மனத்தை வழிநடத்தும் குணம்!
பங்குனி மாதம் தேய்பிறை தசமி.
சீதா தேவி பூமியில் அவதரித்த நாள்.
பொறுமை, அர்ப்பணிப்பு, தியாகம், அடக்கம், தாய்மை ஆகிய அனைத்தும் குணங்களையும் தன்னில் கொண்ட பூமாதேவியின் திருமகள்.
ஜனக மகாராஜன் ஒரு வேள்வி செய்ய விரும்பி யாக பூமியை சமப்படுத்த கலப்பையைப் பூட்டி உழுதார்.
அப்போது ஓரிடத்தில் ஏர் முனை நகராமல் நின்று போனது.
ஆராய்ந்து பார்த்ததில் பூமியில் ஒரு பெட்டியும், அதனுள் ஒரு பெண் குழந்தையும் இருப்பதைப் பார்த்தார்.
மகிழ்ந்து போனார்.
அந்தக் குழந்தையே சீதாபிராட்டியார்.
சிலர் மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இது நடந்ததாகவும், இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினத்தை சீதா தேவியின் அவதார தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
சீதாபிராட்டியின் அருள் இருந்தால் கன்னிப் பெண்களுக்கு ராமனைப் போல அழகும், பண்பும், குணமும் நிறைந்த நல்ல கணவன் கிடைப்பான்.
திருமணமானவர்கள் இவரை வணங்கும் போது கணவன் - மனைவிக்குள் வேற்றுமை ஏதேனும் இருக்குமானாலும் அவை நீங்கி இணக்கமான சூழல் ஏற்படும்.
திருமணம் தள்ளிப்போகும் கன்னிப் பெண்கள்இந்த நாளில் சீதா தேவியை பிரார்த்தித்து விரதமிருப்பது வழக்கம்.
இந்த நாளில் விரதமிருந்து அன்னையை வணங்குவதும், ஶ்ரீராமஜெயம் எழுதுவதும் சிறப்பு.
இந்த நாளில் அன்னையின் அருங்குணங்களை சிந்தித்து வணங்குவது மிகச்சிறப்பு.
அன்னையின் அருங்குணங்களில் என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே என்னைக் கவர்ந்த நிகழ்வு இது.
இதைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது.
இருந்தாலும் இந்நாளில் அதை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சீதா பிராட்டியார் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது, ராவணனின் கட்டளையின் படி அரக்கிகள் அவருக்கு பலவித துன்பங்களைக் கொடுத்தார்கள்.
பிறகு போர் நடந்து ராவண வதம் முடிந்தது.
அதுநாள் வரை சீதையை துன்புறுத்திய அரக்கிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தான் அனுமன்.
"தாயே! தங்களை ஹிம்சித்த இந்த அரக்கிகளை தண்டிக்க விரும்புகிறேன். அனுமதியளியுங்கள்", என்று வேண்டி நின்றான் அனுமன்.
சீதாபிராட்டியார் ஏற்கவில்லை.
அனுமனை அமைதிபடுத்த இந்த கரடி கதையைக் கூறினார்.
ஒரு வேடன். வேட்டையாடுவதற்காக காட்டுக்கு வந்தான். எதிர்பாராத விதமாக புலியிடம் சிக்கிக் கொண்டான். புலி வேடனை துரத்தியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
வேடன் ஏறிய மரத்தின் மேல் கிளையில் கரடி ஒன்று உட்கார்ந்திருந்தது. பயந்துபோன வேடன் அதனிடம் பேசினான்.
“கரடியே! புலி என்னை துரத்தி வருகிறது. அதனால் இந்த மரத்தில் ஏறிவிட்டேன். புலி கீழே காத்திருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். உன்னிடம் சரணடைகிறேன்” என்று வேண்டினான் வேடன்.
கரடி பேசியது.
“வேடனே! பயப்படாதே! நான் காப்பாற்றுகிறேன்!” என்று வாக்குறுதி அளித்தது.
மரத்தடியில் புலி காத்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு வேடனுக்கு தூக்கம் வந்தது. வேடன் கரடியின் மடியில் தலை வைத்து தூங்கினான்.
அப்போது மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த புலி, கரடியிடம் பேசியது.
