#Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
திருநடன வெண்பா – 20.
======================
அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல்
நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த
கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில்
ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ
.
விளக்கம்
=========
காலையில் கிழக்கே எழுவதுபோலவும். மாலையில் மேற்கே மறைவதுபோலவும் காட்சியளிக்கும் கதிரவன் எப்போதும் பூமி எங்கும் ஒரே சீராகத் தோற்றமளிக்கும் காலம் அடுத்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து கொண்டிருக்கும் மழைமேகங்களின் இயல்பு நிலையை மாற்றி எல்லா தேசங்களிலும் ஒரே சீராக அமைக்கவே வைகுண்டப் பரம்பொருள் வையகத்திற்கு வருகிறார்.
.
.
அகிலம்
========
திருநடன வெண்பா – 21.
======================
தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால்
காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக்
கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது
பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ
.
விளக்கம்
========
வைகுண்டப் பரம்பொருளால் ஆளப்பட இருக்கும் தர்மயுகத்தில் வாழுவோர்க்கெல்லாம், அவ்யுகத்தின் அருள் பிரவாகங்கள், அவர்களின் சிந்தனையில் தோன்றித் துலங்கி, வெளிச்சத்தைக் கொடுக்குமே தவிர, அங்கே காணிக்கை, கைக்கூலி, லஞ்சம் போன்ற அபராதங்கள் காணாமல் போய்விடும். தர்மயுகத்தில் இருப்போரெல்லாம், அங்கே மாணிக்கக் கற்களால் அமைந்திருக்கும் தர்மதியின் ஒளிப் பிரவாகத்தை அனுபவித்து அந்த ஆனந்தத்தில் திவ்வியமாக இருப்பார்கள். ஆகவே, தர்மயுக ராச்சியத்தில் தீய குணம் உடையவர்களே இருக்கமாட்டார்கள்.
.
.
அகிலம்
=======
ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள்
தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன்
வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி
உன்னிச் சிவமுரைப் பார்
.
விளக்கம்
=========
சிவபெருமான் தம்முடைய ஆனந்தத் தாண்டவத்தோடு பாடிய மேற்கூறி இருபத்தொரு பாடலிலும், உலகிலுள்ள நன்மை தீமைகளை எல்லாம் கூறினார். அதன் பிறகு தமக்கே உரித்தான இருப்பிடத்தில் அமர்ந்து, எரிந்துகொண்டிருந்த யாகத்தீயை இதமாக அணைத்துவிட்டு, தம் தேவியாகிக உமையவளை நோக்கி உரையாடத் திருவுள்ளமானார்.
.
.
அகிலம்
========
சிவபெருமானும் உமையவளும் உரையாடுதல்
==============================================
ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி
வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு
முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப்
பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே
அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி
இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே
செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே
ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப்
பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே
தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும்
மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ
அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே
நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும்
காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க
நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால்
நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும்
எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும்
கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும்
கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து
என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார்
.
விளக்கம்
==========
ஆனந்தத் தாண்டவத்தை நிறைவு செய்த சிவபெருமான், மிகவும் மகிழ்ச்சியோடு உமாதேவியிடம் தாம் ஆடிய ஆனந்தத் தாண்டவம் பற்றிப் பகிர்ந்து உரையாடத் திருவுள்ளங்கொண்டு அழகு மிகுந்த தேவியே இவ்வளவு நேரமும் நிகழ்ந்த ஆனந்தத் தாண்டவத்தின் அகப்பொருளை அறிந்தாயா என்று கேட்டார்.
.
உடனே உமையவள், சிவபெருமானை வணங்கிக் கொண்டே சுவாமி, தாங்கள் இப்பொழுது ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டே பாடினீர்களே, அந்த பாடல்களின் அகப்பொருள் யாவும் எந்தக் காரணத்தாலும் நழுவிப் போகாது.
.
தாங்கள் தாண்டவம் ஆடிவிட்டாலே, நாம் இருவருங்கூட உயிர் துறந்தவர் போலாகித் தெளிவு பெற வேண்டியது வரும். அதுமட்டுமின்றி, என்னுடைய அண்ணராகிய மகாவிஷ்ணு மனத்தில் இருப்பதைப் பற்றி நான் உணர்ந்தவற்றைத் தங்களிடம் கூறுகிறேன் கேளுங்கள்.
.
காரணக் காரியங்களை அடிப்படையாகக் கொண்டு, கலியுகத்தை முடிப்பதற்காக, என் அண்ணர் மகாவிஷ்ணு பூலோகத்தில் அவதரிப்பது உண்மையானால், நிச்சயமாக நம்மையும் இங்கே இருக்க அனுமதிக்கமாட்டார்.
.
எவ்வளவு பெரிய மழை பொழிந்தாலும், வெயில் காய்ந்தாலும், குளிர் நிலவினாலும், கடுமையாகப் பனி பெய்தாலும் நாமும் கலியுகத்தில் பூலோகவாசிகளாக வேடம் தரித்தே தீர வேண்டும். அங்கே உங்களுக்குக் கிழிந்த ஆடைகளையும், திருவோட்டையும் தருவதோடு, எனக்கும் இளமையான குறத்திகள் வைத்திருப்பதைப் போன்ற ஒரு பெட்டியைத் தருவது நிச்சயம்.
.
நம்முடைய மகன் முருகனுக்கோ. இப்போது உள்ளது போல் இல்லாமல், அவனுடைய நெறி முறைகளில் பலவகையான திருப்பங்களை உண்டுபண்ணி, பிரம்ம தேவனுக்கும் வேடம் புனைந்து, அதன் வாயிலாகப் பேய் பிசாசுகளை எல்லாம் பயமுறுத்தி, வரம் பல பெற்று வலம் வந்துகொண்டிருக்கும் பஞ்சதேவர்களின் பலத்தை வாங்கிவிட்டு அவர்களுக்குச் சீவாய்மார் என்ற நாமரூபத்தைக் கொடுத்து அமர்த்தி நம்மையும், காலத்திற்கேற்ப வேடம் புனைய வைத்து கலியைப் பலி செய்யும் பரிசோதனைக்கு அனுப்பப் போகிறார் என்றெல்லாம் என் எண்ணத்தில் தோன்றுகிறது. ஆகவே, இவையெல்லாம் இப்போதே நடைமுறைக்கு வந்துவிடும் சுவாமி என்று சொல்லிக்கொண்டே உமையவள் சிவபெருமானை வணங்கி நின்றாள். அந்நேரம் அங்கு வந்த மகாவிஷ்ணு சிவபெருமானை வணங்கிவிட்டு அவரோடு அமர்ந்திருந்தார்.
.
தொடரும்... அய்யா உண்டு.


