#அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்
.
விளக்கம்
=========
பரதேவதை பூலோகத்தில் பிறந்த பின்பு, பூவிதழ் போன்ற தம் கரத்தில் சங்கு சக்கராயுதங்களை ஏந்திக்கொண்டிருக்கும் மகாவிஷ்ணு, சம்பூரணத்தேவனைப் பார்த்து, சம்பூரணா, நீ விரும்புகின்ற பரதேவதை பூலோகத்தில் பிறக்கப்போய்விட்டாள். இனியாவது நீ பூலோகத்தில் பிறக்க இசைகிறாயா? அல்லது இன்னும் ஏதேனும் கோரிக்கை வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். உடனே சம்பூரணத் தேவன் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் போற்றிப் புகழ்ந்து பாடி வணங்கலானான்.
.
அகிலம்
========
விருத்தம்
=========
ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே
அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா
நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா
வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா
எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே
.
விளக்கம்
=========
தீபவதியையும், தீர்த்த நதியையும் சடையினில் சூடிய சங்கரா, அலைகடலைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயில் புரியும் மூலமுதற் பரவெளியே,
.
உடல் நிலையானதில்லை, இறுதியில் அது சாம்பல் என்பதை உணர்த்துகின்ற பூவுடலோனாகிய சிவபெருமானே, சிவா எனும் உமையோடு உதித்து சிவ மைத்துனராகிய மாயவா.
.
வேகமிகு உமயவளின் நாயகனாக சிவனே, வீரலட்சுமியின் மன்னராகிய மகாவிஷ்ணுவே, இராம அவதாரனே, காளை வாகனாதிபதியாகிய ஈஸ்வரா, எமை ஆட்கொள்ளும் நாராயணா, உங்களைப் போற்றித் துதிக்கிறேன்.
.
.
அகிலம்
========
விருத்தம்
=========
சீதமாங்குணச் செல்வனே போற்றி
சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி
நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி
வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி
அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே
.
விளக்கம்
=========
குளிர்ச்சியான தன்மைகளையுடைய ஐஸ்வரியமே, அம்மையும் அப்பனுமாகிய சிவபெருமானே, நீதியின் தலைவா, சினேகத்திற்கு இசைவோனே, நீயே சிவனும் விஷ்ணுவும் ஆகி நிற்கிறாய். உம்மை நான் போற்றித் துதிக்கிறேன்.
.
குறோணியை வதைக்க வேண்டி ஆதியில் மாதவம்புரிந்த மாதவா, அரியதோர் வெற்றியாளனே, எல்லார்க்கும் வல்லவனே, ஆயவை அனைத்திற்கும் செல்வனே, கதிரவன் நின்றியங்கக் காரணமான நாராயணா, முதன் முதலே, முதலும் முடிவும் இல்லாதவரே, உம்மைப் போற்றித் துதிக்கிறேன்.
.
.
அகிலம்
========
விருத்தம்
========
அய்யனேதவம் யானிற்கும் போதிலே
அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன்
பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன்
வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள்
சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே
.
விளக்கம்
=========
எல்லை இல்லாது உயர்ந்தோனே, அடியேன் தவம் செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்திராணியின் கணவனாகிய தேவேந்திரனுடைய சங்கு சரத்தங்க நவரத்தினத் திருமுடியைக் கண்டதினால் போலியுகமாகிய கலியின் மாய்கை என்னுடைய நினைவினுள் புகுந்து விட்டது. எனவே தேவேந்திரனுடைய திருமுடியின் மீது ஆசைகொண்டது உண்மைதான்.
.
அந்த அர்ப்ப ஆசையினால் இப்போது நான் செய்துகொண்டிருந்த உயர்கதி அடைவதற்கான தவத்தை தவற விட்டுவிட்டு வாடி வதங்குகிறேன். சகலவிதமான சம்பிரதாயங்களுக்கும் நாயகா, அடியேனுக்காகத் தாங்கள் திருவுள்ளம் கசிந்து யாம் செய்த பாவச் செயலைப் பெரிதெனக் கருதாமல் அதைவிலக்கி வைத்து ஆட்கொண்டருளுங்கள் என் அம்மையும் அப்பனுமாகிய சிவசிவா உங்களைப் போற்றித் துதிக்கிறேன் என்று சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் சம்பூரணத் தேவன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


