ShareChat
click to see wallet page
search
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் கட்டிப்போட்ட சகாதேவன்....* அன்பாலும் அறத்தாலும் இறைவனை வசப்படுத்தலாம் என்பதற்கு புராணங்களிலும், இதிகாசங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன. அது மகாபாரதக் காலம். வனவாசம் முடித்து பாண்டவர்கள் நாட்டிற்கு வந்திருந்தார்கள். இந்த நிலையில் கண்ணனைச் சந்தித்தார் தருமபுத்திரரான யுதிஷ்டிரர். வாசுதேவ கிருஷ்ணா! தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கு எல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். நானோ, அமைதியையும் சமாதானத்தையும் தான் விரும்புகிறேன். ஆகவே, எனக்காக நீங்கள் துரியோதனனிடம் பாண்டவர் தூதுவராகச் செல்லவேண்டும். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராஜ்யத்தைக் கேளுங்கள். துரியோதனன் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகளைக் கேளுங்கள். அதுவும் இல்லை என்றால், ஐந்து ஊர்களைக் கேளுங்கள். இல்லையேல் ஐந்து இல்லங்களையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டுங்கள் என்று வேண்டிக்கொண்டார். கண்ணன் புன்னகைத்துக் கொண்டார். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதற்காக மாபெரும் யுத்தம் அவசியம் என்று கருதி, காலத்தையும் சூழலையும் யுத்தத்தை நோக்கி நகர்த்தும் சூத்ரதாரியே அவர்தான் என்பதை பாவம் தர்மர் அறிந்திருக்கவில்லை. அதை எண்ணி உள்ளுக்குள் நகைத்தவராக தருமபுத்திரரே! எதற்கும் உங்கள் சகோதரர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன் என்றார். தருமன் ஒப்புக்கொள்ளவே, தருமரின் தம்பிகளைச் சந்திக்க விரைந்தார் கண்ணன். தருமன் கூறியதுபோன்று பீமனும், அர்ஜுனனும், நகுலனும் யுத்தம் நடந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். கண்ணன் நிறைவில் சகாதேவனைச் சந்திக்கச் சென்றார். அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான். சகாதேவா, போர் ஏற்படாமல் தடுக்கும் விதம் உங்களின் தூதுவனாக அஸ்தினாபுரம் செல்லப்போகிறேன். நீ சிறந்த சாஸ்திர வல்லுநன். போரைத் தடுத்து நிறுத்த ஏதேனும் மார்க்கம் இருந்தால் சொல்லேன்! என்றார் கண்ணன். அதற்கு சகாதேவன் சிரித்தான். அவனுக்குத் தெரியும் என்ன செய்தாலும் நிகழவுள்ள யுத்தத்தைத் தடுக்க எவராலும் முடியாது என்று. தன்னுடைய ஜோதிட ஞானத்தால் அதை அறிந்திருந்தான். எனவே, வேடிக்கையாகச் சில உபாயங்களைச் சொன்னான். கண்ணா! பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டி விடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்குத் தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டால் போதும். போரை நிச்சயம் தடுத்துவிடலாம்! இதைக் கேட்டதும் கண்ணன் பெரிதாகச் சிரித்தார். என்னையே கட்டிப்போட்டுவிட முடியுமா? எங்கே... முடிந்தால் என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம்..? என்றபடி எண்ணிக்கையில் அதிகமான வடிவங்கள் எடுத்து நின்றான். சகாதேவனின் பார்வைக்கு அண்டம் எங்கும் கண்ணனின் உருவங்களே தெரிந்தன. இப்படியான வல்லமை பெற்றவனைக் கட்டிப்போடுவது சாத்தியமா? ஆனாலும் சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் கிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாக தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. ஸ்லோகங்களால் பாடிக் கண்ணனை போற்றினான். சகாதேவனின் பக்தியும் அன்பும் கண்ணனை ஈர்த்தன! அவன் வடிவங்கள் யாவும் ஒன்றில் ஒன்றாகக் கலந்து ஒன்றோடொன்று இணைந்து, பழையபடி ஓர் உருவானார் கண்ணன். சகாதேவனின் இதயத்தில் கட்டுண்டார். சகாதேவா, நீ வென்று விட்டாய்! அன்பாலும் பக்தியாலும் கடவுளையும் கட்டிப்போட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுகளை அவிழ்த்து விடு! என்றார் கண்ணன். சகாதேவனும் அப்படியே செய்ய, யுத்தத்தில் பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று அவனுக்கு வரம் தந்து விடைபெற்றார் கிருஷ்ண பரமாத்மா! கண்ணைக் கொடுத்த வேடன் கண்ணப்பனும், தன்னையே அர்ப்பணித்த கோதை ஆண்டாளும், பக்த மீரா போன்றோரும் அன்பின் மிகுதியால் பக்தியில் திளைத்து இறையருள் பெற்றவர்கள். நாமும் அவர்களின் வழியில் இறையருள் பெறுவோம்! சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
ஆன்மீக - ShareChat