தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வா சுஹாசினி. 9-ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் வளர்ப்பு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நாயின் நகம் மாணவியின் உடலில் கீறியுள்ளது.
இது ஒரு சாதாரணக் காயம் என்று கருதிய மாணவியோ அல்லது அவரது பெற்றோரோ, ஆரம்பத்தில் உரிய மருத்துவ சிகிச்சையையோ அல்லது தடுப்பூசியையோ எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சுஹாசினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, கடந்த 30-ஆம் தேதி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரேபிஸ் நோயின் தீவிரம் மற்றும் தொற்று பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. அரசின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகளே மாணவியின் உடலைத் தகனம் செய்தனர். நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் பரவும் என்பது தவறு என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாய்கள் தங்கள் உடலை நக்கும்போது அவற்றின் உமிழ்நீர் நகங்களில் ஒட்டியிருக்கும். நாய் நகத்தால் கீறும்போது, அந்த உமிழ்நீர் இரத்தத்தில் கலந்தால் ரேபிஸ் வைரஸ் உடலில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, வளர்ப்பு நாயாக இருந்தாலும், அது கீறிய உடனே அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வது உயிர் காக்க அவசியம்," எனத் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🔴இன்றைய முக்கிய செய்திகள்


