#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*குடும்ப அமைப்பின் அவசியம்*
(4)
*விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படை*
குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான் மனித குலம் பெருகியிருக்கிறது. மனித குலம் பெருகியிருப்பதால் தான், மனித வளங்களும் முன்னேற்றங்களும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து என்று சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் தான் நாம் இன்று அனுபவிக்கின்ற பல்வேறு நவீன வசதிகளைப் பெற்றிருக்கிறோம்.
பேருந்து என்ற கனரக வாகனம் மக்கள் தொகை பெருக்கத்தினால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் தனக்கு இலாபம் கிடைப்பதற்காகத் தான் கண்டுபிடிக்கிறான். ஊருக்கு பத்துப் பேர் மட்டும் இருந்தால் எப்படி நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்க முடியும். பேருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியிருக்காது.
அதே போன்று இப்போது மைக்கில் பேசுகிறோம் எனில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் தான். பத்துப் பேர் மட்டும் இருந்தால் மைக் வைத்துப் பேசுவதற்கு எந்தத் தேவையும் ஏற்படாது. அப்படி தேவைப்படவில்லை என்ற போது மைக்கைக் கண்டுபிடிப்பதால் என்ன இலாபம்? இந்தப் பேச்சை பதிவு செய்யத் தேவையில்லை. அதை ஒளிபரப்பத் தேவையில்லை. இப்படியே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
எனவே இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் குடும்ப அமைப்பு என்று இருப்பதால் தான் கிடைத்திருக்கிறது. குடும்ப அமைப்பு என்று இல்லையென்றால் இன்று நாம் பயன்படுத்துகிற மனித வளம், அறிவியல் வளர்ச்சி பெருகியிருக்காது.
*அன்பும் தியாகமும்*
குடும்பத்தில் மற்ற உறவு முறைகளை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், கணவன், மனைவி என்ற கட்டுப்பாடுகளில் உடல் ரீதியான தொடர்புகள் ஏற்படுவதால், அவர்களுக்கு மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. மற்றதை விட உடல் ரீதியாக ஒளிவு மறைவு இல்லாததால் ஒருவர் மீது மற்றவர் அதிமான ஈர்ப்புடையவராகி விடுகிறார்கள்.
மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கணவனும் அந்தப் பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டுகிறான். அதேபோன்று கணவனுக்கு எதாவது உடல் நலக்குறைவு எனில் மனைவி கண்விழித்து அவனைக் காக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான்.
குடும்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். அண்ணனுக்கு ஒரு தேவையிருந்தும், அதை தம்பிக்காக விட்டுக் கொடுப்பார். இது ஒரு தியாகம் தான்.
மனைவி என்பவள் நன்றாகச் சமைத்து, கணவனுக்கு வயிறு முட்டக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிட்டதைப் போன்று நடித்துக் கொள்வாள். தாய் தான் இந்த தியாகத்தில் முதல் இடம் வகிப்பாள். தான் பசியோடு இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாகக் கவனிப்பாள்.
இப்படி ஒழுங்கான குடும்பமாக இருந்தால் தாய்க்குத் தந்தையும், தந்தைக்குப் பிள்ளையும், பிள்ளைக்குப் பெற்றோர்களும், மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும், அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் என ஒருவருக்கொருவர் தனது தேவைகளையும் விருப்பங்களையும் பிறருக்காக விட்டுக் கொடுத்து, அனுசரித்து, தியாகம் செய்வதைப் பார்க்க முடிகிறது.
சிலர் இப்படி குடும்பத்திற்காகச் செலவு செய்வதையும் சுயநலம் என்பார்கள். இது தவறான விமர்சனமாகும். ஒருவன் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வைத்துக் கொண்டால் தான் சுயநலம் என்று கூறலாம். தான் சார்ந்த குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அதை சுயநலம் என்று விமர்சிப்பது நியாயமில்லை. இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவனும் தன்னுடைய உறவினர்களுக்காகச் செலவு செய்ய ஆரம்பித்தாலே உலகில் பிச்சைக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். எனவே இதைச் சுயநலம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.
ஒருவன் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக ஆவதற்கு முயற்சி செய்கிறான் எனில் சுயநலத்திற்காக இல்லை. தனது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் போன்ற சொந்த பந்தங்களுக்காகவும் தான் உழைக்கிறான். எனவே ஒருசில கஞ்சர்களைத் தவிர மற்ற அனைவருமே குடும்ப அமைப்பிற்காகத் தான் உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். இதை சுயநலம் என்று சொல்லக்கூடாது.
சுய தொழில்கள் அல்லது பிறரிடம் கூலி வேலைகள் செய்வதும் இன்னும் சிலர் தனது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி இளமையைத் தொலைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சிரமப்படுவதும் தனது குடும்பமாக இருக்கிற தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுக்குத் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்வதாக இருப்பின், வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படுவதே தியாகம் தான்.
ஒருவன் தன் வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டுமெனில், உள்நாட்டில் மாதத்தில் பத்து நாட்கள் வேலை பார்த்தால் போதும். வெளிநாட்டைப் பொறுத்தளவுக்கு மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் உழைத்தாலே போதுமானதாகும். ஆனால் மாதம் முழுவதும் உழைக்கக் காரணம், நம்முடைய தாய், தந்தையர்களும் மனைவி மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு மேலும் அல்லாஹ் நமக்குத் தந்தால் உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் உதவுவதற்குத் தான்.
ஆக, குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறிவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவர்களது எண்ணங்களில், எனது உடல், எனது சுகம், எனது ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கஷ்டப்படுவது என்பது மட்டுமே நிறைந்திருக்கும். அதனால் தான் இத்தகையவர்கள் எந்த தியாகத்தையும் செய்யாதவர்களாகவும் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
சமூக ரீதியாகக் கிடைக்கிற நன்மைகள் போக, கணவன் மனைவி என்று வாழும் குடும்ப அமைப்பில் அவ்விருவரும் சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குடும்பவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒழுங்கான இல்லற வாழ்க்கை இருந்தால் அது நிச்சயமாக சரியான பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தாம்பத்தியத்தின் நன்மைகள்