களில் நாம் நிம்மதியாக வாழ வழியற்றுப் போய் விட்டது.
.
உனக்காகத்தானே நான் அவ்வப்போது அவதாரமெடுத்து தேசமெல்லாம் திரிந்தலைந்து கொண்டிருக்கிறேன். அதனால் அல்லவா இப்போது சந்தோசமற்று சடைந்திருக்க வேண்டிய விதியாகிவிட்டது என்று உமையவளிடம் ஆறுதல் கூறிவிட்டு கயிலைக்கு எழுந்தருள முற்பட்டார். மூவருக்கும் நடுவராகிய மகாவிஷ்ணுவுடன், உமையவளும் தேவகன்னியர்களும், தேவர்களும், முனிவர்களும் சந்தோசமாகப் புறப்பட்டனர். எல்லாரும் கடற்கரையில் வந்து சேர்ந்ததும் கயிலைக்குச் செல்வதற்குரிய காலமேது என்று மகாவிஷ்ணு சிந்தித்தார்.
.
.
அகிலம்
=======
கலி தம்மை ஒட்டாதிருக்க பண்டார வேசம் பூணுதல்
=========================================================
இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச்
சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே
கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை
பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று
என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி
அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி
மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள்
பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய்
மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத்
தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து
காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து
மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக்
கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து
எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த
முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து
செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து
தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து
அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர
தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று
தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர
அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச்
செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி
எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து
வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் சிந்தனையில் தோன்றியது யாதெனில் இங்கிருந்து நாமெல்லாம் அவரவர் சொந்த ரூபத்தில் செல்வோமேயானால், கயிலைக்குச் சென்றடைவதற்கு முன்பு நாம் எல்லாரும் கலியில் மூழ்கி அந்தக் கலியிலிருந்து கரையேற முடியாமல் அழிந்து விடுவோம்.
.
எனவே கயிலைக்குச் சென்று சேரும்வரை கலி நம்மைப் பற்றிக் கொள்ளாத வகையில் ஒரு வேடம் புனைய வேண்டும் என்றெண்ணி, தமது உடம்பெல்லாம் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டார். தம் வெள்ளை மனத்தில் சிவபெருமானின் நினைவை நிறைத்துக் கொண்டார். இந்தப் பேருலகில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அதனால் உண்டாகும் சுகதுக்கங்களையும் விட்டொழித்து, சடைமேவிய பண்டாரக் கோலமானார்.
.
பண்டாரக் கோலம் பூண்ட மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பற்றியே சீரிய சிந்தனைகளைக் குண்டலமாகத் திரட்டி தம் செவிகளிலே காதணியாய் அணிந்து கொண்டார். பஞ்ச கிருத்தியங்களை பூணூலாக அணிந்து கொண்டார். மனோன்மணி எனப்படும் உந்மநாச சக்தியை அதாவது, பார்வையால் எதையும் வெல்லும் பலத்தை தம் கண்ணின் கருவிழியில் பதித்துக் கொண்டார். தம்முடைய ஈடு இணையற்ற தங்கை உமையவள் பேணி வளர்த்துக் கொண்டிருக்கும் முப்பத்து இரண்டு தர்மங்களையும் உடலெல்லாம் ஆடையாகப் பொதித்து கொண்டார். சந்திர ஒளியை ஒத்த வெண்மையான நல்லாடையை அங்க வஸ்திரமாக அணிந்து கொண்டார். குளுமையும் அழகும் ஒருமித்த செங்கோலை ஊன்று கோலாகக் கையிலே எடுத்துக் கொண்டார்.
.
இவ்வண்ணமாகப் பண்டார சொரூபத்தைப் புனைந்து கொண்ட மகாவிஷ்ணுவை, மண்ணகத்து மாந்தர்கள் அரகரா என்று போற்றினர். விண்ணகத்து தேவர்கள் சிவசிவா சிவனே என்று வணங்கினர். அம்மை உமையவளோ, தமது சடாமுடிகளை விரித்துப் போட்டபடி மகாவிஷ்ணுவுடன் கயிலையை நோக்கி நடந்து கயிலையை வந்தடைந்தனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar


