ShareChat
click to see wallet page
search
'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026' மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன. இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும். எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும். இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும். எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என தெளிந்தாக வேண்டும். இவற்றை குறித்த வரலாறை தெளிவுபடுத்த தொல்லியல், மானுடவியல், பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உரையாற்ற மாநாட்டை கூட்டியிருக்கிறோம். மூன்றாம் மாநாடாக அறிவர் மாநாடு மார்ச் 07, 08ம் தேதிகளில் கூடுகிறது. தமிழர் நிலத்தில் நிலவிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் குறித்து அறிஞர் அவையம் கூடுகிறது. 2026ம் ஆண்டின் தமிழ்த்தேசியப் பெருவிழா வரும் வாரத்தில் இரு நாட்களாக நடக்க இருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு மாநாடுகளின் தொடர்ச்சியாக இம்மாநாடு செழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரீகம் குறித்து 2024ல் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாநாடு நடத்தியது மே பதினேழு இயக்கம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொல்லியல், வரலாறு, பண்பாட்டு, மானுடவியல், மொழியியல், கலை, படைப்புத்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என ஆளுமைகள் பங்கெடுத்தனர். தமிழரின் மருத்துவம், இசை, வேளாண்மை, அழகியல், பொருளாதாரம், நாடகம், இலக்கியம், மெய்யியல், மொழியியல், சூழலியல் என பல துறைகள் சார்ந்து உரை நிகழ்த்தினர். காலை முதல் இரவு வரையாக 2024ல் நடந்த முதல் அறிவர் மாநாடு, அறிஞர் அவையமாக எழுச்சியுடன் நடந்தது. அறிவுத்திருவிழாவாக இருநாள் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர். விருது விழா, உரைவீச்சு என தமிழ்த்தேசியப்பெருவிழாவாக அது நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சமகாலத்தில் இல்லாத அறிவுத் திருவிழாவாக மாறியது. 2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. அரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது. ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக விரிவான உரை நிகழ்த்தினார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருதவியாய் விளங்கும். தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம். மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு. அறிவாயுதம் எந்த வாரீர். தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் 01-03-2026 #தமிழ்த்தேசியம் #வரலாறு #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪 மே17 இயக்கம்
தமிழ்த்தேசியம் - ShareChat