ShareChat
click to see wallet page
search
#thunnbangal theera. துன்பங்களை நொடியில் நீக்கும் நரசிம்ம வழிபாடு_* * 🛕🛕🛕பெருமாளின் அவதாரங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் தோன்றினால் தாமதமாகும், அதுவரை தன்னுடைய பக்தன் துன்பப்படக் கூடாது என்பதற்காக, இந்த தூணில் இறைவன் இருக்கிறாரா என கேட்டு, இரண்யகசபு தனது கதயை ஓங்குவதற்குள் தூணிற்குள் புகுந்து அவதாரம் எடுத்து, உடனடியாக வெளிப்பட்டவர் நரசிம்மர். அதனால் கடுமையான துன்பங்களில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. > "நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை" என்பார்கள். பக்தர்கள் அழைத்ததும் உடனடியாக வந்து பலன் தரக்கூடிய தெய்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் ஸ்ரீ நரசிம்மர் என்பதே இந்த வார்த்தையின் ஆழமான பொருள். குறிப்பாக, கடும் துன்பங்களில் சிக்கியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தத்தால் வாடுபவர்கள் நரசிம்மரின் திருநாமத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்தால், அவர்களின் வேதனைகள் நொடியில் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது மட்டுமல்ல. அநியாயத்தை எதிர்த்து நிற்பதிலும், தவறான செயல்களை தண்டிப்பதிலும் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை. நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் : மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவதாக தோன்றிய அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களை விட, நரசிம்மர் தனிச்சிறப்பு பெறுகிறார். காரணம், உயிரையே பறிக்கக்கூடிய கடும் சோதனைகள் வந்தாலும், இறுதி நொடியில் கூட முழு நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களை, நேரம், இடம், சூழ்நிலை எதையும் ஆராயாமல் உடனே வந்து காப்பாற்றுவதில் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை. வேதங்களில் புகழ்பெற்ற முனிவரான காஸ்யபருக்கும் அவரது மனைவி திதிக்கும் பிறந்தவர்கள் இரு அசுர சகோதரர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு. பூமாதாவை கவர்ந்து சென்ற இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வதம் செய்து பூமியை மீட்டார். இதனால் கடும் கோபம் கொண்ட இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்து பல விசித்திரமான நிபந்தனைகளுடன் சாகா வரம் பெற்றான்.அவனுக்குப் பிறந்த மகனான பிரகலாதன், சிறு வயதிலிருந்தே மகாவிஷ்ணுவின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். இதைக் கண்டு கொதித்த இரண்யகசிபு,தன் மகனையே பல வழிகளில் கொடுமைப்படுத்தினான். இறுதியில் கோபத்தின் உச்சத்தில் அவன் பிரகலாதனை நோக்கி,"உன் விஷ்ணு எங்கே இருக்கிறான்? இந்தத் தூணில் இருக்கிறானா?" எனக் கேட்க, பிரகலாதன் அமைதியாக, "என் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என பதிலளித்தான். இதைக் கேட்ட இரண்யகசிபு ஆவேசத்துடன் அந்த தூணை உடைத்தான். அடுத்த நொடி, அகிலமே அதிரும்படி, அந்தத் தூணிலிருந்து கோபாவேசத்துடன் வெளிப்பட்டார் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி. மனிதன் பாதி, சிங்கம் பாதி எனும் அற்புத வடிவம். கோரைப் பற்கள், செக்கச்சிவந்த கண்கள், உக்கிரமான திருமேனி, அனைத்தையும் கண்டு அசுரர்கள் நடுங்கினர். இரண்யகசிபு பெற்ற வரங்களை முறியடிக்கும் வகையில், மனிதனும் அல்ல, மிருகமும் அல்லாத உருவத்தில் பகலும் இரவும் அல்லாத அந்திப்பொழுதில் அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத வாயிற்படியில், ஆயுதம் எதுவும் இன்றி தனது கூரிய நகங்களால் அசுரனை வதம் செய்தார் ஸ்ரீ நரசிம்மர். தனது பக்தன் பிரகலாதனை காக்க, தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை முற்றிலும் அழித்த தெய்வீக நிகழ்வு அது. அசுரனை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. தேவர்களும் தெய்வங்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியில், நாரதரின் அறிவுரைப்படி, சிறுவனான பிரகலாதன் முன் வந்து பாடிய துதிகளால் மட்டுமே நரசிம்மரின் உக்கிரம் தணிந்து, சாந்தமானதாக புராணங்கள் கூறுகின்றன. வழிபாட்டு நேரம் மற்றும் முறை : நரசிம்மர் அவதரித்த நேரமான மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை அவரை வழிபடுவது மிகச் சிறப்பு. மகாவிஷ்ணுவுக்குரிய துளசி, மஞ்சள் நிற மலர்கள், நைவேத்தியங்கள் இவையே நரசிம்மருக்கும் ஏற்றவை. தூய மனதோடு நரசிம்ம ஸ்லோகங்களை ஜபித்து வழிபட்டால், நோய்கள் நீங்கும், எதிரிகள் விலகுவர், மன பயம் அகலும், குடும்பத்தில் அமைதி உண்டாகும். 🍁🍁🍁
thunnbangal theera. - ShareChat