கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார்
சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால்
எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில்
உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து
சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான்
நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை
ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான்
அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக்
கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு
ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான்
.
விளக்கம்
=========
மாயவளின் மனக் குமுறலையும், மறுகலையும் உணர்ந்த மகாவிஷ்ணு, மாயவளைப் பார்த்துச் சொல்லுகிறார்… சிவபெருமானும், நீயும் இல்லாமலிருந்திருந்தால் இந்த உலகத்தில் பிறந்த எவனுக்குமே எவ்வகைத் துன்பமும் ஏற்பட்டிருக்காது.
.
உங்கள் இருவரின் ஏதுவினால், நான் யுகத்துக்கு யுகம் பிறந்து சங்கடங்களை அனுபவித்துத் தவிக்க வேண்டியத் தலைவிதி ஏற்பட்டுவிட்டது. நீங்கள் இருவரும் இல்லையென்றால் எனக்கு எந்த வித துன்பமும் ஏற்பட்டிருக்காது. நான் எதற்காக உங்களோடு இந்த இன்னல்களையெல்லாம் அனுபவிக்க வேண்டும்?
.
அயோத்தியாபுரியை அரசாண்டு கொண்டிருந்த என்னை நம்பிக் கைபிடித்த என்னுடைய மனைவி எனக்கென்று இருக்கிறார். அப்படியிருந்தும் நான் ஏனிந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும்?
.
.
அகிலம்
=======
மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும்
கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன்
மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க
இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப்
பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென
எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும்
நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே
வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க
பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ
.
விளக்கம்
=========
நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பங்களைப் பார்த்து என்னுடைய மனைவி லட்சுமி மான்போன்று அழுது கொண்டிருப்பாளே. அவளைக் கைபிடித்த நாள் முதலாய் அவளோடு நான் எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியவில்லை. என் மனதிற்குகந்த மனைவி எனக்கிருந்தும், ஒரு பிச்சைக்காரனைப்போல் உலகமெல்லாந் திரிந்தலையும்படியாக பரப்பிரம்மன் என்னைப் படைத்திருக்கிறான். கரை காணமுடியாத இடையூறுகளை இதுநாள்வரை அனுபவித்த நான், இனியாவது அந்தத் துன்பங்களிலிருந்து மீள வேண்டும். மீண்டுவிடலாமென்றே நல்ல குலச் சான்றோர்களை நான் பெற்று வந்தேன்.
.
அதையெல்லாம் மனமாரக் கண்டிருந்தும் உன்னுடைய கணவராகிய சிவபெருமான், பொய்யினால் புடம்போடப்பட்ட அந்த பொல்லாத கலியனை பூமியிலே பிறவி செய்து விட்டாரே. அது ஞாயமா?
.
.
அகிலம்
=======
நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும்
பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே
தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும்
வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ
காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ
ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார்
மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே
மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார்
வாளா யுதத்தாலே மாளானே மாகலியன்
தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான்
முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை
உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே
அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே
ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண்
.
விளக்கம்
=========
அய்யா மாயவளை நோக்கி, என்னுடைய மக்களை அந்த மாநீசனின் கையில் பாச கயிறு கொண்டு பிணைத்த பந்துகளைப் போல் ஒப்படைத்து விட்டாரே இது ஞாயமாகுமா?
.
அந்தக் கலிநீசனைத் தொட்டாலும், அவனைக் கண்களால் பார்த்தாலும் அந்த கலிநீசத் தன்மைகள், என் மக்களையும் தொடர்ந்து வந்து வான பெளிபோல் வியாபித்து அவர்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கின்ற தன்மையுடையதாயிற்றே. கலி என்ற வார்த்தையைக் காதினால் கேட்டால்கூட அவர்களுக்குப் பாவம் வந்து பற்றிக்கொள்ளுமே.
.
