பைபிள் வாசகங்கள்:
பிப்ரவரி 19 : முதல் வாசகம்
இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.
உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிப்ரவரி 19 : பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா40:4a)
பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி
3
அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி
4
ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 17
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.
பிப்ரவரி 19 : நற்செய்தி வாசகம்
என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------------------------------------------------
வாழ்வும் சாவும்
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் வியாழக்கிழமை
I இணைச்சட்டம் 30: 15- 20
திருப்பாடல் 1: 1-2, 3, 4, 5, 6 (40: 4a)
II லூக்கா 9: 22-25
வாழ்வும் சாவும்
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் வாழ்வடைவர்
ஒருவருடைய வாழ்வு, அவர் எதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அதன்படி அமைகின்றது. ஒருவர் நல்லதைத் தேர்ந்தெடுத்தால், அவருடைய வாழ்வு நல்லபடியாய் அமைகின்றது. அதே நேரத்தில் அவர் தீமையைத் தேர்ந்தெடுத்தால், அதற்கேற்ப அவரது வாழ்வு அமைகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால் வாழ்வும், அவரது கட்டளையைக் கடைப்பிடியாமல், நம் விருப்பத்தின்படி நடந்தால் சாவும் கிடைக்கும் என்கிறது.
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் நீங்கள் எதைத் தேர்ந்தேடுக்கின்றீர்களோ, அதன்படி உங்கள் வாழ்க்கை அமையும் என்று சொல்லிவிட்டு, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால், அவர் அளிக்கும் நாட்டிற்குள் நீங்கள் நுழைவீர்கள் என்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காததால் (இச 31: 16-18, 27-29), வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 1 ஒரு ஞானப்பாடல். இப்பாடல். இப்பாடல் இருவகையான வழிகளை, இரு வகையான மாந்தர்களை நமக்குக் குறித்துக் காட்டுகின்றது. ஆண்டவருக்கு அஞ்சி, அவரது சட்டத்தின்படி நடப்போர் பேறுபெற்றோர் என்றும், அவர்கள் வாழ்வு பெறுவர் என்றும் இது கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் தன்னைப் பின்தொடர்பவர் தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு, தன்னைப் பின்பற்றி வரட்டும் என்கிறார். தன்னலம் துறப்பதும், சிலுவையைச் சுமப்பதும் நம்முடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இணையானவை. அதனால் நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவர் அளிக்கும் ஆசிகளைப் பெறுவோம்.
ஆண்டவரின் வழியில் நடந்த கிறிஸ்தவர்
பெருநகர் ஒன்றில், சாலையோரமாய் அமைந்திருந்தது அந்தக் கிறிஸ்தவரின் வீடு. அவர் தன்னுடைய வீட்டின் முகப்பில் இருபத்து நான்கு அடி உயரச் சிலுவையை வைத்திருந்தார். அதைப் பார்க்கின்ற யாரும் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளட்டும் என்பதற்காகவே, அவர் அந்தச் சிலுவையை வைத்திருந்தார்.
ஒருநாள் அவருக்கு நகராட்சியிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில், “உங்களுடைய வீட்டின் முகப்பில் உள்ள சிலுவையை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். அந்தச் சிலுவையைக் கொண்டு நீங்கள் மக்களை மதமாற்றம் செய்கின்றீர்கள் என்று பலரும் முறையிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் அந்தச் சிலுவையை அப்புறப்படுத்தாவிட்டால் உரிய நடவடிக்கை உங்கள்மீது எடுக்கப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்ததும் கிறிஸ்தவர் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்: “என்னுடைய வீட்டின் முகப்பில் உள்ள சிலுவையை அப்புறப்படுத்தப் போவதில்லை. எனக்குப் பிடித்த இயேசுவை நான் வழிபடுவது என்னுடைய உரிமை. அதற்காக நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”
தன்னுடைய நம்பிக்கை வாழ்வில் வந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவர் அஞ்சாதிருந்தார். நம்முடைய வாழ்விலும் இதுபோன்ற எதிர்ப்புகள் வரலாம். ஆனாலும் சிலுவைகளையும் எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு, மன உறுதியுடன் இருப்பவரே உண்மையான கிறிஸ்தவர்.
ஆன்றோர் வார்த்தை
‘நம்பிக்கையின் வெளிப்பாடே கீழ்ப்படிதல்; கீழ்ப்பாடியாமை அவ நம்பிக்கையின் வெளிப்பாடு’ – எட்வின் லூயிஸ் கோல்.
தீர்மானங்கள்
1) நம்பிக்கை வாழ்வில் இடர்கள் வந்தாலும், மன உறுதியோடு இருக்கக் கற்றுக்கொள்வோம்.
2) கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மிகப்பெரிய பலி.
3) கடவுளின் வார்த்தையை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அதை வாழ்வாக்குவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

