"காந்தியும், காமராசரும் தமிழரின் கருத்தாயுதங்கள்"
காமராஜரும் காந்தியும் இன்றைக்கு தமிழருக்கு தேவையான கருத்து ஆயுதங்கள். காந்தி ஒரு கட்டத்தில் தத்துவார்த்த ரீதியில் வர்ணாசிரமத்தை பார்த்தார். ஆனால் காங்கிரசுக்குள் நடைமுறையில் அது தத்துவங்களில் இருந்து விலகிப் போய் பார்ப்பன சமூக ஒடுக்குமுறைக்கு ஓரு ஆயுதமாக பயன்படுத்துவதை நேரில் உணர்ந்த போது அதை அவர் எதிர்ப்பதற்க்கு முன் வந்தார். தன்னுடைய ஆசிரமத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். தன்னுடைய பிரார்த்தனை கூட்டங்களில் இஸ்லாமிய வழிபாட்டையும் இணைத்துக் கொண்டார். தன்னுடைய ஆசிரமங்களில் எந்தவொரு உருவத்தையும் வைத்து அவர் வழிபடவில்லை. மாறாக தனது ஆசிரமத்தில் நடைபெற்ற திருமணங்கள் ஜாதி மறுப்புத் திருமணங்களாகவே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஏராளமான சாதி மறுப்புத் திருமணங்களை அவர் நடத்தினார். ஜாதியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுவதற்க்கு எதிர்ப்பாக தன்னுடைய ஆசிரமத்துக்குள் அனைத்து ஜாதியினரும் அனைத்து தொழிலையும் செய்ய வேண்டுமென்ற சமூக ஒழுங்குமுறையை கொண்டுவந்தார்.
ஒரு கட்டத்தில் பிராமணர்கள் பொறியியல் படிக்கக் கூடாது, மருத்துவர்கள் ஆகக் கூடாது, அவர்களுடைய பிராமண தர்மமான வேத ஓதுவதையே தான் செய்ய வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகு தான் காந்தியார் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் இந்துத்துவா என்ற கொள்கைக்காக இந்துராஷ்ட்ரம் என்ற ஒன்றை உருவாக்குவதற்கு காந்தியின் செல்வாக்கு தடையாக நிற்கிறது என்பதற்காக திட்டமிட்டு மத வெறி சக்திகளினுடைய துப்பாக்கி குண்டுக்கு பலியான மாபெரும் தலைவர் காந்தி. அப்போது பெரியார் இந்த நாட்டிற்கு காந்தி நாடு என்று பெயர் வைய்யுங்கள் என்று கூறினார்.
மத வெறி சக்திகளை எதிர்த்து களமாடுகிற நமக்கு காந்தி இப்போது அதற்காகவே தன் உயிரை நீத்த ஒரு கருத்து ஆயுதம்.
மற்றொருவர் காமராசர். காமராசர் தமிழர் என்ற அடையாளத்தோடு தான் நிற்கிறார். என்ன தான் அவர் தேசிய தலைவராக உயர்ந்தாலும் தேசியத்தின் தலைவராக அவரால் பரிணமிக்க முடியவில்லை. அங்கே வடநாட்டு எதிர்ப்பு அவரை சூழ்ந்து கொண்டு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியது. ஒரு கட்டத்திற்க்கு மேல் மனம் நொந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாட்டின் தனித்தன்மையோடு ஸ்தாபண காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். அவர் ஆட்சியில் இருந்த போது தான், ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொண்டுவந்த அனைத்து வர்ணாசிரம சட்டங்களையும் ஒழித்து சமூக நீதிக்கான திட்டங்களையும்,இலவசக் கல்வியையும்,மதிய உணவுத் திட்டத்தையும், கிராமங்கள் தோறும் பள்ளிகளையும் கொண்டுவந்து பெரியார் வழியில் தான் இந்த ஆட்சி நடைபோடுகிறது என்று அவர் சொன்னார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக அவர் இருந்த போது பசுவதை தடைச் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியிலே இருக்கின்ற இந்துத்துவ மதவாத சக்திகள் வலியுறுத்திய போது அதை அவர் ஏற்க மறுத்தார். அதன் காரணமாகவே டெல்லியில் அவரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உயிருடன் எரிக்கின்ற மிகப்பெரிய வெறியாட்டத்தை நடத்தி முடித்தார்கள் அதிலிருந்து அவர் உயிர் தப்பினார். எனவே,மதவெறிக்கு பலியானவர் காந்தி. மத வெறியால் உயிருக்கு குறி வைக்கப்பட்டவர் காமராசர். சமூக நீதியினுடைய குரலாக ஒலித்தவர் காமராசர். பார்ப்பனரல்லாத 97% மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று ஒரு கட்டத்தில் மனந்திறந்து கூறியவர் காந்தி.
எனவே காந்தியும்,காமராசரும் இன்றைக்கு தமிழருக்கு தேவைப்படுகிற ஒரு கருத்தாயுதங்களாக இருப்பதால் அந்த தலைவர்களின் நினைவுகளை நாம் போற்றுவோம்.
-விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர் திவிக ) #👨மோடி அரசாங்கம்


