ஒன்றும் அதிசயமாக எதுவும் நடந்துவிடவில்லை!
அதிகாரத்தின் மீதான தீரா விசுவாசத்தில் எப்போதும் தீர்க்கமான முடிவெடுப்பவராக இருந்துள்ளார் ஒபிஎஸ்!
அவர் முதன்முதலாக நேரடியாக பார்த்த அதிகார பீடம் டி.டி.வி.தினகரன். 1999ல் டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட போது, தன்னைவிட 12 வயது குறைந்தவரான டிடிவியிடம் ஒபிஎஸ் காட்டிய பணிவும், ராஜவிசுவாசமும் அவருக்கு 2001ல் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
2002-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், விசுவாசமான அடிமைத் தேடலில் ஈடுபட்ட போது, அவருக்கு சசிகலாவும், டி.டி.வியும் ஒ.பி.எஸ்சை கை காட்டினர்.
இதே போன்ற வாய்ப்பு மறுபடியும் ஜெயலலிதா மீண்டும் சிறை சென்ற போதும் கிடைத்தது.
மோடியா? லேடியா? என்று சவால் விட்ட ஜெயலலிதா அப்போலோவில் உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு முடிவுரை எழுத விரும்பிய பாஜகவிற்கு ஒரு அடிமை விசுவாசி தேவைப்பட்டார். அப்போது ஜெயலலிதாவைக் காட்டிலும் பெரிய அதிகாரபீடம் டெல்லி என்பதை வேகமாக சுதாரித்துக் கொண்டு, அதிகார பீடத்தின் மீதான தன் தீரா விசுவாசம் என்பது மாறா விசுவாசமல்ல என்பதை நிரூபித்தார், ஒ.பி.எஸ்.
இதனால், அன்றைய தமிழக ஆளுநர் சசிகலாவால் முன் மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து ’’போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஒபிஎஸ்சை முதல்வாராக்கச் சொல்லியுள்ளது டெல்லி மேலிடம்’’ என விலக வைத்தார்.
ஆட்சி பீடம் ஏறியவுடன் மத்திய அரசுக்கு அடங்க மறுத்து கையெழுத்திடாமல் ஜெலலிதா தவிர்த்த பைல்களையெல்லாம் எடுத்து கையெழுத்து போட்டார் ஒபிஎஸ். மேலும், தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் வட இந்திய இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கவும் கையெழுத்திட்டார்.
ஒபிஎஸ்சை முதல்வராகத் தொடரவிட்டால் இவர் தமிழ் நாட்டையே ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார்…என்பதை உணர்ந்து விழிப்படைந்த சசிகலா, ஒ.பி.எஸிடம் ராஜூனாமா கடிதம் வாங்கினார்.
உடனே டெல்லி எஜமானர்களின் ஆலோசகரான குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டார் ஒபிஎஸ். அதன்படி தன்னை அடையாளம் காட்டி அதிகாரப்படுத்திய சசிகலா, டி.டி.வி ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் செய்து, சசிகலாவை சிறைக்கனுப்பிய ஆறே மாதத்தில் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டு துணை முதல்வரானார்.
அதிமுகவின் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய அதிகாரப் பதவியில் இருந்த போதும் அவர் எப்போதும் டெல்லியின் தீரா விசுவாசியே தான் என்பதில் தீர்க்கமாக இருந்ததால், கட்சியின் பொதுக் குழுவே ஒ.பிஎஸுக்கு கல்தா கொடுத்தது.
அப்போது தன்னை உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலத்தையே ஆக்கிரமிக்க அடியாள் படையுடன் வந்த ஒபிஎஸுக்கு தமிழக காவல்துறை ஒத்துழைத்து அதை எதிர்த்த அதிமுக தொண்டர்களை அடித்து விரட்டியது.
தன்னையும் சேர்த்து வெறும் நான்கு எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டிருந்த ஒபிஎஸுக்கு சட்ட சபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோகாமல் பாதுகாப்பு தந்தது திமுக அரசு.
அதிமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த ஒபிஎஸ் அதற்கு இணக்கமான வகையில் அதிமுக மீதான தன் வழக்குகளை வாபஸ் வாங்க மறுத்தே வந்தார், டெல்லியின் கட்டளைப்படி. எடப்பாடிக்கு செக் வைப்பதற்கான வாய்ப்பாகவே ஒ.பி.எஸ்சை வைத்து அழகுபார்த்த டெல்லி தலைமையின் சூழ்ச்சி தெரிந்த நிலையில் தான் எடப்பாடியும் கட்சிக்குள் ஒபிஎஸை அனுமதிக்கவில்லை.
கடைசியாக அமித்ஷாவிடம் தான் பேசிய போது, ’’மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவே ஆட்சிக்கு வரப் போகிறது’’ என அமித்ஷாவே சொல்லியதாகக் கோடிட்டு காட்டியிருந்தார், ஒ.பி.எஸ்.
அந்த சிக்னலுக்கு பிறகு, டெல்லி மேலிடத்தின் ஆசீர்வாதம் உள்ள இடத்திற்கே தற்போது வந்து அடைக்கலமாகியுள்ளார், ஒபிஎஸ்!
பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ்சின் மைத்ரேயனையே உள்வாங்கிக் கொண்ட இன்றைய திமுகவுக்கு பிரேமலதாவைத் தொடர்ந்து மற்றொரு பாஜக விசுவாசி வந்து சேர்ந்துள்ளார்.
’இவர்கள் பாசிச பாஜகவை எதிர்க்கும் படைக்கு பலம் சேர்ப்பார்கள். திமுகவின் கொள்கை கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்’ என்பதை நிராகரிக்கிறேன். இது ஒரு பிழைப்புவாத அரசியல். அவ்வளவே!
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்