“கரடியே! நாம் மிருகங்கள். ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். நம் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், இவன் மனிதன். வேடன். நம்மைக் கொன்று ஜீவனம் செய்பவன். நம் இருவருக்கும் எந்தக் காலத்திலும் பகைவன். அதுமட்டுமல்ல இவன் நமது இனத்தைச் சேர்ந்தவனும் அல்ல. இன்று நீ இவனைக் காப்பாற்றினாலும் அவற்றையெல்லாம் மறந்து நாளையே உன்னை கொல்வதற்கு முயற்சி செய்வான். அதனால், வேடனை கீழே தள்ளிவிடு. இவனால் நாளை நமக்கு ஏற்படப்போகும் பெரிய ஆபத்து நீங்கும்” என்று சொல்லியது புலி.
கரடி பேசியது.
“புலியே! இது நியாயமல்ல. என்னிடம் சரணடைந்த இவனை கைவிடக்கூடாது. கைவிடவும் மாட்டேன். அப்படி செய்தால், நண்பனுக்கு துரோகம் செய்தவன் என்ற கெட்ட பெயர் ஏற்படும். அதோடுமட்டுமில்லாமல் மீளாத நரகத்தை அடைவேன்” என்றது கரடி.
சற்று நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேடன் உறக்கம் கலைந்து எழுந்தான்.
இப்போது கரடிக்கு தூக்கம் வந்தது. அது வேடன் மடியில் தலையை வைத்து தூங்க ஆரம்பித்தது.
அப்போது மரத்தின் கீழிருந்த புலி வேடனிடம் பேசியது.
“முட்டாள் வேடனே! என்னிடமிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக போயும் போயும் ஒரு கரடியிடம் சரணடைந்திருக்கிறாயே! கரடி என்ன உன் இனத்தைச் சேர்ந்தா? அது உன் நண்பனா? கரடி உன்னுடைய பகைவன். நான் எப்போது இந்த மரத்தை விட்டுப் போவேன் என்று கரடி காத்துக் கொண்டிருக்கிறது. நான் இங்கிருந்து சென்றதும் கரடி உன்னை கொன்று விடும். கரடியின் தூக்கம் கலைவதற்கு முன்பு அதைக் கீழே பிடித்து தள்ளி விடு. நான் உனக்கு பதிலாக கரடியை தின்றுவிட்டு இங்கிருந்து சென்று விடுகிறேன். நீயும் பிழைத்துக் கொள்வாய்” என்று ஆசைகாட்டியது புலி.
புலியின் வார்த்தை ஜாலங்களில் வேடன் மயங்கினான்.
அசட்டென்று கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டான்.
தூக்கம் கலைந்த கரடி சட்டென்று எழுந்து மீண்டும் மரத்தில் ஏறிக் கொண்டது. புலியிடம் சிக்கவில்லை.
வேடன் பயந்து போனான்.
தான் கரடிக்குச் செய்த துரோகம் வெளிப்பட்டுவிட்டதே! கரடி தன்னைக் கொன்றுவிடும் என்று நடுங்கினான். வேடனின் பயத்தைப் புரிந்துகொண்டது கரடி. வேடனிடம் பேசியது.
“நண்பனே! நீ எனக்கு துரோகம் செய்தாய் என்று நினைக்க மாட்டேன். உன்னை காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அந்த வார்த்தைகளை நிச்சயம் காப்பாற்றுவேன். வாக்கு தவற மாட்டேன். பயப்படாதே!” என்று கூறியது கரடி.
அப்போது புலி மீண்டும் பேசியது.
“கரடியே! நடந்ததை பார்த்தாய் அல்லவா? வேடன் நன்றி இல்லாதவன். நண்பனுக்கு துரோகம் செய்யும் இவன் மீது இனியும் இரக்கம் காட்டாதே. கீழே தள்ளிவிடு” என்றது புலி.
“புலியே! தீய இயல்பு உடையவர்கள் மற்றவர்களுக்கு தீமை செய்தாலும் அறிவுள்ள ஒருவன் தீமை செய்தவர்களை பகைத்துக் கொள்ளமாட்டான். நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதுதான் எனக்குப் பெரிதே தவிர, உயிர் எனக்குப் பெரிதல்ல. இந்த உலகில் பிறவி எடுத்தவர்கள் அனைவருக்கும் அணிகலனாக இருப்பது சத்தியம் மட்டுமே” என்று சொல்லி புலியிடமிருந்து வேடனைக் காப்பாற்றியது.
இந்தக் கதையை சீதா தேவி, அனுமனுக்குக் கூறிவிட்டு, “ஆஞ்சனேயா நான் என்ன மிருகத்தை விட தாழ்ந்தவளா? நன்மை செய்தவரிடம் நாம் எப்படி அன்பு பாராட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமோ, அதைப்போலவே தீமை செய்தவர்களுக்கும் நாம் உதவி செய்ய வேண்டும். நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் ஆச்சரியம் இல்லை. நமக்கு தீமை செய்தவர்களுக்கு உதவி செய்வதுதான் சிறப்புக்கு உரியது” என்று கூறி அரக்கியர்களை மன்னிக்கும்படி கூறினார்.
சீதா பிராட்டியாரை பொறுமையை பூமாதேவியின் பொறுமையோடு ஒப்பிடுவது உலக வழக்கம்.
அப்படிப்பட்ட பொறுமைக்கு அடிப்படையாக இருப்பது மனமுதிர்ச்சி.
கரடியின் கதை நமக்குச் சொல்வது சரணடைந்தவர்களை கைவிடக்கூடாது என்பது மட்டுமல்ல.
நமக்கு யார் கெடுதல் செய்தாலும் அவர்களை மன்னித்துவிடுவது என்பதும்தான்.
இந்த மனமுதிர்ச்சியே சீதாபிராட்டியின் பொறுமையின் ரகசியம்.
இந்து மதம் இப்படிப்பட்ட சீரிய கருத்துக்களை வலியுறுத்துகிறது.
ஆனால், இன்று நம்மால் இந்த கருத்துக்களை மனதளவில்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நம்மைச் சுற்றி நடக்கும் பல தர்மமற்ற செயல்கள், கருத்துப் பகிர்வுகள், நம்மையும் அவர்களின் மொழியிலேயே பேச வைத்துவிடுகிறது.
இன்றுகூட பலர் புலியைப் போல தன்னைச் சுற்றி நடக்கும் வாய்ப்புகளை தனக்கானதாக்கிக்கொள்ள முயல்கிறார்கள்.
நம்மைச் சார்ந்தவர்கள் தெரிந்தும் கரடிகளை கீழே தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
தள்ளி விட்டவன் பிழைத்தானா?
கரடி பிழைத்ததா? என்பதற்கு விடை தெரியாவிட்டாலும் கரடி-வேடன் போட்டியில் புலியைப் போன்றவர்கள் தன்னை அசுரனாக வளர்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
எதற்கெடுத்தாலும் இனத்தைக் காட்டி பிரிவினையை ஏற்படுத்தும் புலியின் சிந்தனையை புரிந்துகொண்டவர்கள் புத்திசாலிகள்.
மற்றவர்கள் வேறு வழியில்லாமல் கொத்தடிமைகளாக அவர்களிடம் மண்டியிட்டுக் கிடப்பார்கள்.
தனக்கு கெடுதல் செய்தவனையும் மன்னிக்கும் மனித குணத்தை கரடி அடைந்தது பெரிதல்ல.
எதைச் செய்தாவது தான் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்ற விலங்குகளின் குணத்தை வேடன் அடைந்ததுதான் வருத்தமானது.
அனைவரும் சீதாபிராட்டியின் அருள் பெற்று சிறப்போடு வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
நம்மைப் போன்றவர்கள் பிறரை மன்னிக்கும் நிலை வருமானால் அதற்கு உதவுவது நமது மனமே. ஆனால், சீதாபிராட்டியைப் போன்றவர்களுக்கு அது குணமாக இருக்கிறது. குணம் மனத்தை வழிநடத்துவது உயர்வானது. அப்படிப்பட்ட குணங்களை இயல்பாகப் பெற்ற சீதாபிராட்டியை வணங்குவோம்.
#🙏ஸ்ரீ ராமரின் ஓவியங்கள்🖌 #🙏சீதா ராமர் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராமாயணம் 📚 #🙏🏼ராமர் பாடல்கள்