அந்தக் கலியை அழிப்பதற்கான உபாயத்தை எவரும் அறிய மாட்டார்களே. கலியாகிய மாய்கை எல்லாரையும் தன்னகப்படுத்தும் தன்மையுடையதாயிற்றே. அந்த மாய்கையில் சிக்கினால் அதிலிருந்து மீளுவது எளிதில்லையே. கலியிலிருந்து நாம் கடைத்தேற வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டுவிடாதபடி கலிமாய்கை அவர்களைக் கபளிகரம் செய்து மீளவிடாமலாக்கிவிடுமே.
.
இடறான இந்தக் கலியை அழிப்பதற்கான வழியை யாரால் அறிய முடியும்? அது உருவமற்ற மாய்கை ஆயிற்றே. அதை, வாள், அம்பு போன்ற எந்த ஆயுதங்களாலும் அழிக்க முடியாதே. தூசுபோன்ற அந்தக் கலிமாசு வர்ணிக்கவே முடியாத வல்லமையுடையதாயிற்றே.
.
கலியாகப் பிறந்துள்ள அந்தக் குறோணியின் முன் பிறவி ஆறிலும் உண்டான வலிமைகளையெல்லாம் சேர்த்துக் கூட்டினாலும் இந்தக் கலியனின் வலிமையில் எட்டில் ஒரு பங்குகூட இருக்காதே.
.
யுகா யுகங்கள் தோறும் நம்மால் தோற்றுவிக்கப்படும் அரக்கர்களையெல்லாம் அழிப்பதற்காகவே, பிறந்து அல்லல் பல அனுபவித்துக்கொண்டிருப்பது விஷ்ணுவாயிற்றே என்று நெஞ்சில் கொஞ்சம் கூட நினைத்துப் பாராமல் தன்னுடைய சுய இச்சையாக இந்தக் கொடூரமான கலியைப் பிறவி செய்திருக்கிறாரே உன்னுடைய கணவர் சிவபெருமான். அதற்காகவா நான் அவரைப் பார்க்க அங்கு வர வேண்டும்.
.
.
அகிலம்
========
தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே
எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச்
சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே
தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல்
மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள்
தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி
அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன்
தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல்
ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே
இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு
அப்படியே வேறு வழியல்லவே யானதினால்
எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது
உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக்
கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும்
.
விளக்கம்
=========
என்னையும், என்னுடைய நிலையையும் கொஞ்சங்கூட நினைத்துப் பாராமல், வழக்கத்திற்கு மாறாக உன் கணவர் செயல்பட்டுவிட்டார். இவ்வளவு அவமதிப்பையும் பெற்ற நான் எங்கேயாவது என் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நற்குணமுற்ற நல்ல மனிதப் பிறவிகளுக்கு வேறு உறைவிடமில்லையே, தாயும், தந்தையும் இல்லாத அனாதைக் குழந்தைகளைப் போல், கபடமான அந்த கலியில் சிக்கி நற்குணமுள்ள மனிதர்களெல்லாம் நலிந்து போவார்களே.
.
அயோக வனத்து அமிழ்த கங்கையருகில் சப்தமாதர்கள் பெற்ற பிள்ளைகளின் பிதிர் வழிகளையெல்லாம், தகப்பனில்லாப் பிள்ளை என்று வசைபாடுவார்களே. அந்த சாந்த குலச் சான்றோரை தனிமைப்படுத்தி அந்த கலிநீசப் பாவிகள் அடிப்பார்களே.
.
அந்த சான்றோர்களைப் பெற்ற சப்தமாதர்களெல்லாம் தவம் மேற்கொண்டிருக்கிறார்களே, அறுபத்து நான்கு கலைகளையும் ஆய்ந்து உயர்ந்த லட்சுமி என்னைக் காணவில்லை என்று மனம் நொந்து போவாளே என்பன போன்ற பல காரண காரியங்களினால்தான் வேறு வழியே இல்லாமல் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன்.
.
இனி நான் என்ன செய்வது எங்கு போவதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆகவே, என் தங்கை உமையவளே நீ தயவு செய்து உன் கணவர் இருக்கும் கயிலைக்குப் போய்விடு என்று மகாவிஷ்ணு மிகக் கோபமாகக் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar


