#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்-233*
*இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ்ரி நான்கு, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)*
இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர்.
ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கிவிட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, *சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி?* என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு
அன்ஹுவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு ஆயிரத்து ஐநூறு தோழர்கள் மற்றும் பத்து குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.
அபூஸுஃப்யான் இரண்டாயிரம் மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் ஐம்பது குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள 'மர்ருள் ளஹ்ரான்' என்ற பகுதியிலுள்ள 'மஜன்னா' என்ற கிணற்றருகில் தங்கினார்.
அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக 'மர்ருள் ளஹ்ரான்' வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம், "குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்!" என்று கூறினார்.
பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் அனைவரும் திரும்பிவிட்டனர்.
முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் எட்டு நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி மதீனாவிற்கு திரும்பினர்.
மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு அச்சமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் அல்லாஹ் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்போருக்கு, *இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு* என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், zஜாதுல் மஆது)
*தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ்ரி ஐந்து, ரபீஉல்அவ்வல் 25)*...
*(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*


