அறிவொன்றே தெய்வமென்றும்
அன்பொன்றே ஆகச்சிறந்த வழிபாடென்றும் முண்டாசு கட்டி
முரசு கொட்டிய ஞானதந்தை..!
மூன்று மத கடவுளர்க்கும் வாழ்த்து பாடிய தமிழின் முதற் பாவலன்..!
'ஆகா! என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!' என்றும், 'முப்பது கோடி சனங்களின் முழுவதும் பொதுவுடமை' என்றும் பாடி புரட்சி, பொதுவுடமை போன்ற அருந்தமிழ் சொற்களை ஆக்கி தந்து தமிழுடமை ஆக்கிய பெருங்கவிஞன்..!
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
என்று பலநூற்றாண்டுகளாக பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்கு புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்..!
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
என்று
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்..!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந்
தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
என்று
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ் புகழ் பாடிய பெருமகன்..!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்ததமிழ்நாடு !
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு !
என்று
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்..!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே !
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே !
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே!
என்று
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்கு
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்..!
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே!
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே
பேணி இருந்தாரடீ!
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ!
என்று கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது வெஞ்சினம் கொண்டு வெகுண்ட தமிழ்க்கவி..!
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடிய பெருந்தகை..!
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்..!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
என்று தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த
பைந்தமிழ்ப் புலவன்..!
பெரும்பாவலன்
நம்முடைய பாட்டன் பாரதியாரின் பெரும்புகழ் போற்றுவோம்..!
நாம் தமிழர்!
https://x.com/Seeman4TN/status/1999013095575040401?s=20 #கோனேரிக்கோன்_கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN #🙋♂ நாம் தமிழர் கட்சி
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


