#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
திருமால் வியாகரரை அழைத்துக் கேட்டல்.
==============================================
சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே
பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
.
விளக்கம்
==========
இவ்வாறு ஈசர் கூறவும் திருமால் மகிழ்ந்து வியாகரரை ஆள் அனுப்பி அழைத்தார். அதைக் கேள்வியுற்ற வியாகர மாமுனியும் பிறவிப் பெருங்கடலிலிருந்து பிழைத்தவர் போல மிகவிரைவாக ஓடி வந்து மூவரையும் வணங்கி, சுவாமி தாங்கள் என்னை அழைக்கக் காரணம் என்ன? என விண்ணப்பித்தார்.
.
.
அகிலம்
========
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
.
விளக்கம்
==========
திருமால் வியாகரரிடம், வியாகரரே, உலகம் தோன்றியது முதல் இதுவரை இவ்வுலக யுகங்களின் முடிவுகளும் சொல்லி இனிப் பிறக்கப் போகின்றவற்றையும் தெளிவாகத் தவறின்றிச் சொல்லுவீராக என்றார்.
அப்போது வியாகரர், ஆதியின் அருளால் நான் எல்லாவற்றையும் சொல்லுகிறேன் என்று வணங்கி விட்டுச் சொல்லலுற்றார்.
.
.
அகிலம்
========
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
====================================
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
.
விளக்கம்
==========
இப்பூவுலகில் குறோணி முதல் எந்தவித நல்ல குணமும் இல்லாத கெட்ட கலிநீசன்வரை ஏழு யுகங்களின் தோற்றத்தையும் கூறி, ஆறு யுகங்களின் அழிவு பற்றித் தெளிவாக எடுத்துக் கூறி, உயர்வான சத்திய வழியோடு தருமபூமி தோன்றப் போவதும் கூறி சாணார் இனத்தினரை வைகுண்டர் நல்ல உயர்வான நிலை கொடுக்க நாடிச் செல்வது பற்றியும் எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
========
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
.
விளக்கம்
==========
குறோணி முதல் நீசன் வரை கீழ்த்தன்மையான ஏழு பிறவிகள் பிறந்து இப்பூவுலகில் ஆறு யுகங்களிலும் தன் செயலினாலே அழிந்து மாண்ட நிலைகளையும் தெளிவுடன் நல்ல இயல்பு கொண்ட நாராயணரை நோக்கி தூய்மையான மனதுடைய வியாகரர் மீண்டும் தொடர்ந்து கூறலானார்.
தெச்சணத்தை ஆளும் நல்ல அரசர்கள் இறப்பு உய்தி, தீமையான மக்களின் குறும்பு அதிகமாகப் பெருத்திருக்கும். தெச்சணம் நோக்கிப் பயன் பெற வரும் நசுறாணி அத்துசம் வந்தவுடனே தோல்வியுற்று ஓடிவிடுவான். அதிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து வைகுண்டர் என்னும் ஒருவர் வந்து உலகத்தை அரசாட்சி செய்வார் என்று ஏற்கெனவே பரம்பொருள் கூறியுள்ளார்.
.
.
அகிலம்
========
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
.
விளக்கம்
==========
அதன்படி தருமபூமியில் வைகுண்டர் மூலம் அரசாட்சி புரியும் ஒரே கடவுள் நீவிரே ஆவீர் சுவாமி. அப்போது அத்தருமயுகத்தில் தமது தீய முன் வினைகளை கழித்து அழித்தவர்கள் அங்கே சுகமாக வாழ்ந்து வருவர் என்று முந்தைய ஆகமங்களை ஆய்ந்து ஆதி வியாகரர் பாம்பு மெத்தையில் படுத்துப் பள்ளி கொள்ளும் நாராயணரை நோக்கி எடுத்துக் கூறினார்.
.
.
அகிலம்
========
வியாகரர் மொழிந்ததைக் கயிலையில் பொறித்தல்
====================================================
உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்
என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
கண்டுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
.
விளக்கம்
==========
உடனே, ஈசர் வியாகரரை நோக்கி, வியாகரரே, எந்தக் குறிப்புகளையும் எக்காலமும் கரைத்திட முடியாவண்ணம் அமைந்திருக்கும் கயிலையில் காணும் கல் தூண் மீது எழுதி வைப்பீராக. எக்காலத்திலும் நரைக்காத முடியையுடைய முனிவராகிய நீர் சொல்லிய நாள் குறிப்புகள் முழுவதுமாக எழுதி வைப்பின் எல்லாருக்கும் அது மேலும் உதவி செய்ய வசதியாக அமையும், என்றார்.
.
அதன் வியாகரர் மொழிந்தவை எல்லாம் எழுதப்பட்ட அக்கல் தூணினை அன்றே ஈசர் கயிலை மலையில் நாட்டினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


