ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: சனவரி 23 : முதல் வாசகம் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கக்கூடாது. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20 அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், “ ‘இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்,’ என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது” என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு தாவீது சவுலை நோக்கி, “ ‘தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்’ என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், ‘அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது’ என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, ‘தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்’. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன். ஆண்டவரின் அருள்வாக்கு. சனவரி 23 : பதிலுரைப் பாடல் திபா 57: 1. 2-3. 5,10 (பல்லவி: 1a) பல்லவி: கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும். 1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். - பல்லவி 2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். - பல்லவி 5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 கொரி 5: 19 அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. சனவரி 23 : நற்செய்தி வாசகம் தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19 இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். ஆண்டவரின் அருள்வாக்கு. ---------------------------------------------------------------------------- “தீமைக்கு நன்மை” பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை I 1சாமுவேல் 24:2-20 II மாற்கு 3:13-19 “தீமைக்கு நன்மை” கொல்ல வந்தவர்களுக்கு உணவு: ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூரில் எல்லாரும் பிற சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்க, ஒரே ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை என்றால், தங்கள் இல்லத்தில் பாடல் பாடி இறைவனிடம் வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக, அவ்வூரில் இருந்த ஒருசில மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் கிறிஸ்தவக் குடும்பத்தை ‘ஒரு வழி பண்ண’ விரும்பினார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்த யாவரும், கதவைத் தாழிட்டுக்கொண்டு பாடல்பாடி, இறைவனை வழிபடத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த மதவெறியர்கள், கதவு பூட்டப்பட்டிருப்தைப் பார்த்துவிட்டு, வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே இறங்க முயற்சி செய்தனர். இதையெல்லாம் பார்த்த அந்த வீட்டில் இருந்த பெண்மணி, நம்மைத் தாக்க வரும் இவர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது அவருக்கு பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வரும், “வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்” (உரோ 12:13) என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே அவர் உணவு தயாரித்து, அவர்கள் வீட்டிற்கு உள்ளே வந்ததும் அவர்களுக்கு உணவு பரிமாறினார். இதனால் அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தைத் தாக்க வந்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தாங்கள் உடைத்த கூரையைச் சரிசெய்து விட்டுத் திரும்பிச் சென்றனர். ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவக் குடும்பம், தங்களைத் தாக்க வந்தவர்களுக்கு உணவு தந்து நன்மை செய்தது. இன்றைய முதல் வாசகத்தில், தாவீது தன்னைக் கொல்ல நினைத்த சவுலுக்கு நன்மை செய்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம். திருவிவிலியப் பின்னணி: ஒருவரிடம் இருக்கும் பொறாமை, காழ்ப்புணர்வு அவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்குச் சவுல் பெரிய எடுத்துக்காட்டு. தாவீது அடைந்த பெயரையும் புகழையும் வெற்றியையும் தாங்கிக்கொள்ள முடியாத சவுல் அவரைக் கொல்ல, இஸ்ரயேலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அவரைத் தேடித் போகிறார். ஆனால், தாவீது தன்னைக் கொல்ல வந்த சவுலைக் கொல்வதற்கு வாய்ப்பிருந்தும், அவரைக் கொல்லாமல் விட்டுவிடுகின்றார். அப்போதுதான் சவுல் தாவீதை நோக்கி, “நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால், நானோ, உனக்குத் தீமை செய்தேன்” என்கிறார். பின்னர் அவர் தாவீதை நோக்கி, “நீ திண்ணமாய் அரசனவாய்” என்கின்றார். நற்செய்தியில் இயேசு பன்னிருவைத் தனது பணிக்காகத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும் இயேசுவைப் போன்று தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய அழைக்கப்படுகின்றார்கள். எனவே, இயேசுவின் வழி நடக்கின்ற நாம் அவரைப் போன்று தீமை செய்கின்றவர்களுக்கும் நன்மை செய்து, அவரது உண்மையான சீடர்கள் என்பதை நமது வாழ்வால் நிரூபிப்போம். சிந்தனைக்கு:  பொறாமை எல்லாத் தீமைகளுக்கும் வழிவகுக்கும்  வெறுப்பு அல்ல, அன்பே உயர்வுக்கு வழி  நமது வாழ்வே நாம் அறிவிக்கும் மிகப்பெரிய நற்செய்தி இறைவாக்கு: ‘தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்’ (1பேது 3:9) என்பார் புனித பேதுரு. எனவே, நாம் தீமைப் பதில் தீமை செய்யாமல், இயேசுவைப் போன்று தீமைக்குப் பதில் நன்மை செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்