#தெரிந்து கொள்வோம் #ஆன்மீக #👉வாழ்க்கை பாடங்கள் நல்லாசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும்?'* என்று நம் பெரியோர்கள் வாழ்ந்துகாட்டினார்கள்.* ஒரு சில உதாரணங்கள் இதோ:
நிகழ்வு 1 - "'நான்' செத்தபின் வா"
நடாதூரம்மாள் என்ற ஒரு ஆசார்யர் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம்) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான் “'நான்' செத்தபின் வா" என்று அனுப்பிவிட்டார்.
அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்” என்றார்.
அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்குச் சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார்.
நமக்கான முக்கியமான குறிப்பு: சீடனின் இலக்கணமே இப்படியென்றால் சீடனுக்கு ஞானம் போதிக்கும் ஒரு நல்லாசிரியர் எப்படி இருக்கவேண்டும்!!!
நிகழ்வு 2 - "ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது"
ஒரு நாள் இராமாநுஜர் அவருடைய சிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது அவருடைய குருவான பெரிய நம்பிகள் இராமாநுஜரை விழுந்து சேவித்தார்.
பிறகு பெரிய நம்பியிடம் "ஏன் சேவித்தீர்?" என்று எல்லோரும் கேட்க “ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது" என்று கூறினார். ஆளவந்தார் பெரிய நம்பிகளுடைய குரு!! தமது குருவைத் தமது சீடரில் கண்டார்!!
'வார்த்தாமாலை' என்ற கிரந்தத்தில் ஒரு முக்கியமான வரி - “ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருப்பார்கள்.” இதன்படியே வாழ்ந்தவர் பெரிய நம்பிகள்.
நமக்கான முக்கியமான குறிப்பு: ஒரு நல்லாசிரியர் தம்மை ஒரு ஆசாரியன் என்றே நினைக்கமாட்டார்!!!


