#💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான்
ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே
கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ
எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே
புனக்கார மில்லை பூசை முறையுமில்லை
கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும்
இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்
பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும்
என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்
அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால்
நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்
.
விளக்கம்
=========
மாமுனியே, இப்போது நீ என்னிடம் கேட்பது இதுவரை யாருமே கேட்காத ஒன்றாகும். அதற்கு நான் சொல்லப்போகும் பதிலோ இதுவரை யாருமே அறியாத அருள் உபதேசம் என்பதை உன் கவனத்தில் வைத்துக்கொள்.
.
என்னிடம் நீ மிகவும் விருப்பத்தோடு வருந்திக் கேட்டதால் உற்ற செய்திகளை மட்டும் கட்டுக்கோப்பாகச் சொல்லுகிறேன் கவனமாகக் கேட்டுக்கொள்.
மாமுனியே எனக்கு எத்தகையோரெல்லாம் விருப்பமானவர்கள் என்பதை இனம்பிரித்துச் சொல்லுகிறேன், தெரிந்துகொள்.
.
எனக்கு உகந்தவர்கள் வழிபாடு என்னும் பேரில் தீபதூபம் செய்யமாட்டார்கள்.
கோவில்களை அமைத்துச் சமாதி வழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள். புஷ்பாபிஷேகம் செய்யமாட்டார்கள்.
.
ஆடு, கிடாய், கோழி போன்ற உயிரினங்களைப் பலியிடமாட்டார்கள்.
மாட்டையோ, உருவச் சிலைகளையோ தெயவமென எண்ணி வணங்கமாட்டார்கள்.
என்னுடைய பெயரைச் சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்வார்கள். இத்தகையோரே என்க்கு உகந்தவர்களாவர்..
.
ஆனால், என் பேரைச் சொல்லி பிச்சை கேட்டு வருபவர்களின் முகக்குறியை உற்று நோக்கிப் பார்த்து, அவர்கள் எந்த செயலுக்காகப் பிச்சை கேட்கிறாரோ அதற்குத்தான் நாம் கொடுப்பதைப் பயன்படுத்துவாரா? அல்லது தன்னுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கிக்கொள்வதற்காக இச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து பிச்சையிடுவதே பெருமைக்குரிய நற்செயலாகும், அத்தகையோரே நலம் பெறுவார்கள்.
.
பேரின்பத்தைத் தருவதற்கு வல்ல ஆன்மீக ஞானத்தைப் போதிப்பவர்களைப் பணிந்து போற்றி அன்பு செலுத்தி ஆதரிப்பவரும் நலம் பெறுவார்கள்.
என்பெயர் சிறப்புறும் வகையில் தம்முடைய நற்செயல்களை முத்திரை பதிப்போரும் நலமடைவர்.
.
இத்தகு நற்செயல்களில் ஈடுபாடு கொண்டு அன்புடையவராக வாழ்ந்துவருபவர்களின் அறிவும் எண்ணமும் ஒரே நிலையில் உறுதியாக இருக்குமேயானால், நான் கலியுகத்தில் வைகுண்டமாக வந்து விட்டதாகச் செய்தி அறிந்தவுடன் தாமாக முன்வந்து எமது வழிகாட்டலுக்கு உகந்தவராகி விடுவார்கள். அத்தகையோரெல்லாம் சிறப்படைவர்.
.
.
அகிலம்
=======
அல்லாமற் கேளு அரிய முனியேநீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்
அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும்
தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும்
ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே
பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே
சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே
இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும்
சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண்
மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து
வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே
.
விளக்கம்
========
மாமுனியே, இவை அல்லாமல் இன்னும் சொல்லுகிறேன் கேள். மேற்கூறிய நன்மைகளைப் பெறுவதும் பெறாமற்போவதும் அவரவரின் முற்பிறப்பின் வினைப்பயனையும், இப்பிறப்பில் செய்த வினைப்பயனையும் பொறுத்தே அமைவதாகும்.
.
யார்யாரெல்லாம் நல்ல செயல்களில் நாட்டங்கொண்டு பிறருக்கு நன்மை பயக்குமளவில் சேவை செய்கிறார்களோ அவர்களெல்லாம் நல்வாழ்வு பெறுவர்.
.
எத்தகையோராயினும் ஒருவர் இக்கட்டான நிலையில் இருந்தால் அந்த இன்னலில் இருந்து அவரை மீட்போரும் நலம்பல பெறுவர். இத்தகு நல்லவர்களுக்குத் துணையாக நின்று உதவி செய்வோரும் அவரைச் சார்ந்த அனைவரும் நன்மைகளையே அடைவர்.
.
பண்பு நிறைந்த பணிவோடு பவ்வியமாக வாழ்வோர் யாராயினும் அவர்களெல்லாம் எல்லா நலனையும் பெற்றுப் பெருமையோடு வாழ்வார்கள்.
.
கலியுகத்தில் என்னுடைய வருகை எத்தகைய நிலையில் இருக்கும் என்பதையும் அறிந்துகொள். எளிய கோலத்தில் இரப்பனைப் போன்ற தோற்றத்தோடு ஆன்மிக ஞானத்தை அருளுபவனாக வருவேன். அந்த நிலையில் காட்சியளிக்கும் என்னை உணர்ந்து என்னுடைய வழிகாட்டல்களை கையாளுவோரெல்லாம் முக்தி பெற்று மோட்சத்தை அடைவார்கள்.
.
ஆணவம், மாயை, காமியம் எனப்படும் மும்மலங்களால் உண்டாகும் கோபதாபங்களைத் துறந்து, தம்முடைய உடற்கூறு நிலைப்பாடுகளையும், அந்த உடலின் உயிரோட்டத் தன்மையையும் உள்ளுற உற்றுணர்ந்து தெளிவடைந்த மக்களின் எண்ணத்தில் யாம் எப்போதும் இருந்துகொண்டே இருப்போம்.
.
அவர்கள் உலகோடும் உறவுகளோடும் ஒட்டி உறவாடி ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருந்தாலும், நான் இப்போது சொன்னதுபோல் அவர்களின் எண்ணத்தில் யாம் எப்பொழுதும் விழிப்போடு வாழ்ந்து கொண்டு இருப்போம். அப்படி யாம் எப்போதும் அவர்களோடு இருப்பதால், அழுக்குப் படிந்ததும் அற்பமானதும் குற்றம் நிறைந்ததுமான கபடக் கலிமாயை அவர்களின் மனத்தினுள் புகுந்து நடமாடிவிடாத வண்ணம் துண்டித்து அவர்களுடைய தெய்வ நம்பிக்கையில் வந்து நின்று நிலை பெற்று காத்தருள்வோம்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


