#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அம்மைமார் (சப்த மாதர்களின் ) தவநிறைவு
=====================
சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள்
தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும்
உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி
கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய்
உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே
நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி
நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை
பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே
ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும்
ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள்
ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால்
பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை
மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே
சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும்
முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும்
மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள்
காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி
தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே
பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே
அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள்
என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே
அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார்
நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில்
செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார்
.
விளக்கம்
=========
அயோக வனத்தில் அமிர்த கங்கை அருகில் மகாவிஷ்ணுவின் மாய்கையினால், மேலோகத்தார் ஏழுபேரை மனிதர்களாக மண்ணுலகுக்கு ஈந்த தெய்வ மாதர்கள் ஏழு பேரும், தாம் பிள்ளை பெற்ற நாள் முதலாக பெருந்தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகள் அவர்களை மூடிமறைத்தன. ஆற்றொணா துன்பங்களை அனுபவித்த வண்ணம் தவமிருக்கும் அவர்களின் கூந்தல் வளர்ந்து தாவரங்களி்ன் வேரைப் போன்று பூமியில் புதைந்திருந்தன. அவர்களுடைய நிலையான தவம் நிறைவேறிவிட்டது.
.
நன்றினிய நங்கையர்கள் இருந்த தவத்தின் மகத்துவமோ, அர்ஜுனனின் தவத்தைவிட இருபது மடங்கு உயர்வானது. சீதாபிராட்டியின் தவத்திலும் இரண்டு மடங்கு மேன்மையானது. சப்தமாதர்களின் தவப் பெருமையைச் சொல்வதென்றால் அது ஏட்டில் அடங்காது. எல்லா வகையான இயற்கைச் சீற்றங்களையும் சகித்துச் சாதனைபுரியும் இத்தவத்தைப் பற்றி எவரொருவராலும் குறை கூற முடியாது. அவ்வளவில் அவர்களின் தவம் முற்றி நிலை பெற்றுள்ளது. இதை உமையவளும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், பிரம்மதேவனும் ஏற்கெனவே உணர்ந்திருந்தனர்.
.
சப்த மாதர்களின் தவம் முக்தி பெறுகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தான், சிவபெருமானிடம் மகாவிஷ்ணு கலியுகத்தை அழிக்கப்போவது பற்றியும், தர்மயுகத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
.
அவ்வண்ணமாக இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த உமையவள், இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென்றெண்ணி, சிவபெருமானைப் பார்த்து, சுவாமி, கானகத்தில் ஏழு பெண்கள் நீண்ட நெடுநாள்களாக உயர்வான தவம்செய்து மனமுடைந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அது மாதர்கள் செய்யும் மாதவம் ஆதலால் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க இயலவில்லை. எனவே, நாமெல்லாம் அவர்களுடைய தவநிலையைப் பார்த்து வருவோமா? என்று சிவபெருமானிடம் கேட்டாள்.
.
உமையவளின் உருக்கமான அவ்வுரையை உற்று நோக்கிய சிவபெருமான், உமையவளைப் பார்த்து, உமாதேவி, ஏழு பெண்களும் நம்மை நாடிச் செய்யும் தவத்தை நாம் காணச் செல்லவேண்டுமானால் நம்மோடு மகாவிஷ்ணுவும் வரத்தானே வேண்டும் என்று இதமாகச் சொன்னார்.
.
.
அகிலம்
=======
அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும்
ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே
அண்ணரே கோவே ஆதிநா ராயணரே
கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள்
தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய்
சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது
நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும்
ஆமான பதவி அருளவே வேணுமையா
என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை
அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும்
அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும்
செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே
.
விளக்கம்
========
சிவபெருமான் உரைத்த வார்த்தையின் உள்நோக்கத்தை உணர்ந்த அம்மை உமையவள், மகாவிஷ்ணுவி்ன் பாதங்களை வணங்கி, என்னுடைய அண்ணா ! அரசே ! ஆதிநாராயணரே ! கண்ணரே ! கருமையான திருமேனியரே ! நீண்ட நெடுங்காலமாக கானகத்தில் ஏழு கன்னிப் பெண்கள் கடுமையாகத் தவமிருந்து சடைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உன்னதமான தவத்தின் பெருமையைச் சிவ சிவா... சொல்லி விளக்க இயலாது. ஆகவே நாமெல்லாம் அங்கே சென்று அந்த ஏழுபேர்க்கும் அவர்கள் வேண்டுகின்ற பதவியை அருளவேண்டும் அய்யா என்று இரங்கி வேண்டி மகாவிஷ்ணுவைத் தம்மோடு புறப்படச் செய்தாள்.
.
உடனே சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், அம்மை உமையவளும், அரம்பை முதலான விண்ணகப் பெண்மணிகளும், சப்த மாதர்களும் தவம் செய்துகொண்டிருக்கும் கானகத்திற்குப் புறப்பட்டு சென்றார்கள்.
