ShareChat
click to see wallet page
search
புனித அருளானந்தர் நவநாள் செபம்!* நாள் -1 செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்) இறைவா, உம்மிடம் நாங்கள் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்கு கனிவுடன் செவிகொடுத்து, புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென். *சிந்தனை:* *புல்லூர் நெல்லூர் ஆன வரலாறு!* தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நற்செய்தி அறிவிக்கக் கூடாது என்று தான் சொல்லியிருந்த போதும், ஜான் தெ பிரிட்டோ அதைக் கேளாது நற்செய்தி அறிவித்ததால் சீற்றமடைந்த சேதுபதி மன்னர் தனது படைவீரர்களிடம், அவரைக் கொல்ல உத்தரவிட்டார். இதையறிந்த தடியர், சேதுபதி மன்னர் முன்பாக வந்து, "என் தலைவரைக் கொல்வதற்கு முன்பு என்னைக் கொல்லுங்கள்" என்று துணிவோடு முழங்கினார். இதனால் தன் திட்டம் பாழாய்ப்போய்விட்டதே என உணர்ந்த சேதுபதி மன்னர் தடியரிடம், "நான் ஒன்றும் ஜான் தெ பிரிட்டோவைக் கொல்லப் போவதில்லை; அவரைக் கண் காணாத இடத்திற்குத்தான் அனுப்பி வைக்கப் போகிறேன்" என்று‌ சொன்னதும், தடியர் அவரை விட்டுவிட்டார். சேதுபதி மன்னர் தடியரிடம் இப்படிச் சொன்னாலும் உண்மையில் அவர், ஓரியூரில் ஆளுநராக இருந்த தனது சகோதரர் உதயருக்கு இரகசியக் கடிதம் ஒன்றை எழுதி, அதில் ஜான் தெ பிரிட்டோவைத் தலைவெட்டிக் கொன்றுபோட உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 1693 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் ஜான் தெ பிரிட்டோ இராம்நாட்டிலிருந்து அறுபத்து நான்கு கிலோமீட்டர்த் தொலைவில் இருந்த ஓரியூருக்குப் பதினைந்து படைவீரர்களால் இழுத்துச் செல்லப் பட்டார். இதனால் அவர் மிகவும் களைப்புற்றார். இந்நிலையில், வழியில் ஒரு பெரிய மரம் இருந்தது.‌ அந்த மரத்தின் அடியில் சற்றுநேரம் ஜான் தெ பிரிட்டோ இளைப்பாறினார்.‌ அப்போது அவ்வழியே ஒரு பெண் வந்தார். அவரிடம் ஜான் தெ பிரிட்டோ, "குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டதற்கு, அப்பெண்மணி, "தண்ணீர் இல்லை; மோர் இருக்கிறது" என்றார்‌. "சரி, அதைக் கொடுக்க முடியுமா?" என்று கேட்க, அவரும் தாராளமாய் அதைக் கொடுத்தார். அதை வாங்கிப் பருகிய ஜான் தெ பிரிட்டோ பெரிதும் உவகையடைந்து, "அம்மா! இந்த ஊரின் பெயர் என்ன? என்று கேட்டார். அவர், "புத்தூர்" எனப் பதிலளித்ததும், "இன்று முதல் இது புல்லூர் அல்ல; நெல்லூர் என அழைக்கப்படும்" என்றார். ஜான் தெ பிரிட்டோ அந்த ஊருக்கு ஆசி வழங்கியதிலிருந்து, சுற்றிலும் உள்ள ஊர்களில் வறட்சி நிலவினாலும் நெல்லூர் என மாறிய அந்த ஊரில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் அமோகமாக இருக்கின்றது. ஆம், இறையடியாருக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவிக்குக் கூட இறைவன் தக்க கைம்மாறு தருவார். அதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நற்செய்தியில் இயேசு, "இச்சிறியோர்கள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" (மத் 10:42) என்பார். எனவே, நாம் நம் நடுவில் பணி செய்யும் இறையடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இறையாசியைப் பெறுவோம். *இறுதி செபம்:* கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *– ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat