கர்நாடக பகுதி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த தேஜஸ்வினி, ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றியபோது சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஒரு மாதமாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணத்தை மீறிய இந்த உறவு எதிர்பாராத விதமாக ஒரு கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது.
சம்பவத்தன்று, தேஜஸ்வினி தனது தோழியின் வீட்டில் சந்தீப்புடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தேஜஸ்வினி சந்தீப்பைத் தாக்க, பதிலுக்கு ஆவேசமடைந்த சந்தீப் தான் வைத்திருந்த கத்தியால் தேஜஸ்வினியின் வயிற்றில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காயங்களுக்குத் தையல் போடப்பட்ட நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும், வீடு திரும்பிய தேஜஸ்வினி மருத்துவர்கள் அறிவுறுத்திய மருந்துகளை உட்கொள்ளாமல், மீண்டும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயங்கள் தீவிரமடைந்து, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கின. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சாதாரண வாக்குவாதம், சரியான மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிக்கபள்ளாபுரா போலீசார், தலைமறைவாக இருந்த காதலன் சந்தீப்பைக் கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில், தேஜஸ்வினி அடிக்கடி மது மற்றும் பணம் கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும், அந்த ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலில் தான் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் சந்தீப் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுப்பழக்கமும், ஒரு நிமிட ஆத்திரமும் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையைத் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது #📢 மார்ச் 5 முக்கிய தகவல்கள் 🤗