.
.
அகிலம்
=======
வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள்
இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி
தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள்
வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே
எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல்
தனதாக எங்கள் தயவில் குடியிருந்து
கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே
உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு
இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே
அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல்
காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப்
பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே
எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும்
சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ
ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து
தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ
கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ
அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும்
என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க
அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி
நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம்
வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும்
தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும்
அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள்
அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும்
கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி
நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும்
சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து
வந்து மடவார் மறையொத்த மூவரையும்
சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக்
கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல்
மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக்
கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள்
சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி
.
விளக்கம்
==========
சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், உமையவளும் தம்மை நாடி வருவதைக் கண்ட சப்த மாதர்கள், தமது பெண் இனமான உமையவளை தம் மனதால் அள்ளி அணைத்து இதயத்துள் தேங்கிக் கிடந்த ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.
.
அம்மா உன் பாதங்களை நாங்கள் தொட்டு வணங்கி எத்தனையோ நாள்கள் ஆகிவிட்டனவே, வா தாயே! மண்ணுலகுக்கெல்லாம் மாதாவாகிய எங்கள் தாயே, உன் இனமான எங்களை மறக்காமல் ஈனமாக நினைத்து நிந்திக்காமல் எங்களை நாடிவந்த மாதாவே, எங்களுடைய தயவான எண்ணத்தில் குடியிருந்து எங்கள் கற்பு நெறியைக் கண்போன்று காத்த கருணைத் தெய்வமே! எங்களைத் தவற விட்டுவிட்டு எப்படி இருந்தீர்கள் நாயகமே, அது எங்களுக்கு நீங்கள் முன்னமே விதித்த விதிதானோ?
.
தர்மமே செய்யாத கர்மிகளைப்போல் இத்தனை காலமும் எதுவுமே அருந்தாமல் உருகிவிட்டோமே தாயே, எங்களை நீ எந்த நிலையிலும் காத்துக்கொள்வாய் என்றிருந்தோமே நாங்கள். இப்படிக் கட்டழிந்து போக நீ பார்த்திருந்த நியாயம் என்ன தாயே?
.
சிவபெருமானும் எங்கள் அன்னையாகிய நீங்களும் இட்ட பணி மறந்து என்றேனும் சொல் தப்பி விட்டோமோ? ஈசன் இட்ட கட்டளையை நாங்கள் எப்பொழுதாவது மறந்து மண்ணுலகில் வாழ எங்கள் சிந்தையிலே எண்ணிவிட்டோமோ? அல்லது கற்பனைகளுக்கே எட்டாத உங்களைத்தான் மறந்தோமோ? இல்லை காராம் பசுவைக் கொன்றோமா? அற்புதங்களுக்கெல்லாம் தாயாகிய தாங்கள் அடியார்களாகிய எங்கள் வினாவிற்கு விடையருளுங்கள் தாயே என்று ஏழு மாதர்களும் அம்மை உமையவளிடம் பாச மிகுதியோடும் பக்தியோடும் வினாவினர்.
.
சப்த மாதர்ளின் மானசீகமான மன்றாடல்களை மனமுவந்து கேட்ட தர்மத்தின் தலைமகள் அன்னை உமையவளின் உள்ளம் கசிந்தது. அவர்களிடம், பெண்களே உங்களுடைய கேள்விகள் நியாயமானதுதான். இவற்றிற்கான உபாயத்தை ஈசனிடம் எடுத்து உரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சிவபெருமானைப் பார்த்து, சுவாமி! நான் சொல்லுவதைக் கருத்தில்கொண்டு இந்த ஏழு பெண்களின் தவத்தையும் நிறைவேற்றி, அவர்களை மீண்டும் கயிலைக்கு வரவழையுங்கள் என்றாள்.
.
அதைக் கேட்ட சிவபெருமான் அந்த ஏழு பெண்களையும் சூழ்ந்திருந்த மரஞ்செடிகளையும், இலை தழைகளையும் அகலச் செய்து, அவர்களின் தவத்தை நிறைவு செய்து, இது காலம் வரை அவர்கள் அனுபவித்துவந்த சிறைவாசம் போன்ற துன்பத்தை எல்லாம் அகலச்செய்து தம் அருகில் வர அழைத்தார்.
.
சப்தமாதர்களோ, வேதங்களுக்கு இணையான சிவபெருமான், மகாவிஷ்ணு, உமையவள் மூவரையும் திருவடி வீழ்ந்து வணங்கினர். பொன்னையும், பாக்கியங்களையும் சுமந்துவரும் கப்பல் கரைக்கு வந்து சேர்ந்ததைப் போன்று மனம் மகிழ்ந்து அன்னை உமையவளை ஆரத்தழுவி அள்ளி அணைத்து முத்தமிட்டு தம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதோடு சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும், அன்னை உமையவளையும் போற்றிப் புகழ்ந்து துதிக்கலாயினர்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.


