செ.சாா்லஸ் செபஸ்டின்
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை*
*“சீர்படுத்துங்கள்”*
ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்துகொண்டு விட்டு மூதாட்டி ஒருத்தி சந்தைக்குச் சென்று, காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் வாங்கிக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்த திருடன் ஒருவன் மூதாட்டியின் கையிலிருந்தத எல்லாவற்றையும் பறித்துகொண்டு அங்கிருந்து வேகமாக ஓட முற்பட்டான்.
மூதாட்டிக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அவளுக்கு அன்றைய நாளில் மறையுரையில் அருள்பணியாளர் சொன்ன ஓர் இறைவாக்குப் பகுதி மட்டுமே நினைவுக்கு வந்தது. அதனால் அவள், “திருத்தூதர் பணிகள் 2: 38” என்று சத்தமாகக் கத்தினாள். இதைக் கேட்டதும் திருடன் ஓடாமல் அப்படியே நின்றான்.
இதற்கு நடுவில் காவல்துறை அதிகாரி ஒருவர் திருடன் மூதாட்டியின் கையிலிருந்ததைப் பறித்துக் கொண்டு ஓடியதையும், மூதாட்டி இறைவாக்குப் பகுதியைச் சொன்னதைக் கேட்டு, அப்படியே நின்றதையும் பார்த்துவிட்டு, வேகமாக ஓடிவந்து அவனை மடக்கிப் பிடித்தார். பின்னர் அவர் அவனிடம், “மூதாட்டியின் கையில் இருந்ததைப் பறித்துக் கொண்டு ஓடிய நீ, அவள் ஓர் இறைவாக்குப் பகுதியைச் சொன்னதும், அப்படியே நின்றுவிட்டாயே! உனக்கு இறைவாக்கு என்றால் அவ்வளவு பிடிக்குமா?” என்றார்.
அதற்குத் திருடன் அவரிடம், “மூதாட்டி சொன்னது சாதாரண இறைவாக்காக இருந்திருந்தால், அவளிடமிருந்து பறித்ததை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடியிருப்பேன். ஆனால், அவள் சொன்ன இறைவாக்குப் பகுதி சாதாரண ஒன்று அல்ல. அதில், “நீங்கள் மனம் மாறுங்கள்” என்று இருக்கின்றது. அதனால்தான் நான் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டேன். இனிமேலும் நான் யாரிடமிருந்தும் எதையும் திருடப்போவதில்லை” என்று வருத்தத்தோடு சொன்னான். உடனே காவல்துறை அதிகாரி, செய்த தவற்றை உணர்ந்து, மனம் வருந்தி நின்ற அந்தத் திருடனை மன்னித்து விட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் திருடன் இறைவார்த்தையைக் கேட்டதும் மனம்மாறினான். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்துங்கள் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
பெரிய ஏரோதுவின் நான்கு மகன்களில் ஒருவன் ஏரோது அந்திப்பா. கலிலேயாவை ஆட்சி செய்து வந்த இவன், தன்னுடைய சகோதரனின் மனைவியான ஏரோதியாவோடு வாழ்ந்து வந்தான். இந்த ஏரோதியா வேறு யாருமல்ல பெரிய ஏரோதுவின் நான்கு மகன்களுள் ஒருவனாகிய அரிஸ்டோபுளுஸ் என்பவனின் மகள். அரசனாக இருந்துகொண்டு நெறிகேடாக வாழ்ந்தால், மக்களுக்கு அது துன்மாதிரியாக இருக்கும் என்பதாலும், “உன் சகோதரனின் மனைவியை வெற்றுடம் பார்க்காதே! (லேவி 18:16) என்ற இறைவார்த்தைக்கு எதிராகச் செயல்பட்டதாலும் திருமுழுக்கு யோவான் ஏரோது அந்திப்பாவின் தவற்றைச் சுட்டிக்காட்டி. அவனை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவனோ அவரைச் சிறையில் அடைத்து வைத்து, இறுதியில் அவரைக் கொண்டு போடுகின்றான். இவ்வாறு அவன் தன்னுடைய வழியையும் செயல்களையும் சீர்படுத்தாமல் பாவியாகவே அழிந்து போகின்றான்.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா ஆண்டவர் சொன்னது போன்று மக்களிடம், உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்துங்கள் என்கிறார். அவர்களோ அவருடைய குரலுக்குச் செவிகொடாமல், அவர் எருசலேம் திருநகருக்கு எதிராகப் பேசிவிட்டார் என்று அவரைக் கொல்லத் துணிகின்றார்கள்.
எரேமியா உரைத்த வார்த்தைகள் அவருடைய வார்த்தைகள் அல்ல; மாறாக, அவை ஆண்டவருடைய வார்த்தைகள். அப்படியிருந்தும் மக்கள் அவருடைய குரலைக் கேளாமலும், மனம்மாறாமலும் இருந்தார்கள். இதனால் அவர்கள் மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள். எனவே, நாம் ஏரோது அந்திப்பாவைப் போன்றோ, அல்லது இஸ்ரயேல் மக்களைப் போன்றோ இல்லாமல், ஆண்டவரின் குரலைக் கேட்டு, நமது வழிகளையும் செயல்களையும் சீர்படுத்தி அவருக்கு உகந்தவர்களாய் வாழ்வோம்.
*சிந்தனைக்கு:*
கடவுளைப் புறக்கணிப்பவர்களைக் கடவுள் புறக்கணித்து விடுவார் என்பதை மறக்க வேண்டாம்.
மனமாற்றத்திற்கான அழைப்பு தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த அழைப்பை ஏற்று மனம் மாறுவதே சிறந்தது.
ஆண்டவர் தம் மக்கள்மீது பேரன்பு கொண்டிருப்பதாலேயே அவர்களை அவர் கண்டித்துத் திருத்துகின்றார்.
*இறைவாக்கு:*
‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ (மாற் 1:15) என்பார் இயேசு. எனவே, நாம் மனம் மாறி, ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*